சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெற்ற கடனைத் திருப்பித் தராததால் பூலோகம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்கார் நிறுவனத்துக்கு தடை விதித்து சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பூலோகம் திரைப்படம் தயாரிப்பதற்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆஸ்கார் நிறுவனம் ரூ. 40 கோடி கடன் பெற்றுள்ளது.
இதே போன்று "ஐ' திரைப்படத்துக்காக கதீட்ரல் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆஸ்கார் நிறுவனம் ரூ. 60 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால், இந்தப் பணத்தை திரும்பத் தராமல் 'ஐ' படம் திரையிடப்பட்டது.
இந்த நிலையில், வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற ரூ. 40 கோடியை திரும்பச் செலுத்தாமல் பூலோகம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்கார் நிறுவனத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், முழுத் தொகையையும் திரும்ப செலுத்திய பிறகே படத்தைத் திரையிட அனுமதி வழங்கக் கோரியும் இந்திய ஓவர்சீஸ் வங்கி சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தீர்ப்பாய உறுப்பினர் ரவீந்திரபோஸ் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் வக்கீல் எஸ்.பி.பெஞ்சமின் ஜார்ஜ் ஆஜரானார்.
மனுவை விசாரணை செய்த தீர்ப்பாய உறுப்பினர், ஏப்ரல் 16-ஆம் தேதி வரை பூலோகம் திரைப்படத்தை வெளியிட தடை விதித்தும், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
பூலோகம் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிகபட்சம் ரூ 15 கோடியைக் கூடத் தாண்டாத இந்தப் படத்துக்கு ரூ 40 கோடி கடன் வாங்கியிருப்பது அதிர வைக்கிறது.
அடுத்து, ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கார் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ஐ படம் பெரும் வசூல் குவித்துவிட்டதாக அறிவித்திருந்தார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
அப்படின்னா... வசூலான பணமெல்லாம் என்னதான் ஆச்சு?
Post a Comment