சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் யார் கதையையும் காப்பியடித்து உருவாக்கப்பட்டதல்ல. இது என் சொந்த அனுபவம். அதை படமாகத் தந்திருக்கிறேன் என்றார் இயக்குநர் மருது பாண்டியன்.
பாபி சிம்ஹா நடிப்பில் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'. இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் லிங்கா, பிரபஞ்ஜெயன் ஆகியோரும் கதாநாயகர்களாக வருகிறார்கள். சரண்யா சுந்தர்ராஜ், பனிமலர், நிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் விளம்பரங்கள் வெளியானதும், படத்தின் கதை என்னுடையது என்று நெல்லையைச் சேர்ந்த அருண் பாரதி என்பவர் நம்மிடம் தெரிவித்திருந்தார். தனது ப்ளாக்கில் இதே தலைப்பில் எழுதிய கதையைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என தனது மின்னஞ்சலிலும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான மருதுபாண்டியனிடம் கேட்டபோது, "இந்தக் கதை யாருடைய கதையைப் பார்த்தும் காப்பியடிக்கப்பட்டதல்ல. எனது சொந்த அனுபவம். சென்னைக்குள் நுழையும்போது, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற போர்டு தெரியுமே.. அதுதான் இந்தத் தலைப்பு. மற்றபடி கதை குறித்து யார் என்னை அணுகினாலும், சட்ட ரீதியாக அதைச் சந்திக்கவும் தயார்தான்," என்றார்.
Post a Comment