ஒரு குப்பைக் கதை, சென்னை கூவம் நதிக்கரையோர மக்களின் கதை!

|

​ஒரு குப்பையான விஷயத்தை பெரிது படுத்தினால் அது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கொண்டு சென்று நிம்மதியைக் கெடுக்கிறது என்பதுதான் ஒரு குப்பைக் கதை.

புதுமணத் தம்பதி இருவரிடையே எழும் ஒரு சிறு பிரச்சினையின் தொடர்ச்சி, வளர்ச்சி, முடிச்சு, அதிர்ச்சி, விளைவு, முடிவு என்ன என்பதே திரைக்கதையின் பயணம். பெயரில் குப்பை இருந்தாலும், இது ஒரு குடும்பக் கதைதான்.

Oru Kuppai Kathai based on real life story

பல படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து தினேஷ் மாஸ்டர்தான் இதில் நாயகனாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி, அமீர், மிஷ்கின் ஆகியோர் கேட்டு நடிக்க விரும்பிய கதை இது. தினேஷ் மாஸ்டர் நடித்துள்ளார். 'வழக்கு எண்18/9 ' ,'ஆதலால் காதல் செய்வீர்' படங்களில் அசாதாரண முகம் காட்டிய கதாநாயகி மனிஷா யாதவ்தான் நாயகி.

காமெடிக்கு யோகிபாபு உள்ளார். நாயகனின் அம்மாவாக ஆதிரா வருகிறார். மற்றபடி பெரும்பாலும் புது முகங்கள் நடித்துள்ளனர். சிறு சிறு வேடங்களில் தலை காட்டிய பலர், இதில் பிரதான பாத்திரங்களைச் சுமந்துள்ளனர்.

காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். அம்மா காளியம்மாள் அப்பா ரங்கசாமி இரண்டு பெயர்களும் இணைந்ததுதான் காளி ரங்கசாமி. இவரது இயற்பெயர் ரபோனி கண்ணன். இவர் இயக்குநர்கள் எழில், அஸ்லம் ஆகியோரிடம் பணிபுரிந்தவர். தன்னிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமியை தன் பிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இயக்குநராக்கியுள்ளார் அஸ்லம்.

அமீர், சேரன், ராதாமோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரும் 'பாகன்' படத்தை இயக்கிய வருமான அஸ்லம், தன் இணை இயக்குநரும் 15 ஆண்டுகால நண்பனுமான காளிரங்கசாமிக்கு படவாய்ப்பு கொடுத்து தன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

'காதல்', 'கல்லூரி' போன்ற படங்களிள் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். 'அஞ்சாதே' ,'சித்திரம் பேசுதடி', 'நந்தலாலா' படங்களில் பணிபுரிந்த மகேஷ் முத்துசாமிதான் இதற்கு ஒளிப்பதிவாளர். பாடல்கள் நா. முத்துக்குமார்.

சென்னைதான் கதைக்களம். குறிப்பாக அடித்தட்டு குடிசைப் பகுதியில் கதை நடப்பதால் கூவம் நதிக்கரையோரம்தான் பெரும்பகுதி படப்பதிவு நடந்துள்ளது. பிரபலமான பல்லவன் நகர், சிந்தாதிரிப் பேட்டை குப்பங்களிலும் படமாகியுள்ளது சென்னையில் பல அழுக்கான பகுதிகளும் படத்தில் அழகாக இடம் பெற்றுள்ளன.

Oru Kuppai Kathai based on real life story

இயக்குநரின் அனுபவம்

''இது ஒரு ஏழைப் பையன் மற்றும் பெண் சார்ந்த வாழ்க்கை. நிஜமான ஒருவரின் வாழ்வில் நடந்ததையே கதையாக்கியுள்ளேன்,'' என்றவர் குடிசைப்பகுதி மக்கள் நல்ல ஒத்துழைப்பு தந்ததாகவும் கூறுகிறார்.

தயாரிப்பாளர் அஸ்லம்

''வெள்ளையான மனிதர்களின் மனசு அழுக்காக இருக்கும். அழுக்கான மனிதர்களின் மனசு வெள்ளையாக இருக்கும் என்பதை படப்பிடிப்பு அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன் .குடிசைப்பகுதி மக்கள் நல்ல உதவி செய்தார்கள். படப்பிடிப்புக்கு குடம்,பாத்திரம், சாப்பாடு போன்ற உதவிகள் எல்லாம் செய்தனர். தொல்லை தரவில்லை,'' என்கிறார்.

Oru Kuppai Kathai based on real life story

அழுத்தமான காட்சிகள்

கதை அழுக்கான மக்கள் பற்றியதாக இருந்தாலும் காட்சிகள் அழுத்தமானதாக இருப்பதால் ரசிக்க வைக்கும்படி இருக்கும்.

நாயகன் முனிசிபாலிடியில் வேலை பார்ப்பவன். நாயகி வெளியூரில் மலையூரிலிருந்து சென்னைக்கு வந்திருப்பவள். படத்தில் ஏழ்மை வருகிறது. ஆனால் படம் அது பற்றி பேசவில்லை. வாழ்க்கை பற்றியே பேசுகிறது.

இது 43 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப் பட்ட படம். படத்தில் கதையோடு ஒட்டிய 4 பாடல்கள் உள்ளன. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு யதார்த்த அழகுக்காக பேசப்படும். மொழி தெரியாதவர்கள் நாம் ஈரானிய படங்களை ரசிப்பது போல கதையை அனைவரும் ரசிப்பர்.

தமிழில் இது ஒரு 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்று பேசும் வகையில் யதார்த்தப் பதிவாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

 

Post a Comment