தொடரும் பொய்கள்.. சிங்காரவேலன் மீது கடும் நடவடிக்கை!- தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

|

லிங்கா விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிட்ட படங்களின் கணக்கு வழக்குகளில் தொடர்ந்து பொய்களைக் கூறி வரும் சிங்கார வேலன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் தாணு கூறினார்.

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை படத்தை வாங்கி வெளியிட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நஷ்ட ஈடு கோரி பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து லிங்கா பட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரஜினி கூறியதன்பேரில் ரூ 12.50 கோடி இழப்பீடு தர தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சம்மதித்தார்.

ஆனால், சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு 5 கோடியே 89 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய தொகை இதுவரை கொடுக்கப்படவில்லையென்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் புகாராக தெரிவித்தனர். மேலும், மீதி நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி, வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் தருவதாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

Legal action on distributor Singaravelan

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை பிலிம்சேம்பர் கட்டிடத்தில் நேரில் சந்தித்தனர்.

அப்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு கூறுகையில், "லிங்கா பிரச்சினையில் சிங்காரவேலன் தன் பங்கு பணத்தைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவும் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்து, நாளிதழ்களில் அவராகவே விளம்பரங்களும் கொடுத்தார். இப்போது மீண்டும் பணம் கேட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். விநியோகஸ்தர் சங்கத்தில் உறுப்பினர் கூட இல்லாத இவர் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து வருகிறார். தன்னுடன் மற்றவர்கள் பேசுவதை பதிவு செய்து வைத்துக் கொண்டு ப்ளாக்மெயில் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவருக்கு இனி எந்தத் தயாரிப்பாளரும் ஒத்துபழைப்பு தரக்கூடாது. இதுபற்றி விரைவில் தயாரிப்பாளர் சங்கம் கூடி முடிவெடுக்கவிருக்கிறது. நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

திருப்பூர் சுப்பிரமணியன்

திருப்பூர் சுப்பிரமணியன் கூறும்போது, "லிங்கா நஷ்டத்தில் முதலில் ரூ.10 கோடி தருவதாகத்தான் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், நான்தான் ரஜினியிடம் பேசி முறையிட்டு, இந்த பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தி மேலும் ரூ.2.50 கோடி பணத்தை விநியோகஸ்தர்களுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது முறையாக விநியோகஸ்தர்களை சென்றடையவில்லை என்று தற்போது விநியோகஸ்தர்கள் புகார் கூறுவது முறையற்றது.

மேலும், வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுப்பேன் என்று ரஜினி யாரிடமும் கூறவில்லை. அதை நானும், விநியோகஸ்தர்களிடம் கூறவில்லை. விநியோகஸ்தர் சிங்காரவேலன் இதுபோன்று முன்னுக்கு முரணான தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். அவர் செய்யும் தில்லுமுல்லுகள் விரைவில் அம்பலத்துக்கு வரும்," என்றார்.

 

Post a Comment