விஜய் - மோகன்லால் நடிக்கும் 'ஜில்லா': தொடக்க விழா!

சென்னை: விஜய் - மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது.

முருகா படத்தை இயக்கிய நேசன் இயக்கும் இந்தப் படத்தை ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

சூப்பர் குட் பிலிம்ஸுக்கு இது வெள்ளிவிழா ஆண்டு. விஜய் படங்களை அதிகம் தயாரித்தவர் என்ற பெருமையும் ஆர்பி சௌத்ரிக்கு உண்டு.

vijay s jilla movie launch

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, ஷாஜகான், திருப்பாச்சி என அத்தனை படங்களும் வெற்றிப் படங்களே.

இப்போது வெள்ளிவிழா காணும் சூப்பர் குட் பிலிம்ஸுக்காக ஜில்லா படத்தில் நடிக்கிறார் விஜய். அவருடன் முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். ஏற்கெனவே சூப்பர் குட் பிலிம்ஸின் அரண், கீர்த்தி சக்ரா போன்ற படங்களில் நடித்தவர் மோகன்லால்.

விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மகத், தம்பி ராமையா, பரோட்ட சூரி நடிக்கும் இந்தப் படத்தில் மீண்டும் நடிக்க வருகிறார் பூர்ணிமா பாக்யராஜ்.

டி இமான் இசையமைக்கிறார். ராஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் தொடக்கவிழா இன்று காலை சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. படப்பிடிப்பு வரும் மே மாதம் ஆரம்பிக்கிறது.

 

இந்திய திரைப்பட விழா தூதுவராக வித்யா பாலன் மீண்டும் நியமனம்

Vidhya Balan Is The Indian Cinema Ambassador   

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் தூதுவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் வித்யா பாலன்.

2013 ஆம் ஆண்டு, மே மாதம், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நடக்கிறது.

மே மாதம் 3-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இந்தியத் திரையுலகின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இவ்விழாவில் சென்ற நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. இந்திய சினிமாவின் முதல் படமான ‘ராஜா ஹரிச்சந்திரா'வும் இதில் இடம் பெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் விளம்பரத் தூதுவராக, இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

35 வயதான வித்யாபாலன் ‘த டர்டி பிக்சர்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதினைப் பெற்றவர்.

இந்திய திரைப்பட விழாவிற்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், " இந்த கவுரவம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆஸ்திரேலியா எனனக்கு மற்றொரு வீடு மாதிரி. இந்த நிகழ்ச்சிக்கு விளம்பர தூதுவராக நீடிக்க ஆயுட்கால ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறேன்," என்றார்.

ஆஸ்திரேலியாவில் ஒரு சினிமா எடுக்கவும் ஆசையாக உள்ளதாம் வித்யாபாலனுக்கு.

 

தலைப்பைச் சுருக்கினார் பாரதிராஜா.. இனி வெறும் அன்னக்கொடி மட்டும்தான்!

Bharathiraja Shortens His Movie Title

தனது அன்னக்கொடியும் கொடி வீரனும் படத் தலைப்பு மிக நீளமாக இருப்பதாகக் கருதிய இயக்குநர் பாரதிராஜா, இப்போது அதை வெறும் அன்னக்கொடி என்று சுருக்கியுள்ளார்.

பாரதிராஜாவின் தயாரிப்பு இயக்கத்தில் நீண்ட காலம் உருவாகி வந்த படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் வீரப்ப அய்யனார் கோயிலில் கிடாவெட்டி, பிரமாண்ட பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், பல காரணங்களால் தாமதமாகிவந்தது.

கார்த்திகா, லட்சுமண் நாராயன், மனோஜ்பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

பி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்துக்கு சூட்டப்பட்ட பெயர் நீளமாக இருப்பதாக முதலில் சிலர் கருத்து தெரிவித்தனர். பின்னர் ஜோதிட ரீதியாக இது பாரதிராஜாவுக்கு வெற்றியைத் தராது என யாரோ போட்டுக் கொடுக்க, அதில் கொஞ்சம் நம்பிக்கை கொண்ட பாரதிராஜா, தலைப்பிலிருந்த கொடிவீரனை வெட்டிவிட்டார்.

அன்னக்கொடி என்ற தலைப்பில் படம் வரவிருக்கிறது.

 

சந்தானத்தின் ஜோடியாகிறார் கீதா பஸ்ரா!

Geetha Basra Be Paired Up With Santthanam

தான் அடுத்து தயாரித்து நடிக்கும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவுடன் ஜோடி போடுகிறார் காமெடியன் சந்தானம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை தயாரித்து, நடித்து வெற்றியை ருசி பார்த்த சந்தானம், அடுத்து ஒரு படத்தை தயாரித்து நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா நடிக்கிறார்.

தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய 'மரியாதை ராமண்ணா' படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தைதான் சந்தானம் பி.வி.பி. நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, நடிக்கவும் செய்கிறார். இந்தியில் 'சன் ஆப் சர்தார்' என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் ஆனது நினைவிருக்கலாம்.

தமிழில் ஸ்ரீநாத் இயக்கும் இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.

இதில் சந்தானத்துக்கு ஜோடியாக லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவழி நடிகையான கீதா பஸ்ரா அறிமுகமாகிறார். இவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் எடுத்த நடிகை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "சந்தானம் தமிழில் பிரபல காமெடியனாக இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது," என கீதா பஸ்ரா கூறியுள்ளார்.

லண்டனிலிருந்து விரைவில் சென்னை வரவிருக்கும் கீதா பஸ்ரா தங்க இப்போதே வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டாராம் சந்தானம்!

 

இந்தியில் புதிய படம்: ரஜினியைச் சந்தித்தார் ரசூல் பூக்குட்டி!

Rasool Pookkutty Meets Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்தார் ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரனுக்கு ஒலி வடிவமைத்தவர் ரசூல் பூக்குட்டிதான் என்பது நினைவிருக்கலாம்.

அடுத்து பாகிஸ்தானை களமாகக் கொண்டு ஒரு இந்திப் படம் இயக்குகிறார் ரசூல். ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில், அமிதாப் பச்சன் பாகிஸ்தான் பிரஜையாக நடிக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்த ரசூல் பூக்குட்டி, சூப்பர் ஸ்டாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

"சூப்பர் ஸ்டார் ரஜினியை சனிக்கிழமை மாலை ரசூல் பூக்குட்டி சந்தித்துப் பேசினார். இந்தியில் தான் இயக்கும் படம் குறித்து ரஜினியிடம் அவர் பேசினார். இன்று மும்பை வருகிறார். அமிதாப்பைச் சந்திக்கப் போகிறார்," என்று ரசூல் பூக்குட்டியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

ரஜினியையும் அமிதாப்பையும் மீண்டும் இந்தப் படத்தில் இணைக்கத் திட்டமிட்டிருக்கிறாரா ரசூல் பூக்குட்டி?

 

விஸ்வரூபம் முதல் பாகத்தில் மிஸ்ஸானதையெல்லாம் 2ம் பாகத்தில் வச்சிருக்கேன்!: கமல்

Kamal Gearing Up Release Sequel Viswaroopam

விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தில் முழுமையாக வைக்க முடியாமல் போன காதல், தாய் - மகன் பாசம், போர்க்களக் காட்சிகளை இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் பல தடைகள், சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியானது. இஸ்லாமியர்கள், தமிழக அரசு மற்றும் ஊடகங்களின் புண்ணியத்தில் இந்தப் படம் அவருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது.

இப்போது படத்தின் அடுத்த பாக வெளியீட்டுக்கு ஆயத்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார் கமல்.

இந்தப் படத்தின் இன்னும் சில காட்சிகளைப் படமாக்கி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டால், வெளியீட்டுக்குத் தயார்தான். பெரும்பகு காட்சிகளை எடுத்த போதே எடிட் செய்து இறுதி வடிவம் கொடுத்துவிட்டதால், அதிக நாட்கள் தேவைப்படாது என்கிறார்கள்.

இந்த நிலையில் இரண்டாம் பாகம் குறித்து கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில், "விஸ்வரூபம் மூலம் எனக்கு லாபம்தான். நல்ல வேளை, படத்தின் இணை தயாரிப்பாளர் எங்க அண்ணன் என்னை கேள்வி கேட்க வேண்டிய நிலையை படம் ஏற்படுத்தவில்லை.

இந்த இரண்டாம் பாகத்தில் போர்க்களக் காட்சிகள் பிரதானமாக இருக்கும். தவிர, முதல் பாகத்தில் மிஸ்ஸாகிவிட்டதாக ரசிகர்கள் நினைத்த ரொமான்ஸ் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் அதிகம் இருக்கும். அதே போல, அம்மா - மகன் பாசத்தை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன," என்றார்.