மாடம்பாக்கம் ஏரியை தூர் வாரி தன் பிறந்த நாளைத் தொடங்கிய கமல் ஹாஸன்!

சென்னை: சென்னை புறநகரில் உள்ள மாடம்பாக்கம் ஏரியை தனது ரசிகர்கள் மற்றும் தூய்மை இந்தியா அமைப்புடன் சேர்ந்து தூர் வாரி தனது பிறந்த நாளைத் தொடங்கினார் மாடம்பாக்கம் ஏரியை தூர் வாரி தன் பிறந்த நாளைத் தொடங்கிய கமல் ஹாஸன்!  

அத்துடன் தனது பிறந்த நாளன்று மாடம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்து, தூய்மை இந்தியா பணியைத் தொடங்குவதாக அறிவித்தார்.

அதன்படி இன்று காலை வேளச்சேரியை அடுத்த மாடம்பாக்கம் ஏரிக்கு வந்த கமல் ஹாஸன், தனது நற்பணி இயக்கத்தினருடன் இணைந்து குப்பை அள்ளும் பணியைத் தொடங்கி வைத்தார்.

மாடம்பாக்கம் ஏரியை தூர் வாரி தன் பிறந்த நாளைத் தொடங்கிய கமல் ஹாஸன்!

அவரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

 

கிரிக்கெட்டில் ஜெயித்தால் பேசுகிறோம்..சாதி ஒழிப்பு குறித்துப் பேச மறுக்கிறோம்.. கமல் வேதனை!

சென்னை: கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் பேசும் நாம், சாதி ஒழிப்பைப் பற்றி பேச முன்வருவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்.

இன்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் கமல். இந்நிலையில், தி இந்து நாளிதழுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சினிமா மட்டுமின்றி சமூகம் சார்ந்த தனது கருத்துக்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஜெயித்தால் பேசுகிறோம்..சாதி ஒழிப்பு குறித்துப் பேச மறுக்கிறோம்.. கமல் வேதனை!

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-

சம்பளம் முதல் சவுக்கடி வரை...

உங்களுக்கு இதுவரை தமிழ் சினிமா செய்தவை என்னென்ன?

எதை நான் சொல்றது..? சம்பளம், பாடம், சவுக்கடிவரை எல்லாமே கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. நான் பெற்றவை எல்லாம் இங்கிருந்து பெற்றவைதான். கற்றவையும் துன்புற்றவையும் இங்கிருந்து வந்தவைதான்.

தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே...

அண்டா கதை...

தொழில்நுட்பத்தை வளர விடமால், நாம் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். முற்காலத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு மகாராஜா வந்து மக்களின் விசுவாசத்தை சோதிப்பதற்காக கோயிலுக்கு பால் வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய அண்டா செய்தாராம். மக்களிடம் 'எல்லோர் வீட்டில் இருந்து பால் கொண்டு வந்து நிரப்பி விடுங்கள்' என்றாராம். அண்டா என்பது கோபுர அளவிற்கு பெரியது. அப்போது ஒரு சிலர் 'இவ்வளவு பெரிய அண்டாவில் பால் ஊற்றி நிரப்ப வேண்டும் என்றால் கட்டுப்படி ஆகாது' என்று நினைத்தார்கள். இத்தனை பேர் பால் ஊற்றினார்கள் என்பது இரண்டு பேர் தண்ணீர் ஊற்றினால் தெரியாது என்று நினைத்திருக்கிறார்கள். எல்லாருமே பால் ஊற்றி இருக்கிறார்கள், ஆனால், எல்லாமே நீர்ந்து போய்விட்டது. ஏனென்றால், அதில் தண்ணீர்தான் மேம்பட்டு தெரியுதே தவிர பால் தெரியவில்லை. அதேதான் தற்போது தமிழ் சினிமாவில் நடக்கிறது.

நேர்மை அவசியம்...

நேர்மை இருந்தால் மட்டுமே எந்த வியாபாரமும் ஜெயிக்கும். எல்லாருமே காயைப் பழுக்க வைக்க மருந்து அடிச்சே பண்ணிட்டு இருக்க முடியாது. நிஜமாவே ஒரு பழம் இருக்கணும். அந்த பழம் தானே, இந்தப் பழம் என்று கவுண்டமணி - செந்தில் காமெடி எல்லாம் இந்த விஷயத்தில் பண்ண முடியாது. கண்டிப்பாக நேர்மை வந்தாக வேண்டும். வரும். எல்லாருமே கருப்பு பணத்தில் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறவர்கள்... வந்து பிற்பாடு வீடு வாங்கும்போது கஷ்டப்படுவார்கள். தன்னை ஒரு பணக்காரனாகக் காட்ட வேண்டும் என்ற நிலை வரும்போது பெரிய சூழ்ச்சி எல்லாம் பண்ண வேண்டியது வரும். அதேபோல் எல்லோரும் உண்பதற்கு இங்கே உணவு உண்டு. அதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தி திரையுலகில் எப்படி 400 கோடி, 300 கோடி என்று பேச முடிகிறது? நேர்மை வந்ததுதான் காரணம். இங்கேயும் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சண்டியர்...

ஒரு முக்கியப் படைப்புக்கு 'எதிர்ப்பு, போராட்டம்' முதலான சூழலுக்கு வித்திட்டது, 'சண்டியர்'. அப்போது ஓர் கலைஞனாக உங்கள் தரப்புக்கு ஏற்பட்ட கோபம் தணிய எவ்வளவு நாளானது?

என்ன கோபம். நான் திட்டுவதற்குப் பதிலா... அவங்களே அவங்கள திட்டிக்கிட்ட மாதிரி இல்ல. கெட்டதோ, நல்லதோ வார்த்தைகள் தேவையில்லை. அவங்களுக்கே தெரிஞ்சு போச்சு. என்னை எதிர்த்தவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். அதில் என்ன வீரம் இருக்கிறது?

விருமாண்டி தான் சாதிப்பெயர்...

சண்டியர் என்பது சாதிப்பெயர் அல்ல. விருமாண்டி என்பதுதான் சாதிப்பெயர். அதைக்கொண்டு வந்து வைக்க வைத்தார்கள். சண்டியர் என்பது எந்தச் சாதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ரவுடித்தனம் பண்ணுபவர்கள் எல்லாருமே சண்டியர்தான். இந்தப் பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னவரை வேண்டுமானால்கூட அப்படிச் சொல்லலாம். அவர்களுக்கான பதிலைக் காலம் சொல்லிவிட்டது.

அரசியல் தலையீடு...

ஆனால், ஒரு படைப்பின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதில் அரசியல் தலையீடு அதிகரித்தபடி இருக்கிறதே...

கடந்த 50 வருடங்களாக அரசியல்வாதிகள்தான் இதை பண்ணிகிட்டு இருக்காங்க. அமெரிக்காவில் இருக்கிற சுதந்திரம் கண்டிப்பா இங்கு கிடையாது. நாவலாசிரியர் ஜெய மோகனுக்கு இருக்கும் சுதந்திரம், ஒரு திரைக்கதையாளனாக ஜெயமோகனுக்குக் கிடையாது. சென்சார் போர்டு ஒண்ணு வைச்சு பரவாயில்லை, கொஞ்சம் வெட்டி எடுத்துக்கோங்க என்று சொன்னாலும், அதையும் தாண்டி ஒரு கூட்டம் உட்கார்ந்துகொண்டிருக்கிறது.

நிஜ வசூல்ராஜாக்கள்...

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' என்று தலைப்பு வைத்ததிற்கு என் மீது வழக்கு போட்டாங்க. டாக்டர்கள் அனைவரும் எங்களை வசூல்ராஜா என்று சொல்கிறார் என்றார்கள். ஃப்ரீயா பண்ற டாக்டர் எத்தனை பேர் இருக்கிறார்கள். இப்போ சொல்றேன். எனக்குத் தெரிஞ்சு இப்போ நிறைய நிஜ வசூல்ராஜாக்கள் இருக்கிறார்கள். என்ன பண்ணப் போகிறார்கள் இவர்கள்!

விமர்சனங்கள்...

சரி, அரசியல் தலையீடுகளைக் காட்டிலும், இணையத்தில் மலிந்துவரும் விமர்சனங்கள் மீதுதான் தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு ஒருவித அச்சுறுத்தல் இப்போது அதிகரித்து இருக்கிறது என்பதை கவனித்தீர்களா?

இணையத்தில் விமர்சனம் பண்ணக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படித் தடுக்க முடியும்? என் கலைக்கு விமர்சனம் இருக்கக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு படம் நல்லாயில்லை என்று சொல்லும் உரிமையை நீங்கள் எப்படித் தடுக்கலாம். கமல் ஹாசனுக்கு நடிப்பே வரலைங்க, அவர் எல்லாம் வீட்டில் போய் நடிக்காமல் உட்காரலாம் என்று சொல்லும் உரிமை அவனுக்கு இருக்கிறது. அந்த உரிமை உனக்கில்லை என்று சொல்லும் திறமை என்னுடையதாக இருக்கிறது. அதுதானே ஒரு நடிகனுடைய வெற்றி. ஆள் வெச்சு அடிக்கவா முடியும்.

காலம் கடந்த அங்கீகாரம்...

‘ராஜபார்வை', ‘மகாநதி', ‘அன்பே சிவம்' முதலான படங்கள் வெளியானபோது பெரிதாக கவனிக்கப்படாமல், காலம் கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது மாறி மாறி நடக்கும். ‘கை கொடுத்த தெய்வம்' என்று ஒரு படம், அது வந்து ‘பாசமலர்' அளவுக்குப் போகவில்லை. ‘கான் வித் த விண்ட் ' என்னும் படம் இன்று எல்லோரும் பேசும் படம். முதல் சுற்றில் அது ஒரு தோல்விப் படம். 'சந்திரலேகா' கணக்குப் பார்த்தார்கள் என்றால் கம்மியான லாபம்தான் ஈட்டி இருக்கும். காலப்போக்கில் அது அடித்த அடிக்கு யாருமே பக்கத்தில் நிற்க முடியாது. அதே மாதிரி நிறைய படங்கள் இருக்கின்றன. திரும்ப திரும்ப வருமானம் ஈட்டும் வழிகள் அனைத்தையும் நாம் அடைத்துவிட்டோம். அதனால் சில உண்மைகள் நமக்குப் புரிவதில்லை.

மீண்டும் அன்பே சிவம்...

'குருதிப் புனல்', 'அன்பே சிவம் போன்ற' படங்களை மீண்டும் திரையில் பார்க்க விரும்புவதாக ட்விட்டரில் ரசிகர்கள் அவ்வப்போது சொல்லி வருவதைப் பார்த்திருக்கிறேன். ரீ-ரிலீஸ் சாத்தியமா?

அது என்னுடையது இல்லையே. தயாரிப்பாளர்களே அந்தப் படத்தை நம்பவில்லை. தயாரிப்பாளர் நம்ப வேண்டும், தயாரிக்கும் போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். குதிரை ஒட்டத் தெரியாதவன் எப்படி மேலே ஏறி உட்கார்ந்தால் உடனே கீழே தள்ளி விட்டுவிடும். அதே மாதிரி தான் ரசிகர்களும். தயாரிப்பாளர்களின் பதற்றம் எல்லாம் ரசிகர்களுக்கும் பரவிவிட்டது. 'இது நல்லா இருக்காது போலிருக்கே.. தயாரிப்பாளரே இப்படி பயப்படுறாரு' என்று வேறு பக்கம் திரும்பி பார்த்து விட்டார்கள். அப்புறம் தெரிந்து சிலர் தேடி வருகிறார்கள். எனக்கு சிவாஜி சார் சொல்லித்தான் தெரியும், 'உத்தம புத்திரன்' வெற்றி படம் இல்லை என்று. என்னால் நம்பவே முடியவில்லை. நானே 10 தடவை பார்த்த படம் இது. எனக்கு தெரிந்து நான்கைந்து முறை பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.

உத்தம புத்திரன்...

"என்ன.. சும்மா உத்தம புத்திரன் பத்தியே பேசிட்டு இருக்க. அது வெற்றி படம் எல்லாம் ஒண்ணும் கிடையாது. தெரியுமா?" என்று சிவாஜி சாரே என்னிடம் சொல்வார். நான் அவர்கிட்டயே சண்டை போட்டு இருக்கேன். "படம் பார்த்தப்போ உனக்கு நாலு வயசு இருக்கும். நான் அந்தப் படம் போகலயேனு கவலைப்பட்டிருக்கேன். ஒடுச்சுனு சொல்றால... வசூலைக் கொண்டுவந்து காட்டு. நம்புறேன்" அப்படினு சொல்லியிருக்கார் சிவாஜி சார். அது தோல்விப் படம் கிடையாது. ரி-ரீலீஸ் ஆகி படம் வெற்றியாகி இருக்கிறது.

தவறான எண்ணம்...

நான் என்னுடைய படத்தை பண்ணலாம். மற்றவர்கள் படத்தை நான் எப்படிப் போய் சொல்ல முடியும். ரி-ரீலீஸ் பண்ண வேண்டும். திரையரங்கிற்கு மறுபடியும் பழைய படங்கள் வருவது ஒரு வாடிக்கையாக வேண்டும். அதை தொலைக்காட்சியில் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.

பாபநாசம் படம்...

கமல் ஹாசன் என்றாலே ஜீனியஸ் என்ற பிம்பம், தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் உண்டு. உன்னைப் போல் ஒருவனில் உங்களை ஒரு சாமானியாக ரசிகர்களால் பார்க்க முடியவில்லை என்ற ஒரு வாதமும் உண்டு. அப்படி இருக்க, த்ரிஷ்யம் படத்தின் அடிப்படை அம்சமே ஓர் எளிய மனிதனின் அசாதாரண முயற்சி என்பதுதான். மலையாளம் ஆடியன்ஸ் மோகன்லாலை ஜார்ஜுகுட்டியாகத்தான் பார்த்தார்கள்... ஆனால், பாபநாசத்தில் கமல்ஹாசனை கமல்ஹாசனாகவே பார்க்க நேர்ந்தால்..?

நான் இதை மறுக்கிறேன். அந்தப் படத்தில் நான் மோகன்லாலாகத்தான் பார்த்தேன். ‘த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால்தான் தெரிகிறார். இதைவிட மோகன்லால் சிறப்பாக நடித்த படங்களை நான் காட்ட முடியும். இந்த மாதிரி பேசுபவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் படமாகப் ‘பாபநாசம்' அமையும்.

அவதூறுகளை ஏற்க மாட்டேன்...

நடித்தால் நடிக்கிறார் என்கிறீர்கள், ஓவராக மேக்கப் போட்டால் மேக்கப் என்கிறீர்கள். நான் செய்ததைப் பாருங்கள். நல்லா இருந்தால் நல்லாயிருக்குன்னு சொல்லுங்க, நல்லாயில்லை என்றால் பிடிக்கலன்னு சொல்லுங்க. தவறுகள் இருந்தால் ஒத்துக் கொள்ளலாம், இந்த மாதிரியான அவதூறுகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ‘தேவர் மகன்' படத்தில்கூட கமல் தெரிவான். ஆனால் ‘மகாநதி'யில் அவன் கிருஷ்ணா. ‘தசாவதாரம்' பல்ராம் நாயுடு வேடத்தில் கமல் ஹாசன் எங்கு தெரிகிறான்?

ஆளுமையால் வரும் தன்னம்பிக்கை...

இந்தத் தொழிலில் ரசிகர்களை விட எனக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரியும். பாலமுரளி கிருஷ்ணாவின் பாடல்களை ரசித்துவிட்டு, இப்படிப் பாடியிருக்கலாம் என்று சொல்லத் தெரியாது. இன்றைக்குத் தொண்டை கட்டியிருக்கிறதுபோல என்று வேண்டுமானால் சொல்லலாம். இது கர்வம் அல்ல. எனது ஆளுமையால் வரும் தன்னம்பிக்கை.

தமிழ் ரசிகர்களுக்கான மாற்றம்...

ம்... 'துரோகால்' சஸ்பென்ஸ் படம். அதை ரீமேக்கும்போது 'குருதிப் புனல்' சஸ்பென்ஸுடன் ஆக்‌ஷன் வகையறாவாக மாற்றப்பட்டது. 'வசூல்ராஜா'வில் மைக்கேல் மதன காமராஜனில் இருந்த வசன விளையாட்டு மிகுந்திருந்தது. அந்த வகையில், 'பாபநாச'த்தில் தமிழுக்காக என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

கதையை மாற்றவில்லை. ரொம்ப வித்தியாசமாக வந்திருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். நான் நம்பக் கடமைப்பட்டிருக்கிறேன். இல்லையென்றால் டேக் 2 கேட்டிருப்பார்.

தலை குனிகிறேன்...

இந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவுக்கான ‘இந்தியன் பனோரமா' பிரிவில் ஒரேயொரு தமிழ்ப் படம்தான் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி விழாக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது "தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் ஸ்ட்ராங்கா இருக்கு. ஆனா, கன்டென்ட்-டில் வீக்கா இருக்கு" என்றார். தமிழ் சினிமாவுக்கு ஏன் இந்த நிலை?

தலை குனிகிறேன். இன்னும் கோபத்தில் தலை நிமிர்ந்து அடுத்தப் படத்தில் நல்லா எடுக்கலாம். இதுக்கு மறுத்துப் பேசி, தமிழுக்கு இடம் கொடுங்கள் என்று பேசாதீர்கள். அது விலாசம். தகுதிக்கு இடம் கேளுங்கள். அது தப்பு என்றால் என்னவென்று பாருங்கள். நீ இந்த படிப்பு படிக்கல, அதனால் உனக்கு இந்த வேலை கிடைக்காது என்றால், அந்த வேலையை படித்து விடலாமே. இன்றைக்கே வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது நடக்காது. எனக்கே அந்தக் கருத்து உண்டு. நாம ஏதோ பெருசா சாதித்து விட்டோம் என்று பத்து படம் பார்த்து விட்டு எடுத்தால், நாமும் அதற்கு நிகராகி விடுவோமா? சிவாஜி மாதிரி நடித்துவிட்டால், அவரை விஞ்சிவிட்டதாக அர்த்தமா? யாரை மாதிரி பார்த்து நடித்தாலும், அது மிமிக்ரிதானே. 'கிஸ்தி, திரை, வட்டி' என்று நாங்கள் பேசியது எல்லாம் மிமிக்ரிதானே. நாகேஷ் மாதிரி செய்பவர்கள் எல்லாரும் நாகேஷ் ஆகிவிட முடியாது. அவர்கள் நாகேஷின் விசிறிகள்.

விஷத்தைப் போட்டால்...

அந்த மாதிரிதான் நம்ம எடுக்கும் படங்கள் வந்து, வெள்ளைக்காரன் படத்தைப் பார்த்து காப்பியடிச்சு எடுத்தா அதற்கு நிகராகி விடாது. எழுத்தாளர்களில் ஜெயகாந்தனும், புதுமைப்பித்தனும் இப்போது இருக்கிற நிறைய நல்ல எழுத்தாளர்கள் மாதிரி, சினிமாவிலும் வர வேண்டும். ஜெயகாந்தன் எங்கிருந்து எடுத்தார் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அது ஒரு தனி ஊற்று. சுடச்சுட எப்போதும் வந்துகொண்டே இருக்கும். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அப்படி வர வேண்டும் சினிமாவில். வரும் என்று நம்புகிறேன். வராததற்கு வியாபாரம் பெரிதாக கலந்துவிட்டது. வியாபாரிகளும் பின்னாடி நின்றுகொண்டு பேனாவை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்கு வெற்றியின் ரகசியம் தெரியாது. எனக்கு எந்த அளவுக்குத் தெரியாதோ, அதேதான் அவங்களுக்கும். சினிமா காட்டப்படும் தளங்கள் மாறிக்கொண்டே வருகிறது. அந்தத் தளங்களில் எல்லாம் சுதந்திரம் வேண்டும். தனியாருக்குப் போய் சேர வேண்டிய பணங்கள் போய்ச் சேர வேண்டும். அபகரித்தல் என்பது நிறுத்தப்பட வேண்டும். அதை நிறுத்தினால் எல்லாருக்கும் பணம் வரும். வேலி கட்டினால்கூட ஒத்துக்கொள்வேன். விஷத்தை போட்டால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

தமிழ் சினிமா - இலக்கியம் இடையிலான பாலம்...

அப்படி என்றால், கதை - திரைக்கதையிலும் தமிழ் சினிமா வலு பெறுவதற்கு, இலக்கியத்தின் பங்களிப்பு அவசியமாகிறது என்பது உணரப்பட வேண்டுமா? தமிழ் சினிமா - இலக்கியம் இடையிலான பாலத்தை உறுதிப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது சரிதானா?

இதை நான் சொல்லி 40 வருஷமாச்சு. பாலம் கட்டுறோம், பாலம் கட்டுறோம் என்று முயற்சியும் பண்ணினோம். பாலகுமாரன் எல்லாம் அப்படி வந்தவர்தான். சுஜாதா எல்லாம் அந்த பாலத்தில் நடந்து வந்தவர்தான். முதலில் வாசித்தல் வேண்டும். திரைக்கதை என்பது தனித்துறை என்றாலும்கூட, அதை எடுப்பது ஒரே இடத்தில் இருக்க வேண்டும். புதுசா ஏதாவது ஒண்ணு காற்றில் பிடிக்கலாம் என்றால் அதற்கும் இருக்கிறது. அது ஒரு யுக்தி. அத்தனை பேருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் இருக்கிற நீர்ச்சுணை நோக்கி போவதில் தப்புக் கிடையாது. போறதில்லை இங்க. இங்கே யாரு வேண்டுமானாலும், சினிமா எடுக்கலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சினிமா என்பது இப்போது குற்றம் மாதிரி ஆகிவிட்டது. குற்றம் செய்வதற்கு பெரிய திறமை எல்லாம் வேண்டியதில்லை, தைரியம் மட்டும் இருந்தால் போதும். அப்படி ஆகிவிட்டதே என்ற கோபம் இருக்கிறது.

பாரதிராஜா பட்ட கஷ்டங்கள்......

'கிராமத்தில் இருந்து வந்தான்யா பாரதிராஜானு ஒருத்தன். அவனைப் பார்த்து எல்லாரும் வந்துவிட்டார்கள்' என்று பழைய தொழில்நுட்ப கலைஞர்கள் சொல்லுவார்கள். ஏன் பாராதிராஜாவை சொல்லுகிறீர்கள். அவர் அப்படியெல்லாம் வரவில்லை. அவரை அப்படி பேசுபவர்கள் பார்க்கும் போது கோபம் வரும். இவர்கள் எல்லாம் பாரதிராஜாவை பாராட்டமலே இருக்கலாம். அவர் வந்து பட்ட கஷ்டங்கள் எவ்வளவு?. இளையராஜாவிற்கு பின்னால் எவ்வளவு கல்வி, கடின உழைப்பு இருக்கிறது தெரியுமா இவர்களுக்கு. நான் பார்த்து வியக்கிற உழைப்பாளி இளையராஜா. அந்த உழைப்பு இல்லாமல் வருபவர்கள் விழாவிட்டாலும், விழுந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். அதில் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அறுவடை பண்ணுவது போல் நடித்தால் என்னவாகும் அறுவடையே நடக்காது. அப்புறம், எங்களுடன் வந்து பங்கிற்கு மட்டும் நிற்பார்கள்.

மூன்று வார வெற்றி என்பது....

ஒரு முக்கியப் படைப்புக்கு 'படத்தின் வெற்றி என்பது மூன்று வாரங்களாகச் சுருங்கிவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

2, 3 வாரங்கள் படங்கள் ஓடுவது போதும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் முன்பு 13 பிரின்ட் ரிலீஸ் பண்ணினார் எஸ்.எஸ். வாசன். அதைப் பார்த்தே என்ன முரட்டுத்தனமா பண்றாரே என்று சொன்னவர்கள் இருக்காங்க. தியாகராஜ பாகவதர் காலத்தில் 3 பிரின்ட்தான் போடுவார்கள். பிய்ந்துவிட்டது என்றால், அதைச் சரி செய்வார்கள். புதிதாகப் போட மாட்டார்கள். அதை அதிகரித்தவர்தான் வாசன். நான் 40 பிரின்ட்டாக இருக்கும்போதே, 100 பிரின்ட் தாண்டப் போகிறதுன்னு சொல்லிட்டிருந்தேன். இன்றைக்கு 3000 பிரின்ட்டைத் தொட்டிருக்கிறது. ஆகையால் இரண்டு வாரம் போதுமானது.

கூடுதல் பொறுப்புகள்...

உள்ளூர் ரசிகர்களுக்கு உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு மிக எளிதில் கிடைக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளின் கூடியிருக்கும் பொறுப்புகள் எத்தகையது?

முதலில் பார்க்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதாக கருதுகிறேன். ரசிகர்கள் பார்க்கிற அத்தனை படத்தையும் பார்க்க வேண்டும். இவர்கள் தன் சினிமாவை மட்டுமே பார்க்கிறார்கள். உறவுக்குள், உறவுக்குள் கல்யாணம் பண்ணிக் கொண்டே இருந்தால் உருவங்கள் ஒரே மாதிரி இருக்குமே தவிர, வியாதிகள் வருவதற்கு வாய்ப்புண்டு. அதனால் தான் சாதி திருமணம் போன்றவை எல்லாம் நடப்பதாக நினைக்கிறேன். ஒரு வித்தியாசமான சிந்தனைக்காக அல்ல. காதல் தான் இந்த சாதியை எல்லாம் ஒழிக்கும் என்று நினைத்தேன். இப்போ அதையும் கெடுக்கிறார்கள்.

சாதி ஒழிப்பு...

கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் பேசுறோம். ஆனால் சாதி ஒழிப்பைப் பற்றி யாருமே பேச மாட்டிக்கிறோம். சாதி ஒழிப்பு ரொம்ப மெதுவா நடக்குது. சாதி இல்லையடி பாப்பா என்று பாட்டு பாடிய பாப்பாவிற்கு எல்லாம் கொள்ளு பேத்தி பிறந்தாச்சு. இன்னும் சாதிக்கலவரம் இந்தியா முழுவதும் இருக்கிறது. ஏதோ தமிழர்களை மட்டும் சாடுவதாக நினைக்க வேண்டாம். நகரத்தில் இருப்பவர்கள் என்னிடம் என்னங்க சாதி என்று இன்னமும் பேசி கொண்டே இருக்கிறீர்கள் என்று? சரவண பவனில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு சாதி எங்கிருந்து தெரியும். கொஞ்சம் தள்ளிப்போனால் தட்டில் சாப்பாடு கொடுக்க மாட்டுக்கிறார்கள். அந்த அநியாயத்தை பத்திரிக்கைகள் கூட சுட்டுக் காட்டுவதில்லை. என்ன அக்கிரமம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். சாதி மாறவில்லை என்பது தான் நிஜம். சொல்லுவதற்கே பயமாக இருக்கிறது. இப்போது உற்றுக் கவனித்தீர்கள் என்றால், 'தேவர் மகன்' கதையை எப்படி எழுதியிருக்க வேண்டும். சாதிக் கலவரம் என்றால் ரெண்டு சாதி காட்ட வேண்டும் அல்லவா? ஆனால், நான் காட்டவே இல்லை. நான் சொல்ல நினைத்தது அது தான். ஏன் வம்பு என்று நான் சொல்லவே இல்லை' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

இணையதள, வாட்ஸ்ஆப் விமர்சனங்களைத் தடுக்க முடியாது.. தேவையுமில்லை... - அதான் கமல் ஹாஸன்!!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது. அப்போது திடீரென தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இணையதளப் பத்திரிகைகளே வேண்டாம் என முடிவெடுத்து, அறிவித்தும் விட்டனர். வாய்மொழியாகத்தான்.

சரி, எந்த நிகழ்ச்சிக்கும் போக வேண்டாம் என முடிவு செய்து, அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்கத் தொடங்கிய நிலையில், முதல் அழைப்பு கமல் ஹாஸனிடமிருந்து வந்தது. சவேரா ஹோட்டலில் சந்திப்பு. இத்தனைக்கும் அவரது படம் உன்னைப் போல் ஒருவன் வெளியாக கணிசமான நேரம் இருந்தது.

இணையதள, வாட்ஸ்ஆப் விமர்சனங்களைத் தடுக்க முடியாது.. தேவையுமில்லை... - அதான் கமல் ஹாஸன்!!

இணையதளப் பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல், பொதுவாக பேசிக் கொண்டிருந்தார். தன் மகள் ஸ்ருதியின் இசை ஆர்வம் பற்றிப் பேசினார்.

அப்போது மறைந்த நிருபர் ராதாரவி, சார், இணையதளங்களை முடக்குவது சரிதானா? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்களும் ஒரு தயாரிப்பாளர்தானே? என்று கேட்டார்.

உடனே கமல், "இதைப் பேசக் கூடாதுன்னு நினைச்சேன். ஏன்னா இந்தத் தடையெல்லாம் நிக்காது. அறிவியல் மாற்றம், தொழில் நுட்ப வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் யாராவது ஜெயிச்சிருக்காங்களா.. யாரும் கவலைப்பட வேண்டாம். இதுவே பிரஸ் மீட்தானே. நீங்களும் இருக்கிறீர்கள் அல்லவா..." என்றால் ரொம்ப நிதானமாக. கமல் சொன்னது போல அடுத்த மூன்றாவது நாள் அந்தத் தடை விலகியது.

புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பதில் கமல் அத்தனை முற்போக்குவாதி. சினிமாவின் வருங்காலத் தொழில்நுட்பத்தைக் கணிப்பதில் வல்லவர்.

இப்போது இணையதளங்கள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வரும் விமர்சனங்களால் படங்கள் பாதிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து குமுதம் பத்திரிகையில் கமலிடம் பிரபலங்கள் கேள்வி பகுதியில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் விவேக்.

தடை வருமா?

அதில், "சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என்பவற்றின் வருகையால் தனி மனிதன் ஒவ்வொருவனும் ஒரு விமர்சகனாக மாறி, படம் பார்க்கும்போதே, தியேட்டரிலிருந்து, படம் மொக்கே.. வந்துடாதே மச்சான் என்று நூறு மெசேஜ் அனுப்புகிறார்கள். நூறு ஆயிரமாகி, லட்சமாகி படத்துக்கு வரவேண்டியவர்களை வரவிடாமல் தடுத்துவிடுகிறது. ஒரு பத்திரிகை விமர்சனமென்றால் அதில் ஒரு நேர்மை, நேர்த்தி இருக்கும். ஆனால் இவர்களின் கமெண்ட்களில் அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

நடிகர் எம்எஸ் பாஸ்கர் இறந்துவிட்டார், சிவகார்த்திகேயன் விபத்தில் மரணம் என்றெல்லாம் பொய்யான செய்திகள் பரவுகின்றன. இது சரியா.. அரசாங்கம் இதற்கு சென்சார் கொண்டு வருமா?

இதற்கு ககமலின் பதில் இது...

"இன்டர்நெட் வருவதற்கு முன்பே நானும் அண்ணன் ஜேசுதாஸ் அவர்களும் ஒரே நாளில் இறந்து போன வதந்தி எங்கள் காதுகளுக்கே எட்டியது. சிரித்தபடி ஒருவருக்கொருவர் இரங்கல் தெரிவித்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன.

பள்ளியில் ஹெட்மாஸ்டர் இறந்துவிட்டதாக திடீர் ஒப்பாரி வைத்து 10 மாணவர்கள் அழுது நடித்துக் கொண்டிருந்தபோது, அந்த ஹெட் மாஸ்டரே எனக்குத் தெரியாமல் பின்னால் நின்று வேடிக்கைப் பார்த்தார். ஒப்பாரி நாடகத்தின் ஆசிரியன் நான்தான். தண்டனை கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவர் தினமும் காலை பள்ளியின் முதல் மாடியிலிருந்து பள்ளியின் அத்தனை மாணவர்களுக்கும் அறிவுரை சொல்லும் உயர்மாடத்தில் அவர் என்னை நிதம் காலையில் நிற்கவைத்து, பேச வேண்டிய பொன் மொழிகளையும் பேச வைத்தார். அம்மனிதர் பெயர் திரு நரசிம்மன். நரசிம்மன் & ஷெப்பர்ட் என்ற ஆங்கில இலக்கணப் புத்தகத்தின் ஆசிரியர் அவர். அவர் நிஜமாகவே இறந்துபோய் இறுதிச் சடங்குக்குப் போய் நின்றபோது, இறந்தவர் முகத்தில் ஒரு சின்ன புன்னகை தெரிந்த பிரமை எனக்கு.

விமர்சனத்துக்கு வரம்போ தணிக்கையோ இருக்கக் கூடாது. தரம் குறையும்போது, விமர்சகனே விமர்சனத்தின் மதிப்பெண்ணைக் கோடிட்டுக் காட்டிவிடுவான்.

இன்டர்நெட் விமர்சனுக்கு தடைபோடுவதும், பெண்ணுக்குத் தாலி கட்டுவதும் அவர்களின் கற்புக்கு உத்தரவாதமாகாது. அவர்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நம் கலையும் திறமையும் மக்கள் ஆதரவுடன் எல்லா சமகால விமர்சனங்களையும் கடந்து வாழ உழைக்க வேண்டும் என்பதே என் பணிவிலா கருத்து.

-இவ்வாறு கூறியுள்ளார் கமல்ஹாஸன்.

 

அறிவியல் வழியில் அன்பைச் சொல்லும் “அப்புச்சி கிராமம்” திரைப்படம்!

சென்னை: கோலிவுட்டில் புதியதாக வர இருக்கும் "அப்புச்சி கிராமம்" திரைப்படத்தினை ஏ.ஆர் முருகாதசிடம் உதவியாளராக இருந்த வி.ஐ.ஆனந்த் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் புதுமுகங்கள் பிரவீன் குமார், அனுஷா கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் சுவாசிகா, சுஜா, கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, ஜோமல்லூரி, ஜி.எம்.குமார் ஆகிய பிரபல நடிகரகளும் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் எனத்தெரிகின்றது.

அறிவியல் வழியில் அன்பைச் சொல்லும் “அப்புச்சி கிராமம்” திரைப்படம்!

பூமியை நோக்கி வரும் எரிகற்கள்:

படத்தின் கதையின் படி, "சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை நோக்கி ஆயிரக்கணக்கான எரிகற்கள் வந்து கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

எட்டு நாட்களில் பூமியின் அழிவு:

இன்னும் 8 நாட்களில் அது பூமியை தாக்கும். அது தாக்குகிற இடத்தில் புல் பூண்டுகள் கூட தப்பிக்காது. 8 நாளில் கிட்டத்தட்ட உலகின் பெரும் பகுதி அழிந்து விடும். ஆனால் எந்தெந்த பகுதி அழியும், எது தப்பிக்கும் என்று தெரியாது.

அப்புச்சி கிராம மனிதர்கள்:

இந்த செய்தி உலகம் முழுவதும் பரவுகிறது. அப்புச்சி என்னும் கிராமத்துக்கும் செய்தி வந்து சேர்கிறது. பல்வேறு தரப்பட்ட வெள்ளிந்தியான மக்கள் வாழும் கிராமம் அப்புச்சி கிராமம்.

மனநிலையின் கோர்வைகள்:

8 நாளில் நாம் சாகப்போகிறோம் என்று கருதும் அந்த மக்களின் மனநிலையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதுதான் கதை. 8 நாட்களில் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

மாற்றங்கள் நிகழும்:

கடனை கேட்டு நச்சரித்தவன் வேண்டாம்னே அப்புறம் பார்த்துக்கலாம் என்பான். காதலை மறுத்துக் கொண்டிருந்தவள் காதலிக்க ஆரம்பிக்கிறாள். கஞ்சனாக இருந்தவன் வள்ளலாக மாறுகிறான்.

அன்பு பூத்துக் குலுங்கும் கிராமம்:

இப்படி பல மாற்றங்கள் அவர்களுக்குள் நடக்கிறது. உலகம் அழியும் ஒரு நாளைக்கு முன்பே ஊரே கூடி திருவிழா கொண்டாடுகிறார்கள். ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். பகைகள் உறவாக மாறுகிறது. அடக்கி வைத்திருக்கும் அன்பு உடைத்து கிளம்புகிறது. பூக்காத காதல்கள் பூத்து குலுங்குகிறது.

உண்மையான வாழ்க்கை:

மறுநாள் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி உலகம் அழியவில்லை, கடந்த 8 நாட்கள் வாழ்ந்த அந்த அற்புதமான வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை என்தை உணர்ந்து அது போலவே தொடர்ந்து வாழ முடிவு செய்கிறார்கள்.

வித்தியாச அனுபவம்:

இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்" என்கிறார் ஆனந்த்.

 

பிரதமர் நரேந்திர மோடியுடன் சல்மான்கான் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார் நடிகர் சல்மான்கான். எதற்காக இந்தச் சந்திப்பு, என்ன பேசினார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதை முன்னோக்கி செயல்படுத்த 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். எம்எல்எம் மாதிரி அந்த 9 பேரும் தங்களால் இயன்ற அளவு நபர்களை அழைத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் சல்மான்கான் சந்திப்பு

இந்த அழைப்பும் செயலும் சங்கிலித் தொடர் போல நிகழ்ந்து, பொதுமக்கள் ஆர்வத்துடன் தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது மோடியின் எதிர்ப்பார்ப்பு. ஆனால் இது வெறும் விளம்பர ஸ்டன்ட் மாதிரி மாறி வருகிறது.

பிரதமரால் தூய்மை இந்தியா திட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் சல்மான் கான். தூய்மை இந்தியா திட்டத்துக்கு தன்னை நியமித்ததற்காக மோடிக்கு சல்மான் கான் பாரட்டும் நன்றியும் தெரிவித்திருந்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தில் சல்மான்கான் தானாகவே தன்னை இணைத்து கொண்டார் என்று பிரதமர் மோடியும் சல்மான் கானைப் பாராட்டினார்.

இந்த நிலையில்தான் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் சல்மான்.

 

கமலுக்கு வயது 60.. அவரது சினிமா வாழ்க்கைக்கு வயது 55!

சென்னை: கலைஞானி, உலகநாயகன் என்று புகழப்படும் கமல் ஹாஸன் இன்று தனது 60வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்திய திரையுலகின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் கமல் ஹாஸன். படங்களில் அவரைப் போல வித்தியாசமான நடிப்பைக் காட்டிய கலைஞர் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.

கமலுக்கு வயது 60.. அவரது சினிமா வாழ்க்கைக்கு வயது 55!

நட்சத்திர ஒளிவட்டம், கூடவே அபார நடிப்புத் திறமை இரண்டும் அமையப்பெற்ற கமல், சினிமாவில் ஒரு சகலகலா வல்லவர்.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நடனம், ஒளிப்பதிவு என அனைத்து நுட்பங்களையும் அவற்றின் நவீன மாறுதல்களையும் புரிந்து, தன்னையும் அப்டேட் செய்து கொள்ளும் அபார திறமைசாலி கமல்.

கமர்ஷியல் சினிமா, மாற்று சினிமா என இரு வேறு தடங்களை சினிமாவில் சிலர் ஏற்படுத்த முனைந்தனர். ஆனால் கமலோ, இரண்டையுமே ஒன்றாக்கி சாதித்தவர்.

களத்தூர் கண்ணம்மாவில் தனது திரை வாழ்க்கையை கமல் ஆரம்பித்தபோது அவருக்கு வயது 5. தொடர்ந்து வெற்றிப் படங்கள் பலவற்றின் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். குழந்தையும் அல்லாமல் குமரனும் அல்லாத ஒரு இரண்டுங்கெட்டான் பருவம் வந்தபோது, திரைத் தொழில் நுட்பங்கள், நடனம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் காட்டி கற்றுக் கொண்டார்.

பின்னாளில் நட்சத்திர நடிகனாக உயர்ந்த போது, அவர் கற்றுக் கொண்ட அத்தனையையும் திரையில் பயன்படுத்தினார். அதனால் அவருக்கு நிகரான கலைஞர்களே இல்லை எனும் நிலையை ஏற்படுத்திக் கொண்டார்.

60 வயதில் 55 ஆண்டுகள் சினிமா வாழ்க்கைதான் என்பது வேறு யாருக்கும் அமையாத அரிய விஷயம்தான். இந்த 55 ஆண்டுகளும் கமல் ஒரு முழுமையான சினிமாக்காரராகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு இன்று 60 வயது. இந்த வயதிலும் அவர் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இரு படங்களின் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

'என் வருத்தமெல்லாம், நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போகிறேன் என்பதுதான். வயசு பத்தலையே என்பது, இன்னும் அதிக சினிமாக்களைத் தரமுடியாமல் போகிறதே என்பதற்காகத்தானே தவிர, அதிக காலம் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. இருக்கிற இந்த கொஞ்ச காலத்துக்குள் இன்னும் அதிக படங்களைத் தரவேண்டும். வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் உள்ளது.."

-இது கமல் அடிக்கடி சொல்லும் விஷயம். கமல் நம்பும் இயற்கையோ, பெரும்பான்மையானோர் நம்பும் இறைவனோ.. கமலின் ஆதங்கத்தைப் போக்கி, ஆரோக்கியத்துடனான நீண்ட ஆயுளைப் போக்கி, திரையுலகை ஆசீர்வதிக்கட்டும்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் ஹாஸன்!