சபாஷ்.. ஆபாசம் அகல்கிறது.. பாசம் கூடுகிறதாம்... சரவணன் மீனாட்சி சீரியலில்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியின் சரவணன்-மீனாட்சி தொடரில் ஆபாசம் மற்றும் அருவெறுக்கத்தக்க வசனங்கள் இடம்பெறுவதாக சில நாட்கள் முன்பு 'தட்ஸ்தமிழில்' செய்தி கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இனிவரும் எபிசோட்களில் இரட்டை அர்த்த வசனங்களை கட் செய்துவிட்டு, நாகரீகமான காட்சியமைப்பு மற்றும் வசனங்களை வைத்துக்கொள்ள சீரியல் குழு முடிவு செய்துள்ளது.

'ஆபாசம், அருவெறுப்புகளின் உச்சம் தொட்டு ஷாக் கொடுத்த விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி' என்ற தலைப்பில் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். குறிப்பாக கடந்த வியாழக்கிழமை ஒளிபரப்பான தொடர் முழுக்கவும், நேயர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருந்ததையும் அந்த செய்தியில் சுட்டி காட்டியிருந்தோம். அந்த செய்திக்கு வாசகர்கள் பலரும் ஏகோபித்த வரவேற்பு தெரிவித்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திருந்தனர்.

Saravanan Meenakshi serial team decide to avoid vulgar scenes

செய்தியறிந்த மெகா தொடர் குழுவினர், இனிவரும் எபிசோட்களில் இரட்டை அர்த்த காட்சிகளையும், வசனங்களையும் தவிர்க்க முடிவு செய்துள்ளனராம். இதை உறுதி செய்யும்விதமாக, 'இணையதள செய்தியை பார்த்த பிறகு, சரவணன் மீனாட்சி, சீரியலை நாகரீகமான வகையில் கொண்டு செல்ல சீரியல் குழுவினர் முடிவு செய்துள்ளனர்' என்று தமிழ் முன்னணி நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரசிகர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு மாற்றம் செய்ய முன்வந்திருக்கும் சரவணன் மீனாட்சி சீரியல் குழு பாராட்டுக்குரியதே.

 

கம்ப்யூட்டர் இசையைத் தூக்கி எறியுங்கள்!- இளம் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா அறிவுரை

இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் கம்ப்யூட்டர் சிப்களை தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்தி இசையமையுங்கள் என்றார் இளையராஜா.

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி அவரது நினைவை போற்றும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பிரத்யேகமாக இசை நிகழ்ச்சியொன்றை நடத்தினார். தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த இசை கச்சேரி நடந்தது.

Ilaiyaraaja

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்தது. அரங்குக்கு வெளியிலும் பல நூறு ரசிகர்கள் டிக்கெட் இல்லாமல் காத்திருந்தனர்.

மேடையில் ‘எம்.எஸ்.விஸ்வநாதன்' உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இளையராஜா பேசுகையில், "உலக மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன், என் இளமை காலம் அவர் பாடல்களோடுதான் கழிந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் என்று தெரியாத பருவத்தில் அவரது பாடல்களில் ஈர்க்கப்பட்டேன்.

தேவதாஸ் படத்தில் "உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்" என்ற பாடலைத் தந்தார். ஆனால் அவர் பெயரைக் கூடப் போட்டுக் கொள்ளவில்லை.

‘குலே பகாவலி' படத்தில் அவர் போட்ட "மயக்கும் மாலை பொழுதே நீ போபோ" பாட்டை இப்போதைய சூப்பர் ஸ்டாருக்கு போட முடியாது. இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் காலகட்டமாக அது இருந்தது. அந்த காலத்துப் பாடல்களை இப்போதும் பாடலாம். ஆனால் இன்றைய பாடல்களை பாட முடியாது.

இளம் இசையமைப்பாளர்கள் கம்ப்யூட்டர் இசையைப் பயன்படுத்தாதீர்கள், தூக்கி எறியுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்.

அண்ணன் எம்எஸ்வி இசையில் என் இளம் வயதில் நான் கேட்ட பாடல் "மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி.." என்ன ஒரு அற்புதமான பாட்டு அது. புத்தகப்பையை தூக்கிக் கொண்டு கோம்பை பள்ளிக் கூடத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்தப் பாடலைக் கேட்டேன். என்னை அறியாமல் அந்த பாடலுக்குள் போய்விட்டேன்.

அந்தப் பாடலில் வரும் 'தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்' என்ற வரிகள் என் எதிர்காலம் பற்றி அந்த வயதிலேயே யோசிக்க வைத்தன. ஒரு சமூகத்தையே யோசிக்க வைக்கும் அந்த வரிகளும் இசையும்தான் உண்மையான கலைவடிவம்.

ஆனால் அண்ணனும் கவிஞரும் அடுத்த ஒரு படத்தில் இன்னொரு பாடல் தந்தனர்.

எதிர்காலத்தை நினைத்து கலங்காதே என்பதை உணர்த்தும்படியான பாடல் அது..

"மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா..."

இந்தப் பாடலில் வரும், "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்...

...உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு" என்ற இந்த வரிகள்தான் கஷ்டப்படும் போது எனக்கு நம்பிக்கை ஊட்டின என்று கவிஞர் வாலி என்னிடம் சொல்லி இருக்கிறார்.

"மாடிமேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே", "பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது", "நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை", "நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" போன்ற அற்புதமான பாடல்களைக் கொடுத்தார் அண்ணன் எம்எஸ்வி.

தனா, தனா, தனா என்ற சந்தத்தை மட்டுமே பயன்படுத்தி "வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா" பாடலை கொடுத்தார். அவர் இசையில் ஒழுக்கம் இருந்தது. இப்போதைய இசையில் ஒழுக்கம் தவிர மற்ற எல்லாமும் இருக்கிறது," என்றார்.

நிகழ்ச்சியில் விஸ்வநாதன் வேலை வேணும், பாலிருக்கும் பழமிருக்கும் போன்ற பாடலின் மெட்டுகளுக்கு, தன் அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய பாடல் வரிகளையும் பாடிக் காட்டினார். அப்போது கரகோஷம் அரங்கை அதிர வைத்தது.

 

பாட்ஷா கிடக்கவில்லை.. புரூஸ் லீ ஆனார் ஜிவி பிரகாஷ்!

பாட்ஷா என்கிற ஆன்டனி என்ற தலைப்பு கிடைக்காததால், அதை புரூஸ் லீ என்று மாற்றியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா', ‘பென்சில்' ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமானார்.

Bruce Lee is GV Prakash new title

இந்த படத்திற்கு முதலில் ரஜினி நடித்த ‘பாட்ஷா' என்ற படத்தலைப்பை வைத்தனர். ஆனால் அது ரஜினி ரசிகர்களால் பலமாக எதிர்க்கப்பட, ‘பாட்ஷா என்கிற ஆண்டனி' என்று வைக்க முடிவு செய்திருந்தனர்.

ஆனால், இந்தத் தலைப்பை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பதிவு செய்து வைத்திருப்பதால், அவர்களிடமிருந்து இந்த தலைப்பை பெற முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். ஆனால், அது முடியவில்லை.

எனவே, தற்போது இப்படத்தின் தலைப்பை ‘புருஸ் லீ' என்று மாற்றி வைத்துள்ளனர்.

 

ஓ காதல் கண்மணி நாயகன் துல்கரின் 29 வது பிறந்தநாள் இன்று

திருவனந்தபுரம்: ஓ காதல் கண்மணி மற்றும் வாயை மூடி பேசவும் போன்ற தமிழ் படங்களில் நடித்து ஏராளமான இளம் ரசிகைகளின் நெஞ்சங்களைக் கவர்ந்த மலையாள இளம் நடிகர் துல்கர் சல்மானின் 29 பிறந்த தினம் இன்று.

1986 ம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் மம்முட்டி - சல்பத் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த துல்கர் சல்மான் 2012 ம் ஆண்டில் செகண்ட் ஷோ என்ற முதல் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.

Dulquer Salman Turns 29

நடிக்க வந்து 3 வருடங்களில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் சேர்த்து சுமார் 17 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தமிழில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமான துல்கருக்கு அந்த படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

ஆனால் மணிரத்னத்தின் இயக்கத்தில் அடுத்து வந்த ஓ காதல் கண்மணி திரைப்படம் தமிழில் நல்ல ஹிட் அடித்ததுடன், தமிழ் ரசிகர்களிடம் துல்கரை கொண்டு சேர்த்த விதத்திலும் பெரிதும் உதவியிருக்கிறது.

உஸ்தாத் ஹோட்டல் மற்றும் பெங்களூர் டேஸ் போன்ற சிறந்த படங்களில் நடித்த துல்கர், தமிழில் அடுத்ததாக இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்க விருக்கிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் துல்கரை மற்றவர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்...பிறந்தநாள் வாழ்த்துக்கள் துல்கர் சல்மான்.

 

பேச்சுவார்த்தை தோல்வி... படப்பிடிப்பு ரத்து தொடர்கிறது.. தவிக்கும் தயாரிப்பாளர்கள்!

சென்னை: பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கிடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், படப்பிடிப்பு ரத்தை மேலும் நீட்டித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

பெப்சி தொழிலாளர்கள் திடீரென சம்பள உயர்வை தன்னிச்சையாக அறிவித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள் உள்நாடு - வெளிநாடுகளில் நடக்கும் அனைத்து படப்பிடிப்பு மற்றும் இதர வேலைகளை ரத்து செய்தனர். அதன்படி, நேற்று கமல், அஜீத் உள்ளிட்ட நடிகர்களின் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

சென்னை

சென்னை மற்றும் வெளியூர்களில் நடந்த தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதே போல் வெளிநாடுகளில் நடந்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சங்க நிர்வாகிகளுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகளுக்கும் இடையே சென்னையில் உள்ள ‘பிலிம் சேம்பர் கட்டிடத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை நடைபெற்றது. அதில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது போல் ‘எடிட்டிங்', ‘டப்பிங்', பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகளும் நிறுத்தப்பட்டன. இதனால் தமிழ் பட உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மூத்த தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தயாரிப்பாளர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள். இன்றும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

 

நடிகர் சங்கத்துக்கு 2 மாதங்களில் தேர்தல் - நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரத்குமார் தலைவராகவும், ராதாரவி பொதுச் செயலாளராகவும் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விஷால் தரப்பினர் இந்தத் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

Nadigar Sangam: HC orders to conduct election within 2 months

இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலை 2 மாதங்களில் நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமனம் செய்தது.

வரும் தேர்தலில் சரத்குமார், ராதாரவி தலைமையிலானவர்கள் ஒரு அணியாகவும், விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் எதிர் அணியாகவும் நின்று சந்திக்கவிருக்கிறார்கள்.

 

அப்துல் கலாம் தனி மனிதர் அல்ல.. தமிழரின் அடையாளம்!- பாரதிராஜா, சிவகுமார் புகழாரம்

டாக்டர் அப்துல் கலாம் தனி மனிதர் அல்ல, தமிழரின் அடையாளம், இளைஞர்களின் உந்து சக்தி என்று இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிவகுமார் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு இயக்குநர் பாரதிராஜா செலுத்திய புகழஞ்சலி:

Director Bharathiraja and Actor Sivakumar hailed Abdul Kalam

இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதர் அல்ல.. தமிழனின் அடையாளம். ஆழ்ந்த வருத்தங்களுடன்...

-பாரதிராஜா.

-என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமாரின் புகழஞ்சலி:

உண்மை, நேர்மை, திறமை, கடும் உழைப்பு , நாட்டுப்பற்று இருந்தால் ஒருவன் எந்த குக்கிராமத்தில் பிறந்தாலும் எவ்வளவு ஏழையாகப் பிறந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டில் உயர்ந்த பதவியைப் பெற முடியும். உன்னத நிலையை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம்.

பதவியில் இருந்த போதும் பதவியில் இல்லாத போதும் உலக மக்களால் ஒன்றுபோல் நேசிக்கப் பட்ட மகான் !

இளைஞர்களின் உந்து சக்தியாக இறுதி மூச்சு வரை வாழ்ந்த அற்புத மனிதர்!

-இவ்வாறு நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

 

டாக்டர் அப்துல்கலாம் மறைவுக்கு தவறான பெயரில் இரங்கல் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகிய அனுஷ்கா சர்மா

மும்பை: நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதலியுமாகிய நடிகை அனுஷ்கா சர்மா, இந்தியர்களின் கடும்கோபத்திற்கு தற்போது ஆளாகி உள்ளார். இந்திய நாடு ஈன்றெடுத்த தவப்புதல்வர் திரு அப்துல்கலாம் அவர்கள் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

நாடே அதிர்ச்சியில் மூழ்கிய இந்தத் தருணத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு துக்கத்தை அனுசரித்து வருகிறது, மேலும் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மக்களுமே அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்து வருகின்றனர்.

APJ Abdulkalam RIP - Anushka Sharma Use Wrong Name on Twitter

சமூக வலைதளங்களில் மக்கள் அனைவரும் இந்த துக்கச்செய்தியை பகிர்ந்து அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த நாடும் துக்கத்தில் மூழ்கி இருக்கும் இந்தத் தருணத்தில் நடிகை அனுஷ்கா சர்மா, அப்துல்கலாமிற்கு இரங்கல் தெரிவித்து போட்ட ஒரு ட்வீட் ரசிகர்களைக் கோபத்தில் தள்ளியிருக்கிறது.

படிக்காத பாமர மக்கள் கூட அந்த மகானின் பெயரை சரியாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர், ஆனால் அனுஷ்கா சர்மாவிற்கு அவரின் பெயர் தெரியவில்லை போலும்.

அப்துல்கலாம் என்பதற்குப் பதிலாக அப்துல்கலாம் ஆசாத் எனப் பெயரை தவறுதலாக ட்வீட்டில், பதிவிட கோபத்தில் பொங்கிய ரசிகர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி செய்யலாமா?

என்று கேள்விக்கணைகளை வீசி திட்டித் தீர்த்து விட்டனர், இதனால் பயந்துபோன அனுஷ்கா சர்மா சற்று நேரத்தில் தான் போட்ட ட்வீட்டை நீக்கி விட்டு புதிய ட்வீட்டை பதிவிட்டார்.

அனுஷ்கா புதிதாகப் பதிவிட்ட ட்வீட்

இருந்தாலும் கூட அந்தத் தவறான ட்வீட்டை மன்னிக்காத ரசிகர்கள் தற்போது யூ டியூபில் அதனைப் பதிவேற்றி உலவவிட்டுள்ளனர்.

 

இளையராஜா இசைஞானி.. எம்எஸ்வி இசைக் கடவுள்..! - ரஜினி

இசையமைப்பாளர் இளையராஜா இசைஞானி என்றால், எம்எஸ்வியோ இசைக் கடவுள். ஞானிகளுக்குத்தான் கடவுளைப் பற்றித் தெரியும் என்றார் ரஜினிகாந்த்.

தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இளையராஜாவின் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசைக் கச்சேரி நடந்தது. மறைந்த இசை மேதை எம்எஸ்விக்கு இசையஞ்சலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

MSV is Music God, says Rajini

மேடையில் ‘எம்.எஸ்.விஸ்வநாதன்' உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இசைக்கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியை துவக்கினார் இளையராஜா. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் பாடப்பட்டன.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இறுதி வரை பங்கேற்று இசையை ரசித்தார்.

பின்னர் ரஜினியை நோக்கிய இளையராஜா, 'சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க," என்று அழைத்தார்.

ரஜினி பேசுகையில், "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி இந்த ஞானிக்கு தான் தெரியும்.

அவரைப் பற்றி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம்," என்றார்.

 

கலாம் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்

சென்னை: இளைய சமுதாயத்தின் உந்துசக்தியாக விளங்கிய அப்துல்கலாமின் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

மக்கள் ஜனாதிபதியாக இந்தியர்களின் மனதில் இடம் பெற்றுள்ள அப்துல் கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tamilnadu film directors organisation mourns for Kalam

அந்த வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் கலாம் மறைவிற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நேற்று இரவு மறைந்தார். இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உந்து சக்தியாகவும், முன் மாதிரியாகவும் திகழ்ந்தவர். இறுதி மூச்சு வரை நாட்டிற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர்.

இந்திய ராணுவத்துறையில் ஏவுகணைகள் தயாரிக்கும் குழுவில் தலைவராக இருந்து பல நுண்ணிய ஏவுகணைகளை இந்தியா தயாரிக்க உதவியவர்.

இந்திய நாட்டு மக்கள் மீது மிகவும் பாசம் வைத்திருந்தவர். அதுமட்டுமல்லாமல் இளைய சமுதாயம் இந்த நாட்டை விஞ்ஞான நாடக ஆக்க வேண்டும் என்று கனவு கண்டவர். இந்திய நாடு அணுசக்தி துறையில் ஒரு வல்லரசாக ஆக வேண்டுமென்று அரும்பாடுபட்டவர்.

அப்துல் கலாம் அவர்களோடு நெருங்கி பழகுகின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. குடியரசு தலைவராக இருந்தபோது குடியரசு தலைவர் மாளிகையில் அவரை பலமுறை சந்தித்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது அவர் எனக்கு பல நல்ல அறிவுரைகளை வழங்கினார்.

அவர் மிக எளிமையானவராக இருந்தார். 24 மணி நேரமும் இந்திய நாட்டு மக்களுக்காக உழைத்தவர். 120 கோடி இந்திய மக்களாலும் மதிக்கப்பட்டவர். இளைஞர்களின் வழிகாட்டி. அப்படிபட்ட தலைவர் நம்மைவிட்டு பிரிந்தது நாட்டிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவையொட்டிஇரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று 28-07-2015தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அலுவலகம் விடுமுறை என்று அறிவிக்கப்படுகிறது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.