ஸ்லிம் அன் டிரிம் ஆன கருத்தம்மா!

இயக்குநர் சிகரத்தினால் கருத்தம்மாவில் அறிமுகமான அந்த நடிகை முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றவர்.

கதாநாயகியாக சில படங்களில் மட்டுமே நடித்த அந்த நாயகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தபோதும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். வெளிச்ச நடிகரின் படத்தில் அம்மாவாக வந்து, உருகும் நடிப்பால் உள்ளம் தொட்டவர். 60 திரைப்படங்கள், 50 தொலைக்காட்சித்தொடர்களில் நடித்த அந்த திருமணத்துக்குப்பின்னர் குடும்பப் பராமரிப்பில் முழு கவனம் செலுத்தியதால் உடலை கவனிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் உடல் எடை இருமடங்கு அதிகமாகிவிட்டது.

சூரிய தொலைக்காட்சியில் ரம்யமான நடிகையின் சீரியலில் நடித்த அந்த நடிகையின் கதாபாத்திரத்தை பாதியிலேயே முடித்து விட்டார் ரம்யம். இதனால் சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்த அந்த நடிகை, தற்போது முழு கவனம் செலுத்தி உடல் எடையைக் குறைத்துள்ளாராம். அம்மாவாக, அக்காவாக, அண்ணியாக கோடம்பாக்கத்தில் வலம் வருவதற்கு தயாராக இருக்கிறார்.

இவரது முயற்சிக்கு பலன் கிடைக்காமல் இல்லை கரகாட்ட பட இயக்குநரின் தயாரிப்பில், களவாணி பட இயக்கநர் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறாராம் நடிகை. ஹீரோவுக்கு அம்மாவாக, உள்ளம் தொடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் இந்தப்படம் வெளிவந்தபிறகு கோடம்பாக்கத்தின் கவனம் தன் பக்கம் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறார் கருத்தம்மா.

 

2 குழந்தைகளுக்கு அப்பா, அம்மாவாக நடிக்கும் சூர்யாவும், அனுஷ்காவும்!

சென்னை: மாசு படத்தில் சொதப்பிய சூர்யா அடுத்து, சிங்கம் 3 யில் இழந்ததை மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அஞ்சான் மற்றும் மாசு இரண்டு படங்களும் கவிழ்த்ததில் சூர்யாவின் மார்க்கெட் சற்றே சரிந்துள்ளது, இந்த சரிவை சரிசெய்யும் நோக்கத்துடன் அடுத்து ஹரியுடன் கைகோர்க்கிறார் சூர்யா.

Singham 3 Update News

சிங்கம் மற்றும் சிங்கம் 2 வில் நாயகியாக நடித்த அனுஷ்கா சிங்கம் 3 படத்திலும் சூர்யாவின் ஜோடியாக நடிக்கிறார்.

முதலில் படத்தில் அனுஷ்கா இல்லை என்று கூறியவர்கள் தற்போது படத்தில் சூர்யாவின் மனைவியாக அனுஷ்காவை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.

சூர்யா - அனுஷ்கா இருவரும் 2 குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சிங்கம் 2 வில் ஹன்சிகாவை ஏற்கனவே கொன்று விட்டதால் இந்தப் படத்தில் வேறு ஒரு முன்னணி நடிகையை, இரண்டாவது நாயகியாக நடிக்க வைப்பதற்கு பேச்சு வார்த்தையில் இறங்கி இருக்கின்றனராம் படக்குழுவினர்.

 

இணையத்தில் வைரலாகும் “ காலெண்டர் கேர்ள்ஸ்” டீசர்- மகிழ்ச்சியில் இயக்குநர் மதூர் பந்தர்கர்

சென்னை: இந்தி இயக்குனரும் 3 முறை தேசிய விருது பெற்றவருமான மதூர் பந்தர்கர், சமீபத்தில் வெளியிட்ட காலெண்டர் கேர்ள்ஸ் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்கள் மட்டுமல்லாது, நட்சத்திரங்களும் டீசர் நன்றாக இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த மதூர் பந்தர்கர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

5 புதுமுகங்களை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் மதூர். அகன்ஷ்யா புரி, கிரா தத், அவனி மோடி, சதருபா புனே மற்றும் ரூகி சிங் என 5 அழகிகளை வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் படம் காலெண்டர் கேர்ள்ஸ்.

வித்தியாசமான கோணங்கள், மனதைச் சுண்டி இழுக்கக் கூடிய இசை, தெளிவான காட்சிகள் இவற்றுடன் கண்ணுக்கு குளிர்ச்சியான 5 அழகிகளும் சேர்ந்து கொண்டதில் இணையத்தில் வைரலாகி வருகிறது டீசர்.

நேற்று வெளியான படத்தின் டீசர் இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரம் பேரால் பார்த்து ரசிகப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பிரபுதேவா தயாரிக்கும் படத்தில் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி

ரோமியோ ஜூலியட் பெற்ற வெற்றியில், அதே டீமுடன் அடுத்த படம் பண்ணத் தயாராகிவிட்டார் ஜெயம் ரவி. ஆனால் இந்த முறை அவருடன் விஜய் சேதுபதியும் இணைகிறார்.

லஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்து இரு வாரங்களுக்கு முன் வெளியான படம் ரோமியோ ஜூலியட். படக்குழுவே எதிர்ப்பார்க்காத வெற்றி கிடைத்தது.

Jayam Ravi joins with Vijay Sethupathy for Prabhu Deva movie

படம் வெளியானதுமே, இயக்குநர் லஷ்மண் இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் நிச்சயம் கால்ஷீட் தருவேன் என்று ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இதில் ஜெயம் ரவி, விஜய் சேது இணைந்து நடிக்கின்றனர். அந்தப் படத்தை லஷ்மண் இயக்க, இமான் இசையமைக்கிறார். ‘ரோமியோ ஜூலியட்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சௌந்தர்ராஜனே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

கதாநாயகி, இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவிருக்கிறது.

 

பட்டத்து யானையும் கன்றுக்குட்டியும்!

பாபநாசம் படத்தை பட்டத்து யானை என்று வர்ணித்துள்ள விவேக், தனது பாலக்காட்டு மாதன் படத்தை கன்றுக் குட்டி என வர்ணித்து, ஆதரவு கேட்டுள்ளார்.

விவேக் நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படம் இன்று 150 அரங்குகளில் வெளியானது. இதே தேதியில் கமல் ஹாஸனின் பாபநாசம் 400 அரங்குகளில் வெளியாகியுள்ளது.

Vivek narrates himself as Calf

தாங்கள் வெளியீட்டுத் தேதியை அறிவித்து ஒரு மாதம் கழித்து திடீரென கமல் படத்தை அறிவித்து நெருக்கடி ஏற்படுத்தியதாகவும் ஆனாலும் படத்தை திட்டமிட்ட தேதியில்தான் வெளியிடுவோம் என்றும் விவேக் தரப்பில் கூறியிருந்தனர்.

உடனே கமலுக்கு போட்டியாக விவேக் என்று செய்திகள் கிளம்ப, கமலோடு நான் மோதவோ, போட்டி போடவோ இல்லை என்று விவேக் கூறினார்.

இந்த நிலையில் இன்று படம் வெளியானதும் அனைவருக்கும் விவேக் இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்:

"நண்பர்களே! பாபநாசம் வரும் போதே பா.மாதவனும் வருகிறது. யானையின் கால்களுக்கு இடையில் ஒரு கன்றுக்குட்டி போல. இது துணிச்சல் தான். ஆனால் வேறு வழி இல்லை.

பண்டிகை நாட்களில் வரவேண்டிய பட்டத்து யானை திடீரென்று முன் அறிவிப்பின்றி வந்துவிட்டது. இருப்பினும், இது நாள்வரை கொடுத்த ஆதரவை இனியும் கொடுத்து கன்றுக்குட்டியையும் ஆதரிக்க வேண்டுகிறேன். - நடிகர் விவேக்."

-இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

4 மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டிய திரிஷ்யம் 5 வது மொழியிலும் வெற்றி பெறுமா?

சென்னை: மலையாளப் படமான திரிஷ்யம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளிலும் வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழில் இன்று தானே படம் வெளியானது அதற்குள் மாபெரும் வெற்றிப் பட்டியலில் சேர்த்து விட்டீர்களே என்று யாரும் யோசிக்க வேண்டாம்.

4 Languages Get A Huge Success Of

தமிழில் இன்று வெளியாகி இருக்கும் பாபநாசம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், பாபநாசம் திரைப்படத்தையும் வெற்றிப் பட்டியலில் இணைத்துக் கொண்டுளோம்.

நல்ல கதையை எந்த மொழியில் எடுத்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள், என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது திரிஷ்யம்.

தென்னிந்திய மொழிகளில் வெற்றிக் கொடி நாட்டிய திரிஷ்யம், அடுத்து அஜய் தேவ்கன் ஸ்ரேயா நடிப்பில் இந்தியிலும் வெளியாக இருக்கிறது.

இந்தியிலும் படம் வெற்றி பெரும் பட்சத்தில் ஒரு மாபெரும் சாதனையைப் படைத்த படம், என்ற வரிசையில் சமர்த்தாக இணைந்து விடும் திரிஷ்யம்.

திரிஷ்யம் இந்தியிலும் வெற்றி பெறுகிறதா என்று சற்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம் ...

 

நடிகர் கிருஷ்ணாவின் மனைவி உண்மையிலேயே கொடுமைக்காரரா? இணையத்தில் பெரும் ஆதரவு!

நடிகர் கிருஷ்ணா தன் மனைவி ஹேமலதா தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், ரத்தக் காயம் ஏற்படுமளவுக்கு தாக்கிதாகவும் கூறி விவாகரத்து கோரியுள்ளார் அல்லவா?

ஆனால் இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறி, இணையத்தில் ஹேமலதாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Supporting voice for Actor Krishna's wife Hemalatha

குறிப்பாக ஃபேஸ்புக்கில் ஹேமலதாவின் ஆசிரியர் ஒருவர் எழுதியுள்ள பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்தப் பதிவு:

எஸ் என் எஸ் கல்லூரியில் ஆசிரியப் பணியில் இருந்தபோது என்னுடைய மாணவி கைவல்யா என்றழைக்கப்படுகிற ஹேமலதா. கணிப்பொறிப் பயன்பாட்டியலில் பொறியியல் பட்டம் பெற்ற எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்.

அவ்வப்போது ஏழைக் குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்டோர் இல்லங்களுக்குச் சென்று உதவும் மனப்பன்மை கொண்டவர்.

அப்படி ஏதோ ஒரு பொதுநிகழ்வில் அவரைக் கண்ட கழுகு மற்று வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணா எனும் நடிகர் ஹேமலதாவைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியிருக்கிறார். பெரியவர்கள் ஏற்பாட்டில் கோலாகலமாகத் திருமணமும் நடந்தது. நானும் குடும்பத்துடன் அத் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

ஆனால் திடுமென்று ஒரு செய்தி இப்போது செய்தித் தாளில் படித்து அதிர்ந்தேன். கைவல்யா தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கிருஷ்ணா சொல்வதாகவும் வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் வந்த செய்தி அது.

ஆதரவற்றோருக்கு தனது சம்பளத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து உதவி, அவர்களின் மேல் அன்பு செலுத்திவரும் நல்ல பெண் அவர் என்பதை நானறிவேன். என்னையும் அவரையும் தெரிந்த மாணவர்கள் ஆசிரியர்கள் அறிவார்கள்.

கைவல்யாவை மிகவும் அறிந்தவன் என்பதால் உறுதியாகச் சொல்கிறேன், கைவல்யா (எ) ஹேமலதா மீது அவதூறாகப் பரப்பப்படும் செய்தி முழுக்க முழுக்க சதியே.

மீடியாவும் அரசியலும் பணமுள்ள பக்கமே பாயும் என்பதால் நம்மால் முடிந்தவரை அவருக்கு நிம்மதியான வாழ்க்கை திரும்பக் கிடைக்க உதவுவோம்.
நான் கைவல்யா எனும் ஹேமலதா என்ற அன்பு மாணவிக்கு ஆதரவளித்தும் புகழ் மற்றும் பணபலம் நோக்கும் ஊடகத்தின் தன்மையை எதிர்த்தும் கையை உயர்த்துகிறேன்....
நீங்கள்?
பகிருங்கள்.... முடிந்தவரை
நான் கொடுத்துள்ள (கருமையில் I support Kaivalya) படத்தை ஓருசில நாட்கள் அடையாளப் படமாக வைத்துதவுங்கள், மனமிருந்தால்!"

-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

தூங்கா வனத்தை ஜூலையில் முடிக்கத் திட்டமிடும் கமல் – பம்பரமாய்ச் சுழலும் படக்குழுவினர்

சென்னை: உலக நாயகன் கமல் நடிப்பில் இன்று திரைக்கு வரும் பாபநாசம் திரைப்படத்தைத் தொடர்ந்து, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தூங்கா வனம் படத்தின் படப்பிடிப்பை இந்த மாதமே முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பாதி முடிந்து விட்டது, மீதிப் படத்தையும் இந்த மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்ட கமல் தற்போது அதற்காக முழு மூச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

Kamal Haasan's 'Thoongavanam' to Wrap Up in July

கமலின் உதவியாளர் ராஜேஷ் என் செல்வா இயக்கும் இந்தப் படம் ஸ்லீப்லெஸ் என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் ரீமேக் என்று கூறுகின்றனர், இந்த மாதம் ஷூட்டிங்கை முடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்தை டிசம்பர் மாதம் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர்.

தூங்கா வனம் படத்தில் போலீஸ் ஆபிசராக நடிக்கும் கமல், ஒரு இரவில் ஸ்டைலான திரில்லராக மாறுவது போன்ற கதையாம். இதில் கமலின் பார்ட்னராக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறாராம்.

Kamal Haasan's 'Thoongavanam' to Wrap Up in July

படத்தில் நடிகை த்ரிஷாவும் போலீஸ் வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது, பாபநாசம் திரைப்படத்தில் நடித்த ஆஷா சரத், உமா ரியாஸ்கான் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கியமான வேடங்களில் படத்தில் நடிக்கின்றனர்.

உத்தம வில்லன், பாபநாசம் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

 

முத்திரை பதித்து விட்டார் கமல்.. பாபநாசம் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் பாபநாசம் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழிலும் இயக்கியிருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது.

Papanasam  Movie  Fans Review

பாபநாசம் படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர், குறிப்பாக கமலின் நடிப்பை எல்லோரும் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். ரசிகர்களின் பாராட்டுகளைக் கீழே காணலாம்.

ஒரே ஒரு மாற்றம் என்னவெனில் படத்தின் மொழி, மற்றும் நடிகநடிகையர் மட்டும் மாறியிருக்கின்றனர். உலகநாயகன் தனது நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

படம் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டது, கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் என்று கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். கமல் நெல்லைத் தமிழில் பேசியது மட்டுமின்றி, சுயம்புலிங்கமாகவும் மாறி இருக்கிறார், கமலின் நடிப்பு ஆவேசம் என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.

படத்தின் வசனங்கள் நன்றாக இருக்கின்றன, குறிப்பாக ஆஷா சரத் பேசுவது மற்றும் அந்தக் கிளைமாக்ஸ் சூப்பர் என்று கூறியுள்ளார் ஒரு ரசிகர்.

தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து வருகின்றது பாபநாசம் திரைப்படம்.

 

மனிஷா யாதவுக்கு முத்தம் கொடுக்க 36 டேக் வாங்கிய ஜி.வி. பிரகாஷ்

சென்னை: த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் வரும் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க ஜி.வி. பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கியுள்ளார்.

இசையமைப்பாளராக கோலிவுட் வந்த ஜி.வி. பிரகாஷ் தற்போது ஹீரோவாகிவிட்டார். டார்லிங் பேய் படத்தை அடுத்து அவர் நடித்துள்ள படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

G.V. Prakash asks for 36 takes to kiss Manisha Yadav

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் ஜி.வி. பிரகாஷ், மனிஷா யாதவ் இடையேயான முத்தக் காட்சி உள்ளது. அந்த காட்சியில் நடிக்க ஜி.வி. மிகவும் அஞ்சியுள்ளார். அவர் பதற்றம் அடைந்ததால் காட்சி சரியாக வராமல் 36 டேக்குகள் வாங்கியுள்ளார்.

ஹீரோ அத்தனை டேக் வாங்கியபோதிலும் மனிஷா கோபம் அடையாமல் பொறுமையாக அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தாராம். ஒரு வழியாக ஜி.வி. முத்தக் காட்சியை முடித்த பிறகு இயக்குனர் அம்மாடி என்று நிம்மதி பெருமூச்சு விட்டாராம்.

இந்த படத்தில் ப்ரியா ஆனந்த் கௌரவ வேடத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆர்ப்பாட்டமே இல்லாமல் வெளியான கமல் ஹாஸனின் பாபநாசம்!

சமீபத்திய ஆண்டுகளில் முதல் முறையா எந்த ஆர்ப்பாட்டமும் பரபரப்பும் இல்லாமல் கமல் ஹாஸனின் ஒரு படம் வெளியாகிறது என்றால் அது பாபநாசம்தான்.

வழக்கமாக கமல் ஹாஸனின் படங்கள் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் முதல்நாள் காட்சிக்கு அலைமோதுவார்கள். படம் வெளியாகும் அரங்குகளின் முன் கட் அவுட்கள், பேனர்கள், வாண வேடிக்கை என அமர்க்களப்படுத்துவார்கள்.

Papanasam released without big fanfare

ஆனால் இந்த முறை இவையல்லாம் மிஸ்ஸிங். அதுவும் தலைநகர் சென்னையில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் ஆக்ஷன் அல்லது ரொமான்டிக் படமில்லை. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம். இம்மியளவு கூட ஹீரோயிசம் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு சாதாரண மனிதனாக கமல் நடித்திருக்கிறார். பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதாலேயே இப்படி அமைதியாக படத்தை வெளியிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதற்கு முன் மகாநதி படம் கிட்டத்தட்ட இதே சூழலில் வெளியாகி பெரும் வெற்றியும் பாராட்டுகளையும் குவித்தது நினைவிருக்கலாம். அதே வெற்றி இந்தப் படத்துக்கும் கிடைக்கும் என்பதுதான் இப்போதைய நிலவரம்!

 

குடும்பம் குடும்பமாக "பாலக்காட்டுக்குப்" படையெடுக்கும் மக்கள்.. சந்தோஷத்தில் "மாதவன்"!

சென்னை: நடிகர் விவேக் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் மற்றொரு படம் பாலக்காட்டு மாதவன். விவேக்குடன் இணைந்து நடிகை சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா மற்றும் சிங்கமுத்து போன்ற நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

Palakkattu Madhavan – Fans Reviews

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்திருக்கும் பாபநாசம் திரைப்படம் திரில்லர் கலந்த குடும்பப்படமெனில், விவேக்கின் பாலக்காட்டு மாதவன் நகைச்சுவை கலந்த குடும்பப்படமாக வெளிவந்து இருக்கிறது.

படம் நகைச்சுவையுடன் கலந்து நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர்களால் நிரம்பி வழிகின்றன தியேட்டர்கள், என்று சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.

படத்தில் அஜீத்தின் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார் விவேக் என்று சந்தோஷத்துடன் கூறியிருக்கும் ரசிகர்கள், படம் நன்றாக இருக்கிறது குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.

 

புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி.. பெயர்: ''இப்படி பண்றீங்களேம்மா?!''

தூர்தர்சனில் ஒளிபரப்பான வயலும் வாழ்வும் தொடங்கி நேயர் விருப்பம் வரை கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் கிண்டலடிப்பார்கள். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் கிண்டலடித்து ஒளிபரப்பினார்கள். இந்த நிகழ்ச்சி வைரலானது.

இதை வைத்து பாடல்கள் எழுதினார்கள். எழுதப்பட்ட வசனங்கள் வைரலானது. தற்போது புது யுகம் டிவியில் டிவி நிகழ்ச்சிகளை கிண்டலடித்து ‘இப்படி பண்றீங்களேம்மா?' என்ற நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர்.

 'Ippadi Panreengale Ma' on Puthuyugam TV

இந்த நிகழ்ச்சியில் அதிகமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளைத்தான் கிண்டலடிக்க இருக்கின்றனராம். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, சூப்பர் சிங்கர், காபி வித் டிடி ஆகிய நிகழ்ச்சிகளையும், மானாட மயிலாட நிகழ்ச்சியையும் கிண்டலடித்து இருக்கின்றனராம்.

ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அரவிந்தராஜ், விக்னேஷ், சபரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.

 'Ippadi Panreengale Ma' on Puthuyugam TV

பேசாம லட்சுமி ராமகிருஷ்ணனையே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைத்திருக்கலாமே..

 

பாபநாசம் விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிப்பு: கமல் ஹாஸன், கவுதமி, நிவேதா தாமஸ், அருள்தாஸ், கலாபவன் மணி, இளவரசு, ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன்

ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ்

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா

இயக்கம்: ஜீத்து ஜோசப்

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஒரு நல்ல திரைக்கதை... கமலை வைத்துக் கொண்டு அதில் இம்மியளவுக்குக் கூட மாற்றமோ சமரசமோ இல்லாமல் பாபநாசமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் கமல் ஹாஸன், மனைவி கவுதமி, இரு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மகள் ஒரு முறை அகஸ்தியர் மலைக்கு பள்ளிக் கூடம் மூலம் இயற்கை சுற்றுலா செல்கிறார். அப்போது அவரையும் அறியாமல் ஒரு சிக்கலில் மாட்டுகிறார். அது ஒரு கொலையில் போய் முடிகிறது.

Papanasam Review

படிக்காத கமல், இந்த பெரும் சிக்கலிலிருந்து மகளையும் குடும்பத்தையும் எப்படி புத்திசாலித்தனமாகக் காப்பாற்றுகிறார்.. அதுவும் தான் பார்த்த சினிமாக்களின் துணையுடன் என்பதெல்லாம் திரையில் போய்ப் பார்த்து ரசிக்க வேண்டியவை!

கதையும் திரைக்கதையும் மிக அசாதாரணமானது. ரொம்பப் பக்குவமாக காட்சிப்படுத்த வேண்டியது. அதைப் புரிந்து அழகாக ஒத்துழைத்திருக்கிறார் கமல் ஹாஸன்.

பொதுவாக கமல் ஹாஸன் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரத்தை மீறி, ஒரு நடிகர் என்பது தனித்துத் தெரியும். அதை ஒரு விமர்சனமாகவும் அவர் மீது வைப்பார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, அவரது நெல்லை வட்டார வழக்கு தவிர்த்துப் பார்த்தால், எங்கும் கமல் என்ற நடிகர் தெரியவில்லை. சுயம்புலிங்கம்தான் தெரிகிறார். அவர் இத்தனை 'ஸ்ட்ரிக்டாக' நெல்லைத் தமிழைப் பேசியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஒவ்வொரு காட்சியிலும் கமலின் உடல் மொழி அசர வைக்கிறது. குறிப்பாக டிஐஜி அலுவலகத்தில் கமலை அடித்து துவைக்க, வேறு பாத்திரங்கள் பிரதானமாய் வரும்போதும், கமல் தரையில் விழுந்தபடியே கிடப்பார்.

Papanasam Review

அதே காட்சியில் மகள் உண்மையைச் சொல்லிவிடுவாளோ என பதட்டத்தில் பார்வையைத் திருப்ப முயற்சிப்பவர், போலீஸ் கவனிப்பதை உணர்ந்து கண நேரத்தில் சட்டென்று மீண்டும் அப்பாவியாக ஒரு பார்வை பார்ப்பார்.

தழுதழுக்கும் குரலில் உண்மையை நேரடியாகவும் சொல்லாமல், அதே நேரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிகிற மாதிரியும் சொல்லும் அந்த க்ளைமாக்ஸில் கமலுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறார் இயக்குநர்.

கவுதமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். இயல்பாக நடித்திருந்தாலும், அவரது தோற்றத்தில் தெரியும் தளர்ச்சி, மிக முக்கியமான ஒரு காட்சயில் நெருடலைத் தருகிறது.

காவலர்கள் மற்றும் உயரதிகாரிகளாக வரும் அத்தனை பேரும் உண்மையான போலீசாகவே தெரிகிறார்கள். குறிப்பாக அருள்தாஸ். கமலை விசாரிக்க வீட்டுக்கு வரும் அவர், விசாரணை செய்யும் விதம், நிஜ போலீசே தோற்றுவிடும். கலாபவன் மணியும் அபாரம்.

Papanasam Review

டிஐஜியாக வரும் ஆஷா சரத்தும், அவர் கணவராக வரும் ஆனந்த் மகாதேவனும் படத்துக்கு பெரிய பக்கபலம். அருமையான நடிப்பு.

இளவரசு, எம்எஸ் பாஸ்கர், மகள்களாக வரும் நிவேதா தாமஸ், எஸ்தர் அத்தனை பேருமே மனதில் நிற்கிறார்கள்.

இந்தப் படத்தை எதற்காக மூன்று மணி நேரமாகத் தந்தார்கள் என்பது ஒரு பெரிய குறை. படத்தை ரொம்ப நேரம் பார்ப்பது போன்ற உணர்வு வர முக்கிய காரணம் அந்த ஆரம்ப காட்சிகள்தான். படத்தில் முக்கிய நெருடல்.. சாமர்த்தியமாக தடயங்களை மறைத்துவிட்டால் சரியாகிவிடுமா என்பது. அதற்கு கடைசி காட்சியில் கமல் - கவுதமி உரையாடல் மூலம் பதில் சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

ஒளிப்பதிவில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுஜித் வாசுதேவ். பாபநாசமும் மேற்குத் தொடர்ச்சி அடிவார குளிர்காற்றும் உடலையும் மனசையும் தழுவிச் செல்லும் உணர்வைத் தருகின்றன காட்சிகள்.

Papanasam Review

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசையில் சரிகட்டிவிடுகிறார். முதல் பாதியில் வரும் சில காட்சிகளுக்கு கத்தரி போடுவதில் பிடிவாதம் காட்டியிருக்கலாம் எடிட்டர்.

இந்த காலகட்டத்துக்கு நிச்சயம் இப்படிப்பட்ட படங்கள் அவசியம். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!

 

பொம்மலாட்ட நாயகிக்கு டும் டும் டும்

சூரிய தொலைக்காட்சியில் காலை நேரத்தில் பொம்மலாட்டம் டிவி சீரியலை பார்த்தவர்களுக்கு அந்த நாயகியை தெரியாமல் இருக்காது. அழகான அசத்தலான நடிப்பு... ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான தோற்றம் என இல்லத்தரசிகளை கொள்ளை கொண்டவர் நாயகி.

அறிமுகமானது என்னவோ பொம்மலாட்டம் சீரியலில்தான் என்றாலும் பொறுமையான பொறுப்புள்ள மருமகள் இவரைப்போல வரவேண்டும் என்று எத்தனையோ இல்லத்தரசிகளின் ஏக்கமாம்.

குடும்ப பாங்கான தோற்றம் கொண்ட அந்த நாயகிக்கு தற்போது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியுள்ளனராம். ஒரே ஒரு தொடரில்தான் நடித்துக்கொண்டிருக்கும் அந்த நாயகி தற்போதுதான் திருமணத்திற்கு சம்மதம் கூறியுள்ளாராம்.

பொம்மலாட்டம் போல வேறு ஒரு நல்ல சீரியல் கிடைத்தால் நடிப்பது இல்லை எனில் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவது என்ற முடிவோடு இருக்கிறாராம் பொம்மலாட்டம் நாயகி.

நல்லா மாப்பிள்ளையா பாருங்கம்மா... சந்தோஷ் மாதிரி மாப்பிள்ளை பார்த்தால் அப்புறம் திருத்தி சரி பண்ணி நேரம் சரியா போயிரும்...

 

தமிழ்ப் படங்களின் அலையால் தடுமாறுகிறதா - டெர்மினேட்டர் ஜெனிசிஸ்

சென்னை: அர்னால்டின் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படம், தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவே வரவேற்பைப் பெற்றுள்ளது. பாபநாசம் மற்றும் பாலக்காட்டு மாதவன் இரு படங்களும் நன்றாக இருப்பதால், மக்கள் ஹாலிவுட் படங்களை விட்டு தமிழ்ப் படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

முந்தைய பாகங்களை விட படம் நன்றாக வந்திருக்கிறது, அர்னால்டின் நடிப்பில் படம் சூப்பராக உள்ளது என்று ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன. கதை ஒரே கதைதான் வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து இந்த உலகத்தைப் பாதுகாப்பது.

Terminator Genisys – Movie

வழக்கம் போல அந்தக் கடமையை செவ்வனே செய்திருக்கிறார் அர்னால்ட், கடைசியில் இந்த உலகத்தை வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து பாதுகாத்து விட்டார்கள். இன்னொரு டெர்மினேட்டர் படம் புதிதாக எடுக்க மாட்டார்கள் என்று நம்பலாம்.

படத்தில் சிக்கலான உறவுகளைப் பற்றி புதுமையாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் ஆலன் டெய்லர். படத்தைத் தாங்கிப் பிடிப்பது சண்டைக் காட்சிகளும், விஷுவல் எபக்ட்சும் தான் வேறு சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக ஒன்றும் இல்லை.

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படம் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாபநாசம் ரஜினி நடிக்க வேண்டிய படம், ஆனால்...! - இயக்குநர் ஜீத்து ஜோசப்

பாபநாசம் படத்தில் ரஜினிதான் முதலில் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை, என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படம், தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளது.

Why Rajinikanth opted out Papanasam?

ரஜினி லிங்கா படம் நடிக்கும் முன்பே த்ரிஷ்யம் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஜீத்து ஜோசப்பை அழைத்திருந்தார். இருவரும் மீண்டும் படம் பார்த்து, இந்தக் கதையை தமிழில் பண்ணலாம் என்று முடிவு செய்தனர்.

ஆனால் பிறகு அதில் கமல் நடித்தார்.

ஏன் இந்தப் படத்தை ரஜினி பண்ணவில்லை?

ஜீத்து ஜோசப்பிடம் கேட்டபோது, "ரஜினி சாருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடித்துவிட்டது. மோகன்லால் மாதிரி இவருக்கும் பிரமாதமான பாடிலாங்குவேஜ். ரஜினி அந்தப் பாத்திரத்துக்கு வேறு பரிமாணம் கொடுத்திருப்பார். ஆனால் இரண்டு காட்சிகள் எங்கள் இருவருக்குமே நெருடலாக இருந்தன.

ஒன்று அந்தப் பாத்திரத்தை போலீஸ் ஸ்டேஷனில் அடிக்கும் காட்சி. முகத்தில் ஷூவால் மிதிப்பார் ஒரு சாதாரண காவலர். அடுத்து க்ளைமாக்ஸ். இந்த இரண்டையும் ரஜினி ரசிகர்கள் ஏற்பார்களா என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. ரஜினியும் அதை ஒப்புக் கொண்டார்.

எனவே வேறு ஒரு கதையுடன் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். நிச்சயம் அவரை புதிய கதையோடு சந்திப்பேன்," என்றார்.