நீண்ட காலமாக காதலித்து வந்த பிபாஷாவும், ஜான் ஆப்ரகாமும் தற்போது விலகி விட்டனர். இருவரும் சுதந்திரப் பறவையாகியுள்ள நிலையில் ஜான் ஆப்ரகாம் அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
சமீபத்தில் அவரும் தீபிகா படுகோனும் நெருக்கமாக பழக ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல ஜெனீலியாவுடனும் நெருங்கிப் பழகுகிறார் ஜான் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது சித்ராங்கதா சிங்குடனும் ஜான் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இருவரும் தேஸி பாய்ஸ் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துத்தான் இந்த நட்புத் தீ பற்றிக் கொண்டதாம். இருவரும் ஷூட்டிங்கின்போது ஒருவரை ஒருவர் பாராட்டித் தள்ளிக் கொள்கின்றனராம். புகழ் மழை பொழிகிறதாம். மனம் விட்டுப் பேசிக் கொள்கிறார்களாம்.
இருவருக்கும் இடையே படத்தில் நெருக்கமான காட்சிகளும் எக்கச்சக்கமாக உள்ளதாம். அதில் இருவரும் எந்தவிதமான சங்கோஜமும் இல்லாமல் நெருக்கமாக நடித்துள்ளனராம்.
இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரம் என்று யூனிட்டில் வேறு பேசி வருவதால், இருவருக்கும் இடையிலான நட்பும், நெருக்கமும் ஏகத்திற்கு அதிகரித்து விட்டதாம்.
இருந்தாலும் இது வெறும் நட்புதான் என்று இருவரது தரப்பிலும் கூறுகிறார்கள். ஆனால் வெறும் நட்பா அல்லது பெரும் உறவுக்கு முன்னோட்டமா என்பது போகப் போகத்தான் தெரியும்.