ஸ்ரீகாந்தின் நகைச்சுவை நடிப்புக்காக பாகனை வாங்கியது வேந்தர் மூவீஸ்!

Vendhar Movie Gets The Rights Paagan   

ஸ்ரீகாந்த் - ஜனனி நடித்துள்ள பாகன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியது எஸ் மதனின் வேந்தர் மூவீஸ்.

ஸ்ரீகாந்த், ஜனனி, சூரி, பாண்டி, கோவை சரளா, ஏ வெங்கடேஷ் உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் பாகன்.

ஸ்ரீகாந்த் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிப்பில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் இந்தப் படத்தில். தமிழ் சினிமாவில் தனக்கு மிகப் பெரிய திருப்பு முனையை இந்தப் படம் தரும் என நம்புகிறார் ஸ்ரீகாந்த்.

அவருடன் பரோட்டா சூரி காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் அஸ்லம். விபி புரொடக்ஷன்ஸ் சார்பில் விஸ்வாய் யு லாட் மற்றும் வி புருஷோத்தமன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரிவியூ பார்த்த வேந்தர் மூவீஸ் எஸ் மதன், படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறி, அதன் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார். விரைவில் பாடல் வெளியீடு நடக்கிறது.

வரும் செப்டம்பரில் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசாகவிருக்கிறது பாகன்.

 

கல்யாணத்தில ஆட்டோகிராப் போட்டேன்… பரோட்டா சூரி

Namma Veetu Kalyanam Barota Soori

எல்லோரும் கல்யாணத்தில மொய் எழுதிட்டு மணமக்களை வாழ்த்திட்டு போவாங்க. ஆனா எங்க ஊர்ல என் கிட்ட ஆட்டோகிராப் கேட்டாங்க என்று பெருமை பொங்க கூறினார் நகைச்சுவை நடிகர் ‘பரோட்டா' சூரி.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு. திருமணநாளில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோ அவற்றை போட்டு பார்ப்பது சுவாரஸ்யமான விசயம். விஜய் டிவியில் பிரபலங்களின் வீட்டுத் திருமணங்களை நம்ம வீட்டுக் கல்யாணம் என்று ஒளிபரப்புகின்றனர். சம்பந்தப்பட்ட மணமக்களை நேரடியாக சந்தித்து திருமண நாளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கேட்டறிகின்றனர்.

நவம்பர் 4ம் தேதி ‘நம்ம வீட்டுக் கல்யாணம்' நிகழ்ச்சியில் ‘பரோட்டா' சூரியின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பானது. திருமண நாளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறிக்கொண்டே வந்தார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்ற தனது திருமணம் தன்னை வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது என்று கூறிய சூரி, தனது திருமணத்திற்காக உள்ளூர் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டதாக கூறினார்.

திருமணத்திற்கு வந்த குழந்தைகள் அனைவரும் தன்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பிதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய ஆட்டோ கிராப் வாங்கிச் சென்றது மறக்கமுடியாத நிகழ்வு என்றார் சூரி.

பதினைந்து ஆண்டுகளாக சினிமாத்துறைக்கு வந்து சிரமப்பட்டது முதல் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வாய்ப்பு கிடைத்தது வரை நேயர்களிடையே பகிர்ந்து கொண்டார் சூரி. முதல் படத்தின் நினைவாக தனது மகளுக்கும் வெண்ணிலா என்று பெயரிட்டுள்ளதாக கூறினார்.

 

காலரைத் தூக்கி பெருமையா சொல்வேன், நான் 'தல' அஜீத் ரசிகன் டா: பரோட்டா சூரி

I Am Thala Ajith Fan Da Parotta So

சென்னை: காலரைத் தூக்கி பெருமையாக சொல்வேன் நான் 'தல' அஜீத் ரசிகன் டா என்று நடிகர் பரோட்டா சூரி தெரிவித்துள்ளார்.

வென்னிலா கபடிக் குழு படத்தில் சரட்டுமேனிக்கு பரோட்டா சாப்பிட்டு புகழ்பெற்றவர் சூரி. இந்த காட்சி மிகவும் பிரபலமானதை அடுத்து அவர் பெயரே பரோட்டா சூரியாகிவிட்டது. மூன்றோடு நான்காவது காமெடியனாக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவின் நண்பர் என்ற ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சூரி தனது வாழ்க்கையில் வென்னிலா கபடி குழு படத்தை மறக்க மாட்டார் என்று தெரிகிறது.

இந்த படத்தின் ஞாபகமாக தனது மகளுக்கு வென்னிலா என்று பெயர் வைத்துள்ளார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் சூரி சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது, காலரைத் தூக்கி பெருமையாக சொல்வேன்... நான் 'தல' அஜீத் ரசிகன் டா என்று தெரிவித்துள்ளார்.

சூரி இதுவரை அஜீத்துடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இனி வரும் காலத்தில் அவர் தனக்கு பிடித்த அஜீத்துடன் நடிக்கட்டும்.

 

என்னோட காதலி யார் தெரியுமா? - சொல்கிறார் ஆர்யா

Arya Reveals His Lover Name

யார் யார் கூடவோ என்னைச் சேர்த்து எழுதுகிறார்கள். ஆனால் உண்மையில் என்னுடைய காதலி, இயக்குநர் செல்வராகவனின் 1 வயது மகள்தான். அவளுடன்தான் நான் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறேன், என்கிறார் ஆர்யா.

ஜோடியாக நடித்த பல நடிகைகளோடு இணைத்து பேசப்பட்டவர் ஆர்யா. நான் கடவுள் சமயத்தில் பூஜாவுடன் நெருக்கமாக உள்ளார் ஆர்யா என்றார்கள். இப்போது நயன்தாராவை இணைத்துப் பேசுகிறார்கள்.

நயன்தாராவை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் எனும் அளவுக்கு இந்த கிசுகிசு வளர்ந்திருக்கிறது.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்டபோது மறுத்தார். நடிகைகளுடன் இணைத்து தன்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வருவது வருத்தமாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஆர்யா, "உண்மையில் நான் இப்போதெல்லாம் அதிக நேரம் செலவிடுவது, இயக்குநர் செல்வராகவனின் 1 வயது மகள், அழகுக் குழந்தை லீலாவுடன்தான். என் மனதைக் கொள்ளை கொண்ட தேவதை இந்தக் குழந்தைதான்.இப்போதைக்கு என் காதலி அவள்தான். இந்த உண்மையை வேண்டுமானால் எழுதிக் கொள்ளுங்கள்," என்றார்.

 

நடிகர் திலகம் சிவாஜிக்கு பாரத ரத்னா வழங்க பாராளுமன்றத்தில் பேசுவேன் - திருச்சி சிவா

Trichy Siva Urges Central Award Bharath Rathna

மதுரை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை பாராளுமன்றத்தில் வற்புறுத்துவேன் என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.

மதுரையில் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் 'பராசக்தி' திரைப்படத்தின் வைரவிழா நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், "வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் முதல் அனைத்து தேசபக்தர்களையும் நடிப்பாற்றலால் மக்கள் மன்றத்தில் நடமாட விட்டவர் சிவாஜி. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. பெரிய தலைவர்கள் எல்லாம் ஜாதிய வளையத்துக்குள் தள்ளப்பட்டு முடக்கப்பட்டு விடுவர்.

ஆனால், அவற்றையெல்லாம் கடந்து தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ஆண், பெண் மனதிலும் குடியேறியவர் சிவாஜி. அவரது நடிப்பாற்றல் பற்றி பேசிக்கொண்டே போகலாம். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த பாத்திரமாக மாறிக் காண்பித்தவர் சிவாஜி. அவரைப்போன்று இனி ஒரு நடிகர் பிறக்க முடியாது.

எத்தனை சாதனை நடிகர்கள் வந்தாலும், அவரது நடிப்பை பின்பற்றித்தான் வரமுடியும்.

கலையுலகின் மாமேதையான அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் நான் பேசுவதற்கு ஆதரவு கொடுக்க தமிழகத்தைச் சேர்ந்த பல எம்பிக்களை சந்தித்தேன். டெல்லியில் முக்கிய பதவிகளை வகிக்கும் பலரும், 'இந்த வேலை உனக்கு எதற்கு' என ஒதுங்கிக் கொண்டார்கள். அவர்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து.

உயர்ந்த மாமனிதன் உயிரோடு இல்லாவிட்டால், அவரது புகழை மறைத்து விடமுடியுமா? அந்த மாமேதைக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் இந்தியாவுக்கும் பெருமை, மத்திய அரசுக்கும் பெருமை. அந்த விருதை அவருக்கு வழங்கும்வரை மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்," என்றார்.

 

கும்பமேளாவுக்கு வருகிறார் கேத்தரின் ஜெடா-ஜோன்ஸ்

Catherine Zeta Jones Visit Kumbh Mela

டெல்லி: அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகிறார் ஹாலிவுட் ஹாட் நடிகை கேத்தரின் ஜெடா ஜோன்ஸ்.

43 வயதாகும் ஜெடா ஜோன்ஸ், டிவி நடிகையாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் நாடகங்கள், திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர். ஏற்கனவே ஒரு முறை இந்தியா வந்துள்ள அவர் மீண்டும் தற்போது இந்தியா வரவுள்ளார்.

அலகாபாத்தில் தற்போது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் கும்பமேளா இப்போது நடந்து வருகிறது. இதைக் காண வரப் போவதாக ஜெடா ஜோன்ஸ் கூறியுள்ளார்.

மேலும் பாலிவுட் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தால் பாலிவுட் படத்தில் நடிப்பேன் என்று ஆவலோடு கூறியுள்ளார் ஜெடா ஜோன்ஸ்.

வெங்கட்பிரபு கிட்ட சொன்னா ஏதாச்சுசம் ஏற்பாடு பண்ணித் தருவாரே ஜோ...!

 

'பாகனி'ல் பாடகராக மாறிய 'பரோட்டா' சூரி!

Parotta Suri Pandi Turn Singers Paagan Aid0136

தமிழ் நகைச்சுவை நடிகர்களுள் ரொம்ப டீஸன்டானவர், வேகமாக வளர்ந்து வருபவர் என்ற பெயரைப் பெற்றுள்ளவர் பரோட்டா சூரி. சந்தானம், விவேக் போன்றவர்களை அணுகமுடியாதவர்களின் இப்போதைய சாய்ஸ் சூரி.

அடுத்து தான் நடிக்கும் ஒரு படத்தில் பின்னணிப் பாட்டு பாடும் அளவுக்கு முன்னேறியுள்ளார் சூரி.

வி பி புரொடக்சன்ஸ் சார்பாக விஸ்வாஸ் யு லாட் & புருஷோத்தம் தயாரிக்கும் பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் 'அவன் இவன்' ஜனனி நடித்து வருகின்றனர். முகமத் அஸ்லாம் இயக்குகிறார்.

முழு நீள காமடிதான் படத்தின் களம். காஞ்சனாவில் பட்டையை கிளப்பிய கோவை சரளா இந்தப் படத்தில் ஸ்ரீகாந்துக்கு அம்மாவாகவும், வெண்ணிலா கபடிக்குழு சூரியும், அங்காடித்தெரு பாண்டியும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

நடித்ததோடு மட்டுமில்லாமல் நச்சென்று ஒரு குத்துப் பாடலையும் பாடியுள்ளனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஸ்ரீகாந்துக்காக பாடப்பட்ட அந்தப் பாடலின் ஆரம்பம் இப்படி அமைந்துள்ளது...

"அவ ஏஞ்சலினா
அவ லவ்வரு நா
அக்சுவலா பம்பருதான்

நா மன்னருதான்
வின்னருதான்
சூப்பரான கூட்டணிதான்
கன்னி ராசி வந்த வேலைதான்
சம்பா சம்பா ராஜசிம்பா"

என்ற பாடலை முதல் முதலாக பாடியுள்ளனர் சூரியும், பாண்டியும்.

ஸ்ரீகாந்த் காதலை ஜனனி ஐயர் ஏற்றுக்கொள்ளும்போது இந்த பாடல் படத்தில் இடம்பெறுகிறது. கொடைக்கானலில் இப்பாடலை பிரமாண்ட செட் போட்டு படமாக்கி வருகின்றனர்.

 

சைக்கிளுடன் ஒரு காதல் - பாகன் பற்றி ஸ்ரீகாந்த்

He Romances His Bicycle Srikanth Interview   

ஷங்கரின் நண்பனுக்குப் பிறகு என் சினிமா பயணம் புதிய பரிமாணத்துக்கு மாறியிருக்கிறது என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.

நண்பனுக்குப் பிறகு, ஸ்ரீகாந்த் நடிப்பில் வரும் படம் பாகன். இதில் அவர் சோலோ ஹீரோ.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்முடன் ஸ்ரீகாந்த் பேசியதிலிருந்து..

பாகன் ஒரு ரொமான்டிக் காமெடி படம். இயக்குநர் அஸ்லம் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படத்தில் தந்திருக்கிறார். நிச்சயமாக நீங்கள் என்ஜாய் பண்ணும் அளவுக்கு படம் இருக்கும்.

பாகன் என்றால் யானை உடனே நினைவுக்கு வரும். ஆனால் இங்கே சைக்கிளுக்குப் பாகனாக இருக்கும் ஒருவனைப் பற்றிய கதை இந்தப் படம். தன் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட ஒரு சைக்கிள் மீது அந்த இளைஞன் வைத்திருக்கும் அன்பு, காட்டும் அக்கறை படத்தில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் கதையைக் கேட்குமாறு இயக்குநர் அமீர்தான் சிபாரிசு செய்தார். மிக அழகான ஸ்கிரிப்ட். சேரன், அமீர் படங்களில் வேலை பார்த்த திருப்தியும் அனுபவமும் எனக்கு அஸ்லம் மூலம் கிடைத்தது.

இன்றைக்கு என்னைப் பார்க்கும் அனைவரும் நான் ரொம்ப ஸ்லிம்மாக, பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் இருப்பதாகக் கூறிப் பாராட்டுகிறார்கள். நியாயமாக இதற்கு நான் இயக்குநர் ஷங்கருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். வயதுக்கு ஏற்ற வேடங்களைச் செய்வதுதான் வெற்றியைத் தரும் என்று அவர் எனக்குக் கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன்.

இந்தப் படத்தின் நாயகி ஜனனி, அவன் இவனில் அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தவர். இந்தப் படம் அவருக்கும் பெரிய பிரேக் கொடுக்கும்", என்றார்.

 

டிவி தொகுப்பாளர் பாலாஜி ஹீரோவாகிறார்…. படத்தின் பெயர் சுட்ட கடை

Rj Vj Balaji Turns Hero

சினிமாவில் இருந்து ரிட்டையர் ஆனவர்கள் டிவியில் நடிக்க வருவது பழைய கதை. இப்போது டிவி தொகுப்பாளர்கள் ஹீரோவாகவோ, காமெடியானாகவோ அறிமுகமாவது புதியகதை.

சந்தானம், சிவகார்த்திகேயனை அடுத்து டிவி தொகுப்பாளர் பாலாஜி சுட்ட கதை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் படம் 'சுட்ட கதை'. இதில் பாலாஜியுடன் வெங்கியும், கதாநாயகியாக லஷ்மிபிரியா நாயகியாக நடிக்கின்றனர். அவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயபிராகஷ், சாம்ஸ், ரின்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

1985-ல் இருந்து 95-ம் வருடம் வரை காமிக்ஸ் நாவல்களில் பிரபலமான கதாபாத்திரங்களை வைத்தும், அதில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்தும் இந்தப் படத்தை எடுக்கப்போகின்றனராம். இது சுடாமல் சுட்ட கதை என்கிறார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சுபு. இரண்டு மணி நேரம் இடைவிடாது சிரிப்பு மழையாக இருக்கும். புது மாதிரியான பாணிக்கு காமெடியை கொண்டு சொல்லும் கொடைக்கானலில் நடப்பது போன்று திகில் காமெடி படமாக தயாராகிறது என்கிறார் சுபு.

இப்படத்திற்கு மேட்லிபுளூஸ் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி பாடல் எழுதியுள்ளார்.

 

இளையராஜாவை அவமதிப்பதா.. எஸ்ஜே சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய பிரகாஷ்ராஜ்!

Prakash Raj Says No Isai

இசைஞானி இளையராஜாவை அவமதிப்பது போல காட்சிகள் இருந்ததால் இசை படத்தில் நடிக்க மறுத்து வெளியேறிவிட்டார் பிரகாஷ் ராஜ்.

இளையராஜாவுடன் சமீப காலமாக மிக நெருக்கமாக இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ்ராஜ் தமிழில் முதன் முறையாக இயக்கிய தோனி படத்துக்கு இளையராஜாதான் இசையமைத்தார். அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு இளையராஜா சென்னையில் நடத்திய பிரமாண்ட இசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார் பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ் ராஜ் அடுத்து இயக்கும் உன் சமையலறையில் படத்துக்கும் இசைஞானிதான் இசை.

இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா இயக்கும் இசை படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பிரகாஷ் ராஜ். ஆனால் கதையை முழுசாகக் கேட்டபிறகு விலகிவிட்டார்.

காரணம் இளையராஜா - ஏ ஆர் ரஹ்மானின் இசைப் போட்டியை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளாராம் எஸ்ஜே சூர்யா. பல காட்சிகள் இளையராஜாவை அவமதிப்பது போலிருப்பதால், இந்தப் படமே எனக்கு வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம்.

மரியாதை தெரிந்த மனிதர்!

 

பெண்கள் சக்திகள், ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.. அமிதாப்

Women Are Strong No Less Than Men

மும்பை: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களை வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சன் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு பெண் ரூ. 5 கோடி பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் இந்த வார்த்தையைக் கூறினார் அமிதாப் பச்சன். அப்பெண்ணின் பெயர் சுமீத் கெளர் ஷானி. இல்லத்தரசியான இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ. 5 கோடி பரிசுத் தொகையைத் தட்டிச் சென்று அசத்தியுள்ளார்.

சுமீத்தைப் பாராட்டி அமிதாப் பச்சன் பேசுகையி்ல, இளம்பெண்களை மானபங்கப்படுத்துவது, கேலி செய்வது, அவமானப்படுத்துவது ஆகிய காலமெல்லாம் இனி மலையேறி விடும். ஆண்கள் நிறைந்த இந்த உலகில், ஒரு பெண் சாதனை படைத்திருப்பதைப் பார்த்து நான் நிறைய மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.

ஆண்களுடன் போட்டியிட்டு சுமீத் கெளர் செய்துள்ள இந்த சாதனை மிகப் பெரியது. பெண்கள் பொதுவாக சக்தி போன்றவர்கள். ஆண்களுக்கு நிகரானவர்கள். ஏன் ஆண்களை விட வலிமையானவர்கள். ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை.

வாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணும் சாதிப்பார் என்பதற்கு சுமீத் கெளர் ஒரு நல்ல உதாரணம். நாடே இன்றுபாலியல் குற்றங்களால் தலை கவிழ்ந்து நிற்கும்போது சுமீத் கெளரின் சாதனை தலைநிமிர வைப்பதாக உள்ளது என்றார் பச்சன்.

 

ஆண்களை அவமதித்த வழக்கு - சோனா நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு

Court Summons Sona

சென்னை: ஆண்களை ஒரு டிஸ்யூ பேப்பர் போல செக்ஸுக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடுவேன் என்று கூறிய சோனாவுக்கு எதிரான வழக்கில், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் 13-வது குற்றவியல் கோர்ட்டில், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.மதுசூதனன் தாக்கல் செய்துள்ள மனுவில், "11.11.2012 தேதியிட்ட ‘டைம்பாஸ்' என்ற பத்திரிகையில், நடிகை சோனாவின் பேட்டி வெளியாகியது. அதில், எனக்கு செக்ஸ் தேவைப்பட்டா ஆம்பளைங்களை யூஸ் பண்ணிப்பேன். டிஷ்யூ பேப்பர் மாதிரி, அப்புறம் தூக்கி எறிஞ்சிட வேண்டியதுதான்' என்றும் ‘லிவிங் டுகெதர் என்பது கல்யாணத்தை விட பெரிய முட்டாள்தனம். அதை நிறைய ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன், அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. யூஸ் அன்ட் த்ரோதான் பெஸ்ட்' என்று நடிகை சோனா கூறியுள்ளார்.

சுயமரியாதை, நாகரீகம் இல்லாத இவரது பேட்டி சமுதாயத்தில் சுயமரியாதை உள்ள ஆண்களின் மனதை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.

இவரது பேட்டியை படிக்கும் நபர்களின் மனதில் கெட்ட எண்ணம் தோன்றி, தவறு செய்ய தூண்டும். அதனால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும். மேலும், அவரது கருத்து தனிப்பட்ட மனிதரை குறிப்பிடாமல், ஒட்டுமொத்த ஆண்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. எனவே சோனா மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த மனு மாஜிஸ்திரேட்டு சிவகுமார் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் அருள்துமிலன் ஆஜராகி வாதம் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சிவகுமார், ‘வழக்கு குறித்து வரும் பிப்ரவரி மாதம் 13-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகை சோனாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

தன் பேட்டியை குறிப்பிட்ட பத்திரிகை தவறாக வெளியிட்டுவிட்டது என்று சோனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமாவில் ஒரு கேவலமான கதைத் திருட்டு..!

K Bagyaraj Complaint On Santhanam And Rama Narayanan   

தமிழ் சினிமா எத்தனையோ விதமான கதைத் திருட்டுக்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் இப்போது நடந்திருப்பது படுமோசமான ஒன்று. அது, பாக்யராஜின் இன்றுபோய் நாளை வா கதையை, அவருக்கே தெரியாமல், சம்பந்தமில்லாதவர்கள் விற்றதும், அதை கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி சந்தானமும் ராம நாராயணனும் படமாக எடுத்ததும்!

இன்று போய் நாளை வா என்ற படத்தின் மூலக்கதை, கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் பாக்யராஜுக்கு சொந்தமானது. அதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை இன்றுவரை அவர் யாருக்கும் தரவில்லை. தன் மகனை வைத்து அந்தப் படத்தை எடுக்க முயன்று வருகிறார். இது கடந்த ஓராண்டு காலமாக செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பாக்யராஜிடம் இந்த கதை உரிமையை இரு முறை கேட்டிருக்கிறார்கள். அவர் இந்தக் கதையை தானே மீண்டும் படமாக எடுக்கப் போவதாகக் கூறியபிறகு, அடாவடியாக அதே கதையை கண்ணா லட்டு தின்ன ஆசையா என படமாக எடுத்து, ரீலீஸ் வரை கொண்டுவந்துவிட்டார்கள். இப்போது பாக்யராஜ் தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார். மான நஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கதைப் பஞ்சம் அல்லது கற்பனை வறட்சி எந்த அளவு தலைவிரித்தாடுகிறது... திரையில் நேர்மையைப் பேசுபவர்கள் எத்தனை கபடம் நிறைந்தவர்களாக உள்ளனர்... சிரிப்பு நடிகர்கள் நிஜத்தில் எத்தனை பெரிய வில்லன்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சின்ன சாம்பிள்தான்!

பாக்யராஜ் கொடுத்திருக்கும் புகார் கடிதத்தின் நகல்:

 

பாத்ரூம் கூட இல்லை - ‘நீயா நானா’ வில் ஆதங்கப்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள்

Govt College Vs Private College Debate In Neeya Naana

அரசு கல்லூரிகளில் சரியான பாத்ரூம், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நாங்கள் தடுமாறுகிறோம் என்று நீயா நானா நிகழ்ச்சியில் ஆதங்கப்பட்டனர் அரசு கல்லூரி மாணவிகள்.

விஜய் டிவியில் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவிகளும், அரசுக் கல்லூரி மாணவிகளும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

வசதியானவர்கள்தான் அதிக பணம் செலவு செய்து தனியார் கல்லூரியில் படிக்கின்றனர். ஏழ்மையான நிலையில் இருக்கும் மாணவிகள் டிகிரி படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அரசுக் கல்லூரிக்குப் போகின்றனர்.

இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி பற்றி முதலில் பேசப்பட்டது. தனியார் கல்லூரி மாணவிகளின் நடை உடை பாவனைகள் அலாதியானது. அதே சமயம் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் எந்த வித அடிப்படை வசதியும் இன்றி தினமும் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.

தனியார் கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் லேப், கேண்டீன், நெட் வசதி போன்ற ஏராளமான வசதிகள் உள்ளன. ஆனால் 3000 மாணவிகள் படிக்கும் கல்லூரிகளில் அடிப்படை வசதியான பாத்ரூம் வசதிகள் கூட இல்லை. குடிநீர் இல்லை, கேண்டீன் வசதியில்லை. சரியான கட்டிட வசதியில்லை என இன்னும் பல இல்லைகள்தான் அரசுக் கல்லூரி மாணவிகளின் புகாராக இருந்தது. இந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் படித்து முன்னேறி சமூகத்தில் பட்டதாரிகளாக உயர்கின்றனர்.

அரசுக் கல்லூரி மாணவிகள் பேசியதைக் கேட்ட தனியார் கல்லூரி மாணவிகள், இவ்வளவு சிரமத்திற்கு இடையிலும் இவர்கள் படித்து முன்னேறுகின்றனர் என்பதை நினைக்கும் போது அவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது என்றனர்.

அதிக அளவில் டொனேசன் கொடுத்து தனியார் கல்லூரிகளில் மாணவிகள் படிக்கின்றனர். ஆனால் பணம் செலவு செய்ய முடியாதவர்கள்தான் அரசுக் கல்லூரிகளில் படிக்கின்றனர். எனினும் அவர்களுக்கு சாதாரண அடிப்படை வசதி கூட கிடைப்பதில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

கல்லூரிக்கு அருகில் மதுபானக்கடை இருக்கிறது. இதனால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு மாணவி கூறினார். அரசுக் கல்லூரி மாணவிகளின் புகார்களுக்கு ஆள்பவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?

அரசுக் கல்லூரிகள் மட்டுமல்ல, பிஞ்சுக்குழந்தைகள் வளரும் அங்கன்வாடிகள் முதல் அரசு பள்ளிகளிலும் இந்த சூழ்நிலைதான் உள்ளது. அதனால்தான் வியர்வையை ரத்தமாக சிந்தி உழைத்து ஏழைகளும் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.

இனியாவது அரசு கல்வி நிலையங்களின் தரம் உயருமா? என்ற கேள்வியோடு முடிந்தது நீயா? நானா? நிகழ்ச்சி.