நடிகர் சங்கம் மற்றும் நிர்வாகிகள் பற்றி தவறாகப் பேசி வரும் விஷால் மற்றும் எஸ் வி சேகர் போன்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
சேலத்தில் விஷால் அணியும் சரத்குமார் அணியும் தீவிரமாக ஆதரவு கோரி வருகின்றனர்.
நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கோரிய பின்னர் சரத்குமார் எம்எல்ஏ அளித்த பேட்டி:
கடந்த 3 நாட்களாக மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று சகோதர, சகோதரிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் நடிகர் சங்கத்தில் இதுவரை என்னென்ன செய்து உள்ளோம் என்பதை அனைவருக்கும் சுட்டிக்காட்டி என்றும் போல் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி கட்ட முடியும்? இல்லையெனில் அவர்களாவது பூச்சி முருகனிடம் வாபஸ் பெறக்கோரியோ அல்லது கட்டிடம் தொடர்பாக புதிய திட்டமோ இருந்தால் என்னிடம் பேசி இருக்கலாம்.
அப்படி உங்களது திட்டத்தை நடிகர் சங்கம் நிராகரித்தால் நீங்கள் கூறும் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் ஒப்பந்தம் போட்டது முதல் திட்டம் தீட்டியது வரை எதுவும் கூறாமல் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறி வருகின்றனர்.
இளைஞர்களை நாங்கள் வரவேற்கிறோம். சங்க செயற்குழுவில் சூர்யா, நாசர், குஷ்பு ஆகியோர் இருந்தவர்கள்தானே.
நடிகர் சங்க கட்டிடம் கட்டியிருந்தால் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருக்கமாட்டேன். ஆனால் இந்த வழக்கை முடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டிய பணி எனக்கு இருக்கிறது. நடிகர் சங்கம் மீண்டும் கடனில் மூழ்கி விடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன்.
நடிகர் சங்கத்துக்கு வரும் ரூ. 24 லட்சம் வருமானத்தில் ஊழல் நடந்து விட்டதாக ஆதாரமில்லாமல் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர். இவ்வாறு கூறுவதன் மூலம் நலிவடைந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி கிடைக்கப்படாமல் போவதுடன் நடிகர் சங்க வருமானத்தையும் தடுத்து விடாதீர்கள்.
தவறான குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்கும் நடிகர்கள் எஸ்.வி.சேகர், விஷால் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீசு அனுப்பி உள்ளோம். இதுதொடர்பாக அவர்கள் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
சிலர் நான் தமிழனே இல்லை என்று கூறி வருகிறார்கள். என் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டை சுமத்தினால் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நடிகர் சங்கத்தை பற்றி தவறான குற்றச்சாட்டுகளை கூறினால் கண்டிப்பாக நான் பதில் சொல்லி தான் ஆவேன்.
ரகசியத்தை வெளியிடுவேன் என்று உணர்ச்சிகரமாக தான் கூறினேனே தவிர மிரட்டலாக கூறவில்லை. மாற்றம் தேவை என்கிறார்கள். நடிகர் சங்கத்தில் திறமை உள்ளவர்கள்தான் உள்ளார்கள். தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது," என்றார்.
Post a Comment