என்.எஸ்.கே மகன் கிட்டப்பா மரணம்- டிராபிக் நெரிசலில் ஆம்புலன்ஸ் வராததால் மரணித்த பரிதாபம்!

என்.எஸ்.கே மகன் கிட்டப்பா மரணம்- டிராபிக் நெரிசலில் ஆம்புலன்ஸ்  வராததால் மரணித்த பரிதாபம்!

பெங்களூர்: மறைந்த நகைச்சுவை மேதை என்.எஸ்.கிருஷ்ணனின் மகன் கிட்டப்பா பெங்களூரில் இன்று மரணமடைந்தார்.

உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆனால் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டு வர முடியாமல் போனதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த கிட்டப்பாவுக்கு வயது 72 ஆகும். ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஆவார். பெங்களூரில் தனது மனைவி இந்திராவுடன் வசித்து வந்தார்.

என்எஸ்கேவின் மாபெரும் ஹிட் படமான நல்லதம்பி படத்தில் கிட்டப்பாவும் நடித்திருந்தார்.

அவருக்கு நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி இந்திரா, ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் ஆம்புலன்ஸால் விரைவாக வர முடியாமல் போனது.

இந்த நிலையில் மூச்சுத் திணறல் அதிகமாகி கிட்டப்பா மரணமடைந்து போனார். ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டப்பாவின் மகள் தேன்மொழி அமெரிக்காவில் இருக்கிறார். அவர் பெங்களூர் வந்துள்ளார். இன்று இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

புகைப்படக்காரருக்கு 'பஞ்ச்' விட்ட அவதார் ஹீரோ கைது

நியூயார்க்: அவதார் ஹாலிவுட் படத்தில் நடித்த ஹீரோ சாம் வொர்திங்டன் புகைப்படக்காரர் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

புகைப்படக்காரருக்கு 'பஞ்ச்' விட்ட அவதார் ஹீரோ கைது

உலக அளவில் வசூலை அள்ளிக் குவித்த ஹாலிவுட் படமான அவதாரில் ஹீரோவாக நடித்தவர் சாம் வொர்திங்டன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர் நியூயார்க்கில் நேற்று மாலை தனது காதலியுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது புகைப்படக்காரரான ஷெங் லி என்பவர் சாமின் காதலியை காலில் எத்தியுள்ளார்.

இதை பார்த்த ஹீரோவுக்கு கோபம் வந்து லி-க்கு ஆக்ரோஷமாக பஞ்ச் விட்டார். இதையடுத்து போலீசார் சாம் மற்றும் லியை கைது செய்தனர். எதற்காக லி சாமின் காதலியை எத்தினார் என்று தெரியவில்லை.

கைதான சாம் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் வரும் புதன்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

என் படத்துக்கு தலைப்பை இளையராஜாதான் வைப்பார்! - மகேந்திரன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கும் புதிய படத்தின் தலைப்பை இளையராஜாதான் வைப்பார் என்று இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.

முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள் என தமிழ் சினிமாவில் காவியங்கள் படைத்த இயக்குநர் மகேந்திரன். அவர் படங்களுக்கு இளையராஜா அமைத்த இசை தனித்துவம் மிக்கது.

மகேந்திரன் படைப்புகளுக்கு ஜீவனாய் அமைந்த இசை. மகேந்திரன் எழுதாத வசனங்களை வாத்தியங்களால் எழுதியவர் இளையராஜா. இதை மகேந்திரனே பல முறை சொல்லியிருப்பது நினைவிருக்கலாம்.

என் படத்துக்கு தலைப்பை இளையராஜாதான் வைப்பார்! - மகேந்திரன்

இந்த இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். அந்தப் படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

நிகழ்ச்சியில் இளையராஜாவும் மகேந்திரனும் பங்கேற்றனர்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் மகேந்திரன் கூறுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் பண்ணுகிறேன். புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையை மையப்படுத்திதான் இந்தப் படத்தை உருவாக்குகிறேன்.

இந்த இடைப்பட்ட நாட்களில் எனக்கு நிறைய படங்கள் பண்ண வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கே உரிய சில கிறுக்குத்தனங்களை சமரசம் செய்து கொள்ள முடியாததால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை. நீங்கள் எல்லாம் அறிந்த கதைதான்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. என் படங்கள் சிலவற்றுக்கு இளையராஜாதான் தலைப்பு வைத்தார். உதிரிப் பூக்கள் என்ற தலைப்பே அவர் வைத்ததுதான் (உடனே இளையராஜா யோசித்துவிட்டு... 'ஆமாம்' என்கிறார்!).

இந்தப் படத்துக்கும் அவர்தான் தலைப்பு வைப்பார்.

என் படங்களில் பெரும்பாலான வசனங்களை நான் எழுதவில்லை. இளையராஜாதான் எழுதியிருப்பார். குழப்பமா இருக்கா... நான் எடுத்த காட்சிகள் பெரும்பாலானவை மவுனமாகத்தான் இருக்கும். அந்த காட்சிகளுக்கெல்லாம் தன் இசையால் அர்த்தமுள்ள வசனங்கள் எழுதியவர் இளையராஜாதான். அவர் இல்லாமல் என் படங்கள் இல்லை," என்றார்.

 

இளையராஜாவின் யு ட்யூப் இணையதளம்!

இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கென யுட்யூப்பில் புதிய பக்கம் தொடங்கியுள்ளனர்.

Ilaiyaraajaofficial எனும் பெயரில் யு ட்யூபில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பக்கத்தில் ராஜாவின் பாடல்களை ஒலி வடிவில் கேட்கலாம்.

ஆன்லைனில் இளையராஜாவின் பாடல்கள்தான் இன்று எங்கு பார்த்தாலும் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இவற்றில் முறையாக அனுமதி பெற்று இயங்குபவை மிகக் குறைவுதான்.

இளையராஜாவின் யு ட்யூப் இணையதளம்!

அந்தக் குறையைப் போக்கும் வகையில், ராஜாவின் ஆரம்ப படங்களிலிருந்து இன்றுவரை உள்ள பாடல்கள் அனைத்தையும், படங்கள் வாரியாக இந்த யு ட்யூப் தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.

ராஜாவின் இசையை இப்போது வெளியிட்டுவரும் அகி மியூசிக்காரர்கள் இந்த தளத்தை உருவாக்கி, பாடல்களை பதிவேற்றி வருகின்றனர்.

இப்போதைக்கு ஆனந்தகும்மி, ஆண் பாவம், வருஷம் பதினாறு, ஆனந்த ராகம் போன்ற படங்களின் முழுப் பாடல்களையும் இந்தத் தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

 

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை - முதல்வருக்கு தமிழ் திரையுலகினர் நன்றி!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் உள்பட 7 பேரை விடுவிக்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் ஆதரவும் நன்றியும் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் விடுதலை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை - முதல்வருக்கு தமிழ் திரையுலகினர் நன்றி!

இந்த கூட்டத்தில், இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "உலக நாடுகள் அனைத்தும் தூக்குத் தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு. முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள்," என்றார்.

சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் பேசும்போது, "தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகம் முழு மூச்சாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும்," என்றார்.

கேயார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் பேசுகையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மனித நேயத்துடன் முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இதில் அரசியல் கிடையாது. எனவே தமிழ் திரையுலகை சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்," என்றார்.

இந்த கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வீ.சேகர், தென்னிந்திய திரைப்பட சம்மேளன தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம், கவிஞர் தாமரை, பட அதிபர் சித்ரா லட்சுமணன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் பேசினார்கள். இயக்குநர் கவுதமன் நன்றி கூறினார்.

 

த்ரிஷ்யம் ரீமேக்கில் சிம்ரன்.. ஓகே சொன்ன கமல்

கமல் - சிம்ரன்... ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பரபரப்புக் கிசுகிசுக்களுக்கு பஞ்சம் வைக்காத ஜோடி. குறிப்பாக பஞ்ச தந்திரம் உருவான நாட்களில், தினம் ஒன்றல்ல.. பத்து கிசுகிசுக்கள் வரும் இந்த இருவர் பற்றியும்.

த்ரிஷ்யம் ரீமேக்கில் சிம்ரன்..  ஓகே சொன்ன கமல்

பின்னர் இருவருக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாகிப் போனது. சிம்ரன் திருமணமாகி குழந்தை பெற்று மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

கமலும் தன் காதல் இளவரசன் ஸ்டேடஸை வேறு நடிகர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.

இந்த சூழலில் மீண்டும் சிம்ரனுடன் ஜோடி சேர ஓகே சொல்லியிருக்கிறார் உலகநாயகன்.

மலையாளத்தில் மோகன்லால் - மீனா நடித்து பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமலும் சிம்ரனும் மீண்டும் இணைகிறார்கள்.

சிம்ரனா நதியாவா என்று ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்த கமல், கடைசியில் சிம்ரனே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.

 

நடிகர் அம்பரீஷ் நலமுடன் உள்ளார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்! - மனைவி சுமலதா விளக்கம்

பெங்களூர்: பிரபல கன்னட நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான அம்பரீஷ் உடல்நிலை இப்போது சீரடைந்துள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மனைவி சுமலதா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை அமைச்சராக இருப்பவர் நடிகர் அம்பரீஷ்.

நடிகர் அம்பரீஷ் நலமுடன் உள்ளார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்! - மனைவி சுமலதா விளக்கம்

புகைப்பழக்கம் காரணமாக அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நோய் தொற்றை அகற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

அத்துடன் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது. டியூப் மூலம் திரவ உணவு செலுத்தப்படுகிறது.

வதந்தி

இதற்கிடையே, அம்பரீஷ் உடல்நிலை குறைத்து பல்வேறு வதந்திகள் இன்று காலை பரவின. இவற்றை மறுத்த அவர் மனைவி சுமலதா, "அவரது உடல்நிலை இப்போது சரியாக இருக்கிறது. வதந்திகளை நம்ப வேண்டாம்," என்றார்.

அம்பரீஷ் கன்னட படங்களில் முன்னணி நடிகராக இருந்தவர். தமிழில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த 'ப்ரியா' படத்திலும் நடித்துள்ளார். இதில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக வந்தார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். முன்னாள் கதாநாயகி சுமலதாவின் கணவர்.

கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 208 படங்கள் நடித்துள்ளார் அம்பரீ்ஷ்.

மூன்று முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பரீஷ், கடந்த 2006லிருந்து 2008 வரை மத்திய அமைச்சராகவும் இருந்தார். காவிரி பிரச்சினைக்காக தன் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினராகவும் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் உள்ளார்.

 

பேரக் குழந்தைகளை கொஞ்சி விளையாட ஆசை - ஸ்ரீதேவி 'பாட்டி'!

பேரக் குழந்தைகளை கொஞ்சி விளையாட ஆசை - ஸ்ரீதேவி 'பாட்டி'!

சென்னை: மகள்களுக்கு திருமணமாகி அவர்களின் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ ஆசையாக உள்ளது என நடிகை ஸ்ரீதேவி கூறினார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக் கழக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஸ்ரீதேவி.

சென்னையை மறக்கமுடியாது

அப்போது அவர் பேசுகையில், " மும்பையில் இருந்தாலும் சென்னையை என்னால் மறக்க முடியாது. இங்குள்ள இடங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. தமிழ் டி.வி. சேனல்களை தொடர்ந்து பார்க்கிறேன். சில டி.வி. தொடர்களையும் பார்க்கிறேன்.

காமெடி பிடிக்கும்

தமிழ் காமெடி சீன்கள் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். டி.வியில் காமெடி சீன்கள் வரும்போத தவறாமல் பார்த்து விடுவேன். எனக்கும் காமெடி படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது.

பாராட்டு

தமிழ் நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உள்ளது. அவற்றை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த மாதிரி இயக்குநர்களும் அமைந்துள்ளனர்.

குடும்பத் தலைவி

நான் நல்ல குடும்பத் தலைவியாக இருக்கிறேன். வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நானே மார்க்கெட்டுக்கு போய் வாங்கி வருகிறேன். ஓய்வு நேரத்தில்தான் நடிக்கிறேன்.

பேரக்கு ழந்தைகள்

எனது மகள்களுக்கு திருமணம் நடந்து, பேரக் குழந்தைகளை கொஞ்சி விளையாட வேண்டும் என இப்போதே எனக்கு ஆர்வமாக உள்ளது," என்றார்.

 

லாரி மோதி 'உண்மை' பட இயக்குநர் படுகாயம்

லாரி மோதி 'உண்மை' பட இயக்குநர் படுகாயம்

உண்மை என்ற படத்தை இயக்கி நடித்து வரும் ரவிக்குமார் மும்பையில் லாரி மோதி படுகாயம் அடைந்தார்.

சுஜிபாலா நடிக்கும் உண்மை படத்தை இயக்கி நடித்து வருகிறார் பி.ரவிகுமார். சுஜிபாலாவுடன் திருமணம் நிச்சயமாகி, பின் அது ரத்தாகி ஏக சர்ச்சைகளைக் கிளப்பிய அதே ரவிக்குமார்தான் இவர்.

திருமண சர்ச்சைகள் ஓய்ந்து, பட வேலைகளில் பிஸியாகியுள்ளார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளது.

இதற்காக ரவிகுமார் லோகேஷன் பார்க்க சென்றிருந்தார். மும்பை அந்தேரியில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வெர்சோவா பகுதியில் சிக்னலை கடந்த போது பின்னால் வந்த லாரி அவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவிகுமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரவிகுமாரின் விலா எலும்பிலும் கையிலும் பலத்த அடிபட்டுள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.