கிளாமருக்கு ஏங்கும் அனுயா!

Tags:



முதல் படமான சிவா மனசுல சக்தி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அனுயா, பின்னர் மதுரை சம்பவம் படத்தின் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாக உருவெடுத்தார்.

குடும்பப் பாங்கான வேடங்களை விட கவர்ச்சிதான் அனுயாவுக்குப் பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறுகிறார்களாம். இதனால் முழு நீள கவர்ச்சி வேடத்தில் நடிக்க அனுயாவும் ரெடியாகி விட்டார்.

தனக்குப் பொருத்தமான நல்ல கவர்ச்சிகரமான கதையை தற்போது தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளாராம். விரைவில் கதையை முடிவு செய்து நடிக்கத் தயாராகி வருகிறாராம்.

இதுகுறித்து அனுயா கூறுகையில், சிவா மனசுல சக்தி, நகரம் ஆகிய படங்களில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. இருப்பினும் கவர்ச்சியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று பலரும் கூறுகிறார்கள். நானும் கவர்ச்சிகரமான வேடத்தை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளேன். நல்ல கதை கிடைத்ததும் நடிப்பேன் என்கிறார் அனுயா.

இதற்கிடையே ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் அனுயாவும் இடம் பெற்றிருக்கிறாராம். ஆனால் நாயகியாக அல்ல, நாயகிகளில் ஒருவரான இலியானாவின் அக்கா வேடத்தில் வருகிறாராம்.

அக்கா கேரக்டர் என்றாலும் கூட அனைவரும் பேசும்படியான வேடமாம். படம் வந்த பிறகு பாருங்கள், நானும் நிறைய பேசப்படுவேன் என்கிறார் தனது அழகுச் சிரிப்பை சிந்தியபடி.

 

மேகா நாயர் இனி மேக்னா நாயர்!

Tags:



மேகா நாயர் தனது பெயரை நியூமராலஜிப்படி மேக்னா நாயர் என மாற்றிக் கொண்டு விட்டார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த வலுவான நாயகி மேகா நாயர். கவர்ச்சியை கரைபுரள விட்டாலும் கூட மேகாவைத் தேடி பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சற்றே அப்செட் ஆனாலும் தனது கவர்ச்சி நடிப்பை மட்டும் மேகா தளர்த்தி்க கொள்ளவில்லை. இருந்தாலும் வாய்ப்புகள் தேடி ஓடி வரவில்லை. வயதாகிப் போன சத்யராஜுக்கு ஜோடியாக தங்கம் படத்தில் கவர்ச்சியை கன்னாபின்னாவென காட்டி நடித்தும் பார்த்தார். ம்ஹூம், வாய்ப்பே வரவில்லை.

தற்போதுதான் காதலிச்சுப் பார் என்ற படத்தில் தனி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் தனக்கு நல்ல கேரக்டர் என்றும் இப்படம் தனக்கு பிரேக் தரும் என்று நம்பி வருகிறார் மேகா.

இடையில் தாய் மொழியான மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு வரவே அதையும் பிடித்துக் கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் சில பலரின் ஆலோசனைப்படி தனது பெயரை மேக்னா நாயர் என்று மாற்றியிருக்கிறார் மேகா.

தமிழில் தற்போது காதலிச்சுப் பார், நெல்லை சந்திப்பு என இரு படங்களில் நடித்து வருகிறாராம் மேகா. இதில் நெல்லை சந்திப்பு படத்தில் செம கேரக்டராம். கவர்ச்சியுடன், நடிக்கவும் வாய்ப்பாம். படு ஜாலியான பெண்ணாக இதில் வலம் வந்துள்ளாராம் மேகா.

யாரைப் பார்த்தாலும் மேகா சொல்வது, இனி என்னை மேக்னா என்றே சொல்லிக் கூப்பிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறார் மேகா.

 

படப்பிடிப்புக்கு 10 நிமிடத்தில் பெர்மிஷன் கொடுத்த அமைச்சர்-டாக்டர் ராஜசேகர் பெருமிதம்

Tags:



படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த பத்து நிமிடத்திலேயே தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் செந்தமிழன் அனுமதி கொடுத்து விட்டார். அதிமுக ஆட்சியில், துரித கதியில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று பாராட்டு தெரிவித்துள்ளார் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர்.

டாக்டர் ராஜசேகரின் மனைவி நடிகை ஜீவிதா புதிய தெலுங்கு மற்றும் தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தயாரிப்பதும் ராஜசேகர் தம்பதிதான். இப்படத்தில் ராஜசேகர் ஹீரோவாக நடிக்கிறார். இதுதாண்டா போலீஸ் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது.

சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது சண்டைக் காட்சியின்போது ராஜசேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை மனைவியுடன் சந்தித்தார் ராஜசேகர். அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலம் ஆக்குவதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருக்கிறார். கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. இதற்காகவும், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றி வருவதற்காகவும் அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில், முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகின்றன. இதுதான்டா போலீஸ் பாகம் 2 படப்பிடிப்புக்கு அனுமதி கோரி, தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தமிழனை சந்தித்து மனு கொடுத்தோம். பத்தே நிமிடத்தில் அனுமதி வழங்கி விட்டார். அ.தி.மு.க. ஆட்சி மீது, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

இதுதான்டா போலீஸ் படத்தை வெளியிடுவதற்கு முன்பும் இதேபோல் எனக்கு விபத்து ஏற்பட்டது. இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இப்போது, அதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிடும் சூழ்நிலையில், மீண்டும் அதேபோன்ற விபத்தில் சிக்கியிருக்கிறேன். இந்த விபத்திலும் அதே இடது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது என்றார் அவர்.

அன்னா, ராம்தேவுக்கு ஆதரவு

ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரே, ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டங்களுக்கு டாக்டர் ராஜசேகர் தனது ஆதரவைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், லஞ்சம் ஊழலை எதிர்த்து அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அதில் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். படப்பிடிப்பு காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை.

எனக்கு கால் முறிவு ஏற்படாதிருந்தால், பாபா ராம்தேவ் நடத்தும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருப்பேன். அவருடைய உண்ணாவிரதத்துக்கு என் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்.

 

படத் தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்தவர் விஜயலட்சுமி-சீமான்

Tags:



பலரையும் மிரட்டிப் பணம் பறிப்பதே நடிகை விஜயலட்சுமியின் தொழில். சமீபத்தில்கூட ஒரு தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்துள்ளார் அவர். அவரை யாரோ சிலர் பின்னாலிருந்து இயக்குகிறார்கள். அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்று திரையுலகில் அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவரான இயக்குநர் சீமான்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சுமத்தியுள்ள பரபரப்பான குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜயலட்சுமியின் முந்தைய செயல்பாடுகள் குறித்து அறிந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை அளிக்கவில்லை.

ஏற்கனவே கன்னட நடிகர் ஒருவருடன் 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவதாக கூறியவர் விஜயலட்சுமி. ஆனால் அந்த வாழ்க்கையை பின்னர் உதறி விட்டு வந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான நடிகை ராதிகாவின் தங்க வேட்டை நிகழ்ச்சியில் நடித்தபோது அதன் இயக்குநர் மீது சரமாரியான புகார்களைக் கூறியவர். அதில் உணமை இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. பின்னர் தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த அவர் தற்போது சீமான் மீது குற்றம் சாட்டி புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில்ஒரு தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்தார் விஜயலட்சுமி என்று சீமான் தெரிவித்துள்ளார்.

பார்த்தே ஒன்றரை வருடமாகிறது

இதுகுறித்து அவர் கூறுகையில்,

விஜயலட்சுமியை நான் நேரில் பார்த்து பேசியே ஒன்றரை வருடம் ஆகிறது. வாழ்த்துகள் படத்தில் நடித்தபோது கூட நான் அவருடன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

பணம் கேட்டு மிரட்டி நான் பணியாததால் என் மீது புகார் கொடுத்துள்ளார். அவரை யாரோ பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள். மிரட்டி பணம் பறிப்பது விஜயலட்சுமிக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூட சமீபத்தில் ரூ.5 லட்சத்தை இழந்துள்ளார். அவரை மிரட்டி பணம் வாங்கியுள்ளார்.

விஜயலட்சுமி யார் யாருடன் பழகி உள்ளார் என்பது ஊரறிந்த விஷயம். அரசியலில் எனக்கு இருக்கும் புகழை கெடுக்க திட்டமிட்டு நடத்தப்படும் இந்த சதித்திட்டத்தால் என்னை வீழ்த்தி விட முடியாது என்றார் சீமான்.

 

கொஞ்ச காலத்துக்குப் பின் அரசியல் பிரவேசம்! - விஜய் பேட்டி

Tags:



சென்னை: கொஞ்ச காலத்துக்குப் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவது நடக்கலாம். ஆனால் இப்போது அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றார் நடிகர் விஜய்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது.

தேர்தல் முடிவு குறித்து விஜய் அளித்த பேட்டி:

அ.தி.மு.க. வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால் இந்த அளவு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் என்ன?

சமூகத்தின் பலதரப்பு மக்களும் மாற்றத்தை மாற்றத்தை விரும்பினர். நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. மக்கள் ஒட்டு மொத்தமாக அதை நிகழ்த்தி காட்டியுள்ளனர். நான் மட்டுமின்றி மாநில மக்கள் அனைவருமே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உறுதுணையாக இருந்தார்கள்.

உங்கள் ரசிகர்களின் தேர்தல் பணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தேர்தலில் எங்களின் மக்கள் இயக்கமும் ரசிகர்களும் கடுமையாக உழைத்தார்கள். நான் வேண்டுகோள் விடுத்ததற்காக இரவு-பகலாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

முழு நேர அரசியலில் ஈடுபடுவீர்களா?

கொஞ்ச காலத்துக்கு பிறகு அது நடக்கலாம். ஆனால் தற்போது அதற்கான திட்டம் இல்லை. ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார் விஜய்.

தேர்தல் நேரத்தில், அதிமுக அணிக்கு ஆதரவு என வெளிப்படையாக எங்குமே அறிவிக்கவில்லை விஜய். அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மட்டுமே அதை சொல்லி வந்தார். பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு

Tags:



சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். அவருடன் மகள் அக்ஷரா, நடிகை கெளதமி, அவரது மகள் சுப்புலட்சுமி ஆகியோரும் சென்றிருந்தனர்.

முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை மரியாதைநிமித்தமாக பலரும் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் நடிகை கெளதமி, மகள் சுப்புலட்சுமி, கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஆகியோரும் சென்றிருந்தனர்.

இதேபோல நடிகர் விஜய், பிரபு ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

3வது முறையாக தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவை, நடிகர் பிரபு மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சித்தப்பா மகன் கிரி சண்முகம் மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சம்பந்தி மதிவாணன் மற்றும் அவரது மனைவி, ராம்குமாரின் மகன் துஷ்யந்த், நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், பழம்பெரும் நடிகைகள் சி.சுகுமாரி, குமாரி சச்சு என்கிற பி.எஸ்.சரஸ்வதி, எஸ்.என்.லட்சுமி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்பட தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் சந்தித்து, நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கு தங்களின் மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, திரைப்படத் துறையினர் தன்னை நேரில் வந்து சந்தித்து பாராட்டியமைக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

கவர்ச்சி இல்லாத கங்கணா!

Tags:



கவர்ச்சிகரமாக பார்த்து அறியப்பட்ட கங்கணா ரனவத் முதல் முறையாக கவர்ச்சி இல்லாத ரோலில் நடித்துள்ளாராம் டபுள் தமால் என்ற இந்திப் படத்தில்.

ஷோலே படத்தில் வெள்ளைப் புடவையுடன் விதவை கோலத்தில் நடித்திருப்பார் ஜெயாபாதுரி. கிட்டத்தட்ட அதே கெட்டப்பில் டபுள் தமால் படத்தில் நடித்துள்ளாராம் கங்கணா.

இது ஒரு காமெடிப் படம். இந்திர குமார் இயக்கியுள்ளார். படத்தில் வரும் ஒவ்வொரு சீனும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்குமாம். அதேசமயம். யாரையும் புண்படுத்தும் நோக்கில் எந்த சீனையும் அவர் வைக்கவில்லையாம்.

ஜெயாபாதுரியின் ஷோலே கேரக்டரை மனதில் வைத்துத்தான் கங்கணாவின் ரோலை வடிவமைத்தாராம் இந்திர குமார். இந்த வேடத்தில் கவர்ச்சி இல்லாமல் வருகிறார் கங்கணா. அதேசமயம், படம் முழுக்க அவரை அப்படி நடமாட விட்டால் ரசிகர்கள் வாடிப் போய் விடுவார்கள் என்பதற்காக சில காட்சிகளில் மட்டும் கவர்ச்சி காட்ட வைத்துள்ளனராம்.

கங்கணாவை இப்படிக் காட்டினால் ரசிகர்கள் மனம் என்ன பாடுபடும் என்று இந்திரகுமாரிடம் கேட்டால், நிச்சயம் இந்த கங்கணாவையும் மக்கள் ரசிப்பார்கள். அது படம் வந்த பிறகு அனைவருக்கும் புரியும். ரசிகர்களை ஏமாற்றாத வகையில்தான் கங்கணாவின் ரோல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

படத்தில் மல்லிகா ஷெராவத்தும் இருக்கிறார். பிறகென்ன கங்கணா கைவிட்டால் மல்லிகா மலைக்க வைப்பார் என்று நம்பலாம்

 

டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி

Tags:



சிங்கப்பூர்: ரஜினிகாந்த்துக்கு அளிக்கப்பட்டு வந்த டயாலிசிஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனை வளாகத்திற்குள் வாக்கிங் போக ஆரம்பித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ரஜினிகாந்த். அவரது உடல் நலம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் அவரது குடும்பத்தாரிடமிருந்தோ, மருத்துவமனையிடமிருந்தோ வெளியிடப்படவில்லை.

தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வந்த டயாலிசிஸ் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் இப்போது உடல் நலம் தேறி வருவதாக தெரிகிறது. தனது அறை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அவர் தினசரி அரை மணி நேரம் வாக்கிங் போகிறாராம்.

இன்னும் பத்து நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் அவர் ஒரு மாதம் வரை சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து ஓய்வெடுப்பார் என்றும் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்வார் என்றும் அதன் பின்னர்தான் அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

 

ராதாரவி மகன் ஹரி திருமண வரவேற்பு-ஜெயலலிதா வாழ்த்து

Tags:



சென்னை: அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ராதாராவியின் மகன் ஹரி ராதாரவியின் திருமண வரவேற்பில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு ஹரி ராதாராவியையும், மணப்பெண் திவ்யா என்கிற மகாலட்சுமியையும் வாழ்த்தி ஆசிர்வதித்தார்.

ஹரி ராதாராவிக்கும், பெங்களூரைச் சேர்ந்த மோகன்-சாந்தி தம்பதியின் மகளான திவ்யா என்கிற மகாலட்சுமிக்கும் இன்று சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கேடஸ்வரா திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.

முன்னதாக இவர்களின் திருமண வரவேற்பு நேற்று நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு புதுமணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.

அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள், திரையுலகினர் என பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.