இரண்டு முகம்- பட விமர்சனம்

 http://thatstamil.oneindia.in/img/2010/09/04-karan-200.jpg

நடிப்பு: சத்யராஜ், கரண், சுஹானி, கஞ்சா கருப்பு, நாசர்
இசை: பரத்வாஜ்
தயாரிப்பு: உடையார் மூவீஸ்
இயக்கம்: ஆர் அரவிந்தராஜ்
பிஆர்ஓ: டைமண்ட் பாபு

காலம் தப்பி வந்திருக்கிற அரசியல் படம் இந்த இரண்டு முகம். ஊமை விழிகள், உழவன் மகன் காலத்தில் தயார் செய்த கதை போலிருக்கிறது. அதையும் கட்டுக்கோப்பாகச் சொல்ல முடியாமல் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறோம்.

வழக்கமான அரசியல்வாதி கதையில் மரபணு மாற்ற பயிர், நவீன பூச்சிக் கொல்லிகளின் தாக்கம், இயற்கை விவசாயம் என இன்றைய பிரச்சனையைக் கையாண்டு பார்த்திருக்கிறார். ஆனால், அதை மனதில் தைக்கும்படி சொல்லத் தவறியிருக்கிறார் இயக்குனர் அரவிந்தராஜ்.

தனது வாழ்க்கையின் ஒரே லட்சியம் எப்படியாவது அமைச்சராகிவிடுவதுதான் என்ற 'லட்சியத்தோடு' திரிகிறார் சமையல்காரர் சண்முகராஜனின் மகன் கரண். அதற்கேற்ப அவ்வப்போது அவருக்கு சந்தர்ப்பங்கள் வர, இளைஞர் அணி தலைவராகி, அடுத்த காட்சியிலேயே எம்எல்ஏவாகி, அதற்கும் அடுத்த காட்சியிலேயே மந்திரியாகி உடனே ஊழலும் செய்ய ஆரம்பித்து விடுகிறார்!.

இதைப் பார்த்து மனம் பொறுக்காத சத்யராஜ், அவரை நேர்மையான வழிக்குக் கொண்டுவர ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். கரண் திருந்தும் நேரத்தில், அதை எதிர்த்து மோசமான அரசியல்வாதிகள் அரசையே கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இதிலிருந்து கரணும் சத்யராஜும் எப்படி அரசைக் காக்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

இடையில் கரணுக்கு ஒரு காதல், அந்தக் காதல் நிறைவேறுவதில் திடீர் சிக்கல், நவீன பூச்சி மருந்தால் நண்பன் சாதல்... என கிளைக் கதைகள் வேறு.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார் கரண். ஆனால் வழக்கம் போல ஓவர் ஆக்ஷன் பண்ணாமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல்.

கிட்டத்தட்ட கெளரவ வேடம் மாதிரிதான் சத்யராஜுக்கு. பெரிதாக வேலையும் இல்லை. இடைவேளைக்கு முன், அவர் கையில் கல்லெடுக்கும் போதே, படத்தின் மிச்சக் காட்சிகளை ரொம்ப எளிதாக யூகிக்க முடிகிறது.

சுஹானி எனும் புதுமுக ஹீரோயின் (தமிழில் தான்.. ஏற்கனவே தெலுங்கில் பல படங்களில் நடித்தவர்) ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

வஞ்சக அரசியல்வாதி வேடம் நாசருக்கு. கேட்க வேண்டுமா... ஊதித் தள்ளுகிறார்.


பசுநேசனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் செம கிச்சு கிச்சு. கஞ்சா கருப்பு இருந்தும் நகைச்சுவை ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை.

பரத்வாஜ் இசையில் ஒரு பாடல் ஓகே மற்றபடி மகா மட்டமான பின்னணி இசை. தேவையில்லாத இடங்களிலெல்லாம் சம்பந்தமில்லாமல் பாடல்கள் வந்து இம்சிக்கின்றன.
ஒளிப்பதிவு ஓகே.

மரபணு மாற்ற பயிர்கள், நவீன பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயங்கர விளைவுகள் போன்றவற்றை மட்டுமே பிரதானப்படுத்தி அழுத்தமான ஒரு படத்தைக் கொடுத்திருந்தால், அரவிந்தராஜின் இந்த மறுபிரவேசம் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்!
 

நான் மகான் அல்ல - திரை விமர்சனம்

http://thatstamil.oneindia.in/img/2010/08/20-naan-mahaan-alla200.jpg 

நடிகர்கள்: கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்ரகாஷ், சூரி
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: சுசீந்திரன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

ஏன்யா இந்த கொல வெறி? என்று கிட்டத்தட்ட 30 முறையாவது நம்மையும் அறியாமல் கேட்க வைக்கிற அளவுக்கு ரத்தம் கொப்பளிக்கிற மொக்கைச் சமாச்சாரம் நான் மகான் அல்ல!

வெண்ணிலா கபடிக் குழு என்ற நல்ல படத்தைத் தந்த சுசீந்திரன் படமாச்சே என்று நம்பிக்கையுடன் போய் உட்கார்ந்தால், அவரோ இரண்டு மூன்று பழைய படங்களை மிக்ஸியில் அடித்து ரத்தமாகப் பிழிந்து தருகிறார். குமட்டல் தாங்கல...

கார்த்தி போன்ற நடிகர்களுக்கு நூறு பேரைப் புரட்டி எடுக்கும் ஆக்ஷன் ஹீரோ அவதாரம்தான் பிடித்திருக்கிறது என்றால், நியாயமாக அவர்கள் இருக்க வேண்டிய இடம் கோடம்பாக்கம் அல்ல...!

ஒரு வங்கியில் கடன் வசூல் செய்யும் வேலையில் இருக்கிறார் ஹீரோ கார்த்தி. காஜல் அகர்வாலை ஒரு திருமணத்தில் பார்க்கிறார். வழக்கம் போல கண்டதும் காதல் கொப்பளிக்கிறது. உடனே காஜலின் தந்தையைப் பார்த்து பெண் கேட்கிறார். அவரோ ஆறு மாதத்துக்குள் நல்ல வேலையுடன் வா தருகிறேன் என்று கூற, முதல் பாதி முடிந்தே போகிறது.

இதற்கிடையே, போதை தலைக்கேறிய மாணவர் கும்பல் ஒன்று செய்யும் இரட்டைக் கொலையைப் பார்த்து விடுகிறார் கார்த்தியின் தந்தை. அந்த சாட்சியை அடியோடு அழிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறது அந்த கொலைகார கும்பல். அடுத்து என்ன... காதல், 6 மாதக் கெடு எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, தந்தையைக் கொன்ற கும்பலை கதறக் கதற உயிரோடு புதைத்து பழி தீர்க்கிறார் வீராதி வீரரான கார்த்தி... அப்பாடி... நல்ல வேலை 2 மணி நேரத்தோடு படம் முடிந்து தொலைந்தது!

முதல் பாதியில் பருத்திவீரன் ஸ்டைல் நக்கல் நையாண்டி ஆட்டம் பாட்டம் என தெரிந்த ரூட்டில் பயணிக்கும் கார்த்தி, இரண்டாம் பாதியில் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ஆக்ஷன் அவதாரமாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். மகா செயற்கையாக இருக்கிறது.

காஜல் அகர்வால் வழக்கம் போல சில பிட்டுகளில் தோன்றுகிறார்.. ஆடுகிறார். இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்தில் அவர் எங்கே போனார் என்று கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு இதே படத்தை தொடர்ந்து இரண்டு ஷோ பார்க்கும் 'பாக்கியத்தைத்' தரலாம்!.

டாக்ஸி டிரைவராக வரும் ஜெயப்பிரகாஷ் நச்சென்று செய்திருக்கிறார். இவரை இன்னும் கூட பயன்படுத்தியிருக்கலாமே என்று ரசிகர்களுக்குத் தோன்றுவதே அவரது நடிப்புக்குக் கிடைத்த வெற்றி.

படத்தில் பெரும் ஆறுதல், வெண்ணிலா கபடிக் குழுவில் பரோட்டா வீரனாக வருவாரே அந்த சூரிதான். இவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் முதல் பாதியில் கார்த்தி கேரக்டர் அம்பேல்!.

பையாவைப் போலவே இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜாதான் நாயகன். பாடல்களிலும் பின்னணி இசையிலும் கலக்கி இருக்கிறார் இந்த 'இளைய' ராஜா! ஆனால் எல்லாம்.... விழலுக்கு இறைத்த நீர்!!.

ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே சுமார்தான்.

சுசீந்திரனிடம் நிச்சயமாய் இப்படி ஒரு சொதப்பலை எதிர்ப்பார்க்கவில்லை.

ஆமா.. படத்துக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம்... என்கிறீர்களா? அதைக் கண்டுபிடித்துச் சொல்ல தனி போட்டியே வைக்கலாம்!.

இன்னொன்று, இந்த மாதிரி படங்களை சகித்துக் கொள்ள 'நாங்கள் மகான்கள் அல்ல' என்று ரசிகர்கள் புறக்கணிக்கும் நிலை வரலாம் என்பதை இயக்குநரும் நடிகரும் புரிந்து கொண்டால் சரி!