இதுவரை உலகம் அறிந்திராத கேரள இருண்ட வனத்தில் “உறுமீன்” சூட்டிங்!

சென்னை: கேரளாவின் ஆள்நடமாட்டமில்லாத அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பெரும் இடையூறுகளைத் தாண்டி படமாக்கப்பட்டுள்ளதாம் பாபி சிம்ஹாவின் "உறுமீன்" திரைப்படம்.

ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டி.டில்லிபாபு தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் உறுமீன்.

இதில் ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹா நாயகனாகவும், மெட்ராஸ் புகழ் கலையரசன் வில்லனாகவும் நடிக்கின்றனர். நாயகியாக ரேஷ்மிமேனன் நடிக்க முக்கிய வேடங்களில் அப்புக்குட்டி, காளிவெங்க, மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதுவரை உலகம் அறிந்திராத கேரள இருண்ட வனத்தில் “உறுமீன்” சூட்டிங்!

சக்திவேல் பெருமாள்சாமி இதனை இயக்கியுள்ளார். அச்சு இசையமைக்க இந்தப் படத்துக்கு ரவீந்திரநாத்குரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இரண்டு வித்தியாசமான கதைக்களங்களில் பயணிக்கும் திரைக்கதை இன்றைய பொருளாதார பின்னணியை மையமாகக் கொண்டது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் உச்சகட்ட காட்சி கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டது. இதற்குமுன் இத்தகைய இடங்களில் யாரும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பாக படத்தின் டிரைலரினை ஜனவரி இறுதி வாரத்தில் வெளியிட இருக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மியான்மர் ஆகிய இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது.

 

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்…

இப்பொழுது எல்லாம் படத்திற்கு தலைப்பு வைக்க ரூம் போட்டுதான் யோசிக்கிறார். ஒரு எழுத்தில் படத்திற்கு தலைப்பு வைக்கிறார்கள். இல்லை என்றால் நாலு வரிக்கு தலைப்பு வைக்கிறார்கள். அப்படி ஒரு படத்தலைப்புதான் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்'

இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா...? என்று யோசிக்கிறீர்களா? ஒரு படத்தில் வடிவேலுவை மக்களிடம் மாட்டி விடுவார் மாதவன். அவர் பொய் சொல்வதாக பொதுமக்களிடம் கூறுவார் வடிவேலு. அதற்கு ஒருவர், வடிவேலுவிடம் "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்" என்று கூறுவார். இந்த வசனத்தையே படத்தலைப்பாக வைத்துவிட்டனர்.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்…

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை இக்நைட் மற்றும் இனோஸ்டார்ம் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். விளம்பரம் மற்றும் வர்த்தக துறையில் இருந்த அபி என்ற ஏ.எல்.அபநிந்திரன் இயக்குகிறார்.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற இந்த தலைப்பு பிரபலமானது என்பதற்காக மட்டும் அல்ல, கதைக்கும் மிக பொருத்தமானது என்பதால் தான் இதை தலைப்பாக வைத்துள்ளோம் என்கிறார் இயக்குநர் அபநிந்திரன்.

நமது சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும் தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிப்பதுடன், சிந்திக்க வைக்கும் கதை அமைப்புடன் சித்தரிக்கும் படம் தான் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.

நல்ல கதை அமைப்பும், நேர்த்தியான படபதிவும் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். இந்த படம் எல்லா தரப்பினரையும், வயதினரையும் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் கூறுகிறார் இயக்குனர் அபநிந்திரன்.

சமீபகாலமாக நகைச்சுவை வசனங்கள் பல படங்களின் தலைப்பாக மாறுவது பெருகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது இந்த வசனமும் தலைப்பாகியுள்ளது.

படம் மக்களை கவருமா பார்க்கலாம்.

 

விஷாலின் ஆம்பள படத்தினைத் தொடர்ந்து தனுஷின் அனேகனுக்கும் “சிக்கல்”!

சென்னை: தமிழ்சினிமாவில் இது கொஞ்சம் போதாத காலம்தான். விஷாலின் ஆம்பள படத்தை தொடர்ந்து தனுஷின் அனேகன் படத்துக்கும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் "அனேகன்". படம் அடுத்த மாதம் 13ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் நான்கு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று சலவைத் தொழிலாளி கதாபாத்திரம்.

இந்தப் படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் எனவே, படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் சலவைத் தொழிலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விஷாலின் ஆம்பள படத்தினைத் தொடர்ந்து தனுஷின் அனேகனுக்கும் “சிக்கல்”!

இதுதொடர்பாக மதுரை வண்டியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சாலின்மணி, கே.கே.நகர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் மதுரை மாநகர போலீஸ் ஆணையர் சஞ்சய் மாத்தூரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், " கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

எனவே அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும். படத்தில் இழிவு வசனங்கள் இடம்பெறச் செய்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதை பேசி நடித்த நடிகர்கள் ஜெகன், தனுஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் சஞ்சய் மாத்தூர் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

 

ஜப்பானில் அட்ரஸ் தொலைத்த தமிழ் நடிகை: காப்பாற்றிய டாக்சி டிரைவர்

படப்பிடிப்பிற்காக ஜப்பான் போன இடத்தில் முகவரியை தொலைத்துவிட்டு தடுமாறியிருக்கிறார் தமிழ் நடிகை ஒருவர். அவரை பத்திரமாக இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார் அங்குள்ள டாக்சி டிரைவர் ஒருவர். அவர் ரஜினி ரசிகராம்.

அம்புலி 3டி, ஆ படங்களின் வெற்றிகளை தொடர்ந்து இயக்குனர் இரட்டையர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் புதிய படம் ஜம்போ 3டி.

கோகுல் இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சுகன்யா, பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் 'கும்கி' அஷ்வின் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதாநாயகி அஞ்சனா கீர்த்தி தனது ஜம்போ அனுபவத்தை உற்சாகம் பொங்க கூறியுள்ளார்.

ஜப்பானில் அட்ரஸ் தொலைத்த தமிழ் நடிகை: காப்பாற்றிய டாக்சி டிரைவர்

இரட்டை இயக்குநர்கள்

ஜம்போ படத்தில் இயக்குனர்கள் ஹரி - ஹரீஷ் உடன் பணிபுரிவது மிக இனிதான ஒன்றாய் அமைந்தது. இவர்கள் இருவரும் வேகமாகவும், விவேகமாகவும் வேலை செய்ய கூடியவர்கள் என்றார். இப்படத்தில் வேலை செய்தது பல அருமையான அனுபவங்களை தந்தது.

பொம்மை போல

"படத்தில் ஒரு காட்சியில் நான் ஜப்பான் பதுமையாக நடிக்க வேண்டியிருந்தது. எனக்கு கண் இமைக்காமல், சலனமற்ற பொம்மையாக அசைவில்லாமல் நடிக்க சொல்லி கொடுத்தார்.

தமிழர்கள் வரவேற்பு

படத்தின் 90% ஜப்பானின் டோக்கியோ, டோயாமா நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. டோக்கியோ தமிழ் சங்கத்தினர் எங்களை கனிவாய் வரவேற்னர்

டாக்சி டிரைவர்

ஒரு நாள் தனியாக ஷாப்பிங் சென்றபொழுது ஜப்பானிய மொழியில் எழுதிய விலாசத்தை தொலைத்துவிட்டேன். ஒரு ஜப்பானிய டாக்சி ஓட்டுனர் எனக்கு உதவி புரிந்தார். நான் இந்தியாவை சேர்ந்தவள் என்றவுடன் ரஜினிகாந்தை பற்றி பேசினார். தமிழிலும் பேசினார் என்றார்

ஜப்பான் நடிகர்கள்

ஜப்பானிய நடிகர் நடிகைகளுடன் நடித்தோம். ஜப்பான் பத்திரிக்கைகளில் எங்களை பற்றி செய்திகள் வந்தது மிகவும் பெருமையாக இருந்தது.

குழந்தைகளை கவரும்

அழகிய பேபி ஹம்சிகா இப்படத்தில் முக்கியமான கதாப்பதிரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவைமிக்க 3டி படமாய் உருவாகி வரும் இப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்." என கூறினார் நடிகை அஞ்சனா.

 

அல்டிமேட் ஸ்டார் அஜீத்துடன் மோதப் போகும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்..!

தல அஜீத் உடன் மோதப்போகிறார் நாட்டாமை சரத்குமார் என்ற தகவல்கள் தீயாக பரவி வருகின்றன. என்ன வென்று விசாரித்தால் சண்டமாருதம் பட ரிலீஸ் பற்றிய செய்தியாம்.

அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஷங்கரின் 'ஐ' படத்தோடு போட்டி போடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜனவரி 29ஆம் தேதிக்கு திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 29ஆம் தேதி அஜீத் படம் போட்டியின்றி சோலோவாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அஜீத்துடன் மோத தயாராகிவிட்டார் சரத்குமார்.

அல்டிமேட் ஸ்டார் அஜீத்துடன் மோதப் போகும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்..!  

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'சண்டமாருதம்' திரைப்படம் என்னை அறிந்தால் பட ரிலீஸின் அடுத்த நாளான ஜனவரி 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

சரத்குமார் இரு வேடங்களிலும் மற்றும் ஓவியா, மீரா நந்தன், சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, டெல்லி கணேஷ், சிங்கம் புலி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வெங்கடேஷ் இயக்கத்தில் மகாபிரபு, ஏய், சாணக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார் சரத்குமார். இது வெங்கடேஷ் இயக்கத்தில் சரத் நடிக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளான கமல் மகள் அக்ஷரா

பாலிவுட் படம் ஒன்றில் ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளாக கமல் மகள் அக்ஷராஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கமல்-ஸ்ரீதேவி ஜோடி பிரபலம். இன்றைக்கு அவர்களின் வாரிசுகள் நடிக்க வந்துவிட்டனர். கமல் இன்னமும் ஹீரோவாக நடித்து வந்தாலும் திருமணம் குழந்தைகள் என்று செட்டில் ஆன ஸ்ரீதேவி மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' கொடுத்த வெற்றி உற்சாகத்தினால் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள ஸ்ரீதேவி, தற்போது விஜய்யின் புலி படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளான கமல் மகள் அக்ஷரா

இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் ஸ்ரீதேவி ஹீரோயினியாக நடிக்கவுள்ளார். வளர்ப்பு மகளுக்கும் தாய்க்கும் இடையே நடைபெறும் பாசப்போராட்டம்தான் கதையின் முக்கிய கரு.

இந்த படத்தில் தாயாக ஸ்ரீதேவியும், வளர்ப்பு மகளாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் அமிதாப், தனுஷுடன் 'ஷமிதாப்' படத்தில் அறிமுகமான அக்ஷராவுக்கு இது இரண்டாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

‘ஐ’ படத்திற்கு எதிராக திரளும் திருநங்கைகள்: ஷங்கர் வீட்டு முன் போராட முடிவு

சென்னை: ஐ' படத்தில் தங்களை கொச்சைப்படுத்தி இருப்பதாகக் கூறி, இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக திருநங்கைகள் அறிவித்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஐ'. பொங்கல் பண்டிகை நாளில் வெளியான இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக ஒஜாஸ் ரஜானி என்ற திருநங்கை நடித்துள்ளார்.

இவர் பிரபலமான ஒப்பனைக் கலைஞராவார். படத்திலும் ஒப்பனைக் கலைஞராக வரும் இவரது கதாபாத்திரம், விக்ரம் தனக்கு கிடைக்கவில்லை என்று அவரைப் பழிவாங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

‘ஐ’ படத்திற்கு எதிராக திரளும் திருநங்கைகள்: ஷங்கர் வீட்டு முன் போராட முடிவு

இந்நிலையில், இன்று 'ஐ' படத்திற்கு எதிராக திருநங்கைகள் அனுப்பிய அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் பானு கூறியதாவது:

"'ஐ' படத்தில் திருநங்கைகளை மிகவும் தவறாக சித்தரித்திருக்கிறார்கள். இப்படத்தில் திருநங்கை அறிமுகமாகும் காட்சியில் விக்ரம் மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து "ஊரோரம் புளியமரம்" பாடலை பாடி கிண்டல் செய்வார்கள். மேலும், அந்த பாத்திரமே ஆண்களின் உடலுக்கு அலைவது போல சித்தரித்திருக்கிறார்.

நானும் அந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடைவேளையின்போது அனைவருமே என்னையும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். திருநங்கைகள் இப்போது பல்வேறு சாதனைகள் செய்யத் தொடங்கிவிட்டோம். தமிழ்த் திரையுலகில் இருப்பவர்கள் கொஞ்சம் வளர வேண்டும்.

நம் சமூகத்தில் ஏற்கெனவே திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வருகிறார்கள். இப்படத்தை பார்ப்பவர்கள் அனைவருமே அந்தக் கண்ணோட்டமே மேலோங்கும். இறுதி காட்சியில் சந்தானம் கிண்டல் செய்திருக்கிறார். மேலும், சந்தானம் எப்போதுமே திருநங்கைகளை தவறாகவே பேசி வருகிறார்.

'ஐ' படத்துக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

மேலும், தமிழக அரசு திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே எங்களால் படத் தணிக்கை குழுவில் இடம்பெற்று, திருநங்கை கொச்சைப்படுத்தும் காட்சிகளை எல்லாம் நீக்க முடியும்" என்று பானு தெரிவித்தார்.