லிங்கா விவகாரம்.. ரஜினிக்கு ஆதரவாக இணையும் முன்னணி நடிகர்கள்!

|

லிங்கா விவகாரத்தில் தொடர்ந்து வேண்டுமென்றே ரஜினியின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் சிலர் செயல்பட்டு வருவதால், ரஜினிக்கு ஆதரவாக முன்னணி நடிகர்கள் ஒன்றிணைய முடிவு செய்துள்ளனர்.

லிங்கா படம் பெரும் வசூலைக் குவித்தாலும், பொய்யான வசூல் கணக்குகளைக் காட்டி அந்தப் படத்தை தோல்விப் படமாக அறிவித்தனர், படத்தை விநியோகித்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த தொழிலுக்கு புதியவர்கள் என்று கூறிக் கொண்டனர்.

Top actors support Rajini in Lingaa issue

ஆனால் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, படத்துக்கு எதிராக மிக மோசமான பரப்புரையை மேற்கொண்டு படத்தை ஓடவிடாமல் செய்ததாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் புகார் கூறியது நினைவிருக்கலாம்.

உண்ணாவிரதம், பிச்சைப் போராட்டம் என எந்த அளவு கீழ்த்தரமாக இறங்க முடியுமோ அந்த அளவு இறங்கினர்.

பின்னர் கணக்கு வழக்குகளை விசாரித்து ரூ 12.5 கோடியை நஷ்டஈடாக ரஜினியும் ராக்லைன் வெங்கடேஷும் கொடுக்க சம்மதித்தனர்.

இதைப் பிரித்துக் கொள்வதில் லிங்கா விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குள் பெரும் சண்டை. உடனே மீண்டும் ரஜினி தலையை உருட்ட ஆரம்பித்துவிட்டனர் இந்த விநியோகஸ்தர்கள்.

ரஜினியிடம் மேலும் ரூ 15 கோடி கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இது ரஜினியை மிகவும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. இத்தனை நாட்கள் இருந்ததைப் போல அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதேநேரம் ரஜினிக்கு எதிராக திட்டமிட்டு செயல்படும் அனைவருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என சில முன்னணி நடிகர்கள் ரஜினியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்களாம்.

முதல் கட்டமாக ரஜினிக்கு ஆதரவாக முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து அறிக்கை வெளியிடவிருக்கின்றனர். அடுத்த கட்டமாக, லிங்கா படத்தை முன்னிறுத்தி மோசடியில் ஈடுபட்டு வரும் சிலருக்கு ரெட் போட்டு, நிரந்தரமாக தமிழ் சினிமாவிலிருந்து விலக்கி வைக்கவும் முடிவெடுத்துள்ளார்களாம்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி அமைப்பு என அனைத்து அமைப்புகளும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment