பஞ்சு அருணாச்சலத்துக்கு கண்ணதாசன் விருது!

பஞ்சு அருணாச்சலத்துக்கு கண்ணதாசன் விருது!

சென்னை: தயாரிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், இயக்குநர் என பல முகங்கள் கொண்ட பஞ்சு அருணாச்சலத்துக்கு கவியரசர் கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.

கவியரசர் கண்ணதாசனின் ஆண்டு விழா வரும் சனிக்கிழமை மாலை சென்னையில் நடக்கிறது. இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் தலைமையிலான கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை 10வது ஆண்டாக இந்த விழாவை நடத்துகிறது.

விழாவை டாக்டர் குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

எம்எஸ் விஸ்வநாதன் வரவேற்றுப் பேசுகிறார். தயாரிப்பாளர் எம் சரவணன், நல்லி குப்புசாமி செட்டியார், எம் முரளி ஆகியோர் விருந்தினர்களை வரவேற்று மரியாதை செய்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், இயக்குநர் என பல முகங்கள் கொண்டவரும் கவியரசரின் நெருங்கிய உறவினருமான பஞ்சு அருணாச்சலத்துக்கு கவியரசர் விருது வழங்கப்படுகிறது. அரசு நாச்சியப்பன் அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது பெறும் இந்த இருவரையும் அறிமுகப்படுத்திப் பேசுகிறார் இயக்குநர் எஸ்பி முத்துராமன்.

விருதுகளை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார் தமிழறிஞர் அவ்வை நடராஜன்.

தமிழருவி மணியன் சிறப்புரையாற்றுகிறார்.

ஏசி சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

 

கவுதம் மேனனிடம் வாங்கிய அட்வான்ஸைத்தான் திருப்பித் தந்தேன்- சூர்யா விளக்கம்!

கவுதம் மேனனிடம் வாங்கிய அட்வான்ஸைத்தான் திருப்பித் தந்தேன்- சூர்யா விளக்கம்!

கவுதம் மேனனிடம் துருவ நட்சத்திரம் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையான ரூ 5 கோடியை அவரிடமே திருப்பித் தந்தார் சூர்யா.

கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பதாக இருந்தார் சூர்யா. ஆனால் கதை விஷயத்தில் அவருக்கும் கவுதம் மேனனுக்கும் ஒத்துப் போகாததால், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சூர்யா சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

இந்த நிலையில் கவுதம் மேனனிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிட்டார். ஆனால் அவர் அட்வான்ஸ் தொகையுடன் கூடுதலாக பெரும் தொகையைத் தந்ததாக வெளியில் தகவல் பரவியது.

இதனையறிந்த சூர்யா தரப்பு, "வாங்கிய முன்பணத்தைத் தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சூர்யா, கவுதம் மேனனை வீட்டுக்கே வரவழைத்து அந்தத் தொகையை முழுவதுமாகக் கொடுத்துவிட்டார். இத்தனைக்கும் கவுதம் மேனனுக்காக காத்திருந்ததில் அவருக்கு பல கோடி ரூபாய் இழப்புதான்.

ஆனால் அட்வான்ஸ் தொகைக்கு மேல் கூடுதலாக அவர் 5 கோடி கொடுத்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை. அதுபோன்ற பொய்யான பெருமைகளை சூர்யா என்றுமே விரும்பியதுமில்லை. உண்மை வெளியில் தெரிந்தால் போதும்," என்றார்கள்.

 

வாட்ச்மேன் மகளுக்கு மூளைக் காய்ச்சல்: மருத்துவ செலவை ஏற்ற நடிகர் சுனில் ஷெட்டி

வாட்ச்மேன் மகளுக்கு மூளைக் காய்ச்சல்: மருத்துவ செலவை ஏற்ற நடிகர் சுனில் ஷெட்டி

கடிமா: தனது வீட்டு வாட்ச்மேனின் மகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அறிந்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மருத்துவ செலவை தானே ஏற்றார்.

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மும்பை வீட்டில் இரவு நேரத்தில் வாட்ச்மேனாக இருப்பவரின் 12 வயது மகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது. மருத்துவ செலவை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று அவர் கவலையில் இருந்தார். வாட்ச்மேனை அழைத்து அவர் ஏன் கவலையாக காணப்படுகிறார் என்பதை கேட்டார் சுனில்.

அவர் தனது மகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கடிமாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தார். உடனே சுனில் மருத்துவச் செலவை தானே ஏற்பதாக தெரிவித்தார்.

டெல்லியில் தனக்கு தெரிந்த நபர் மூலம் கடிமாவில் உள்ள மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரூ.50,000 அனுப்பி வைத்தார். மேலும் எவ்வளவு செலவானாலும் சரி சிறுமியின் உயிர் தான் முக்கியம் என்று சுனில் தெரிவித்ததாக வாட்ச்மேனின் மனைவி துர்கா தேவி தெரிவித்துள்ளார்.

தக்க சமயத்தில் உதவிய சுனிலுக்கு துர்கா தேவி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

வணக்கம் சென்னை - விமர்சனம்

எஸ் ஷங்கர்

நடிப்பு: சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்
தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் மூவீஸ்
இயக்கம்: கிருத்திகா உதயநிதி


கையில் காசிருந்தால் யாரிடமும் உதவியாளராக இருந்து படம் இயக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை... நான்கைந்து படங்களை சொந்தமாகவே எடுத்து ஒத்திகைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் காலமிது.

பெரிய தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவின் முதல் படம். முதல் பாராவில் சொன்ன வரையறையை மீறாத அளவுக்குதான் படமும் வந்திருக்கிறது.

வணக்கம் சென்னை - விமர்சனம்

லண்டன் பெண்ணான ப்ரியா ஆனந்துக்கு புகைப்பட பைத்தியம். மொத்த தமிழகத்தையே புகைப்பட வடிவில் சர்வதேச கண்காட்சியில் வைக்க ஆசைப்படுகிறார். சென்னை வருகிறார். தங்க வீடு பார்க்கிறார்.

அதே நேரம் வேலை தேடி சென்னை வரும் சிவாவும் தனக்கென ஒரு வீடு தேடுகிறார். ஒரு புரோக்கர் செய்த வேலையால் இருவரும் ஒரே வீட்டில் தங்கி, கணவன் மனைவி என பொய் சொல்ல நேர்கிறது. அப்புறமென்ன.. க்ளைமாக்ஸ் என்னவாக இருக்கும் எனப் புரிகிறதல்லவா!

எழுபதுகள், எண்பதுகளில் இந்தி, தமிழ்ப் படங்களுக்கு இந்த மாதிரி கதைகள் புதுசாக இருந்தது. இன்றைக்கு? கதைதான் பழசென்றால் காட்சிகளிலும் வௌவால் வாடை..

வணக்கம் சென்னை - விமர்சனம்

ஒவ்வொரு காட்சியிலும் தனக்கு இது முதல் படம் என்பதற்கான அடையாளத்தை சுலபத்தில் கண்டுபிடிக்க வைக்கிறார் கிருத்திகா.

ஆணென்ன பெண்ணென்ன... திறமைக்குதான் சினிமாவில், அதுவும் இயக்குநர்கள் உலகில் இடம் எனும்போது, பெண் இயக்குநர் என்பதற்காக இந்த மாதிரி படங்களை சகித்துக் கொள்ள வேண்டியதில்லை!

சிவா.. வசன உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் என எல்லாவற்றிலும் அதே சென்னை 28 இளைஞனாகவே இருக்கிறார். தனக்கென தனி பாணி வேண்டாம்... அட்லீஸ்ட் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ற மாதிரியாகவாவது மாறணுமே.. ம்ஹூம்... எல்லா படத்திலும் அவர் நிஜ மிர்ச்சி சிவாவாகவே இருக்கிறார். இனி படங்களில் இவர் பாத்திரத்துக்கு சிவா என்ற நிஜப் பெயரை மட்டுமே பயன்படுத்தலாம்!

ஒரு ஹீரோயின் என்ற வகையில் ப்ரியா ஆனந்துக்கு இது இன்னொரு படம். அவரது அழகு ஓகே... நடிப்பு பரவாயில்லை. படம் ப்ரியாவுக்கு உதவுகிறதோ இல்லையோ... படத்தின் சில ப்ளஸ்களில் அவரும் ஒருவர்.

வணக்கம் சென்னை - விமர்சனம்

படத்துக்கு சின்ன ஆறுதல், கிட்டத்தட்ட பாதிப் படத்துக்குப் பிறகு வரும் சந்தானம். அவரது ஒற்றைவரி காமெடி வசனங்கள், ஆலையில்லா ஊரில் இலுப்பை மாதிரி ஆறுதல் தருகின்றன.

ஹீரோயினின் அப்பா, அந்த ஆன்டி எல்லாருமே மகா எரிச்சல்படுத்துகின்றனர். திரைக்கதை வசதிக்கேற்ப, அவ்வளவு பெரிய வீட்டில் ஒரே பாத்ரூம் மட்டும் வைத்து அவஸ்தைப்படுகிறார்கள், படுத்துகிறார்கள். க்ளைமாக்ஸை ஏன் இப்படி இழுத்தார் இயக்குநர் என்று புரியவில்லை.

அனிருத்தின் இசையில் தண்டம், முண்டம், கண்டம், மொக்கை, பொக்கை என்று இஷ்டத்துக்கும் வரிகள்.. இடையில் 'பாட்ஷா நான்தான்' என்று இரு வார்த்தைகள் போட்டு, ரஜினி டயலாக்குகளை ஓடவிடுகிறார்கள். இதெல்லாம் அவருக்குப் பெருமையான விஷயமில்ல தம்பி...

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் அந்த மலைகிராம வீடு அழகு.

ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும், தெளிவான திரைக்கதையும், அதை திரையில் பிழையின்றி காட்சிப்படுத்தும் வித்தையும் அவசியம். அதற்கு கிருத்திகா குறைந்தது இன்னொரு படமாவது எடுக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது!

 

ரகசிய திருமணமா...? அதெல்லாம் இல்லீங்க - மறுக்கும் சமந்தா

சென்னை: தனக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டதாக வந்த செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நடிகை சமந்தா.

சித்தார்த்துக்கும், சமந்தாவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.

இருவரும் கோயில்களில் ஜோடியாக பூஜை செய்யும் படங்களும் அடிக்கடி வெளியாகின்றன.

ரகசிய திருமணமா...? அதெல்லாம் இல்லீங்க - மறுக்கும் சமந்தா

ஆனால் இதையெல்லாம் மறுக்கிறார் சமந்தா.

அவர் கூறுகையில், "என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய வதந்திகள் வருகின்றன. எனக்கு திருமணமாகி, தனிக்குடித்தனம் நடத்துவதாகவெல்லாம் கூறுகிறார்கள்.

இது உண்மையல்ல. நான் ஏன் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

என் திருமணம் இப்போது இல்லை. ஆனால் எப்போது நடந்தாலும் வெளிப்படையாகவே நடக்கும்.

அடுத்த ஆண்டு முழுவதையும் தமிழ்ப் படங்களுக்குதான் ஒதுக்கியுள்ளேன். என் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். நல்ல கதையோடு வருபவர்களிடம் சம்பளம் பற்றிக் கூட கவலைப்படாமல் கால்ஷீட் தரத் தயாராக உள்ளேன்," என்றார்.

 

கிருத்திகா உதயநிதியின் வணக்கம் சென்னைக்கு வரிவிலக்கு கொடுத்த அதிகாரி மாற்றம்!

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் உருவாகியுள்ள வணக்கம் சென்னை படத்துக்கு வரிவிலக்கு கொடுத்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வணக்கம் சென்னை படம் வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தில் சிவா, பிரியா ஆனந்த் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கிருத்திகா உதயநிதியின் வணக்கம் சென்னைக்கு வரிவிலக்கு கொடுத்த அதிகாரி மாற்றம்!

இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. இதற்கு முன்னதாக ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் நீர்ப்பறவை படங்களுக்கும் இது போன்ற சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "எங்கள் படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். வரி விலக்கு அளிக்கலாம் தொடர்பாக கையெழுத்திட்ட அதிகாரி ஒருவர் இடமாறுதலுக்குள்ளானார்.

அந்த அதிகாரி வணக்கம் சென்னை படத்திற்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டதற்காக இட மாறுதலுக்கு உள்ளாகி இருப்பதற்காக நாங்கள் மிக வருத்தப்படுகிறோம்.

கிருத்திகா உதயநிதியின் வணக்கம் சென்னைக்கு வரிவிலக்கு கொடுத்த அதிகாரி மாற்றம்!

எனினும் அரசின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் நான் ஓயப்போவதில்லை. தமிழ் சினிமாவின் 100-வது வருடத்தை கொண்டாடி வருகிறோம். கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் நீதிமன்றத்திற்கு செல்லும். நல்லதே நடக்கும் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

வரி விலக்கு இல்லாமல்தான் இப்போது வணக்கம் சென்னை படம் வெளியாகியுள்ளது.

 

இளம் படைப்பாளிகள் மதுவுக்கு அடிமையாகக் கூடாது- வைரமுத்து

சென்னை: இளம் படைப்பாளிகள் மதுவுக்கு அடிமையாகக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

பாண்டிய நாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "சுசீந்திரனின் நான் மகான் அல்ல திரைப்படம் பார்த்து வியந்தேன். அதன்பிறகு அழகர்சாமியின் குதிரை படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தபோது, அதை பார்த்து நான் பிரமித்தேன். ஒரு நட்சத்திர அந்தஸ்துடன் இருக்கும் கலைஞர்களை வைத்து படம் எடுத்து தன்னை நிரூபித்த சுசீந்திரன், அடுத்த படத்தில் புதுமுகங்களை வைத்து படம் எடுத்திருந்தார். அதற்கு ஒரு தனி துணிச்சல் வேண்டும்.

இளம் படைப்பாளிகள் மதுவுக்கு அடிமையாகக் கூடாது- வைரமுத்து

விஷாலின் முதல் படமான செல்லமே படத்திற்கு நான் பாட்டெழுதினேன். டி.இமானின் முதல் படமான தமிழன் திரைப்படத்திற்கும் நான் பாட்டெழுதினேன். இயக்குனர் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் மாதிரி இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அது எனக்குப் பெருமை.

ஆனால் சுசீந்திரன் போன்ற இன்றைய இளம் இயக்குனர்களுடன் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சி. இமான், இசையில் வெற்றியடைந்துவிட்டதாக அனைவரும் பேசினார்கள். இன்று இமானின் பாடல்கள்தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கின்றன. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இம்மானின் ‘எளிமையான மெட்டு'. இரண்டாவது நீண்ட நாட்கள் கழித்து இமான் இசையமைக்கும் பாடல்களில்தான் சுத்தமான தமிழ் கேட்கிறது.

நேற்று இரவு சீனு ராமசாமி தொலைபேசியில் அழைத்து 'என்னுடைய கெட்ட பழக்கங்களையெல்லாம் நான் விட்டுட்டேன்' என்றார்.

நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இளைய இயக்குனர்களிடம் அபார திறமையிருக்கிறது. அவர்கள் ஒழுங்காக இருந்தால் அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

சீனு ராமசாமி மதுரையிலிருந்து வந்தவர். நான அவரிடம் 'மது' மதுரையில் மட்டும் இருக்கட்டும் உங்களுக்கு வேண்டாம்,' என்றேன்.. அவர் சரி என்றார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி," என்றார்.