சென்னை: நடிகர் தனுஷ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
"காக்கா முட்டை' என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தில் வழக்குரைஞர்கள் குறித்து அவதூறான வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்று கூறி சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், அகில இந்திய வழக்குரைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "காக்கா முட்டை' படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், வெற்றிமாறன், அந்த படத்தின் இயக்குநர் மணிகண்டன், அவதூறு காட்சியில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.
அதில், "காக்கா முட்டை' படத்துக்கு 2 தேசிய விருதுகளும், பல்வேறு சர்வதேச விருதுகளும் கிடைத்துள்ளன. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக சித்திரிக்கவில்லை. எனவே, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், அந்த வழக்கை ரத்து செய்வதோடு, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் உள்பட 4 பேருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்ததோடு, இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி எதிர் மனுதாரர் மணிவண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment