சினிமாவுக்கு திறன்சார் தொழிலாளர்கள் அதிகம் தேவை! - கமல்

சென்னை: திரைப்படத் துறைக்கு திறன்சார் தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்திய தொழில் வர்த்தக அமைப்புகள் கூட்டமைப்பின் (ஃபிக்கி) அங்கமான ஊடகம், பொழுதுபோக்கு திறன்களுக்கான கவுன்சில் தலைவராக உள்ள கமல்ஹாசன், ஃபிக்கி சார்பில் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்ற உலகத் திறன்சார் மாநாட்டில் பங்கேற்றார்.

Cinema need more skilled labourers, says Kamal

மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:

இந்திய திரைப்படத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதிக அளவிலான திறன்சார் தொழிலாளர்கள் திரைப்படத் துறைக்கு மட்டுமன்றி, நம் நாட்டுக்கும் அவசியம். இதை கவனத்தில் கொண்டு பல்வேறு திரைப்படத் துறை அமைப்புகளுடனும் திரைப்பட ஊழியர்கள் சங்கங்களுடனும் இணைந்து நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பயிற்சி முகாம்

சினிமா உதவி இயக்குநர்கள், ஒலி, ஒளிப்பதிவு உதவியாளர்கள், உதவி இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், லைட்மேன்கள், கலை இயக்குநர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஆடை வடிமைப்பாளர்கள், டப்பிங் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழுடன் கூடிய பயிற்சி முகாமை வரும் நவம்பரில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த முகாம் மூன்று நாள்களுக்கு நடத்தப்படும். திரைப்படத் துறையில் அங்கம் வகிக்கும் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தயாரான 'விஸ்வரூபம்' படம் வெளியான பிறகே அந்தத் துறையின் மதிப்பை திரைப்படத் துறை புரிந்து கொள்ளத் தொடங்கியது.

ஃபிக்கியின் ஊடகம், பொழுதுபோக்குத் திறன்களுக்கான கவுன்சில் மூலம் ஏற்கெனவே பல்வேறு திறன்சார் பயிற்சி வகுப்புகளுக்கு சுமார் 5,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால், திறன்சார் தொழிலாளர்கள் 11.25 லட்சம் பேரை தயார்படுத்துவதே எங்களது இலக்கு. இதன் மூலம் ஊடகம், பொழுதுபோக்குத் துறையில் சுமார் 74 பிரிவுகளில் காணப்படும் வேலைவாய்ப்பை பூர்த்தி செய்ய முடியும்," என்றார் கமல்ஹாசன்.

 

ஸ்ட்ராபெரி விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: பா விஜய், சமுத்திரக்கனி, தேவயானி, தம்பி ராமய்யா, ஆவ்னி

Strawberry (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஒளிப்பதிவு: மாறவர்மன்

இசை: தாஜ் நூர்

தயாரிப்பு - இயக்கம்: பா விஜய்

பாடலாசிரியராக அறிமுகமாகி, நடிகராக மாறி இப்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்திருக்கும் பா விஜய்க்கு முதலில் வாழ்த்துகள்.

இயக்குநராக முதல் படம்... சில தடுமாற்றங்கள் தெரிந்தாலும் துணிச்சலான ஒரு கருத்தை, பலரும் சொல்லத் தடுமாறும் விஷயத்தை கையிலெடுத்ததற்காக பாராட்டுகள்.

தினம்தோறும் செய்தித் தாள்களில் பள்ளிக் குழந்தைகளின் பரிதாப மரணங்களைப் படித்துவிட்டுக் கடக்கிறோம். அந்த இழப்பு நமக்கு ஏற்படாத வரையில் அது வெறும் செய்திதானே! அந்த குழந்தைகள் இறப்பு வெறும் விபத்தால் நேர்ந்த மரணங்களா... அல்லது அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலைகளா...? யாரும் யோசிப்பதில்லை, குழந்தையைப் பறிகொடுத்தவர்களைத் தவிர!

Strawberry movie Review

காலையில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு தேவதை மாதிரி பள்ளிக்குச் சென்ற ஒரு குழந்தை, மாலையில் கொடூரமாக சிதைந்து பொட்டலமாக வீடுவந்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு இழப்பைச் சந்தித்த பெற்றோரின் மனவலி, போராட்டம் ஒரு பக்கம், அந்த குழந்தை ஆவியாக வந்து தன் மரணத்துக்குக் காரணமானவனை பழிவாங்குவது சினிமாத்தனமான மறுபக்கம் என்று போகிறது ஸ்ட்ராபெரியின் கதை.

ஆவி, பழி வாங்கல் சமாச்சாரமின்றி இந்தக் கதையைச் சொல்லியிருந்தால் இன்னும் நல்ல படமாக வந்திருக்கும். ஆனால் வசூல், இன்றைய சினிமா ட்ரெண்ட் போன்றவற்றை மனதில் வைத்து இதனை ஒரு பேய்ப் படமாகக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது பா விஜய்.

Strawberry movie Review

ஆரம்ப காட்சிகள் சற்று மெதுவாகத்தான் நகர்கின்றன. ஆவியாக உடன் சுற்றும் குழந்தையுடன் தியேட்டருக்குப் போய் பேய்ப் படம் பார்ப்பது சுவாரஸ்யமான காட்சி.

பள்ளி நிர்வாகியை பழி தீர்க்க பள்ளிக் கூடத்தின் மீது பேய் நடந்தபடி திட்டமிடுவது போன்ற காட்சிகளை இன்னும் சிந்தித்து மெச்சூர்டாக உருவாக்கியிருக்கலாம். அந்த குழந்தைப் பேயின் பேச்சு கொஞ்சம் ஓவர்... சற்றே குறைத்திருக்கலாம்!

Strawberry movie Review

பா விஜய் இதில் டாக்சி ட்ரைவராக வருகிறார். வேஷம் ஓகே என்றாலும் நடிப்பை இன்னும் கொஞ்சம் 'பட்டி' பார்த்திருக்கலாம். சில காட்சிகளில் செயற்கைத்தனம். வசனகர்த்தாவும் இவர்தான். சமயத்தில் வசனம் கவிதையாகவே வருகிறது... பழக்க தோசத்தை அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாதே!

ஆவிகளுடன் பேசும் நாயகியாக வரும் ஆவ்னியை கவர்ச்சிப் பதுமையாக நடமாட விட்டிருக்கிறார்கள்.

Strawberry movie Review

சமுத்திரக்கனி வழக்கம்போல பிரமாதமான நடிப்பைத் தந்திருக்கிறார். 200 சீட்டுக்கு எதுக்குடா 20000 அப்ளிகேஷன் விக்கிறீங்க? அரசுப் பள்ளியில் படிச்சா என்னடா கெட்டுப் போச்சு? என்றெல்லாம் அவர் பேசும் இடங்களில் கனியின் நடிப்பும் பா விஜய்யின் வசனமும் டாப்!

தேவயானி, தம்பி ராமய்யா, ஜோ மல்லூரி தங்கள் வேடங்களை உணர்ந்து நடித்துள்ளனர். ஜோ மல்லூரியின் ஒரிஜினல் குரலே பிரமாதமாக இருக்கும். டப்பிங் ரொம்பவே படுத்துகிறது. அந்த வில்லன் நடிப்பு ரொம்பவே செயற்கை.

Strawberry movie Review

தாஜ் நூரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசை படத்தை வேகப்படுத்திக் காட்டுகிறது.

பல படைப்பாளிகளும் மறந்துவிட்ட, ஆனால் சமூகத்தின் பெரும் நோயாக தனியார் பள்ளிகளின் கொள்ளையை, அலட்சியக் கொலைகளைப் படமாக எடுத்த ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்!

 

முகமது நபிகள் பற்றிய படம்: ஏ ஆர் ரஹ்மான் & ஈரான் பட இயக்குநருக்கு எதிராக ஃபத்வா!

மும்பை: முகமத் என்ற பெயரில் முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி மற்றும் அந்தப் படத்துக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் ஆகியோகுக்கு ஃபத்வா விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு அமைப்பான ரஸாக் அகாடமி இந்த ஃபத்வாவை அறிவித்துள்ளது.

Fatwa against AR Rahman, Majid Majidi

மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத் - மெஸஞ்சர் ஆப் காட் படம் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அறிவித்துள்ள இந்த அமைப்பு, எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது என்று அறிவித்துள்ளது.

இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதமும் எழுதியுள்ளது இந்த அமைப்பு.

அந்த ஃபத்வாவில், "நபிகளின் வார்த்தைதான் அனைத்தும். அவரின் உருவமோ, காட்சியோ வைத்திருக்கக் கூடாது என்கிறது இஸ்லாத். அதற்கு எதிரானது இந்தப் படம்.

இஸ்லாத்தை கேலி செய்யும் விதத்தில் உள்ள இந்தப் படத்தில் தொழில்முறை முஸ்லிம் கலைஞர்களும், பிற மதக் கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர்.

இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு படத்தில் பணியாற்றியதன் மூலம் மஜித் மஜிதியும், ஏ ஆர் ரஹ்மானும் தெரிந்தே இஸ்லாத்தின் சட்டங்களை மீறியிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் கல்மாவை மீண்டும் படிக்க வேண்டும். தங்களின் திருமணத்தை மீண்டும் நடத்தி அவர்கள் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

என்னோட "பர்த்டே" இன்னைக்கு இல்ல.... வாழ்த்துக்களுக்கு மறுப்பு தெரிவித்த "அஞ்சலி"

சென்னை: இன்று நடிகை அஞ்சலியின் பிறந்தநாள் என்று ஊரே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் எனது பிறந்தநாள் இன்று கிடையாது என்று வாழ்த்தியவர்களுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.

என்ன குழப்பமிது என்று பார்த்தால் அஞ்சலி சொல்வது உண்மைதான் அவரின் உண்மையான பிறந்தநாள் ஜூன் 16 ம் தேதிதான். ஆனால் பலரும் இன்று தான் அவரின் பிறந்த நாள் என்று சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட அஞ்சலி " இன்று என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் உங்கள் வாழ்த்துக்களை ஜூன் 16 ம் தேதியன்று எனக்கு அனுப்பி வையுங்கள். ஏனென்றால் அன்று தான் எனது உண்மையான பிறந்தநாள்" என்று கூறியிருக்கிறார்.

அஞ்சலி தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கிறார், விரைவில் அஞ்சலியின் நடிப்பில் மாப்ள சிங்கம் திரைப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அட பிறந்தநாளிலும் குழப்பமா?