தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் உரிமைகளை முடக்கி வரும் 'க்யூப்' மற்றும் 'யூஎஃப்ஓ' நிறுவனங்களின் செயல்பாடுகளை தமிழக அரசின கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழ்த் திரையுலகம் சார்பில் மே மாத முதல் வாரத்தில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"க்யூப்', "யூஎஃப்ஓ' நிறுவனங்கள் அரசுக்கு சேவை வரி செலுத்துவதாகக் கூறி, அதை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கின்றனர். ஆனால், அந்தத் தொகை அரசுக்கு செலுத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை. மேலும் திரைப்படங்களை வெளியிடும் போது தயாரிப்பாளர்களின் அனுமதி பெறாமல் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.
இதன் மூலம் கிடைக்கும் வருவாய் "க்யூப்' நிறுவனங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு சிறிய தொகை கூட கிடைப்பதில்லை. திரைப்படங்களை வெளியிடும்போது பெரிய தொகையை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கின்றனர்.
தங்களது நிறுவனங்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டுமென்ற தனி நபர் ஆதிக்கத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களின் உரிமைகளை அவர்கள் முடக்கி வருகின்றனர்.
இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அரசின் ஒப்புதலோடு தமிழ்த் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறோம்," என்று தாணு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment