'காசு பணம் துட்டு'... 4 வருடம் "ரிசர்ச்" செய்து 460 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய கஸ்தூரிராஜா

|

சென்னை: தனது 'காசு பணம் துட்டு' படத்துக்காக 4 வருடம் ஆராய்ச்சி செய்து 460 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கஸ்தூரிராஜா.

என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோவிலிலே, தூது போ செல்லக்கிளியே, நாட்டுப்புற பாட்டு, துள்ளுவதோ இளமை, சோலையம்மா உள்பட தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கஸ்தூரிராஜா.

சில வருட இடைவெளிக்குப் பிறகு, இவர் தற்போது ‘காசு பணம் துட்டு' என்ற பெயரில் படமொன்றை இயக்கி இருக்கிறார். இது தொடர்பாக கஸ்தூரி ராஜா கூறியதாவது :-

Kasthuri Raja’s Kasu Panam Thuttu

மாறுபட்ட படம்...

என் பழைய படங்களில் இருந்து மாறுபட்ட படம் இது. தினமும் கொலை-கொள்ளை என்று வரும் பத்திரிகை செய்திகளில், 16 வயதில் இருந்து 20 வயதுக்குள் உள்ள இளைஞர்களே குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.

இளம் குற்றவாளிகள்...

போதை பழக்கம், பெண் சகவாசம், ஆடம்பர வாழ்க்கை போன்றவைகளுக்கு ஆசை காட்டி, அவற்றுக்கு அடிமைகளாக்கி, சமூகத்தில் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள். சாதாரண குடிமகனில் இருந்து சட்டசபை வரை இவர்களின் உதவி தேவைப்படுகிறது.

காசு பணம் துட்டு...

இதுபோன்ற இளைஞர்கள் மூலம் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இவர்களை யார் உருவாக்குவது? இதற்கு தீர்வு என்ன? என்பதே 'காசு பணம் துட்டு' படத்தின் கதை.

புதுமுகங்கள்...

இந்த கதைக்காக 4 வருடங்கள் ஆராய்ச்சி செய்து, 460 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, படத்தை உருவாக்கி உள்ளேன். புதுமுகங்கள் மித்ரன், சுயேஷா சாவந்த், பாலா, மென்டீஸ் ஆகியோருடன் பிரபு, ராதிகா சரத்குமார், பிரமிட் நடராஜன் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

யுஏ சான்றிதழ்...

சாஜித் இசையமைக்க, பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி நான் இயக்கியிருக்கிறேன். படத்துக்கு தணிக்கை குழு, 'யு ஏ' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

அடுத்த மாதம் ரிலீஸ்...

கஸ்தூரிமங்கா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பத்தில் திரைக்கு வரும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment