காஞ்சனா வெற்றியால், கோப்பெருந்தேவி பேய்க்கு வந்த மவுசு!

|

‘பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு போ... மனசு நிறைய சந்தோஷத்தோடு வா' என்கிற அளவுக்கு காமெடி பேய்களை மட்டும் விழுந்து விழுந்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள்.

காஞ்சனா 2 ன் கலெக்ஷனை கேட்டால், ஆவியுலகமே ஸ்தம்பிக்கிற அளவுக்கு இருக்கிறது. ஒரு கோடி பணம் போட்டவர்களுக்கெல்லாம் நாலு மடங்கு ரிட்டர்ன் என்கிறார்கள் புள்ளிவிபர புலிகள்.+

Kopperunthevi, another horror movie on its way

இந்த நேரத்தில்தான் காஞ்சனா 1 ல் நடித்தவர்களையும், காஞ்சனா 2 ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற அரண்மனை படத்தில் நடித்தவர்களையும் தேடி பிடித்துப் போட்டு ‘கோப்பெருந்தேவி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் பழனிச்சாமி.

கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிறாடை மூர்த்தி, வடிவுக்கரசி என்று நீண்டு கொண்டே போகிறது நட்சத்திர கூட்டம்.

காமெடி, த்ரில், ஹிஸ்டாரிக்கல், என்று சிரிக்கவும் அதிரவும் காதலிக்கவும் கவலைப்படவும் வைப்பது மாதிரி ஏகப்பட்ட வர்ணங்களை குழைத்திருக்கிறாராம் சங்கர் பழனிச்சாமி. தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய புண்ணியவானும் இவர்தான்.

"கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கு. அதுக்காகவே இந்த படத் தயாரிப்புக்கு ரெண்டு வருஷம் எடுத்துகிட்டேன்," என்கிறார் இயக்குநர். ஆராத்யா என்ற பெண்ணை கேரளாவிலிருந்து இறக்கியிருக்கிறார்கள். ஆரம்பகால நயன்தாராவை பார்த்த மாதிரியே இருக்கிறார் இவரும். படத்தில் இவர்தான் பேய்.

Kopperunthevi, another horror movie on its way

காஞ்சனா2 ன் வெற்றி ஆந்திராவிலும் தொடர்வதால், கோப்பெருந்தேவிக்கு தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் செம கிராக்கி. துட்டோடு கிளம்பி வரும் விநியோகஸ்தர்கள் துண்டு போட்டு இடம் பிடிக்கிற அளவுக்கு ஆர்வம் காட்டுவதால், படம் மே இறுதியில் வெளி வரலாம் என்கிறது கோடம்பாக்கத்து ஆவி.

தியேட்டர்ல ஒரு டிக்கெட்டோட ஒரு மந்திரிச்ச முடிகயிறையும் கொடுத்துட்டாங்கன்னா, ரசிகர்களுக்கு இன்னும் சவுரியமா இருக்கும்!

 

Post a Comment