மண்டபம்தானே, தாராளமா எடுத்துக்கங்க..!- விஷால் அணிக்கு ரஜினி தந்த அனுமதி

|

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்துக்கு தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை தந்துள்ளார் ரஜினிகாந்த்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைே நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல் நிலைப் பள்ளியில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Rajini gave permission to Vishal Team

தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் வாக்களிக்கத் தகுதியுள்ள 3 ஆயிரத்து 139 நடிகர், நடிகைகள் ஓட்டு போடுகின்றனர். தேர்தல் பற்றிய அறிவிப்பு, நடிகர் சங்கம் சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது தலைவராக உள்ள சரத்குமாரும் பொதுச்செயலாளர் ராதாரவியும் அதே பதவிக்கு மீண்டும் போட்டியிடுகின்றனர். விஷால் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலுக்காக இரு அணியினருமே ரஜினி,கமல் உட்பட அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தை விஷால் அணியினரும் அவர்களைத் தொடர்ந்து சரத்குமாரும் சந்தித்து ஆதரவு கேட்டனர். அப்போது அவர் இரு அணியினருக்குமே 'பார்க்கலாம்' எனப் பதில் கூறி அனுப்பினார்.

இந்நிலையில், விஷால் அணியினர் தங்களது ஆதரவாளர்கள் கூட்டத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டனர். அதற்காக நடிகர் நாசர், ராகவேந்திரா மண்டப நிர்வாகி மற்றும் ரஜினிகாந்திடம் அனுமதி கேட்டார்.

அந்த நாளில் மண்டபத்தில் வேறு நிகழ்ச்சிகள் இல்லை என்பதால், "மண்டபம் தானே? தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்", என்று அனுமதி தந்தாராம் ரஜினி.

உடனே, இதை வைத்து ரஜினி ஆதரவு பெற்ற அணி எங்களுடையது என விஷால் தரப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. அதை முறியடிக்கவே ஒரு காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார் சரத்குமார்.

 

Post a Comment