‘களை’ எடுக்கும் வேலையில் இறங்கிய ‘செல்ல’ வில்லன் நடிகர்

ஹாய் செல்லம் என்றாலே இவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு வில்லன், குணச்சித்திரம் என கல்ந்து கட்டி விளையாடி வருபவர்.

ஒவ்வொரு நட்சத்திரமும் நடிப்போடு சேர்த்து சைடு பிசினச் பார்த்து வரும் வேளையில், நடிகர் கொஞ்சம் வித்தியாசமாக விவசாயப் பணியில் இறங்கி விட்டாராம்.

புதிதாக வாங்கிய ட்ராக்டர் சகிதமாக களை எடுக்கும் பணியில் இறங்கி விடுகிறாராம் தனது ஓய்வு வேளைகளில். இவ்வளவுக்கும் சார் இப்போ தயாரிப்பிலும், நடிப்புலும் பிஸியோ பிஸி.

ஆனாலும், விவசாயம் செய்யும் போது மிகவும் சந்தோஷமாக உணர்கிறாராம் இந்த வில்லன்.

 

அட... தமிழ்நாட்டை விட்டு 'திகாரு'க்குப் போயிட்டார் பேரரசு!

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, தர்மபுரி என ஊர்களின் பெயரில் படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் பேரரசு, அடுத்து தன் படத்துக்கு வைத்திருக்கும் தலைப்பு 'திகார்'!

இந்தப் படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்த திகாரை உருவாக்கப் போகிறாராம் பேரரசு.

காட்சன் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பேரரசுவின் வழக்கமான ஹீரோக்கள் யாருமில்லை. கதாநாயகனாக முகுந்தன் என்பவர் அறிமுகமாகிறார். கதாநயாகியாக மும்பை மாடல் அழகி அகன்ஷா பூரி அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக கார்த்திகேயன். வில்லன் கூட மும்பை இறக்குமதிதான். பெயர் கேசி சங்கர்.

அட... தமிழ்நாட்டை விட்டு 'திகாரு'க்குப் போயிட்டார் பேரரசு!

சந்திரமுகி, சிவகாசி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சேகர் வி. ஜோசப் இந்தப் படத்தின் கேமராவைக் கையாள்கிறார். .

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் பேரரசு. பாடல்களையும் அவரே எழுதுகிறார். தானே இசையமைக்கவும் போவதாக சொல்லிக் கொண்டிருந்தவர், என்ன நினைத்தாரோ... இசைக்கு மட்டும் ஷபீர் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார்!

படம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் கேட்டோம்.

"ஒரு காலத்தில் இந்த நாட்டையே கலக்கிக் கொண்டிருந்த மிகப் பெரிய தாதா அலெக்ஸண்டரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜோர்தன், இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் 'திகார்'.

ஆக்ஷன் படம் என்றால் சாதாரணம். இது அதிரடி ஆக்ஷன் படம். இதற்காக பிலிம் சிட்டியில் 25 லட்ச ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு முகுந்தன் - ரியாஸ்கான் மோதும் பாக்சிங் சண்டைக்காட்சி படமானது.

படப்பிடிப்பு துபாய், மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

வழக்கமான என் பாணி படம் இல்லை ‘திகார்'. பரபரப்பான ஆக்ஷன் படம்," என்கிறார் பேரரசு.

 

ஸ்ரீப்ரியா இயக்கும் 'மாலினி 22 பாளையங்கோட்டை'

சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா தான் இயக்கும் புதிய படத்துக்கு மாலினி 22 பாளையங்கோட்டை என்று தலைப்பிட்டுள்ளார். இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது.

எழுபதுகளின் பிற்பகுதியில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ஸ்ரீப்ரியா. ரஜினியுடன் அதிகப் படங்களில் நடித்தவர்களில் ஒருவர். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில படங்களில் நடித்த ராஜ்குமாரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். ஆனாலும் அவ்வப்போது படங்களில் தலை காட்டி வந்த ஸ்ரீப்ரியா, இப்போது படம் இயக்குகிறார்.

இந்தப் படத்தை அவரது கணவர் ராஜ்குமாரே தயாரிக்கிறார்.

ஸ்ரீப்ரியா இயக்கும் 'மாலினி 22 பாளையங்கோட்டை'

மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய '22 பீமேல் கோட்டயம்' என்ற படத்தைத்தான் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார். இப்படத்திற்கு தமிழில் 'மாலினி 22 பாளையங்கோட்டை' என்று பெயரிட்டுள்ளர்.

இதில் கதாநாயகியாக நித்யா மேனன், புதுமுக நாயகனாக கிரிஷ் இணைந்து நடிக்க மற்றும் கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தபடத்தின் படப்பிடிப்பு வரும் 15-ந்தேதி தொடங்க உள்ளது.

இப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று வாணிமகாலில் நடந்தது. படம் குறித்து ஸ்ரீப்ரியா கூறுகையில், "இந்தப் படம் மலையாளத்தில் பார்த்தபோது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் ரீமேக் செய்கிறேன்.

அதனால்தான் எல்லா மொழிகளிலும் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் கணவர் தயாரிக்க நான் இயக்குகிறேன். நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். புதுமுகம் கிரீஷ் ஹீரோ. நித்யா மேனன் கண்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு நடிகைக்கு கண்கள் பெரிதாக இருந்தாலே பாதி நடிப்பு முடிந்துவிட்டது என நினைப்பவள் நான்...,'' என்றார்.

 

திருமணம் வேண்டாம்... ஆனா.. குழந்தை பெத்துகணும்! - ஸ்ருதி ஹாஸன்

திருமணம் வேண்டாம்... ஆனா.. குழந்தை பெத்துகணும்! - ஸ்ருதி ஹாஸன்

சென்னை: திருமணம் செய்து கொள்ளப் பிடிக்கவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்று நடிகை ஸ்ருதிஹாஸன் பேட்டி கொடுத்து அதிர வைத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாஸனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாஸன் சமீபத்தில் திருமணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், "எனது சுதந்திரத்தை எதற்காகவும் யாருக்காவும் இழக்க விரும்பவில்லை. நல்ல, அன்பான ஆண் துணை கிடைப்பது கடினமாக உள்ளது. என்னை என் போக்கில் ஏற்கும் ஆண் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான். உறவு என்ற பெயரில் என் சுதந்திரத்தை யாரும் களவாடிவிடக் கூடாது. இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை.

எனக்கு திருமணத்திலோ, கேர்ள் பிரண்ட் போன்ற உறவுகளிலோ நம்பிக்கையில்லை. ஆனால் குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும். குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது. ஏன் என்று காரணம் புரியவில்லை," என்றார்.

 

தற்கொலைக்கு முன் ஜியா மது அருந்தியிருந்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்

மும்பை: சென்ற மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஹிந்தி நடிகை ஜியாகான், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக மது அருந்தியது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

காதல் தோல்வியால், ஜூன் 3ம் தேதி மும்பையில் ஜூஹு அப்பார்ட்மெண்டில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் 25 வயது அழகு நடிகையான ஜியாகான்.

தற்கொலைக்கு முன் ஜியா மது அருந்தியிருந்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்

ஜியாவின் தற்கொலைக்குப் பிறகு அவர் கைப்பட எழுதியதாக ஆறு பக்க கடிதம் ஒன்றை வீட்டில் கண்டெடுத்த அவரது தாயார், பின்னர் அதனை போலீஸ் வசம் ஒப்படைத்தார். அதில் நடிகர் சூரஜ் உடனான தனது காதல் தோல்வியை விவரித்திருந்தார் ஜியா.

அக்கடிதத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சூரஜ் கிட்டத்தட்ட 21 நாட்களை சிறையில் கழித்தபின்னர், சென்ற வாரம் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், போலீஸ் வசம் சமர்ப்பிக்கப் பட்டுள்ள ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜியா அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.