அஜீத், விஜயை நிராகரிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கௌதம் மேனன்

I M Not Bigshot Reject Ajith Vijay Gautham Menon

சென்னை: அஜீத், விஜயை நிராகரிக்கும் அளவுக்கு தான் பெரிய ஆள் இல்லை என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் அஜீத் குமார், விஜய் ஆகிய இரண்டு பேரையும் வைத்து படம் எடுக்க பிரியப்படவில்லை என்று ஒரு காலத்தில் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் கௌதம்.

அப்போது அவர் கூறுகையில், நான் மட்டுமல்ல சசிகுமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸும் அஜீத் குமார் மற்றும் விஜயை வைத்து படம் எடுக்க ரெடியாக உள்ளனர். அஜீத், விஜயை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. அவர்கள் என் படத்தில் நடிக்க ஆசைப்பட்டால் அவர்களை இயக்க தயாராக உள்ளேன் என்றார்.

இந்த பேட்டியை அடுத்து இனி யாரும் கௌதமை விமர்சிக்க முடியாதல்லவா. அனைத்து இயக்குனர்களும் அஜீத், விஜய்க்கு அடிபோட்டால் பிற நடிகர்கள் யாரப்பா இயக்குவது.

 

அப்பா கமலுடன் நடிக்கிறேனா? - ஸ்ருதி விளக்கம்

Shruti Haasan Denies Film With Dad   

அப்பா கமலுடன் இணைந்து நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாஸன்.

விரைவில் கமல்ஹாஸனுடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் தொடங்கவிருக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாஸன் நடிக்கப் போகிறார் என்று சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

கமல்ஹாஸனும் அவர் மகள் ஸ்ருதி ஹாஸனும் பல முறை, இருவரும் சேர்ந்து நடிக்க விருப்பமாக உள்ளதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அடுத்து உருவாகும் கமல் படத்தில் ஸ்ருதி நடிப்பார் என்று யூகங்கள் கிளம்பின.

இதற்கு விளக்கம் அளித்த ஸ்ருதி, "இப்போதைக்கு அப்பாவுடன் சேர்ந்து படம் பண்ணும் திட்டம் இல்லை. ஆனால் அப்படியொரு எண்ணம் உள்ளது. நடக்கும்போது நானே சொல்வேன்," என்றார்.

ஸ்ருதி ஹாஸன் இப்போதைக்கு தெலுங்கில் யாதவா, பாலுபு ஆகிய இரு படங்களிலும், இந்தியில் பிரபு தேவா இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

விஸ்வரூபத்துக்குப் பின், தமிழில் ஒரு படம், ஆங்கிலத்தில் ஒரு படமும் இயக்கி நடிக்கிறார் கமல்.

 

வீட்டை விட்டு வெளியே போக பயமா இருக்கு… ஸ்ருதிஹாசன்

Shruthi Hassan S Comment On Rapes   

டெல்லி:டெல்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம், தூத்துக்குடி, புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளை காணும் போது வீட்டை விட்டு வெளியே போகவே பயமாக இருக்கிறது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் காதல் அழகானது அதற்கான நேரம் இன்னும் தனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறும் ஸ்ருதிஹாசன், தான் கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதி, ஒரு பெண்ணாக இதைப்பற்றி பேச பயமாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே போக முடியுமா என்கிற கவலை இருக்கிறது என்றார். அந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று நினைத்து அழுதேன் என்றும் ஸ்ருதி கூறியுள்ளார்.

 

கமலுக்கு நான் தருகிறேன் தியேட்டர் - தாசரி நாராயணராவ்

Dasari Narayana Rao Welcomes Kamal Move

கமல்ஹாஸன் நிஜமான உலகநாயகன். அவர் படத்துக்கு யார் தியேட்டர் தந்தாலும் தராவிட்டாலும் நான் தருகிறேன், என்று முழங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் முக்கியப் புள்ளி தாசரி நாராயணராவ்.

சமீபத்தில்தான் ஹைதராபாதில், தாசரி நாராயணராவ் தலைமையில் விஸ்வரூபம் இசையை வெளியிட்டார் கமல் என்பது நினைவிருக்கலாம்.

தாசரி நாராயணராவ் கட்டுப்பாட்டில் ஏராளமான திரையரங்குகள் ஆந்திராவில் உள்ளன.

சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் பெரிய படங்கள் வெளியாவதால் விஸ்வரூபத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடப் போவதாக முதலில் கமல் அறிவித்திருந்தார்.

ஆனால் இப்போது தாசரி நாராயணராவ் தந்த தைரியத்தில், தமிழில் வெளியாகும்போதே, ஆந்திராவிலும் விஸ்வரூபத்தை வெளியிடப் போகிறாராம் கமல்.

விஸ்வரூபம் குறித்து தாசரி நாராயணராவ் கூறுகையில், "'டிடிஎச்சில் முன்கூட்டியே படத்தை வெளியிடும் கமல் முடிவை நான் வரவேற்கிறேன். அவருக்கு ஆதரவாக தியேட்டர்களைத் தரவும் முடிவு செய்துள்ளேன். கமல் நிஜமான உலக நாயகன். அவர் முடிவு திரையுலகுக்கு பலன் தரும்," என்றார்.

 

ஜூனியர் சூப்பர் டான்சர் நிகழ்ச்சிக்கு நடுவராகிறார் நமீதா!

Junior Super Dancer New Reality Show

நமீதா பீல்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மீடியாவில் செய்தியாக வலம் வருவார். மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் மச்சான் என்று கூறி அவர் மார்க் போடும் அழகே தனிதான். இப்போது புதிதாக சூப்பர் டான்சர் நிகழ்ச்சியின் நடுவராக களம் இறங்கியுள்ளார்.

ஜூனியர் சூப்பர் டான்சர் நிகழ்ச்சி பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்சியை மானாட மயிலாட இயக்கும் கலா மாஸ்டர் இயக்குகிறார்.

பிரம்மாண்டமான மேடையில் 8 வயது முதல் 13 வயது வரை உடைய குட்டிச் சுட்டிகள் நடனமாடுகின்றனர். பிற சேனல்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இந்த நிகழ்ச்சி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ

பாட்டு, நடனம் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பும் சேனல்களின் வரிசையில் தற்போது பாலிமர் டிவியும் இணைந்துள்ளது.

குட்டீஸ்களின் நடன நிகழ்ச்சி

சின்னக்குழந்தைகள் பேசுவது அழகு... அவர்கள் பாடவும், ஆடவும் செய்வது அதைவிட அழகு. இந்த நிகழ்ச்சிகளுக்கு என்றைக்குமே தனி வரவேற்பு உண்டு. இதனைக் கருத்தில் கொண்டுதான் பாலிமர் டிவியில் ஜூனியர் சூப்பர் டான்சர் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளனர்.

இதுவும் கலா மாஸ்டர்தான்

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட, குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியை இயக்கிய கலா மாஸ்டர் பாலிமர் டிவியில் இந்த நிகழ்ச்சியை இயக்குகிறார்.

புதிய தொகுப்பாளர்கள்

அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீயும், டான்ஸ் மாஸ்டர் பாபியும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகின்றனர்

நடுவராக நமீதா

மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளர்களை மாச்சான் என்று கூறி பறக்கும் முத்தத்தை பறக்கவிட்டு மார்க் போட்ட நமீதா இதில் நடுவராக களம் இறங்கியுள்ளார். அவருடன் நடன இயக்குநர்கள் அசோக், பிரசன்னா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர்.

52 குட்டீஸ்கள் அமர்களம்

இந்த நடன நிகழ்ச்சியில் 8 முதல் 13 வயது வரை உள்ள 52 குட்டீஸ்கள் நடனமாட உள்ளனர். ஞாயிறுதோறும் காலை 10 மணிமுதல் 11 மணி வரை பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகிறது ஜூனியர் சூப்பர் டான்சர் நிகழ்ச்சி.

 

எம்எஸ்வி இசையில் 'மனிதனாக இரு'... ஆடியோ சிடி வாங்கினால் படத்தில் நடிக்க வாய்ப்பு!

manithanaga iru offers chances new
ஒரு ஆடியோ சிடி வாங்கினால் போதும்... நடிக்க வாய்ப்பு தருகிறேன்..' என்கிறார் மனிதனாக இரு படத்தின் இயக்குநர் சேதுமணி அனந்தா. இவர் மும்பை வாழ் தமிழர்.

‘ஆக்ட்அபான் வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்' என்ற மும்பையைச் சேர்ந்த பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

திரை இசை சக்ரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இப்படத்திற்காக 19 பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை இரு பாகங்களாக வெளியிடும் திட்டத்தில் உள்ளனர்.

‘மனிதனாக இரு - பாகம் 1'இன் இசை வெளியீடு சமீபத்தில் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. முதல் பாகத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ‘பாசம்' படத்தில் ‘உலகம் பிறந்தது எனக்காக' என்ற சூப்பர் ஹிட் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் டி.எம்.எஸ். பாடினார். அதே பாடலின் வரிகளை ஆங்கிலத்தில் ‘மனிதனாக இரு - பாகம் 1' இல் எம்.எஸ்.வி. இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.

‘மனிதனாக இரு - பாகம் 1' இம்மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து ‘மனிதனாக இரு - பாகம் 2' தொடங்க இருக்கிறது. அதில் மீதமுள்ள 9 பாடல்கள் இடம்பெறுகின்றன.

இரண்டாவது பாகத்தில் நடிப்புத் திறமையையோ, பிற தொழில்நுட்ப திறமைகளையோ வெளிப்படுத்த விருப்பப்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ஆக்ட்அபான் வென்சர்ஸ்' நிறுவனம் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி ‘மனிதனாக இரு - பாகம் 1' இன் ஆடியோ சி.டி. வாங்குபவர்கள் அதன் மேலட்டையையும், ஆடியோ சி.டி. வாங்கியதற்கான அத்தாட்சியையும் சமர்ப்பித்தால், திறமையின் அடிப்படையில் ‘மனிதனாக இரு - பாகம் 2'இல் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க இப்பட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்!

அட தமாஷ் இல்லீங்க... சீரியஸாகவே இதை அறிவித்து, தங்கள் மெயில் ஐடியையும் வெளியிட்டுள்ளனர்... இமெயில் - incomes108@gmail.com.

 

சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான்: 'பவர் ஸ்டார்'

Powerstar Is The Only Match Super Star

சென்னை: சூப்பர் ஸ்டாரு்ககு போட்டினா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று தனக்குத் தானே பட்டம் வைத்துக் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சந்தானத்துடன் சேர்ந்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். படத்தின் ட்ரெய்லரே இவ்வளவு காமெடியாக உள்ளது என்றால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இது தவிர பவர்ஸ்டார் ஷங்கரின் ஐ படத்தில் நடிக்கிறார். அதில் அவர் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிட்டி ரோபோ கதாபாத்திரம் போன்று நடிக்கிறார்.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டார் தான். சந்தானம் எனது தம்பி மாதிரி. அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு தம்பியாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனந்த தொல்லையின் ரிலீஸை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளேன் என்றார்.

 

'தீயா வேலை செய்யணும் குமாரு'

Sundar C S Next Movie With Sidhardh

சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் தலைப்புதான் நீங்கள் மேலே படித்தது.

இந்தப் படத்தின் நாயகனாக சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுந்தர் சி படத்தில் நடிப்பது சித்தார்த்துக்கு இதுதான் முதல்முறை.

இப்போது விஷால் - அஞ்சலி - வரலட்சுமி நடிப்பில் மத கஜ ராஜாவை முடித்துவிட்ட சுந்தர் சி, அந்தப் படத்தை பொங்கலுக்கு வெளியிடவிருந்தார். ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப் போகிறது.

அதற்காக காத்திருக்க விரும்பாத சுந்தர், வேக வேகமாக தனது அடுத்த படத்தின் பணிகளை ஆரம்பித்துவிட்டார். படத்தின் தலைப்பு - தீயா வேலை செய்யணும் குமாரு!

படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பவர் ஹன்ஸிகா. இவர்கள் இருவரும் ஏற்கெனவே தெலுங்கில் இணைந்து நடித்துள்ளனர்.

காமெடிக்கு சுந்தர்சியின் இப்போதைய ஆஸ்தான காமெடியன் சந்தானமும் கைகோர்க்கிறார். முழுக்க முழுக்க காமெடிக் கதம்பமாக படம் உருவாகிறது.

அரசியல் மேடை, அவ்வப்போது கருத்து சொல்வது என பரபரப்பாக இருக்கும் குஷ்புதான் படத்தின் தயாரிப்பாளர்!

 

விஸ்வரூபத்துக்கு தடை வருமா...? - ஜனவரி 8-ம் தேதி வழக்கு தள்ளி வைப்பு!

Will Court Ban Viswaroopam   

சென்னை: விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கூடாது என கமல் தரப்பில் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர். இந்த வழக்கு வரும் 8-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், படத்தை திட்டமிட்டபடி கமலால் வெளியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ராஜேந்திர ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிக்க சந்திரஹாசன், கமல்ஹாசன் ஆகியோருடன் 2008 ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால் படம் தொடங்கப்படவில்லை. இதனால் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. மர்மயோகி படத்துக்காக வாங்கிய தொகையை ராஜ்கமல் நிறுவனம் திருப்பித் தராத வரை, விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது," என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வினோத்குமார் சர்மா விசாரிக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "இது பொய் வழக்கு. இதுபோன்ற மனு ஒன்றை பிரமிட் சாய்மீரா என்ற பெயரில் தாக்கல் செய்து, ரூ.10 கோடி கேட்டுள்ளனர். அந்த வழக்கில் அந்த தொகைக்கான உத்தரவாதத்தை அளித்திருக்கிறோம். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொடரப்பட்டுள்ள மற்றொரு வழக்கை ஏற்க முடியாது.

விஸ்வரூபம் படத்தை தமிழ் மற்றும் இந்தியில் ரூ.90 கோடி செலவில் தயாரித்து 10 -ந்தேதி டி.டி.எச். முறையிலும், 11 -ந்தேதி திரையரங்குகளிலும் வெளியிட உள்ளோம். இப்போது இதற்கு தடை விதித்தால் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாவோம். எனவே விஸ்வரூபத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையை 8-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்குகளால் விஸ்வரூபம் படத்துக்கு தடை வருமா என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின்

Bollywood Thuppaki Disappoints Asin

மும்பை: துப்பாக்கி இந்தி ரீமேக்கில் எப்படியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்த அசினுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

அசின் பாலிவுட் போன கதை உங்களுக்கு எல்லாம் தெரியும். கஜினியை இந்தியில் ரீமேக் செய்தார் ஏ.ஆர். முருகதாஸ். அப்போது தமிழ் கஜினியில் நடித்த அசினையே இந்தியிலும் போடலாமே என்று நாயகன் ஆமீர் கான் கூற முருகதாஸும் ஓகே சொன்னார். அப்படி பாலிவுட் சென்ற அவர் காதுகளுக்கு துப்பாக்கி படத்தை முருகதாஸ் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்யும் செய்தி வந்தது.

முருகதாஸின் இரண்டு படங்களில் நடித்துவிட்டோம், அக்ஷய் குமாருடனும் இரண்டு படங்களில் நடித்துவிட்டோம். அதனால் இந்த துப்பாக்கி ரீமேக்கில் நாயகியாகும் வாய்ப்பு நமக்கு தான் வரும் என்று அவர் ஓவராக எதிர்பார்த்துவிட்டார். ஆனால் அக்ஷய் குமாரோ சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக்கினால் நன்றாக இருக்குமே என்று கூற இயக்குனரும் அவ்வாறே செய்துவிட்டார்.

இதையடுத்து புத்தாண்டில் துப்பாக்கி ரீமேக் ஷூட்டிங் துவங்கிவிட்டது. அக்ஷயும், சோனாக்ஷியும் சேர்ந்து நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்பார்ப்புடன் இருந்த அசினுக்குத் தான் ஏமாற்றமாகிவிட்டது. அக்ஷயும், சோனாக்ஷியும் சேர்ந்து ஏற்கனவே ஜோக்கர், ரவுடி ரத்தோர் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது அவர்கள் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

 

கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரமேஷ்பிரபா அதிரடி நீக்கம்

Ramesh Prabha Dismissed As Head Kalaignar Tv

சென்னை: கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரமேஷ்பிரபா நேற்று காலை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கேலக்சி நிறுவனத்தை தொடங்கிய ரமேஷ் பிரபா, சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின்னர் படிப்படியாக நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறிய அவர், லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, சமையல் நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். பின்னர் 2008ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அப்போது சன் டிவியில் இருந்து கலைஞர் டிவிக்கு மாறினார்.

கலைஞர் தொலைக்காட்சி நிறுவன குழுமத்தில் இருந்து கலைஞர் தொலைக் காட்சி, இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள், சித்திரம், முரசு என 6 சேனல்கள் உதயமானது. இந்த நிலையில் இதன் தலைவராக இருந்த சரத்குமார் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றார். இதன்பின்னர் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு அதன் தலைவராக கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார் ரமேஷ்பிரபா.

கடந்த 11 மாதங்கள் இப்பொறுப்பை அவர் வகித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் அந்தப் பொறுப்பிலிருந்து அவர் திடீரென்று நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதில் கருணாநிதியின் உறவினர் அமிர்தம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில் முக்கிய பங்கு வகித்தவர் ரமேஷ்பிரபா. 2ஜி ஊழல் வழக்கு விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சி சிக்கிய போது நெருக்கடியான கால கட்டத்தில் தலைவராக பதவி வகித்து திறம்பட நிர்வாகம் செய்தவர். திடீரென்று அவரை நீக்கியதற்கான காரணம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. காலை அலுவலகம் வந்த பின்னர்தான் அவருக்கு நீக்கம் பற்றி அறிவிக்கப்பட்டதாம். இதன்பின் அவர் சிறிது நேரத்திலேயே கிளம்பிச் சென்று விட்டதாக சொல்கிறார்கள்.

 

துப்பாக்கியை நீதிபதிகளும் பார்க்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் உத்தரவு

High Court Orders Show Thuppakki Judges   

துப்பாக்கி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முடிவு செய்ய வசதியாக நீதிபதிகளுக்கு படத்தை திரையிட்டு காட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.அப்துல்ரகீம் தாக்கல் செய்த வழக்கில், "துப்பாக்கி படத்தில் முஸ்லிம் மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகளால் சமுதாய ஒழுங்கு கெடும். இந்தப்படத்துக்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்தின்படி தவறானதாகும்," என்று கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசீதரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் வக்கீல் விஜயராகவன், தமிழக அரசுத் தரப்பில் சிறப்பு அரசுப் பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, கலைப்புலி தாணு தரப்பில் வக்கீல் மகேஸ்வரி, மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் சங்கரசுப்பு, ஏ.ரமேஷ் ஆஜரானார்கள்.

அப்போது நடந்த விவாதம்:

சங்கரசுப்பு: துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் நிலையில் அதற்கு வழங்கப்பட்டுள்ள யூ சான்றிதழை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். அப்படிப்பட்ட காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

நீதிபதி பானுமதி: நீங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டீர்களா?

சங்கரசுப்பு: இல்லை.

விஜயராகவன்: தணிக்கைத்துறை சான்றிதழ் கொடுத்த பிறகு அதில் தலையிடக்கூடாது.

நீதிபதி சசீதரன்: அப்படியானால் ஏற்கனவே சில காட்சிகளை நீக்கப்பட்டு இருக்கிறதே. அதில் எப்படி தலையிட முடிந்தது?

இன்பதுரை: அதில் தமிழக அரசு தலையிட்டதால் ஆட்சேபனைக்கு உரிய காட்சிகளை நீக்க முடிந்தது. அந்த படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாக முஸ்லீம் தலைவர்கள் முறையிட்டதும், முதல்வரின் உத்தரவின்பேரில், கடந்த நவம்பர் 15-ந் தேதியன்று பேச்சுவார்த்தை நடந்தது.

உள்துறை செயலாளர் முன்னிலையில் நடந்த அந்தக் கூட்டத்தில் முஸ்லீம் தலைவர்கள், தயாரிப்பாளர் கலந்துகொண்டனர். அந்த பேச்சுவார்த்தையில், சர்ச்சைக்குரிய 5 காட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உட்பட முஸ்லிம் தலைவர்கள் வந்து முதல்வரைச் சந்தித்து நன்றி கூறினர்.

சங்கரசுப்பு: அவர்கள் ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ளவர்கள்.

இன்பதுரை: அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

நீதிபதி பானுமதி: இந்த படத்தை பாடல் காட்சிகள் நீங்கலாக நீதிபதிகளுக்கு 10-ந்தேதி திரையிட்டு காட்டவேண்டும். ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளை தனியாகக் காட்டவேண்டும். பிறகுதான் முடிவு செய்ய முடியும்.

 

மிச்சமுள்ள தியேட்டர்களையும் மூடப் பார்க்கிறார் கமல்- தியேட்டர் உரிமையாளர்கள் கோபம்

Exhibitors Angry On Kamal Hassan

திருச்சி: டிடிஎச்சில் வெளியாகும் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தை எக்காரணம் கொண்டும் திரையிடப் போவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இறுதி முடிவு எடுத்துள்ளனர்.

கமலின் இந்த முயற்சி மிச்சமிள்ள 1000 அரங்குகளையும் மூடும் முயற்சி என்றும், தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் திருச்சி மாயாஸ் ஓட்டலில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.என்.அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

இந்த அவசர கூட்டத்தில் கூட்டத்திற்கு பின்பு தியேட்டர்கள் உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை, அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம், விநோகஸ்தர்கள் பெடரேசனின் தலைவர் சேலம் முருகேசன் ஆகியோர் நிருபர்களிடம் பேசினர்.

அவர்கள் கூறுகையில், "விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவது திரையரங்குகளை நடத்த விடாமல் செய்யும் முயற்சியாகும். இனி விஸ்வரூபம் மட்டுமல்ல, டிடிஎச்சில் வெளியாகும் எந்தப் படத்துக்கும் தியேட்டர் தர முடியாது.

டி.டி.எச்சில் வெளியிட்ட பின்னர் எளிதாக அந்தப் படங்கள் திருட்டு டிவிடிகளாகவும், கேபிள் டிவிகளிலும் வெளியாகிவிடப் போகிறது. அப்புறம் எந்த ரசிகன் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பான்?

ஏற்கெனவே தமிழகத்தில் இருந்த அரங்குகளில் 50 சதவீதம் மூடப்பட்டுவிட்டது. இப்போது கமல் எடுத்துள்ள முடிவு மிச்சமுள்ள தியேட்டர்களையும் மூடவே வழிவகுக்கும்.

டி.டி.எச் மூலம் ஒரு திரைப்படத்தை வெளியிட்ட பிறகு அதை தியேட்டரில் திரையிட மாட்டோம் என்று ஏற்கெனவே மும்பை, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். ஆனால் அங்கெல்லாம் தியேட்டர்கள் தருவதாக கமல் பொய் கூறி வருகிறார்," என்றனர்.

 

உள்ளம் கொள்ளை போகுதடா! பாலிமர் டிவியில் காதல் தொடர்

Ullam Kollai Poguthada Tamil Serial In Polimer Tv

இந்தித் தொடர்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பினைப் பார்த்து பெரும்பாலான சேனல்களில் தற்போது டப்பிங் தொடர்களைப் போட ஆரம்பித்துள்ளனர். விஜய் டிவி, ராஜ் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து பாலிமர் டிவியிலும் தற்போது இந்தி தொடர்களை டப்பிங் செய்து ஒளிபரப்பி வருகின்றனர். இந்த வரிசையில் ‘உள்ளம் கொள்ளை போகுதடா!' என்ற தொடர் கடந்த டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் ஒரு ரொமான்டிக் நெடுந்தொடர். தலைப்பே கவிதையாய் அமைந்திருப்பதைப்போல கதையும் காதல் கதைதான் என்கின்றனர் இந்த தொடர் தயாரிப்பாளர்கள்.

காதலித்து திருமணம் செய்வது ஒருவகை, திருமணம் செய்து கொண்டு காதலிப்பது காலத்தை வென்ற காவியமாக்கும். இளமைக் காலம் முழுவதும் தன் குடும்பத்திற்காக உழைத்த ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது ஏற்படும் மாற்றங்களை எதார்த்தமாக பதிவு செய்திருக்கின்றனராம்.

இந்தத் தொடருக்கான பாடலை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். ஸ்வேதா மேனன் பாடியுள்ளார்.

 

விஸ்வரூபம் விவகாரம்: ஜெயலலிதாவை சந்திக்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள்

Viswaroopam Issue Distributors Th

திருச்சி: விஸ்வரூபம் படத்தை டி.டி.எச் மூலம் வெளியிட்டால் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்றும், இந்த விவகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் திருச்சி மாயாஸ் ஹோட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.என்.அண்ணாமலை தலைமை வகித்தார்.

கூட்டத்தில் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பு டி.டி.எச்சில் வெளியிட கமலஹாசன் எடுத்துள்ள முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்பு அண்ணாமலை, அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம், விநோகஸ்தர்கள் பெடரேஷனின் தலைவர் சேலம் முருகேசன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில்,

விஸ்வரூபம் படம் குறித்து விவாதித்தோம். இந்த படத்தையும் சரி, எந்த ஒரு படத்தையும் சரி டி.டி.எச் மூலம் வெளியிட்டால் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என முடிவு செய்துள்ளோம். காரணம் டி.டி.எச்சில் வெளியிட்ட பின்பு ரசிகர்கள் யாரும் தியேட்டர்களுக்கு வர மாட்டார்கள். நடிகர் கமல்ஹாசன் இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிட்டார்.

இந்த பிரச்சனை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தெரியப்படுத்துவோம். அவர் நல்ல முடிவு எடுப்பார். எப்பொழுதும் முதல்வர் அம்மா திரைப்படத்துறையினருக்கு ஆதரவாக இருக்கின்றவர். எனவே, அவர் இந்த விஷயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறோம்.

டி.டி.எச் மூலம் ஒரு திரைப்படத்தை வெளியிட்ட பிறகு அதை தியேட்டரில் திரையிட மாட்டோம் என்று ஏற்கனவே மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். எங்களது திரைத்துறையை காப்பாற்ற இது தான் ஒரே வழி. எங்களை நம்பி 2 லட்சம் குடும்பங்கள் உள்ளது. நாங்கள் அழிந்துவிட்டால் திரைப்படத்துறை வளராது.

தமிழகத்தில் 2,800 திரையரங்குகள் இருந்தன. இதில் பல திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. தற்பொழுது 1,200 திரையரங்குகள் தான் உள்ளது. கமலஹாசன் நடித்த படங்களை நாங்கள் தான் மூலை முடுக்கெல்லாம் போஸ்டர் ஒட்டி அவருக்கு சினிமா துறையில் புகழை பெற்றுத் தந்தோம்.

பெரிய திரையில் நடித்துவிட்டு யாரும் சின்னத்திரைக்கு செல்வதில்லை. நடிகர் கமல்ஹாசன் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க முயற்சிக்கிறார். அவர் நல்லவர். பெரிய நடிகர், ஏன் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார் என தெரியவில்லை.

எங்கள் முடிவுக்கு அனைத்து திரையரங்க உரிமையாளர்களும், திரைப்பட விநியோகஸ்தர்களும் உறுதுணையாக இருப்பார்கள். இந்த முடிவுக்கு பின்பு எந்த திரையரங்க உரிமையாளர்களும் கமல் படத்தை வெளியிட்டால் அவர்களுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் படம் தரமாட்டார்கள். இந்த முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றனர்.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைவர் அபிராமி ராமநாதன், பொது செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ஹரி, இணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மாநில தலைவர் சேலம் முருகேசன், மதுரை செல்வின்ராஜ், மதுரை ஷாகுல் ஹமீது, கோவைராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. நெல்லை மலைராஜா, திருச்சி பிரான்சிஸ், நாமக்கல் மோகன், மன்னார்குடி சரவணன், தாமஸ், ரம்பா ஊர்வசி லோகநாதன், மரியம் தியேட்டர் அதிபர் ஆசிக் மீரா உள்பட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.