ரஜினி சொன்ன கதைகள்: நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்!

உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் திருவிழாவான ரஜினி பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. இந்த வாரம் முழுவதும், ரஜினி பல்வேறு நிகழ்ச்சிகளில் கூறிய புகழ்பெற்ற குட்டிச் சிறுகதைகளை தொகுத்து வழங்குகிறது ஒன் இந்தியா.

ரஜினி என்றால் நட்பு. நண்பனின் மகத்துவத்தை கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் தவறாமல் சொல்லி வருபவர் ரஜினி. அதேபோல, நட்புக்கு எந்த மேக்கப்பும் கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பவர்.

நட்பின் மேன்மையைச் சொல்ல, தனது நண்பர்களில் ஒருவரான கலைப்புலி தாணுவின் முதல் படம் 'யார்?' வெற்றி விழாவில் ரஜினி சொன்ன குட்டிக் கதை இது. (இந்த விழாவுக்காக மும்பையில் தனது இந்திப் பட ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு வந்ததாக தாணு சொல்லி நெகிழ்ந்தார்... ஆண்டு 1985.)

ரஜினி சொன்ன கதைகள்: நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்!

விழாவில் ரஜினி சொன்ன கதை இது:

ஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு வந்துடுச்சி.

அந்த நேரத்துல அங்கு வந்த ஏழை நண்பன், எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் பணக்கார நண்பனைப் பார்த்து எப்பிடி டா இருக்கே என்று வழக்கம் போல கேட்டான்.

எரிச்சலான மனநிலையில் இருந்த பணக்கார நண்பன், 'எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?' என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .

அவன் பின்னாடியே போன ஏழை நண்பன், 'அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?' என்று கேட்டான்.

பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.

ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.

அரைமணி நேரத்தில் பணம் வந்தது.

பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்:

நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தைத்தான் சேர்த்தாய் நண்பா.. நல்ல நண்பர்களை சேர்க்க மறந்துவிட்டாய். நான் அதைச் சம்பாதித்து கொண்டேன்டா!", என்றான்.

இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.

இந்த உலகத்திலே எதை சேர்ப்பதைக் காட்டிலும் உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்... ஆகவே நட்பையும் நேசிப்போம்!"

 

பால் வாக்கர் மரணம்: ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7 ஷூட்டிங் நிறுத்தம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பால் வாக்கரின் திடீர் மரணம், அவர் நடித்துக் கொண்டிருந்த ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் படத்தின் 7-ம் பாக வெளியீட்டை பாதித்துள்ளது.

படத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள யுனிவர்சல் ஸ்டுடியோ, பால் வாக்கரின் குடும்பத்தினருடன் பேசிய பிறகு, படத்தை தொடர்வது குறித்து முடிவெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.

பால் வாக்கர் மரணம்: ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7 ஷூட்டிங் நிறுத்தம்

புகழ்பெற்ற ஹாலிவுட் பட சீரிஸ் இந்த ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ். இதன் முதல் பாகத்திலிருந்து நடித்து வந்தார் பால் வாக்கர்.

இப்போது அந்தப் படத்தின் 7-ம் பாகம் படமாக்கப்பட்டு வந்தது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், பால் வாக்கர் கடந்த நவம்பர் 30 ம் தேதி கார் விபத்தில் அகால மரணமடைந்தார்.

படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் பால் வாக்கர் நடிக்க வேண்டிய சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7 ஐ ஜூலையில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் பால் வாக்கர் விபத்தில் மரணமடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், படப்பிடிப்பை முழுமையாக ரத்து செய்துவிட்டனர். பால் வாக்கரின் குடும்பத்தாருடன் பேசிய பிறகே இறுதி முடிவை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

பால் வாக்கர் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், இந்தப் படத்திலிருந்து ஒரு வீடியோ காட்சி லீக் ஆகியிருந்தது. அதில் பால் வாக்கர் ஒரு சவ ஊர்வலத்தில் சக நடிகர்கள் லுடாக்ரிஸ், டைரிஸ் கிப்சனுடன் நடந்து போவது போல காட்சி இடம்பெற்றிருந்தது.

ஒரு வாரத்தில், அதேபோன்ற சவ ஊர்வலம்... ஆனால் இந்த முறை சவமாக பால் வாக்கரே இருந்ததை, அவரது தந்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்தார்.

 

நான் 'தல'ன்னு தான் சொன்னேன், 'தலைவர்'னு சொல்லவே இல்ல: டாப்ஸி பதறல்

சென்னை: நான் தல என்று தான் கூறினேன் தலைவர் என்று கூறவே இல்லை என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

நடிகை டாப்ஸி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆரம்பம் படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் தனது கதாபாத்திரம் பற்றியும் பேசினார்.

மேலும் தனக்கு அஜீத் குமாரின் குணம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். நான் தலைவரை(ரஜினிகாந்த்) விட தல ரசிகையாக்கும் என்று தெரிவித்திருந்தார்.

நான் 'தல'ன்னு தான் சொன்னேன், 'தலைவர்'னு சொல்லவே இல்ல: டாப்ஸி பதறல்

இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொதித்துவிட்டனர். இது குறித்து அறிந்த டாப்ஸி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் பேட்டியின்போது கூறியதை தவறாக எழுதிவிட்டனர். நான் தலயைக் காட்டிலும் அஜீத் ரசிகை என்று தான் கூறினேன். அவரை ரஜினி சாருடன் ஒப்பிடவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

ஏன் இது... ஏன் அது-ன்னு கேட்டுக்கிட்டே இருந்தார் சூர்யா! - 'பிரிவு' பற்றி கவுதம் மேனன்

சூர்யா - கவுதம் மேனன் விவகாரம் கிட்டத்தட்ட அனைவர் மனதிலிருந்தும் மறந்தே போயிருந்த தருணத்தில்... மீண்டும் அதற்கு தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன்.

இதுகுறித்து இந்த வார ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "முதல்ல நான் ஒரு கதை சொன்னேன். 'வேற ஸ்கிரிப்ட் போலாமே'னு சொன்னார் சூர்யா.

ஏன் இது... ஏன் அது-ன்னு கேட்டுக்கிட்டே இருந்தார் சூர்யா! - 'பிரிவு' பற்றி கவுதம் மேனன்

'என்னை நோக்கிப் பாயும் தோட்டா'னு இன்னொரு ஸ்கிரிப்ட் சொன்னேன். அதுவும் வேண்டாம்னு சொல்லிட்டார்.

'அப்ப 'துருவ நட்சத்திரம்'தான் அடுத்து நான் பண்ற படமா எனக்குத் தெரியுது சூர்யா'னு சொன்னேன். 'ஓ.கே.'னு அவர் சம்மதிச்ச பிறகே வேலைகளை ஆரம்பிச்சோம்.

ரஹ்மான் சார் மியூசிக், த்ரிஷா ஹீரோயின், பார்த்திபன், அருண் விஜய்னு எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி படப்பிடிப்புத் தேதியும் முடிவு பண்ணோம்.

ஆனா, படப்பிடிப்பு அன்னைக்கு காலையில், 'எனக்கு இது வேண்டாம்'னு சொல்லிட்டார்.

அதுவும் போக கடந்த ஒரு வருஷமா, 'ஏன் இது, ஏன் அது'னு நிறையக் கேள்விகள். முதல்ல அவரோட அறிக்கை என்னை ரொம்ப அப்செட் ஆக்கினது. ஆனா, ஒருவிதத்தில் கொஞ்சம் ரிலீஃபாகவும் இருந்தது. 'அப்பாடா'னு நிம்மதி கொடுத்துச்சு அந்த அறிக்கை.

'என்ன பிரச்னை... ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாச்சே?'னு ஏகப்பட்ட விசாரிப்புகள். ஆனா, 'என்ன நடந்துச்சு'னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும்னு அமைதியாகிட்டேன். என்ன ஒண்ணு, 'துருவ நட்சத்திரம்'க்காக வாங்கிவெச்சிருந்த ரஹ்மான் சார் டேட்ஸ் அத்தனையும் வீணாப்போச்சு. ஆனா, இப்போ அவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும், சிம்பு நடிக்கும் படத்துக்கு நான் கதை சொன்னதும் ட்யூன் அனுப்பிட்டார். இங்கே ரொம்ப நல்லவங்களும் இருக்காங்கனு நினைச்சுக்கிட்டேன்!''

''அந்த அறிக்கை சம்பந்தமா சூர்யாகிட்ட நீங்க எதுவும் பேசலையா?''

''நேர்லயே போய் சந்திச்சேன். 'எதுவா இருந்தாலும் நாம ரெண்டு பேர் மட்டுமே பேசி முடிவெடுத்திருக்கலாமே... அறிக்கையெல்லாம் எதுக்கு?'னு கேட்டுட்டு கை குலுக்கிட்டு வந்துட் டேன். அப்புறம் அவர் வீட்ல நடந்த ஒரு விசேஷத்துக்கு என்னை இன்வைட் பண்ணியிருந்தார். ஆனா, ஷூட்டிங் பரபரப்பில் என்னால் கலந்துக்க முடியலை. என்ன நடந்தாலும்... இப்பவும் எப்பவும் சூர்யா என் நண்பன்தான்!''

-இவ்வாறு கூறியுள்ளார் கவுதம் மேனன்.

 

ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் கேட்கும் பரோட்டா?

சென்னை: அசால்டாக பரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஒரு நாளைக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு படத்தில் அசால்டாக 50 பரோட்டாவை சாப்பிட்டு நம்மை எல்லாம் அசர வைத்தவர் அந்த காமெடி நடிகர். இதையடுத்து அவர் பெயருக்கு முன்பு பரோட்டா ஒட்டிக் கொண்டது.

தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ள சந்தன நடிகர் ஓவர் பிசியாக உள்ளார். மேலும் நாள் ஒன்றுக்கு ஏகப்பட்ட சம்பளமும் கேட்கிறாராம். இதனால் சந்தன நடிகரின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் பரோட்டாவை தேடிப் போகிறார்களாம். தனது மார்க்கெட் பிக்கப்பானதை உணர்ந்த பரோட்டா நடிகர் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

மனிதர் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போதோ ரூ.3 லட்சம் கேட்கிறாராம். மார்க்கெட் இருக்கும்போது தானே சம்பளத்தை உயர்த்தி கேட்க முடியும்.

 

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா - கமல் ஹாஸன் தொடங்கி வைக்கிறார்!

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா - கமல் ஹாஸன் தொடங்கி வைக்கிறார்!

பெங்களூர்: பெங்களூரில் நடக்கும் 6 வது சர்வதேச திரைப்பட விழாவைத் தொடங்கி வைக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.

எட்டு நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழா, வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

கர்நாடக அரசு இந்த திரைப்பட விழாவுக்காக ரூ 2 கோடியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. 45 நாடுகளிலிருந்து 145 படங்கள் பங்கேற்கும் இந்த திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக முதல்வர் சித்தராமையா பங்கேற்கிறார்.

இந்த விழாவில் கன்னட சினிமாவின் லெஜன்ட் என புகழப்படும் மறைந்த டாக்டர் ராஜ்குமாரின் படங்கள் அதிக அளவில் திரையிடப்பட உள்ளன. மேலும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் போட்டியிட்ட 14 திரைப்படங்கள் பெங்களூர் விழாவில் இடம்பெறுகின்றன.

இவை தவிர, பெர்லின், கேன்ஸ், கர்லோவி வாரி, மாஸ்கோ, வெனிஸ், டொரன்டோ போன்ற உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்ற பல படங்கள் திரையிடப்பட உள்ளன.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர்கள் அன்ட்ரஜெஸ் வாஸ்டா, அஸ்கார் பர்ஹாடி, இஸ்ட்வான் ஸ்ஸபோ, ப்ரான்காய்ஸ் ஓஸோன், சுஸன் ப்லியர், கோரன் பாஸ்கால்ஜெவிக், மைக் லெய்க், க்ளெய்ர் டெனிஸ் மற்றும் தாமஸ் வின்டர்பெர்க் போன்றவர்களின் சிறந்த படைப்புகளை இந்த விழாவில் பார்க்க முடியும்.

ஃபன் சினிமாஸ், சுலோச்சனா, ப்ரியதர்ஷினி, பாதாமி ஹவுஸ் போன்ற இடங்களில் இந்தப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவின் இறுதியில் இந்திய மற்றும் ஆசியாவின் பிறநாடுகளிலிருந்து வந்த படங்களுக்கிடையில் போட்டிகள் வைத்து ரொக்கப் பரிசு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

விழாவை வரும் டிசம்பர் 26-ம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.

 

நடிகர் - ஆர்ட் டைரக்டர் சக்திராஜ் மரணம்!

சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல ஆர்ட் டைரக்டரும், நடிகருமான சக்திராஜ் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலாமனார். அவருக்கு வயது 58.

இவர் 100 படங்களில் நடித்துள்ளார். 75 படங்களுக்கு மேல் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார்.

சக்திராஜ் உடல் ஏவி.எம் இடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக சக்திராஜ் உடலுக்கு, விஜய் ஆனந்த், சந்தோஷ், பூங்கா கிருஷ்ணமூர்த்தி, மகி, சுரேஷ், அண்ணாமலை, அண்ணாதுரை, சத்யசாய், நந்தகுமார் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனத்துக்குப் பிறகு அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் விஜய் ஆனந்த், நந்தகுமார், ராஜ்குமார், நாம்தமிழர் இயக்க சுரேஷ் போன்றோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

 

விடியும் முன்- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
4.0/5

நடிகர்கள்: பூஜா உமாசங்கர், மாளவிகா மணிகுட்டன், வினோத் கிஷன், ஜான் விஜய்

இசை: கிரீஷ் கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்

தயாரிப்பு: ஜாவேத் கயூம்

இயக்கம்: பாலாஜி கே குமார்


பாலாவின் பரதேசி படத்தில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு விடியும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன், என நடிகை பூஜா சொல்லியிருந்தார். அவரது முடிவு எத்தனை சிறந்தது என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் படம்.

சமீபத்தில் வெளிவந்த கச்சிதமான த்ரில்லர் படங்களில் ஒன்று விடியும் முன்.

கதை உண்மையிலேயே வித்தியாசமானது, தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்க்காதது.

முன்னணி விலைமாதான பூஜா, தன்னை கொஞ்சம் சுருக்கிக் கொண்டு தொழில் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு ஒரு அசைன்மென்ட். பிள்ளைக் கறி கேட்கும் ஒரு பெரும் புள்ளிக்கு (வினோத் கிஷன்) 12 வயது சிறுமியை 'ஏற்பாடு' செய்து தருமாறு பூஜாவைக் கட்டாயப்படுத்துகிறான் ஒரு புரோக்கர்.

விடியும் முன்- விமர்சனம்

பூஜாவும் 12 வயசுப் பெண்ணை ஏற்பாடு செய்து பெரும்புள்ளியிடம் அழைத்துப் போகிறார். போன இடத்தில் புள்ளியைக் கொன்றுவிட்டு தப்பிவிடுகிறார்கள் இருவரும். அவர்களைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள் புரோக்கர், செத்துப் போன புள்ளியின் மகன் மற்றும் சிறுமியை உண்மையில் ஏற்பாடு செய்த தாதா ஆகிய மூவரும்.

இந்தத் துரத்தலில் எப்படித் தப்புகிறார்கள் பூஜாவும் சிறுமியும் என்பது செம த்ரில்லிங் க்ளைமாக்ஸ்.

விடியும் முன்- விமர்சனம்

உண்மையில் கதையை ஒரு கோர்வையாக சொல்ல வேண்டுமே என்பதற்காக நாம் இப்படி தொகுத்துச் சொன்னாலும், யாரும் கணிக்க முடியாத வகையில் திரையில் கதை முடிச்சுகளை அவிழ்க்கும் புது இயக்குநர் பாலாஜி கே குமாரின் பாணி மெச்சத்தக்கது.

நீ...ண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றினாலும், நடிப்பில் இன்னும் ப்ரெஷ்ஷாகவே இருக்கிறார் பூஜா. நிச்சயம் இன்றைக்குள்ள வேறு எந்த நடிகையாவது இந்தப் பாத்திரத்தை இந்த அளவு மெனக்கெட்டுச் செய்திருப்பாரா சந்தேகமே!

விடியும் முன்- விமர்சனம்

புரோக்கராக வரும் அமரேந்தரனிடம் ரேட் பேசும் காட்சி, ரயில் நிலையத்தில் அந்த சின்னப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்யுமிடம், புரோக்கரிடம் சிறுமிக்காக அடிவாங்குமிடம் என ஒவ்வொரு காட்சியிலும் புதிய நடிப்பைப் பார்க்க முடிகிறது. சொந்தக் குரல் கொஞ்சம் பிசிறு தட்டினாலும், கேட்க வித்தியாசமாகத்தான் உள்ளது.

பூஜாவுக்கு அடுத்து பார்வையாளர்களைக் கவர்பவர் சிறுமியாக வரும் மாளவிகா. வயதை மீறிய தேர்ந்த நடிப்பு தெரிகிறது.

புரோக்கராக வரும் அமரேந்திரன், பெரும்புள்ளியாக வரும் வினோத் கிஷன், லங்கனாக வரும் ஜான் விஜய், சில காட்சிகளில் வந்தாலும் மனதைக் கவரும் லட்சுமி ராமகிருஷ்ணன்... அத்தனைப் பாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. ரொம்ப நாளைக்குப் பிறகு உதிரிப் பாத்திரங்களின் பெயர்கள் கூட நினைவில் நிற்குமளவு, கச்சிதமான திரைக்கதை!

விடியும் முன்- விமர்சனம்

இந்தத் திரைக்கதை குறித்து நிறைய எழுத நினைத்தாலும், அது படம் பார்க்கும்போது சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதால், இத்துடன் நிறுத்திக் கொள்வதே நலம்!

கொஞ்சம் அடல்ட் கன்டென்ட் என்றாலும், இந்த மாதிரிக் கதைகளை இதைவிட 'சுத்தமாக' எடுப்பது கஷ்டம்தான்.

பாடல்களில் சுவாரஸ்யமில்லை. ஆனால் பின்னணி இசையில் ஜெயித்திருக்கிறார் கிரீஷ் கோபாலகிருஷ்ணன். அர்த்தமுள்ள பின்னணி இசை!

விடியும் முன்- விமர்சனம்

அதேபோல ஒளிப்பதிவு... எக்ஸலன்ட். கதை நடக்கும் களங்களைத் தேர்வு செய்த விதமும் பாராட்டுக்குரியது.

நிச்சயம் தியேட்டர்களில் போய் பார்த்து ரசியுங்கள்... அதுதான் பாலாஜி கே குமார் போன்ற புதிய, ஆக்கப்பூர்வமான படைப்பாளிக்கு ரசிகர்கள் செய்யும் மரியாதை!

இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கான நல்ல விடியலுக்கு கட்டியம் கூறும் படம் என்றால்.. நிச்சயம் மிகையில்லை!

 

ஜில்லாவில் பஞ்ச் டயலாக விடாத மதுரைக்கார விஜய்

ஜில்லாவில் பஞ்ச் டயலாக விடாத மதுரைக்கார விஜய்

சென்னை: ஜில்லா படத்தில் பஞ்ச் வசனங்கள் இருக்கவே கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். இதனால் ஜில்லா பஞ்ச் இல்லாத படமாக வெளியாகவிருக்கிறது.

விஜய்யின் படங்களில் ஆங்காங்கே பஞ்ச் வசனங்கள் இருக்கும். இந்த வசனங்கள் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் தலைவா என்ற ஒரு படம் வந்து விஜய்யை பாவம் பதற வைத்துவிட்டது.

இதையடுத்து அவர் பஞ்ச் வசனங்கள், ஹீரோயிச வரிகள் கூட தனக்ககு வினையாக மாறிவிடுமோ என்று அஞ்சுகிறார். இதனால் ஜில்லா படத்தில் பஞ்ச் வசனமே வைக்கவில்லையாம். மேலும் ஹீரோவுக்கான சோலோ பாட்டில் கூட ஹீரோயிச வரிகள் இல்லையாம். தலைவா தான் படாதபாடுபட்டு ரிலீஸானது ஜில்லா படமாவது பிரச்சனை இன்றி ரிலீஸாக வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.

முன்னதாக ஜில்லா படத்தில் எந்தவித அரசியல் பஞ்ச் வசனங்களும் இருக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி இயக்குனர் நேசனிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

1500 பிரிண்டுகள்... தமிழகத்தில் 350 அரங்குகளில் வெளியாகிறது வீரம்!

சென்னை: அஜீத்தின் 1500 பிரிண்டுகள்... தமிழகத்தில் 350 அரங்குகளில் வெளியாகிறது வீரம்!  

பாரம்பர்யமிக்க விஜயா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் ஜனவரி 10ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒருபுறம் நடக்க, படத்துக்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது படக்குழு.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டி கூறுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் கிராமிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம், நான்கு அண்ணன் தம்பிகளுக்கிடையிலான பாசத்தைச் சொல்லும் படம்.

இந்தப் படத்துக்காக அஜீத் கொடுத்த ஒத்துழைப்பு, எடுத்த ரிஸ்க் அத்தனையும் மறக்க முடியாதது.

படத்தில், இடம்பெறும் ரயில் சண்டை காட்சிக்காக ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்தோம். ஓடும் ரயிலில் டூப் கூட இல்லாமல் அஜீத் போடும் சண்டைக்காட்சி நீண்ட நாளைக்கு பேசப்படும்.

இந்தப் படம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும்,' என்றவர், 1500 பிரிண்டுகள் இந்தப் படத்துக்காக போடப்படுவதாகவும், அவற்றில் தமிழகத்தில் மட்டும் 500 அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆனால் 350 அரங்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாகவும், கூடுதல் திரையரங்குகளைப் பெற முயன்று வருவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்தனர்.

 

ரஜினி பிறந்தநாளை உலக ஸ்டைல் தினமாக அறிவியுங்கள்: இப்படி ஒரு போஸ்டர்

நெல்லை: ரஜினிகாந்தின் பிறந்தநாளை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்கக் கோரி உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து ரஜினி ரசிகர்கள் நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

தமிழ் திரை உலகில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினிகாந்த். ரஜினி என்றாலே அவர் சிகரெட்டை தூக்கிப் போடும் ஸ்டைலும், முடியை கோதும் ஸ்டைலும், கண்ணாடியை மாட்டும் ஸ்டைலும் தான் மக்களுக்ககு நினைவு வரும்.

ரஜினி பிறந்தநாளை உலக ஸ்டைல் தினமாக அறிவியுங்கள்: இப்படி ஒரு போஸ்டர்

வரும் 12ம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் அன்னதான குழு நெல்லையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.

அதில், எங்கள் உயிர் அகில உலக ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் பிறந்த டிசம்பர் 12ம் தேதியை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் பானுசேகர் கூறுகையில்,

6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது நாடு கடந்த ரசிகர்களின் விருப்பம் ஆகும். இதனையே நெல்லை ரசிகர் மன்றமும் வலியுறுத்துகிறது என்றார்.