பாகுபலி திரைப்படம் பிரபல மலையாள டிவி சேனலான மழவில் மனோரமாவில் அக்டோபர் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய திரைப்பட உலகம் கொண்டாடும் பாகுபலி திரைப்படம் கடந்த ஜூலை 10ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
பிரபாஸ், தமன்னா, ராணா, அனுஷ்கா நடித்துள்ள இந்த திரைப்படத்தினை எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ளார். இந்த படத்தின் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமம், தமிழ், மலையாளம், தெலுங்கு, சேட்டிலைட் சேனல்களுக்கு தனித்தனியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் பாகுபலி திரைப்படம் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக மழவில் மனோரமா சேனலில் பாகுபலி ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 4ம் தேதி பாகுபலி ஒளிபரப்பாக உள்ளதாக மலையாள டிவி சேனல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ் சேனல்களில் புத்தம் புதுப்படங்களை ஒளிபரப்பும் நிலையில் ஞாயிறு டிஆர்பி ரேட்டிங்கை கருத்தில் கொண்டு பாகுபலியை ஒளிபரப்பி கல்லா கட்டப்போகிறது மழவில் மனோரமா சேனல்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய நான் ஈ, மகதீரா ஆகிய படங்களின் ஒளிபரப்பு உரிமையையும் மழவில் மனோரமா சேனல்தான் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோனி மேக்ஸ் சேனல் இந்தி பாகுபலி படத்தை அக்டோபர் 25ம் தேதி ஒளிபரப்பப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment