ரஜினிக்கு வீடு தேவை!


சிங்கப்பூரிலிருந்து விரைவில் சென்னை திரும்பவிருக்கும் ரஜினிகாந்த்துக்கு சென்னையில் ஒரு வீடு தேடி வருகிறார்களாம்.

போயஸ் கார்டனில் கடல் போல வீடு இருக்க எதற்கு புது வீடு என்று யோசிக்கிறீர்களா?. போயஸ் தோட்ட வீட்டில் வாஸ்துப்படி பல புதுப்பித்தல், மாற்றியமைத்தல் உள்ளிட்ட வேலைகள் நடந்து வருவதால் தற்காலிகமாக தங்கத்தான் இந்தப் புது வீடு பார்க்கும் படலமாம்.

ரஜினிக்கு கடும் சிக்கல்கள், நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் போயஸ் தோட்டத்து வீட்டில் வாஸ்து சரியாக இருக்கிறதா என்று பார்த்து சரி செய்வது வழக்கமாகி விட்டது.

முன்பு பாபா படம் வெளியாகி பெரும் தோல்வி மற்றும் பாமகவால் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் இதேபோலகத்தான் வாஸ்துப்படி பல்வேறு மாற்றங்களை வீட்டில் செய்தனர்.

அதன் பின்னர் வெளியான சந்திரமுகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் வாஸ்து மீது ரஜினிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நம்பிக்கை வந்து விட்டது.

தற்போதும் ரஜினிக்கு உடல் நலம் பெரும் பாதிப்பை சந்தித்து அவர் கிட்டத்தட்ட கண்டத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் போயஸ் தோட்ட வீட்டில் வாஸ்துப்படி பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகின்றனராம்.

எனவே ரஜினி சென்னைக்கு வந்ததும் தனது வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்காமல் வெளியில் தங்கியிருக்கப் போகிறாராம். இதற்காகத்தான ஒரு வீட்டைப் பார்த்து வருகின்றனர் என்கிறார்கள்.

 

தேநீர் விடுதி - விமர்சனம்


நடிப்பு: ஆதித், கொடுமுடி சுரேஷ், ரேஷ்மி, பிரபாகர், காளி, குணா
ஒளிப்பதிவு: மணவாளன்
இசை: எஸ்எஸ் குமரன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: எஸ்எஸ் குமரன்
தயாரிப்பு: பீகாக் பிக்சர்ஸ் சார்பில் எஸ்எஸ் குமரன்

நம்பிக்கை தரும் இசையமைப்பாளராக அறியப்பட்ட எஸ் எஸ் குமரன், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார் இந்த ‘தேநீர் விடுதி’ மூலம்.

ஒரு இசையமைப்பாளராக அவர் சம்பாதித்த பெயரை இந்த தேநீர் விடுதி காப்பாற்றியதா என்பதை கடைசியில் பார்க்கலாம்.

போடிநாயக்கனூரில் பந்தல் ராஜாக்களாக வலம் வருகிறார்கள் ஆதித்தும் கொடுமுடி சுரேஷும். வேலை கல்யாணம், காதுகுத்து, வயசுக்கு வரும் நிகழ்ச்சி என எல்லாவற்றுக்கும் பந்தல் – சீரியல் செட் போடுவதுதான் வேலை. டாஸ்மாக் பார் போனாலும், விசிட்டிங் கார்டை கொடுத்து பிஸினஸை டெவலப் பண்ணுவது இவர்கள் பாணி!

இந்த இருவரும் என்ன செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அம்மா. (செத்தது போல நடித்து ஊரைக் கூட்டி தனக்கிருக்கும் ஆதரவைக் காட்டி தம்பியிடம் மகனுக்கு பெண் கேட்கும் அளவுக்கு பாசக்கார அம்மா!)

அந்த ஊர் பதிவாளரான நாச்சியப்பனை பிடிக்காத ஒரு கும்பல், அவர் வீட்டுப் பெண் வயசுக்கு வந்ததாக போன் செய்து பந்தல் போடச் சொல்ல, பந்தல் ராஜாக்களும் எதார்த்தமாய் அங்கே பந்தல் போட, நாச்சியப்பன் மகள் இதனால் ஆத்திரப்பட்டு சகோதரர்களில் இளையவரான ஆதித்தைத் துரத்துகிறார்.

இந்த துரத்தல் பின்னர் காதலாகிறது என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை!

இந்தக் காதலை அந்தஸ்து பார்க்கும் நாச்சியப்பன் ஏற்க மறுத்து அடம்பிடிக்க, அவரை வென்று காதலர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார் எஸ்எஸ் குமரன்.

களவாணி படம் ரொம்பத்தான் பாதித்துவிட்டிருக்கிறது குமரனை! ஆனால் அதுகூட பரவாயில்லை… படத்தின் முக்கியப் பிரச்சினை, அழுத்தமில்லாத கதையும், அதைவிட அழுத்தமில்லாத காட்சிகளும்தான்.

காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீள்வது, பக்குவமற்ற படமாக்கம் போன்றவைதான் இந்த தேநீர் விடுதியின் குறைகள்.

ஆனாலும் சில விஷயங்கள் பார்ப்பவர்களை ஈர்க்கத்தான் செய்கின்றன.

குறிப்பாக ஹீரோயின் ரேஷ்மி. சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, உடல்மொழியிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலமிருக்கிறது.

எப்போதும் சரக்கும் கையுமாகவே திரியும் பந்தல் ராஜாக்களைப் பார்க்கும்போது, படத்தின் தலைப்பை தப்பாக வைத்துவிட்டார்களோ என்ற நினைப்புதான் வருகிறது.

ஆனாலும் காதலியைப் பார்த்துக் கொண்டே இருப்பதற்காக ஒரு டீக்கடையையே உறிஞ்சும் ஆதித் கலகலப்பூட்டுகிறார். வயசுக்கு வந்ததற்கு ஆதாரம் கேட்கும் கொடு முடி சுரேஷுக்கு சின்னனூரில் கிடைக்கும் ட்ரீட்மெண்டும் சிரிப்பை வரவழைக்கிறது.

நாச்சியப்பனாக வரும் பிரபாகர் கலக்குகிறார். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் அவரது குணமும், பாடி லாங்குவேஜும் அடிக்கடி நிஜவாழ்க்கையில் நாம் பார்க்கும் பலரை நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது.

க்ளைமாக்ஸில் அவர் சமாதானமாகும் விதம் குபீர் சிரிப்பு!

இடைவேளைக்குப் பின் சீரியல் மாதிரி சில இடங்களில் இழுப்பதையும் கட் பண்ணியிருக்கலாம்.

பாடல்களில் இன்னும் கூட கவனம் செலுத்தியிருக்கலாம் குமரன். ஆனாலும் ஒரு மாலை நேரம் பாடலும், சில இடங்களில் பின்னணி இசையும் கிராமத்து எஃபெக்டை தருகிறது.

ஒரு இயக்குநராக எஸ்எஸ் குமரன் ஜஸ்ட் பாஸ் செய்திருக்கிறார். ஆனால் கோலிவுட்டில் ஹிட்டடிக்க… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

 

புதிய வழக்கில் சக்சேனாவுக்கு 15 நாள் காவல்!


சென்னை: சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் சினிமா வினியோகஸ்தர். இவருக்கு தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமை தருவதாக சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா கூறி ரூ.1.25 கோடியை வாங்கிக் கொண்டு, வினியோக உரிமையை தராமல் ஏமாற்றியதாக கூறினார்.

இதனையடுத்து சக்சேனா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த சண்முகவேல் என்ற பட வினியோகஸ்தர், தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தின் வினியோகம் தொடர்பாக சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும், அறையில் சிறை வைத்து உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்ததாகவும், கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இதைதொடர்ந்து புதிய வழக்கில் நீதிமன்ற காவலுக்காக சக்சேனவை இன்று (8-ந் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

எனவே சக்சேனவை மாஜிஸ்திரேட்டு முன்பு இன்று மாலை ஆஜர்படுத்தினர். இதில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

'எல்லாம் முடிஞ்சிடுச்சி' - நயன்தாராவுடனான சிம்புவின் காதல் ப்ளாஷ்பேக்


திகட்ட திகட்ட காதலித்து விட்டேன், நயன்தாராவுடனான காதலில் எல்லாம் முடிந்துவிட்டது என அவரது முன்னாள் காதலரான நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

வல்லவன் படம் நடித்தபோது சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் பற்றிக் கொண்டது. இருவரைப் பற்றிய செய்திகளும் இடம்பெறாத ஊடகமே இல்லை எனும் அளவுக்கு நிலை முற்றிப் போயிருந்தது, சில ஆண்டுகளுக்கு முன்.

பின்னர் அந்தக் காதலில் முறிவு ஏற்பட, வாழ்க்கையே வெறுத்துப் போய் ஆந்திரா பக்கம் போய்விட்டார் நயன்தாரா. ஒரு வழியாக அந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்த அவர், பிரபு தேவாவுடன் காதல் வயப்பட்டார்.

இன்று அந்தக் காதல் கல்யாணம் வரை வந்துவிட்டது.

நயன்தாரா – பிரபுதேவா திருமணம் நடக்கவுள்ள இந்த நேரம் பார்த்து, சிம்புவிடம் நயன்தாராவுடனான பழைய காதல் குறித்து கேட்டிருந்தனர். நயன்தாரா போன பிறகு தனிமையை உணர்ந்தீர்களா? என்ற கேள்விக்கு, அவர் அளித்துள்ள பதிலில், “காதல் தோல்வியால் இதுவரைக்கும் நான் எந்த தனிமையையும் உணரவில்லை. எல்லாமும் நடந்து முடிந்துவிட்டதே என விட்டுவிடவும் முடியவில்லை.

இந்த 25 வருஷத்தில் நிறைய மாற்றங்கள். எல்லாவற்றையும் ரசிக்கிறேன். திகட்ட திகட்ட காதலிச்சாச்சு. இனி அந்தக் காதலின் அடையாளங்கள் என எதும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

எல்லாமே மாறக் கூடியதுதானேன்னு என்னை நானே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன். என்னை பொறுத்த வரைக்கும் தனிமையை எல்லா மனிதர்களும் உணரணும். அப்போதுதான் நல்லது, கெட்டது புரியும்,” என்றார்.

 

எந்திரன் பட விவகாரம்: கலாநிதி மாறன் மீதும் வழக்குப் பதிவு?


சென்னை: எந்திரன் படத்தை அதிக விலைக்கு வாங்க வைத்ததாகவும், பணத்தை திருப்பிக் கேட்டால் தர மறுப்பதாகவும் சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் மீது திரையரங்க உரிமையாளர்கள் இன்று சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

பெரும் தொகை கொடுத்து வாங்கிய அந்தப் படம், எதிர்ப்பார்த்த அளவுக்கு ஓடாததால் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு அவர்கள் கமிஷனரிடம் முறையிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளிட்டோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திரையரங்கு உரிமையாளர்கள் ரமேஷ் பாபு (ரமேஷ் திரையரங்கம், ராமநாதபுரம்), குமார் (கே.எஸ். தியேட்டர், திருப்பூர்), ஆனந்த் (ஜெய்ஆனந்த் தியேட்டர், ராஜபாளையம்), விஷ்ணு (சினி வள்ளுவர் தியேட்டர், பழனி), ரகுபதி (ஏ.டி.எஸ்.சி. தியேட்டர் பொள்ளாச்சி), ஆகியோர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்களுடன் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதரும் வந்தார்.

அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதும் சக்சேனா, உதவியாளர் அய்யப்பன் மீதும் புகார் மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:

சன் பிக்சர்ஸ், ‘எந்திரன்’ படத்தை தயாரித்து வெளியிட்டது. அப்படத்தை திரையிடுவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அய்யப்பன் என்பவர் மூலம் அட்வான்ஸ் தொகை கொடுத்தோம். அதில் எங்களுக்கு தர வேண்டிய 1 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 431 ரூபாயை எங்களுக்கு தராமல் இழுத்தடிக்கிறார்.

இந்த அட்வான்ஸ் தொகையை தருமாறு பலமுறை கேட்டோம். ஆனால் தரவில்லை. எனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதும் அய்யப்பன் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர்கள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறும்போது, “சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அட்வான்ஸ் தொகையில் ராமநாதபுரம், ரமேஷ், தியேட்டருக்கு ரூ.27 லட்சமும், திருப்பூர் கே.எஸ். தியேட்டருக்கு ரூ. 10 லட்சத்து 32 ஆயிரத்து 956ம், ராஜபாளையம் ஜெய் ஆனந்த் தியேட்டருக்கு ரூ.27 லட்சத்து 89 ஆயிரத்து 114 யும், பழனி சினி வள்ளுவர் தியேட்டருக்கு ரூ.21 லட் சத்து 83 ஆயிரத்து 60ம், பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி. தியேட்டருக்கு ரூ.40 லட் சத்து 10 ஆயிரத்து 761ம் வர வேண்டியுள்ளது,” என்றார்.

கலாநிதி மாறன் மீதும் வழக்கு?

எந்திரன் பட விவகாரத்தில், சன் பிக்சர்ஸ் தலைவர் கலாநிதி மாறனையும் விசாரிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே அவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.

தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜெ

இதற்கிடையே சன் பிக்சர்ஸ் நிதி மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் விசாரிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

அரசியல் எனக்கெதற்கு? - அமிதாப் கேள்வி


அகமதாபாத்: அரசியலில் எனக்கு ஆர்வமே இல்லை. எனக்கெதற்கு அரசியல் என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

குஜராத்தில் சுற்றுலாத்துறையை பிரபலப் படுத்துவதற்காக நடிகர் அமிதாப்பச்சனை விளம்பரத் தூதராக மாநில அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நியமித்தது.

இதையடுத்து, அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேருவார் என்று தகவல்கள் பரவின. இதை அமிதாப்பச்சன் மறுத்தார்.

இந்நிலையில் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில், “அரசியலில் நுழையும் திட்டமோ ஆர்வமோ எதுவும் எனக்கு இல்லை. அரசியலில் நான் தோற்று விடுவேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதை அனுபவத்தில் உணர்ந்தும் விட்டேன்.

எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கெதற்கு அரசியல்?

சுற்றுலாத்துறையின் விளம்பர தூதராக, குஜராத் மாநில அரசு என்னை நியமித்துள்ளது. அதற்காக, குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடியை ஆதரித்து பிரசாரம் செய்ய மாட்டேன். வேண்டுமென்றால் வாய்ப்பு கொடுங்கள்… குஜராத்தி மொழிப்படத்தில் நடிக்கிறேன்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் நிறைய குஜராத்திகள், தங்கள் மாநிலமான குஜராத் பற்றி தனது ப்ளாக் மூலம் படித்து தெரிந்து கொள்வதாகக் குறிப்பிட்டார்.

 

சிகிச்சைகள் முடிந்தன... சென்னை திரும்புகிறார் ரஜினி!


சிங்கப்பூர்: ரஜினி எப்போது வருவார் என்ற கேள்வியே ஓராயிரம் செய்திகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த கேள்வியைச் சுற்றிச் சுற்றியே கடந்த 30 நாட்களாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

இப்போது இந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ரஜினி எந்த நேரத்திலும் சென்னை திரும்பும் அளவுக்கு 100 சதவீதம் பழைய உடல்நிலை மற்றும் தெம்பைப் பெற்றுவிட்டார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுநாள்வரை ரஜினியை வீட்டுக்கே போய் பார்த்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளித்துவந்த மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் ரஜினி எப்போது வேண்டுமானாலும் நாடு திரும்பலாம் என்று கூறிவிட்டனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினியைப் பார்க்கப் போகும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ராணா படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அவரது ஆலோசனையைப் பெற்றுவிட்டு சென்னை திரும்புகிறார். அதைத் தொடர்ந்து சென்னை வரும் ரஜினி, ரசிகர்களைச் சந்தித்த பிறகு, படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வார் என்று தெரிகிறது.

போயஸ் கார்டன் வீட்டில் புதுப்பிப்பு பணிகள் மும்முரம்

ரஜினி வருவதற்கு முன் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வாஸ்துப்படி சில மாறுதல்களைச் செய்யும் வேலை மும்முரமாக நடக்கிறது. குறிப்பாக ரஜினியின் படுக்கை அறை, தியான அறை போன்றவற்றில் சில மாறுதல்கள் செய்யப்படுவதாக ரஜினி இல்ல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

வன யுத்தம்... வெளியாகவிருக்கும் வீரப்ப ரகசியங்கள்


வன யுத்தம் என்ற பெயரில் சந்தன கடத்தல் வீரப்பன் கதையை, இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ், படமாக எடுக்கிறார்.

இந்தப் படத்தில் வீரப்பனைப் பற்றிய பல வெளியில் தெரியாத உண்மைகள் ஆதாரங்களுடன் வைக்கப்படும் என்று தெரிகிறது.

குறிப்பாக கன்னட ராஜ்குமார் கடத்தல், அதில் கைமாறிய தொகை, யார் யார் எவ்வளவு கொள்ளையடித்தனர் போன்றவை குறித்த விவரங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர்.

இந்தப் படம் கன்னடத்தில் அட்டகாசா என தயாராகிறது. வீரப்பனாக கிஷோரும், காவல்துறை அதிகாரியாக அர்ஜுனும், ராஜ்குமார் வேடத்தில் நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கிறார்கள்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிக்க ராணி முகர்ஜியை அணுகியுள்ளனர்.
 

ஜாதிப் பெயர்களுடன் உலா வரும் நடிகைகள்-தங்கர் பச்சான் கொதிப்பு!


ஜாதியை ஒழிக்கப் போராடிய தமிழகத்தில், ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உள்ள தமிழகத்தில், ஜாதியை துணைக்கு வைத்துக் கொண்டு நடித்து வரும் நடிகைகளை தமிழ்த் திரையுலகினர் அனுமதிப்பதற்கு தமிழ்த் திரையுலகிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக இயக்குநர் தங்கர்பச்சான் இந்த ஜாதீயத்தை கடுமையாக எதிர்த்துள்ளார். அய்யர், மேனன், ரெட்டி, ஷெட்டி, நாயர், நாயுடு என்ற ஜாதிப் பெயர்களுடன் உலா வரும் நடிகைகளுக்கு தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு மலையாள நடிகை மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு ஒரே கூட்டமாக உள்ளனர் மலையாள நடிகைகள். அவர்கள் அத்தனை பேருமே தங்களது ஜாதிப் பெயரையும் உடன் வைத்துக் கொண்டுதான் உலா வருகின்றனர்.

நவ்யா நாயர், ஸ்வேதா மேனன், நித்யா மேனன் என்று ஒரு கூட்டம் உலா வருகிறது. அதேபோல ஆந்திராவிலிருந்து ஷமீரா ரெட்டி, மேக்னா நாயுடு என்று ஒரு பக்கம் நடிகைகள் கூட்டம். ஷில்பா ஷெட்டி என்று கன்னடத்தைச் சேர்ந்தவரும் முன்பு நடித்து வந்தார்.

இவர்கள்தான் இப்படி என்றால் ஆண்களும் இதில் சளைத்தவர்களாக இல்லை. ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என்று ஒரு வரிசை. அதிலும், இந்த கெளதம் படு விவரமானவர். ஆரம்பத்தில் இவர் படங்கள் இயக்கத் தொடங்கியபோது தன்னை ஒரு மலையாளியாக அடையாளம் காட்டிக் கொள்ளாமல் கெளதம் என்ற பெயரை மட்டுமே போட்டு வந்தார். கொஞ்சம் வளர்ந்து தலை தூக்கியவுடன் மேனனை துணைக்குச் சேர்த்துக் கொண்டார்.

இப்படி தமிழ் சினிமாவில் ஜாதிய அடையாளங்களோடு நடமாடுவதற்கு தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

சினிமா துறையில் நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் தங்கள் பெயரோடு சாதி பெயரை சேர்த்துள்ளார்கள். சாதி ஒழிப்புக்காக பெரியார் தமிழகத்தில் போராடினார். அரசுகளும் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் ஜி.என். செட்டிசாலை, திருமலைபிள்ளை ரோடு, என பல சாலைகளில் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன. தமிழ்ப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்கள் சாதிப் பெயர் வைத்துள்ள நடிகைகளை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது, அவர்களை ஒதுக்க வேண்டும் என்றார் பச்சான்.
 

பிரபு தேவா - ரம்லத்துக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!


ஒருவழியாக பிரபு தேவா - ரம்லத்துக்கு இன்று விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றம்.

15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத்தை காதலித்து மணந்தார் பிரபு தேவா. அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் மரணமடைந்தான்.

அந்த நேரத்தில்தான் பிரபுதேவாவுக்கும் அவரது இயக்கத்தில் உருவான வில்லு படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா பேட்டியளித்ததால், கொதிப்படைந்த ரம்லத் நீதிமன்றம் போனார். ஆனால் ரம்லத் தனது மனைவியே அல்ல என வாதிட பிரபுதேவா தயாரானதால், வேறு வழியின்றி பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்தார் ரம்லத்.

ரம்லத்துக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்களை எழுதி வைக்க சம்மதித்தார் பிரபுதேவா. இந்த நடைமுறைகள் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கில் இன்று பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நலநீதிமன்றம்.
 

'ராணா': ரஜினியுடன் ஆலோசனை நடத்த சிங்கப்பூர் செல்லும் ரவிக்குமார்


ரஜினியின் கனவுப் படம் எனப்படும் ராணாவின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்த ஆலோசனை அடுத்த வாரம் சிங்கப்பூரில் நடக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த 'ராணா' படப்பிடிப்பின்போது ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் 2 முறை சென்னை இசபெல்லா மருத்துவமனையிலும், அதன்பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகக் கோளாறுக்கு நவீன சிகிச்சை தேவைப்பட்டதால் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இங்கு அவர் உடல்நிலை தேறியது. இப்போது பழையபடி சுறுசுறுப்பாக வலம் வர ஆரம்பித்துவிட்டார் ரஜினி.

சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒருமாதம் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

டாக்டர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு தினமும் சென்று, ரஜினிகாந்தின் உடல்நிலையை பரிசோதித்து வருகிறார்கள். அவர் புத்துணர்ச்சி பெறுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ராணா படத்தின் கதை மற்றும் காட்சிகள் பற்றி விவாதிப்பதற்காக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை சிங்கப்பூர் வரும்படி ரஜினிகாந்த் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, கே.எஸ்.ரவிக்குமார் அடுத்த வாரம் சிங்கப்பூர் செல்கிறார்.

'ராணா' படத்தில் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இன்னும் 5 கதாநாயகிகளும் படத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன. படப்பிடிப்பை மீண்டும் எப்போது துவங்குவது என்பது உள்பட பல்வேறு விஷயங்களை இருவரும் விவாதிக்க உள்ளனர்.

ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதிலிருந்து அவரைச் சந்திக்க எத்தனையோ பேர் முயன்றும் முடியவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் தவிர, ரஜினியை அதிகாரப்பூர்வமாக நேரில் சந்திக்கும் முதல் திரையுலகப் பிரமுகர் சிரஞ்சீவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எந்திரன் விநியோகத்தில் முறைகேடு... சக்சேனாவுக்கு எதிராக மேலும் புகார்!


சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட எந்திரன் படத்தின் விநியோகத்தில் பெரும் மோசடி நடந்துவிட்டதாகக் கூறி, சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மீதும், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் போலீசில் புகார் தர தியேட்டர்காரர்களில் ஒரு பிரிவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிமுக அரசு பதவி ஏற்ற கையோடு, திமுக சார்புடைய பலருக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக சன் டிவி, சன் பிக்சர்ஸ் மற்றும் அவற்றின் நிர்வாகிகளை நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. இதற்கு திரைப்படத் துறையில் சன் குழுமத்தால் பாதிக்கப்பட்ட சிலரே காரணமாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை விநியோகம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க திரையுலகப் பிரமுகர்கள் சிலரே வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

விஜய் நடித்த காவலன் பட விநியோகம் தொடர்பான புகார், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட புகார் போன்றவற்றையும் சக்சேனாவின் இப்போதைய வழக்குடன் சேர்க்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் பட விநியோகத்தில் மோசடி செய்ததாக சக்சேனாவுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

சம்பளத்தை உயர்த்துவதில் தவறில்லை - ஷீலா


குழந்தை நட்சத்திரமாக நடிப்பைத் தொடர்ந்தவர் ஷீலா. ஓரிரு படங்களில் நாயகியாக நடித்தார் தமிழில். ஆனால் எந்தப் படமும் ஓடவில்லை.

ஆனாலும் சம்பள விஷயத்தில் முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு பிகு பண்ணுவதால், தமிழில் சுத்தமாக வாய்ப்புகளே இல்லை.

ஆனால் தெலுங்கில் அவருக்கு நல்ல மார்க்கெட். இதனால் மேலும் மேலும் சம்பளத்தை ஏற்றிக் கொண்டே போகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழில் வாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான். நான் முதலில் தேர்ந்தெடுத்த படங்கள் சரியாக இல்லாததால்தான் இன்னும் தமிழில் எனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. மலையாளத்தில் வெளியான 'மேக்கப் மேன்' பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே அங்கே சம்பளத்தை அதிகமாகத்தான் கேட்க முடியும். மற்ற மொழிகளிலும் படங்கள் ஜெயித்தால் சம்பளத்தை உயர்த்துவதில் தவறில்லை," என்றார் ஷீலா.
 

முருகதாஸ் படப்பிடிப்பில் ஆசிட் வீச்சு... துணை நடிகர்கள் பாதிப்பு!


சென்னை: ஏஆர் முருகதாஸ் தயாரிக்கும் எங்கேயும் எப்போதும் படப்பிடிப்பில் ஆசிட் வீசப்பட்டதால் 7 துணை நடிகர் - நடிகைகளுக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொந்த பட நிறுவனம் தொடங்கி, 'எங்கேயும் எப்போதும்' என்ற பெயரில் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறார். ஜெய்-அஞ்சலி ஜோடியாக நடிக்கும் இந்த படத்தை சரவணன் இயக்கிவருகிறார்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று நடந்தது. துணை நடிகர்-நடிகைகள் 150 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி கொண்டிருந்தன.

அப்போது மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், படப்பிடிப்பு குழுவினருக்கும் இடையே படப்பிடிப்பு கட்டணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குழுவினரை வெளியே போகும்படி, நிர்வாகிகள் கூறியதாகவும், படப்பிடிப்பு குழுவினர் வெளியேற மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் யாரோ ஆசிட்டை எடுத்து வந்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு நின்று கொண்டிருந்த துணை நடிகர்-நடிகைகள் 7 பேருக்கு வாந்தி-மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அந்த 7 பேரும் பக்கத்தில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, படப்பிடிப்பு குழுவினர் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 

மூத்த பத்திரிகையாளருக்கு எதிராக சுள்ளான் கமெண்ட்!


சுள்ளான் நடிகரின் அண்ணன் திருமணத்தின்போது, அவரது இரு குழந்தைகளையும் படமெடுத்து முன்னணி பத்திரிகை வெளியிட்டுவிட்டதில் செம கடுப்பாகிவிட்டாராம் சுள்ளான் நடிகர்.

இந்த திருமணத்துக்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை. திருமணம் முடிந்ததும் புகைப்படங்கள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் தினசரி நிருபர்கள் மற்றும் சில புகைப்படக்காரர்கள் மட்டும் போயிருந்தனர். அவர்களிடம் தனது குழந்தைகளின் படங்களை மட்டும் வெளியிடக் கூடாது என்று கூறியிருந்தாராம் நடிகர்.

குறிப்பிட்ட பத்திரிகையின் புகைப்படக்காரர் மட்டும் எப்படியோ அந்த இரு குழந்தைகள் படத்தையும் எடுத்துக் கொடுக்க, நிர்வாகமும் முக்கியத்துவம் தந்து வெளியிட்டுவிட்டது. வேறு எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை.

இதனால் கோபமடைந்த நடிகர், தனது ட்விட்டரில், குறிப்பிட்ட அந்த நிருபர் வேண்டுமென்றே படத்தை வெளியிட்டதாகவும், இது அநாகரீகத்தின் உச்சம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

விஷயம் தெரிந்ததும் வருத்தப்பட்ட நிருபர், 'இதில் எனது தவறு எதுவுமில்லை. அவர் வெளியிட வேண்டாம் என்று சொன்னாலும், அதை முடிவு செய்ய வேண்டியது நிர்வாகம்தானே. ஒரு பத்திரிகையாளரின் சூழலை அவர் புரிந்து கொண்டிருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டார்,' என்றார்.
 

'டெல்லி பெல்லி' வசூலில் 'கில்லி'-ரூ. 30 கோடியை அள்ளியது!


அமிதாப் பச்சன் நடித்து வெளியான “புத்தா ஹோகா தேரே பாப்” படத்தின் வசூலை அமீர்கான் தயாரிப்பில் வெளியான “டெல்லி பெல்லி” படம் முறியடித்துவிட்டது.

திங்கட்கிழமை வரை வசூலான கணக்கின் படி புத்தா ஹோகா தேரே பாப் 1000 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 8.5 கோடி ரூபாய் வரைதான் வசூல் செய்துள்ளது. ஆனால் அமீரின் படமான டெல்லி பெல்லி படம் 1200 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 30 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்திருக்கிறது என்று ஐபிஒஎஸ் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

டெல்லி பெல்லி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பலதரப்பட்ட ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறதாம். குறிப்பாக டாய்லெட் காமெடி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறதாம். இதற்காகவே அநேக ரசிகர்கள் டெல்லி பெல்லி படத்தை கண்டு ரசித்திருக்கின்றனர்.

அமீர்கான் தயாரிப்பு நிறுவனம் யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள டெல்லி பெல்லி படத்தில் இம்ரான் கான், விர்தாஸ், பூர்ணா ஜெகன்நாதன், ஆகியோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை அபினய் தேவ் இயக்கியுள்ளார். அக்ஷத் வர்மா எழுதிய டெல்லி பெல்லிக்கு ராம் சம்பத் இசை அமைத்திருக்கிறார். இம்ரான் கான், ஆமிர்கானின் உறவுக்காரர் என்பது நினைவிருக்கலாம்.

புத்தா ஹோகா தேரே பாப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய அமிதாப்பை பார்க்க முடிந்ததாக தெரிவித்திருக்கின்றனர் ரசிகர்கள். இது நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தை பிடிக்கும் என்று அமிதாப் நம்பியிருந்தார். அவரது கனவை அமீர்கானின் டெல்லி பெல்லி படம் தகர்த்து விட்டது.
 

கள்ளக்காதலரின் மனைவி கொலை-கைதாகிறார் நடிகை நிலா


நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், தமிழ்-தெலுங்கு நடிகையுமான மீரா சோப்ரா என்கிற நிலாவைக் கைது செய்ய ஹரியானா போலீஸார் டெல்லி விரைந்துள்ளனர்.

நடிகை நிலாவுடன் இருந்த கள்ளத்தொடர்பால் தனது தங்கை ருச்சியை அவரது கணவர் கொலை செய்து விட்டார் என்று ஹரியானா மாநிலம் குர்காவ்னைச் சேர்ந்த ருச்சியின் சகோதரி ஷெபாலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நிலாவைக் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த குர்காவ்ன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருச்சியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ருச்சியின் கணவர் சுமித் தான் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி கூறுகையில், சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ருச்சிக்கும், சுமித்துக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சுமித்தும், அவரது குடும்பத்தாரும் ருச்சியைக் கொடுமைப்படுத்தி வந்தனர். இவ்வாறு சித்ரவதை செய்து கொண்டே இருந்தால் ருச்சி விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார் என்பது அவர்கள் எண்ணம்.

அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்றார்.

இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வரதட்சணைக் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித்தை இபிகோ பிரிவு 304 பி மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் கைது செய்துள்ளோம். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

ருச்சி இறப்பதற்கு முன்பு அவருடன் வாக்குவாதம் செய்ததாக ஒப்புக் கொண்டாலும், அவரைத் தான் கொல்லவில்லை என்கிறார் சுமித். மேலும் அவர் கூறுகையில், வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எனக்கும், எனது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு தான் இருந்து வந்தது. கடந்த வாரம் எங்கள் புரோக்கரேஜ் ஹவுஸ் பெருத்த நஷ்டம் அடைந்தது. அந்த நஷ்டத்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.

சமீபத்தில்தான் தனக்கு ஒருவர் ஆபாச இமெயில்களை அனுப்பி வருவதாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார் நிலா என்பது நினைவிருக்கலாம். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களி்ல நடித்து வந்த நிலா, பின்னர் வாய்ப்பு குறைந்ததால் டெல்லி போய் செட்டிலாகி விட்டார். தமிழில் இவர் எஸ்.ஜே.சூர்யா மூலம் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஏழாம் அறிவு பாடல்கள் இணையத்தில் லீக்?


ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ஏழாம் அறிவு படத்தின் பாடல்கள் இணையதளங்களில் லீக் ஆகிவிட்டதாக பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.

சூர்யா - ஸ்ருதி ஹாஸன் நடிக்கும் படம் ஏழாம் அறிவு. இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இணையத்தில் இந்தப் பாடல்களில் இரண்டு மட்டும் சட்டவிரோதமாக வெளியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "இன்னும் இசைக் கோர்ப்புப் பணியை ஹாரிஸ் ஜெயராஜ் முடிக்கவில்லை. எனவே இப்போது வெளியாகியிருப்பது என்ன பாட்டு என்று எனக்குத் தெரியாது," என்றார்.

ஆனால் இன்னும் இறுதி இசை சேர்க்காத பாட்டு என்ற பெயரில் பல்வேறு தளங்கள் மற்றும் வலைப்பூக்களில் இந்தப் பாடல்கள் உலா வருகின்றன.
 

மீண்டும் பாடும் 'சின்னக் குயில்'!!


சின்னக் குயில் என திரை இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கேஎஸ் சித்ரா மீண்டும் பாட ஆரம்பித்துள்ளார்.

இசைமேதைகள் எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு கொண்டுவரப்பட்டவர் சித்ரா. மலையாளப் பாடகி என்றாலும், தமிழை அத்தனை அழகாகப் பாடி ரசிகர்களை வசியம் செய்தார்.

இதுவரை 15000 பாடல்களைப் பாடி, ஆறு தேசிய விருதுகள் உள்ள பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவர், சமீபத்தில் பெரும் சோகத்தைச் சந்தித்தார். அவரது ஒரே மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சியை சித்ராவால் தாங்க முடியவில்லை. பாடுவதையே நிறுத்திவிட்டிருந்தார்.

இப்போது, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடத் தொடங்கியுள்ளார். மலையாளத்தில் வெளியாகும் 'இஷம்+ஸ்நேகம்= அம்மா' என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்தப் பாடல் ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தைச் சொல்லும் பாடல்.

சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் இந்தப் பாடலைப் பாடும்போது ரெக்கார்டிங் தியேட்டரில் கதறி அழுதுவிட்டாராம் சித்ரா.
 

பில்லா -2: மீண்டும் மாறினார் ஒளிப்பதிவாளர்!


அஜீத்தின் பில்லா -2 விரைவில் ஆரம்பம் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானபோது படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.

பின்னர் இயக்குநர் விஷ்ணு வர்தன் இல்லை என்றானதும், நீரவ்ஷாவும் விலகிவிட்டார். அந்த இடத்துக்கு வந்தவர் பாலிவுட் கேமராமேன் ஹேமந்த் சதுர்வேதி.

படப்பிடிப்பு தாமதமாவதால் தனது பாலிவுட் வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக ஹேமந்த் கூறிவந்தார். இப்போது அவரும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான ஆர்டி ராஜசேகர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கதாநாயகியாக மும்பை மாடல் ஹ்யூமா குரேஷியும் முக்கிய வேடத்தில் விமலா ராமனும் நடிக்கிறார்கள். பிரபு, ரஹ்மான் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
 

நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு... திரையுலகினர் குவிந்தனர்!


சென்னை: நடிகர் சிவக்குமாரின் மகன், நடிகர் கார்த்தியின் திருமண வரவேற்பு சென்னையில் நேற்று நடந்தது. ஏராளமான நடிகர்-நடிகைகள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி. இவருக்கும், ஈரோடு அருகில் உள்ள கிலாம்பட்டியை சேர்ந்த சின்னசாமி-ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனிக்கும் கடந்த 3-ந் தேதி கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் ஏராளமான அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

கார்த்தி-ரஞ்சினி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. மணமக்கள் கார்த்தி-ரஞ்சனி மாலை 6.30 மணிக்கு ஜோடியாக மணமேடைக்கு வந்தார்கள். கார்த்தி கறுப்பு நிறத்தில் கோட்-சூட் அணிந்திருந்தார். ரஞ்சினி ரோஜா நிறத்தில் சேலை-ஜாக்கெட் அணிந்திருந்தார்.

மணமக்களை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழர் தேசிய கட்சி தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லகண்ணு, செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி. மலைசாமி, தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பத்திரிகையாளர் சோ, வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

ஏவி.எம்.சரவணன்

தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், எல்.சுரேஷ், ராம்குமார், கலைஞானம், முக்தா சீனிவாசன், ஏவி.எம்.முருகன், எஸ்.ஏ.ராஜ்கண்ணு, கோவை மணி, கே.பாலு, திருப்பூர் மணி, ஏ.எல்.அழகப்பன், கோவை தம்பி, டைரக்டர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா, வசந்த், விக்ரமன், எழில், சமுத்திரகனி, பேரரசு, ஹரி, கரு.பழனியப்பன், சுரேஷ்மேனன், பார்த்திபன், தங்கர்பச்சான், பிரியா, ஏ.ஆர்.முருகதாஸ், ராதா மோகன்.

நடிகர்-நடிகைகள்

நடிகர்கள் விஜய், சத்யராஜ், சிபிராஜ், ஆனந்தராஜ், சத்யன், பிரசன்னா, பரத், ஜெய், அனுமோகன், பிரகாஷ்ராஜ், மோகன், எஸ்.வி.சேகர், விவேக், ராஜேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், செந்தில், தியாகு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்.

நடிகைகள் மீனா, சுஹாசினி, மனோரமா, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, நக்மா, லட்சுமி, ஷோபனா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், சீர்காழி சிவசிதம்பரம், பாடகி பி.சுசிலா, கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் செட்டியார், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, கணேஷ், டான்ஸ்மாஸ்டர் ரகுராம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைவரையும் நடிகர் சிவக்குமார், அவருடைய மனைவி லட்சுமி, மகன் சூர்யா, மகள் பிருந்தா, மருமகள் ஜோதிகா ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.
 

'அவன் இவன்' அட்டகாசம்-அம்பிகா மீண்டும் பிசி!


கவர்ச்சிகரமான அம்பிகாவையேப் பார்த்துப் பழகிப் போய் விட்ட ரசிகர்களுக்கு அவன் இவன் படத்தில் அம்பிகா காட்டிய அட்டகாசமான தெனாவெட்டு நடிப்பு வியப்பில் மூழ்கடித்து விட்டது. அம்பிகாவின் கேரக்டருக்கு ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இப்போது அம்பிகாவைத் தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகளாம்.

பாலா படங்களில் எத்தனை பேர் நடித்தாலும் யாராவது ஒருவர்தான் முத்திரை பதித்து பட்டையைக் கிளப்பியிருப்பார். அந்த வகையில் அவன் இவன் படத்தில் இரண்டு ஹீரோக்களாக விஷாலும், ஆர்யாவும் நடித்திருந்தாலும், விஷாலின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது.

அதேசமயம், இவர்களை விட அம்பிகாவுக்குத்தான் ரசிகர்களிடம் செமத்தியான வரவேற்பாம். 'நம்ம' அம்பிகாவா இது என்று ஆச்சரியப்பட்டுப் போய் விட்டனர், அம்பிகாவின் 'அசால்ட்'டான நடிப்பைப் பார்த்து.

படு கூலாக தம்மடித்தபடி அவர் பேசியதையும், குத்த வைத்து உட்கார்ந்து கொ்ண்டிருக்கும் தனது மகனைப் பார்த்து சக்களித்தியான ஆர்யாவின் அம்மா படு கிண்டலடித்துப் பேசுவதைப் பார்த்து கடுப்புடன் ஸ்டைலாக காலால் எட்டி உதைத்த காட்சியும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

இப்படிப்பட்ட நடிப்பும் அம்பிகாவுக்கு வருமா என்று அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டார் அம்பிகா.

அம்பிகாவிடம் கவர்ச்சி மட்டும் இல்லை, நல்ல நடிப்பும் உள்ளது என்பதை எப்போதோ அவர் உணர்த்தி விட்டாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்பிகாவை வித்தியாசமான கோணத்தில் பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயம் குஷியான விஷயமாகவே இது அமைந்துள்ளது.

இயக்குநர்கள் மத்தியிலும் கூட அம்பிகாவின் கேரக்டர் வெகுவாக ரீச் ஆகியுள்ளதால், தங்களது படத்தில் அவரை நடிக்க வைக்க கியூ வரிசையில் கிளம்பியபடி உள்ளனராம்.

அம்பிகாவுக்கும் இந்த திடீர் புகழ் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதனால் வருகிற வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்க தயாராகி விட்டாராம்.

அக்கா, பாத்து, வில்லி வேடமாக வந்து குவிந்து விடப் போகிறது, பார்த்து தேர்ந்தெடுத்து நடிங்க..
 

குழந்தைகள் ரம்லத்திடம் இருக்க வேண்டும்! - விவாகரத்து தீர்ப்பு விவரம்


சென்னை: பிரபு தேவா - ரம்லத் விவாகரத்துக்குப் பிறகு குழந்தைகள் இருவரும் ரம்லத்திடமே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

பிரபு தேவா - ரம்லத்துக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டது.

ரூ 10 லட்சம்...

தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் வாசித்தார்.

அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

"இப்போது ரம்லத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும்.

குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு.

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

அண்ணா நகரில் வீடு, கிழக்குக் கடற்கரை சாலை நிலம், ஹைதராபாதில் இரு சொத்துகள் போன்றவற்றை இந்த விவாகரத்துக்கு ஈடாக ரம்லத்துக்கு கொடுத்துள்ளார் பிரபு தேவா.
 

நடிகை ரேகாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சிரஞ்சீவி?


சிரஞ்சீவி தெலுங்கு படங்களில் மீண்டும் நடிக்கத் துவங்கும் முன் தன்னுடன் சேர்ந்து ஒரு இந்திப் படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை ரேகா சிரஞ்சீவியிடம் கேட்டுக் கொண்டார்.

நடிகர் சிரஞ்சீவி, சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிரஞ்சீவி மீண்டும் நடிக்க வேண்டும் என்று அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டார். எனவே மீண்டும் நடிக்கப் போவதாக அதே மேடையில் அறிவித்தார் சிரஞ்சீவி.

இந்நிலையில் விருது விழா ஒன்றில் நடிகர் சிரஞ்சீவி, நடிகை ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடைக்கு வந்த சிரஞ்சீவியிடம் ரேகா கூறுகையில்,

"நீங்கள் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்கும் முன்பு என்னுடன் சேர்ந்து ஒரேயொரு இந்திப் படத்திலாவது நடிக்க வேண்டும். என்னுடன்தான் முதலில் நடிக்க வேண்டும். ப்ளீஸ்...", என்று செல்லமாக கொஞ்ச, சிரஞ்சீவியை வெட்கத்துடன் சம்மதம் சொன்னார்.

இதை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 

வரி விலக்கு ரத்தாகிறது... இனி தமிழில் பெயர் வைத்தாலும் கேளிக்கை வரி!!


'முதல்வராக இருந்த போது கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை ஒழிக்கும் பணியின்' அடுத்த கட்டமாக, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகை திரும்பப் பெறப்படுகிறது.

2001 முதல் 2006 வரை அ.தி.மு.க.ஆட்சியின் போது தியேட்டர்களுக்கு 25 சத வீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் அது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அத்துடன் தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கும் முழு கேளிக்கை வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பால் நிறைய படங்களுக்கு பெயர்கள் நல்ல தமிழில் சூட்டப்பட்டன. ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் என்ற பெயரில் தயாரான படம் உனக்கும் எனக்கும் என மாறியது. ரஜினி நடித்த ரோபோ படம் எந்திரன் என மாற்றப்பட்டது.

கேளிக்கை வரி விலக்கு பெற தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தங்களின் பட தலைப்பு தமிழில் உள்ளது என்பதை குறிப்பிட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அக் கடிதத்தை தயாரிப்பாளர் சங்கம் ஆய்வு செய்து பரிந்துரை கடித்தத்தோடு வணிக வரித்துறைக்கு அனுப்பும். அங்குள்ள குழு தலைப்பை ஆராய்ந்து தமிழ் தலைப்பு என்று உறுதி செய்த பின் வரி விலக்கு அளிப்பதற்கான உத்தரவை வழங்கும்.

ஆனால் கடந்த 45 நாட்களாக வணிக வரித்துறை வரிச்சலுகை கடிதம் எதுவும் வழங்கவில்லை. கடைசியாக பாசக்கார நண்பர்கள் படம் மட்டும் வரிச்சலுகை பெற்றது. அதன் பிறகு வெளியான எத்தன் உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு கிடைக்கவில்லை. வரிச் சலுகையை பெரிய பட்ஜெட் படங்கள் அனுமதிப்பதைத் தவிர்க்கவே இது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் அரசின் இந்த முடிவுக்கு சினிமா உலகிலிருந்து சிறு முணுமுணுப்பு கூட கிளம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

செல்வராகவன் - கீதாஞ்சலிக்கு ரஜினி போனில் வாழ்த்து!


சமீபத்தில் திருமணமான இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.

சிகிச்சைக்குப் பிறகு சிங்கப்பூரில் ரஜினி ஓய்வு பெற்று வருவதால், அவரால் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ரஜினி வீட்டிலிருந்து ஐஸ்வர்யா தவிர வேறு யாரும் இதில் பங்கேற்க முடியவில்லை. லதா ரஜினியும், சௌந்தர்யாவும் ரஜினியுடன் சிங்கப்பூரிலேயே உள்ளனர்.

எனவே போன் மூலம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார் ரஜினி. நேரில் வந்து வாழ்த்த முடியாதமைக்கு வருத்தமும் தெரிவித்தாராம்.

ரஜினியின் வாழ்த்து குறித்து செல்வராகவன் கூறுகையில், "திருமணம் முடிந்த உடன் எனக்கு வந்த முதல் வாழ்த்து ரஜினி சாரிடமிருந்துதான். அவரது குரலைக் கேட்டதும் நானும் கீதாஞ்சலியும் நெகிழ்ந்து போனோம்," என்றார்.
 

சக்சேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி?


சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் வெளியீட்டு உரிமை தொடர்பாக சேலம் விநியோகஸ்தர் கொடுத்த ரூ 83 லட்சம் மோசடி புகாரில் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு நீதிமன்றம் வழங்கிய போலீஸ் காவல் இன்று மாலை 4.15 மணிக்கு முடிகிறது. இதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போலீசார், போலீஸ் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

சக்சேனா மீது மேலும் சில புகார்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேலும் விசாரிக்க இந்த காவல் நீட்டிப்பை போலீசார் கோரவுள்ளார்களாம்.

இன்னொரு பக்கம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அவர் தந்தையும் சக்ஸேனாவை எப்படியாவது குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி செய்வதாகவும், இந்தக் கைதுக்கு காரணமான சேலம் விநியோகஸ்தர் செல்வராஜை இயக்குவதே அவர்கள்தான் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சக்சேனா விவகாரத்தில் சன் குழுமம் இதுவரை பகிரங்கமாக எந்த விளக்கமும் வெளியிடாமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது!
 

வேங்கை - விமர்சனம்


நடிப்பு- தனுஷ், தமன்னா, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு

இசை: தேவி ஸ்ரீபிரசாத்

இயக்கம்: ஹரி

தயாரிப்பு: விஜயா புரொடக்ஷன்ஸ்

ஹரியின் மசாலா தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கும் இன்னுமொரு 'அருவா வேலு' கதை, இந்த வேங்கை!

சிவகங்கையில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டு, ஊர்வம்பை விலைக்கு வாங்குபவர் ஹீரோ தனுஷ். இவரது கண்ணியமிக்க அப்பா ராஜ்கிரண். பையன் இப்படி உதவாக்கரையாய் இருக்கிறானே என்று வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறார். தனுஷோ, ஊரைவிட்டுப் போக வேண்டும் அவ்வளவுதானே... நான் திருச்சிக்குப் போகிறேன், என்று கிளம்புகிறார்.

திருச்சிக்கு வந்து பார்த்தால்.... பால்ய சினேகிதி தமன்னா! இருவருக்கும் வழக்கம் போல காதல்...

இன்னொரு பக்கம் ராஜ்கிரணின் நண்பனாக இருக்கும் பிரகாஷ்ராஜ், தனது மோசடிகளால் எதிரியாகிறார். இந்த பகைக்கு பழி வாங்கும் முயற்சியாக, தனுஷை போட்டுத் தள்ள முயல்கிறார் பிரகாஷ் ராஜ். ஆனால் அது தோல்வியில் முடிகிறது. இப்போது தனுஷும் பிகாஷ்ராஜும் நேர் எதிரிகளாக ஒருவரையொருவர் கொல்ல சபதமெடுக்கிறார்கள்.

இதில் யார் ஜெயித்தார்கள் என்பது... தமிழ் சினிமா காணும் ஆயிரத்திலோராவது க்ளைமாக்ஸ்.

செல்வம் என்ற பாத்திரத்தில் வேங்கையாக சீறுகிறார் தனுஷ். அவரது உருவத்துக்கும் இந்த அடைமொழிக்கும் சம்பந்தமிருக்கிறதா என்ற கேள்வியெல்லாம் எழுப்பாமல், சமர்த்தாகப் படம் பார்த்தால் கடைசி காட்சி வரை உட்கார முடியும்... இல்லாவிட்டால் உங்கள் பாடு!!

தமன்னா செம க்யூட். நடிக்க நிறைய வாய்ப்பு தந்திருப்பதாக ஹரி பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார். ஆனால் படத்தில் அப்படி ஒன்றுமில்லை. ஆனாலும் வருகிற காட்சிகளிலெல்லாம் கண்களை நிறைக்கிறார் அழகாக. கதாநாயகியின் வேலை அதானே!

வழக்கம்போல கண்ணியத்தின் மறுபெயர் ராஜ் கிரண். மனதில் நிற்கிறார்.

சிங்கம் படத்தில் கொடுத்த கால்ஷீட்டின் நீட்சியோ என்று யோசிக்கும் அளவு அதே டயலாக், அதே பாடி லாங்குவேஜ், அதே வீராப்பு... முதல் முறையா இந்தப் படத்துல போரடிக்கிறீங்க பிரகாஷ் ராஜ்.

வடிவேலுவின் அருமையைப் புரிய வைக்கிறார் கஞ்சா கருப்பு. அடுத்தவாட்டி நல்லா முயற்சி பண்ணுங்க கருப்பு.

தேவி ஸ்ரீ தேவி இசையில் சொல்லிக் கொள்ளும்படி பாடல்கள் இல்லை. இந்த மாதிரி படங்களுக்கென்றே வைத்திருக்கும் ரெடிமேட் பின்னணி இசை. கஷ்டம்!

ஆனால் வெற்றியின் காமிரா கலக்கல். விடி விஜயன் ஹரிக்கு இன்னொரு வலது கரம். காட்சிகளை பொறுத்துக் கொள்ள முடிவது இவரது வேகமான 'கட்'களால்தான்!

செல்போன் டெக்னிக், டாடா சுமோ பறப்பது, விஷ்க் விஷ்க் என்று பேசும் அரிவாள்... இப்படி ஹரி க்ளிஷேக்கள் இந்தப் படத்திலும் தொடர்வது அலுப்புதான் என்றாலும், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கை இந்தப் படம் தருகிறது. அது ஹரி என்ற இயக்குநரின் கமர்ஷியல் திறமை.

அந்த வகையில், ஹரியின் வேங்கை 'ஓடும்'!
 

'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருகிறேன்...' - நடிகர் விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன்


விஜய் மக்கள் இயக்கத்தில் அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் நிற்க சீட் வாங்கித் தருகிறேன், என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

நடிகர் விஜயின் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நடிகர் விஜய் இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 2 படங்கள் வீதம் பத்து, இருபது படங்களில் நடிக்க வேண்டியுள்ளதால் இப்போதைக்கு அவர் நேரடியாக அரசியலில் இறங்க மாட்டார்.

'விஜய்தான் நம் சக்தி'

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று நான் தான் சொன்னேன். அப்போது நான் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு முழு மூச்சாக உழைத்தீர்கள் அல்லவா! அதேபோல் நான் உங்களை வழிநடத்துவேன். விஜய் நமக்கு பின்னாடி இருப்பார்.

அவர் தான் நம் தலைவர். அவர் தான் நம் சக்தி. அந்த சக்தியை நாம் கேடயமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி மக்கள் பணி செய்ய வேண்டும்.

மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவரவர் வார்டுகளில் உள்ள மொத்த ஓட்டுகளில் பாதிப் பேரை உறுப்பினர்களாக சேருங்கள். உங்கள் வார்டுகளில் பாதி பேரை உறுப்பினர்களாகச் சேர்த்தவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து என்னை சந்தியுங்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உங்களுக்கு நான் சீட் வாங்கி தருகிறேன்.

விஜயை முதலில் நடிகராக போட்டு படம் எடுக்கும் போது, இவனை போட்டு படம் எடுக்கிறாரே சந்திரசேகரனுக்கு என்ன கிறுக்கா? என்று சொன்னார்கள். ஆனால் இன்று விஜய் இளைய தளபதி. அவரை போல் உழையுங்கள்.

விஜயின் மக்கள் இயக்கத்தை வைத்து கவுன்சிலராக ஆனேன், எம்.எல்.ஏ. ஆக ஆனேன் என்று நீங்கள் சொல்ல வேண்டும், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்," என்றார்.
 

மோசடி புகார்: புதுமுக நடிகர் கத்தியால் குத்தி தற்கொலை முயற்சி!


நிலமோசடி மோசடி புகாரில் சிக்கிய புதுமுக நடிகர் விக்னேஷ் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேரத்துள்ளனர்.

உச்ச கட்டம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் இந்த விக்னேஷ். சிட்லபாக்கத்தில் வசிக்கிறார்.

அம்பத்தூரில் நிலம் வாங்குவது தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த பழனிச்சாமி, கண்ணன் ஆகியோரிடம் இருந்து விக்னேஷ் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம். தங்களிடம் இருந்து ரூ.16.50 லட்சம் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக விக்னேஷ் மீது பழனிச்சாமி, கண்ணன் இருவரும் புறநகர் போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹாவிடம் புகார் கொடுத்தனர்.

இது குறித்து விசாரிக்கும்படி சிட்லபாக்கம் போலீசாருக்கு கமிஷனர் உத்தர விட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேசிடமும் அவரது தாய் வசந்த லட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் தனது பெயர் கெட்டுவிட்டதாக புலம்பிய விக்னேஷ் மனமுடைந்து தனது வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

உறவினர்கள் அவரை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

"ரூ 5 லட்சம் கொடுத்துவிட்டு ரூ 16.50 லட்சம் என பொய்யாக கணக்கு காட்டி புகார் கொடுத்துள்ளனர். போலீசாரும் விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தினர். எனவேதான் தற்கொலைக்கு முயன்றேன்," என வாக்குமூலம் அளித்துள்ளார் விக்னேஷ்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

அஞ்சலி - அஸ்மிதா படுக்கையறைக் காட்சிகள்... தணிக்கைக் குழு பாராட்டு!!!


களஞ்சியம் இயக்கியுள்ள புதிய படமான கருங்காலியில் ஹீரோயின்கள் அஞ்சலி, அஸ்மிதாவின் படுக்கையறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், காட்சிகளை வெட்டாமல், ஏ சான்று கொடுத்து பாராட்டும் தெரிவித்ததாக இயக்குநர் களஞ்சியம் கூறினார்.

பூந்தோட்டம், பூமணி, கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு ஆகிய படங்களை இயக்கிய களஞ்சியம், நடித்து இயக்கியுள்ள புதிய படம் 'கருங்காலி.' இந்த படத்தில் அஞ்சலி, சுனிதா வர்மா, புதுமுகங்கள் சீனு, அஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இளம் தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லக் காரணம் செக்ஸில் திருப்தியற்ற நிலைதான் என்ற 'கதையை' அடிப்படையாகக் கொண்டது.

படத்தில், அஞ்சலி-சீனு நடித்த ஒரு படுக்கை அறை காட்சியும், அஸ்மிதா-களஞ்சியம் சம்பந்தப்பட்ட இன்னொரு படுக்கை அறை காட்சியும் இடம் பெற்றுள்ளனவாம்.

படம் முடிவடைந்த நிலையில், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், காட்சிகளில் கை வைக்காமல் வசனங்களை மட்டும் 4 இடங்களில் சைலன்ட் ஆக்கிவிட்டு, 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் களஞ்சியம் கூறுகையில், "கருங்காலி படம், 'செக்ஸ்'சை அடிப்படையாக கொண்ட கதைதான்.

இன்றைய இளைஞர்களில் 65 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது. படத்தின் கதைப்படி, ஒரு இளம் தம்பதிக்கு திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், பிரச்சினை ஆரம்பிக்கிறது. மூன்றாம் மனிதன் அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறான்.

படத்தில் வரும் இரண்டு படுக்கை அறை காட்சிகளையும் நாகரீகமாக, கவித்துவமாக படமாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், "இந்த காலகட்டத்துக்கு பொருத்தமான படம்'' என்று பாராட்டினார்கள்.

படத்தில், தாம்பத்ய உறவு முடிந்ததும் அஸ்மிதா படுக்கையில் இருந்து 'பிரா' அணிவது போல் ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சியைக் கூட தணிக்கை குழுவினர் நீக்கவில்லை.

நடிக்க மறுத்த நாயகிகள்

இந்த படத்தில், கதைக்கு திருப்பமான ஒரு பெண் கதாபாத்திரம் வருகிறது. அதில் நடித்து தரும்படி சினேகா, மீராஜாஸ்மின், பூமிகா, பத்மப்ரியா ஆகியோரிடம் கேட்டேன். நான்கு பேருமே மறுத்து விட்டார்கள். அவர்கள் நடிக்க மறுத்த பாத்திரத்தில், சுனிதா வர்மா நடித்து இருக்கிறார். உழைப்புதான் வெற்றிக்கு வழி என்பதைப் புரிய வைக்கும் படம் இது," என்றார்.
 

விநியோகஸ்தரை பிடித்து வைத்து தாக்கியதாக சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு- கைது


சென்னை: சேலம் விநியோகஸ்தர் சண்முகவேல் என்பவரை பிடித்து வைத்து தாக்கியதாக சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது இன்னொரு வழக்கைப் பதிவு செய்த போலீஸார் அதில் அவரைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் சக்சேனா மீதான வழக்குகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் விநியோகஸ்தரான செல்வராஜ், சேலம் பகுதிக்கான விநியோக உரிமையை தனக்குத் தருவதாக சக்சேனா கூறியிருந்தார். இதற்காக ரூ. 1.25 பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார்.

இதைக் கேட்டபோது தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகாரை விசாரித்த போலீஸார் ஹன்ஸ்ராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சக்சேனாவை 2 நாள் காவலில் எடுத்த போலீஸார் நேற்று விசாரணை முடிவடைந்ததும், சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது மேலும் 2 நாள் காவல் கோரப்பட்டது. அதற்கு தான் போலீஸ் காவலில் போக விரும்பவில்லை என்று சக்சேனா கூறவே அதை ஏற்று போலீஸ் காவலை அனுமதிக்க மாஜிஸ்திரேட் சவுமியா ஷாலினி மறுத்தார்.

இதையடுத்து சக்சேனா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே ஜாமீன் தரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்றைக்கு தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்ற பட விநியோகஸ்தரை தீராத விளையாட்டுப் பிள்ளை பட விநியோகம் தொடர்பாக பிடித்து வைத்து சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும் தாக்கியதாக புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அதில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் அய்யப்பனையும் போலீஸார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இருவரையும் இன்றைக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவும், அய்யப்பனும் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
 

'புதுமாப்பிள்ளை' கார்த்தியுடன் சகுனி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரனீதா.


தமிழ் சினிமாவுக்கு வந்த புதுமுகம் பிரனீதா. கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள இவர் நடித்த முதல் படம் உதயன். பெரிய கண்களாலும், துறு துறு நடிப்பாலும், அனைவரையும் கவர்ந்திழுத்துள்ள பிரனீதாவுக்கு இப்போது முன்னணி நாயகர் கார்த்தியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு வந்துள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் சகுனி படத்தில்தான் பிரனீதா ஜோடி போடுகிறார்.

இப்படம் அரசியல் கலந்த திரில்லர் படமாகும். சங்கர் தயாள் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக நடிக்கும் கார்த்தியுடன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. நான் மகான் அல்ல படத்தில் நடித்த காஜல் அகர்வால் பெயரும் லிஸ்ட்டில் இருந்தது. ஆனால் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இறுதியில் பிரனீதா இடம் பிடித்து விட்டார்.

பிரனீதாவின் நடிப்பு பலரையும் கவர்ந்திருப்பதால் கோடம்பாக்கத்தின் இளைய ஹீரோக்களின் குட்புக்கில் இடம் பெற ஆரம்பித்திருக்கிறாராம்.

பிரனீதா வந்து விட்டார். எனவே அமலா பால், அனுஷ்கா போன்றோர் சற்றே கவனத்துடன் இருக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது.
 

தொடர்ந்து தோல்வி படங்கள் தரும் தனுசுக்கு ரூ.8.5 கோடி சம்பளமா?


தொடர்ச்சியாக நான்கு தோல்விப் படங்களில் நடித்த நடிகர் தனுஷ் சம்பளத்தை குறைக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தனுஷ் சம்பளம் இப்போது ரூ. 8.5 கோடியாக உயர்ந்துவிட்டதாகவும், இது நியாயமல்ல என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தனுஷ் நடித்த மாப்பிள்ளை, சீடன், ஆடுகளம், உத்தம புத்திரன் ஆகிய நான்கு படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளன. குறிப்பிட்ட சேனல் மூலம் பிரமாண்டமாக காட்டப்பட்ட இப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தின. எனவே தனுஷ் சம்பளத்தை குறைக்க வேண்டும்.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி ராமேஸ்வரத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் தனுஷ் உள்ளிட்ட சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்கள் பற்றி பேச உள்ளோம். சம்பளத்தை குறைக்க வேண்டும் எனவும் வற்புறுத்த உள்ளோம். தயாரிப்பு செலவுகள் குறைத்தால்தான் சினிமா தொழிலில் இருக்கும் அத்தனை பேரும் லாபம் சம்பாதிக்க முடியும்.

தோல்விப் படங்கள் கொடுத்த தனுஷ் போன்றவர்கள் ரூ. 8 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டால் எப்படி லாபம் ஈட்ட முடியும். இதற்கு பொதுக் குழுவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்," என்றார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் கூறும்போது, நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைத்தால்தான் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் லாபம் அடைய முடியும். சில நடிகர்களின் படங்கள் டி.வி. சேனல்கள் மூலம் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டன.

இதன் மூலம் அந்த நடிகர்கள் தங்களை பெரிய நடிகர்களாக கருதி சம்பளத்தை உயர்த்திக் கொண்டனர். அனால் நிஜத்தில் அது போன்ற படங்கள் ஓடவில்லை. விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து கொடுத்தது போல செயற்கையாகத்தான் ஓட்டப்பட்டன. அந்த படங்களால் நஷ்டங்கள் தான் ஏற்பட்டன," என்றார் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்.