காமெடிதான் என் சாய்ஸ் - 'ட்ராக்' மாறும் ஹன்ஸிகா

Hansika Chooses Comedy Roles

இனி கவர்ச்சியான வேடங்களைவிட காமெடியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் ஹன்ஸிகா.

ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு தமிழில் 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ஹன்ஸிகா. இவற்றில் இரண்டு படங்கள் சிம்புவுடன் நடிக்கிறார்.

கவர்ச்சி நாயகியாகத்தான் முதலில் இவர் களமிறங்கினார். எங்கேயும் காதல், மாப்பிள்ளை படங்களில் இவரது கவர்ச்சியைத்தான் பிரதானமாகக் காட்டினார்கள். ஆனால் அந்தப் படங்கள் படுதோல்வியடைந்தன.

இந்த நிலையில் அவர் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள காரெக்டரில் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றி பெற்றது. அதற்கு முன் இதேபோன்ற பாத்திரத்தில் நடித்த வேலாயுதமும் அவருக்கு நல்ல பெயரைத் தந்தது.

இப்போது தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சியை விட காமெடி அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறாராம் ஹன்ஸிகா.

சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் ஹன்ஸிகாவின் பாத்திரம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவு காமெடியாக உள்ளதாம்.

அடடா... ஒரு கவர்ச்சி காமெடியாகிவிட்டதே!

 

கிராமியப்பாடல், கரகாட்டம்... இது சங்கரா டிவி பொங்கல் நிகழ்ச்சி

Sri Sankara Tv Pongal Special Progr

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில், கரகாட்டம், கிராமியப் பாடல்கள் என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் களை கட்டப் போகின்றன.

பொங்கலை முன்னிட்டு பல்வேறு தொலைக்காட்சிகளும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளாக புலவர். மா. ராமலிங்கம் தலைமையில் மானுடம் மேம்படபெரிதும் உதவுவது அருளா? பொருளா? என்ற தலைப்பில் சிந்திக்கவைக்கும் பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

காரியாபட்டி இசைகுழுவினரின் மனதைமயக்கும் கிராமியபாடல்களும், கரகாட்டமும் பொங்கல் தினத்தில் ஒளிபரப்பாகிறது.

இதைத் தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான. மாணிக்கவினயாகத்தின் சிறப்புபேட்டியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

பொங்கலன்று நேரடி விளையாட்டுப் போட்டியும், சிறப்புப் பரிசுகளும் வழங்க உள்ளது சங்கரா டிவி.

 

தமிழுக்கு போட்டோகூட கிடையாது - தெலுங்குக்கு என்றால் நேரடி அறிமுகம்! - இதான் மணிரத்னம் பாணி

Manirathnam Introduces Kadal Hero Heroines First Telugu

கடல் படத்தின் டீஸர் என்ற பெயரில் சமீப காலமாக மணிரத்னம் அண்ட் கோ செய்து வந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் காட்டமாகிவிட்டிருக்கும் நேரத்தில், அவர் செய்துள்ள இன்னொரு வேலை, தமிழ் சினிமாவை அவரைப் போன்றவர்கள் எந்த அளவு கிள்ளுக் கீரையாக மதிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

மணிரத்னம் எடுத்துவரும் கடல் படத்தில் ஹீரோவாக கார்த்திக் மகனும், ஹீரோயினாக ராதாவின் இளையமகளும் அறிமுகமாகிறார்கள்.

தான் அறிமுகப்படுத்தும் இந்த இரு புதுமுகங்களின் படங்களைக் கூட யாருக்கும் காட்டாமல் ரகசியம் காத்த மணிரத்னம், ஒரு நாள் ஹீரோவின் தலைமுடி, அடுத்த நாள் ஹீரோவின் முதுகு, இன்னொரு நாள் ஹீரோவின் கால் என்று பிட் பிட்டாக டீஸர் காட்டி வெறுப்பேற்றி வந்தார். தண்ணீரில் ஒரு படகு சொய்ங் என்று நுழையும். அவ்வளவுதான்.. அதற்குப் பெயர் 'வீடியோ டீஸராம்'. கிட்டத்தட்ட மெரினாவைக் காட்டி இதான் கடல் என்று சொல்வது போலிருந்தது.

ஹீரோயின் முகத்தையும் இதே லட்சணத்தில் 'பிட்' காட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஹைதராபாதில் வைத்து தெலுங்கு ரசிகர்களுக்கு ஹீரோவையும் ஹீரோயினையும் அறிமுகம் செய்து வைத்து, தெலுங்கில் இவர்களை முதல் முறையாக அறிமுகம் செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று அறிவித்துள்ளார்.

இதையே ஹீரோயினின் அம்மா ராதாவும் கூறியுள்ளார். அப்படியெனில் தமிழில் முதலில் அவர்கள் முகங்களைக் காட்டுவது அத்தனை கேவலமான விஷயமா?

பணம் பார்ப்பது இங்கே... படம் காட்டுவது இங்கே... ஆனால் பெருமையும் மகிழ்ச்சியும் ஹைதராபாதில் வைத்து அறிமுகம் செய்தால்தான் வருமா? என கடுப்பாகக் கேட்கிறார்கள் தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள்.

இதே ராதா, தன் மூத்த மகள் கார்த்திகாவை இதே மாதிரிதான் தெலுங்கில் முதலில் அறிமுகம் செய்தார். அங்கே சூப்பர் டூப்பர் ப்ளாப் நாயகியாகி வெளியேறினார். அவருக்கு கடைசியில் கைகொடுத்தது தமிழ் சினிமாதான் என்பது மறந்துவிட்டது போலிருக்கிறது!

 

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நெல்லை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம்

Ms University Honour Ms Viswanathan

நெல்லை: பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு நெல்லை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

காலத்தால் அழியாத பல பாடல்களுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன். இசைத் துறையில் அவரின் பங்களிப்பை பாராட்டும் வகையில் அவருக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா வரும் 11ம் தேதி நெல்லை அபிசேகபட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. இந்த விழாவின்போது தான் விஸ்வநாதனுக்கு கவுரவ பட்டம் வழங்கப்படுகிறது.

இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ஏ.கே.குமரகுரு கூறுகையில்,

பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ரோசையா தலைமை வகிக்கிறார். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரி விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சிறப்புரையாற்றுகிறார் என்றார்.

 

மரணம் போல வருமானவரித்துறையிடம் இருந்தும் தப்ப முடியாது: அமிதாப் பச்சன்

One Can T Escape Death I T Departme

மும்பை: மரணம், வருமானத்துறையிடம் இருந்து மனிதர்கள் ஒருபோதும் தப்ப முடியாது. இவை இரண்டும் மிக முக்கியமானவை என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

2001-2002 ம் ஆண்டில் 'கோன் பனேகா குரோர்பதி' என்னும் டி.வி. நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வரிமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில், உச்ச நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற 'ஜாலி எல்எல்பி' படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்தார்.

இந்திய நீதித்துறை முறைகளை கிண்டல் செய்வது போன்று இப்படம் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை பற்றி கூறிய அமிதாப், இந்த படத்தில் தான் மிகவும் விரும்பி நடித்ததாகவும், இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'ஜாலி எல்எல்பி' படத்தில் அமிதாப் தலைமை நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸ் பற்றி அமிதாப் பச்சனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்," மனிதர்களின் வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரித்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும் என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன்" என்றும் அமிதாப் கூறினார்.

 

சென்னை எக்ஸ்பிரஸுக்காக 'விஜய்' கெட்டப்புக்கு மாறிய ஷாருக்கான்

Shahrukh Wears Dhoti Chennai Express

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக நம்ம விஜய் ரேஞ்சுக்கு வேட்டி கட்டி, கூலிங் கிளாஸ் போட்டு, கண்ணைப் பறிக்கும் மஞ்சள் கலரில் சட்டை அணிந்து ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ். இிதில் தீபிகா தமிழ் பெண்ணாக வருகிறார். அவருக்கு தந்தையாக சத்யராஜும், அத்தையாக மனோரமாவும் நடிக்கின்றனர். ரயில் பயணத்தின்போது தீபிகாவை சந்திக்கும் ஷாருக் அவர் மீது காதல் வயப்படுகிறார். ரயிலில் தீபிகா தமிழில் பேச, அர்த்தம் புரியாமல் பதிலுக்கு ஷாருக் இந்தியில் பேச என்று ஒரே காமெடியாக இருக்கும்படி படமாக்கியுள்ளனர்.

தமிழ்ப் பெண்ணை காதலித்தால் நம்ம ஊர் ஆடை அணிய வேண்டும் அல்லவா. இத்தனை நாட்களாக கோட், சூட்டில் வந்த ஷாருக் இந்த படத்தில் வெள்ளை வேட்டி, மஞ்சள் கலர் சட்டை, கூலிங் கிளாஸ், கையில் பெரிய பிரேஸ்லெட், கழுத்தில் கெட்டியான சங்கிலி என்று ஒரு மார்க்கமாகத் தான் வருகிறார். அவரது போட்டோவைப் பார்த்தவுடன் ஒரு வேளை அவர் விஜயை காப்பியடித்து டிரஸ் பண்ணியிருப்பாரோ என்று தோன்றுகிறது.

திருப்பாச்சி படத்தில் விஜய் அப்படிப்பட்ட கெட்டப்பில் தான் வந்து ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டிருப்பார். மேலும் அழகிய தமிழ் மகனில் மஞ்சள் கலர் சட்டையில் வந்திருப்பார். இது தவிர பல கண்ணைப் பறிக்கும் கலர் சட்டைகளிலும் விஜய் வந்துள்ளார். இந்த சிங்குச்சா சட்டையை விஜய் விடமாட்டாரா என்று நினைக்கையில் நானும் அதே கட்சி தாங்க என்று ஷாருக் வேறு.

 

கோஹ்லியுடன் நேரத்தை செலவிடுகிறேன், ஆனால் காதல் இல்லை- நடிகை சஞ்சனா

Sanjana Denies Links With Kohli

மும்பை: கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்கும் எனக்கும் இடையே நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நடிகை சஞ்சனா தெரிவித்துள்ளார்.

நடிகை சஞ்சனாவை ஞாபகம் இருக்கிறதா. காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவருக்கு அதை அடுத்து வாய்ப்புகளே இல்லை. இதனால் அவர் பேக்கப் செய்து கொண்டு கன்னடம், தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு சென்றுவிட்டார். அதிலும் குறிப்பாக கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இளம் கிரிக்கெட் வீரரான விராத் கோஹ்லி எப்பொழுதெல்லாம் பெங்களூர் வருகிறாரோ அப்போதெல்லாம் சஞ்சனாவுடன் ஊர் சுற்றுவதாக செய்திகள் வெளியாகின. ஒரு வேலை அவர்களுக்குள் காதலாக இருக்குமோ என்ற பேச்சு அடிபட்டது.

இது குறித்து சஞ்சனாவிடம் கேட்டதற்கு,

ஆமாம், நான் கோஹ்லியுடன் நேரத்தை செலிவிடுகிறேன். ஆனால் எங்களுக்குள் நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றார்.

 

முதலில் தியேட்டர்களில்தான் விஸ்வரூபம் வெளியாகும்.. தேதி முடிவாகவில்லை! - அபிராமி ராமநாதன்

Visawaroopam Will Release Only Theaters

சென்னை: விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் மட்டுமே முதலில் வெளியாகும்... டிடிஎச்சில் அல்ல. வெளியாகும் தேதி குறித்து இன்று அறிவிப்போம் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

விஸ்வரூபம் பட வெளியீடு தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் - கமல்ஹாசன் இடையே கடந்த மூன்று நாட்களாக தொடர் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நேற்று பகல் 7 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தயாரிப்பாளர் கேயார், திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச் செயலர் பன்னீர் செல்வம், திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கமலுடன் பேசினர்.

முடிவில் டிடிஎச்சில் நாளை படத்தை வெளியிடும் முடிவை கமல் ரத்து செய்ய ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், "இரு தரப்பினரும் சந்தித்து பேசினோம். மீண்டும் சந்தித்துப்பேச இருக்கிறோம்," என்றார்.

அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூறும்போது, "முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. விஸ்வரூபம் படம் தியேட்டர்களில்தான் முதலில் ரிலீஸ் செய்யப்படும். டிடிஎச்சில் அல்ல. ரிலீஸ் தேதி பற்றி, அடுத்த சுற்றுப் பேச்சுக்குப் பிறகு சொல்கிறோம்," என்றனர்.

ஜனவரி 25-ம் தேதி தியேட்டர்களிலும் அடுத்த நாள் டிடிஎச்சிலும் வெளியிடலாமா என ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

 

ஜீ தமிழ் டிவியில் ‘ஒரு தாயின் சபதம்’! புதிய நிகழ்ச்சி

Zee Tamil Tv New Program Oru Thyin Sabatham

ஜீ தமிழ் டிவியில் ‘ஒரு தாயின் சபதம்' என்ற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது. பிரபல நடிகையும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான உமா பத்மாநாபன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

உலகில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் பொதுவானது தாய்மை. அனைத்து உயிர்களும் இந்த மண்ணுக்கு வருவது ஒரு தாயால். அப்படிப்பட்ட ஒரு தாய், தான் ஒரு குழந்தையைப் பெற்றதில் இருந்து வளர்த்து ஆளாக்குவது வரை எண்ணற்ற துயரங்களை தாங்குகின்றனர்.

அதுவும் ஒரு ஆண் துணை இல்லையெனில் இந்த பூமியில் ஒரு தாய் தனி மனுஷியாக நின்று குழந்தைகளைக் காப்பாற்றுவது என்பது மிகக்கடினமான காரியம். அப்படி ஒரு தாய், எப்படி தன் குழந்தைகளுக்காக வாழ்ந்து அந்தக் குழந்தையைப் பலகஷ்டங்களுக்கிடையில் படிக்கவைத்து ஆளாக்கி, இந்த சமூகத்தில் மதிக்கத்தக்க ஒரு மனிதனாக வளர்த்தெடுக்கிறாள் என்பதனையும் அதற்காக அந்தத் தாய் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளையும், அதற்காக அவளுக்கு ஏற்பட்ட வலிகள், வேதனைகள், அவள் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்துப் பார்க்க வைப்பதற்கான தருணம்தான் ‘ஒரு தாயின் சபதம்' எனும் நிகழ்ச்சி.

இந் நிகழ்ச்சி நமது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 12 முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணி முதல் 9.30 வரை ஒளிபரப்பாகும். பிரபல டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உமா பத்மநாபன் ஒரு தாயின் சபதம் நிகழ்ச்சியின் மூலம் களமிறங்குகிறார்.

 

தியேட்டர்களில் வெளியான 4 நாட்கள் கழித்து டிடிஎச்சில் விஸ்வரூபம்! - இது லேட்டஸ்ட் முடிவு

Viswaroopam Air On Dth After The 4th Day   

சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தை வரும் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவதென முடிவு செய்துள்ளனர்.

அதற்கடுத்த 4 தினங்கள் கழித்து இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிட்டுக் கொள்ள அனுமதிக்குமாறு கமல் விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கமலுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பேச்சு நடந்து வருகிறது.

இதில் முதல் கட்டமாக நாளை நடக்கவிருந்த டிடிஎச் பிரிமியர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்கு முக்கிய காரணம், டிடிஎச் மூலம் ரூ 3 கோடி கூட வசூலாகவில்லை என்பதுதான்.

அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்றனர். 44 அரங்குகள் மட்டும் கமலை நம்பி களமிறங்கி, இப்போது கையைப் பிசைந்து நிற்கிறார்கள்.

இந்த நிலையில் பேச்சு வார்த்தையின் மூன்றாவது நாளான நேற்று அபிராமி ராமநாதன், பன்னீர் செல்வம் ஆகியோரிடம் கமல் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, விஸ்வரூபம் படத்தை திரையரங்குகளில் வரும் ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். டிடிஎச் சந்தாசாரர்களிடம் வசூலித்த பணத்தை சரிகட்ட, அடுத்த நான்கு நாட்களில் டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதிக்குமாறு கோரியுள்ளார் கமல்.

ஆனால் குறைந்தது 3 வாரங்கள் கழித்துதான் ஒளிபரப்ப வேண்டும் திரையரங்க உரிமையாளர்கள் கண்டிப்பாக கூறிவிட்டார்களாம். ஆனால் கமலின் நிலையைப் பார்த்த பிறகு, ஒரு வாரம் கழித்து ஒளிபரப்பிக் கொள்ள சம்மதித்துள்ளனர்.

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு தினங்கள் கழிந்ததும், வார நாளான திங்களன்று படத்தை டிடிஎச்சில் போட்டால் தனக்கு நெருக்கடி குறையும் என கமல் கேட்டுக் கொண்டதால், திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் சம்மதித்துள்ளனர்.

 

டிடிஎச் சந்தாதாரர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்போம்.. கொடுக்காமலும் போகலாம்..! - இது கமல் பதில்

Kamal Reply On Dth Refund

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் பார்க்க பணம் கட்டியவர்களுக்கு அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்தாலும் கொடுப்போம்... கொடுக்காமலும் போகலாம். இது பணம் கொடுத்த அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள விவகாரம், என்றார் கமல்ஹாஸன்.

விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து கமல் ஹாஸன் இன்று பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஒரே மாதிரி பதிலையே தந்தார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அவர் பேசினார். இதனால் கடுப்பான ஒரு நிருபர், "ஏங்க கமல், ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருக்கிறீர்களே, தமிழில் பதில் சொல்ல மாட்டீங்களா?" என்று கேட்க, பின்னர் தமிழுக்குத் தாவினார்!

செய்தியாளர் கேள்விகளும் கமல் பதில்களும்...

விஸ்வரூம் வெளியாகும் தேதிதான் என்ன?

அதை நான் பிறகு சொல்வேன். அதை இப்போதே சொல்ல வேண்டும் என்று என்னை யாரும் நிர்பந்திக்க முடியாது.

படம் நாளை டிடிஎச்சில் வெளியாகவில்லை... பணத்தைத் திருப்பித் தருவீர்களா?

அதை நீங்கள் கேட்கக் கூடாது. அது பணம் கொடுத்தவர்களுக்கும் எனக்குமானது. இது என் பொருள். நான் காட்டுகிறேன். பிடித்தால் பார்க்கட்டும். பிடிக்காதவர்கள் பார்க்காமல் போக உரிமையுள்ளது.

உரிய தேதியில் படம் போடாவிட்டால் வாங்கிய பணத்தை கொடுப்பதுதானே சட்டப்படி சரி?

அந்த சட்ட விவகாரமெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவேளை தந்தாலும் தரலாம். நீங்கள் நடுவில் புகுந்து இதனை பெரிதாக்காதீர்கள்!

திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சு தொடருமா?

அது எனக்கும் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உள் பிரச்சினை. அதனை நீங்கள் பெரிதாக்காமல் இருந்தால் சரி.

 

ஜனவரி 13-ல் சமர்... தியேட்டர்கள் அறிவிப்பு!

Samar Gets Good Number Theaters   

விஸ்வரூபம் படம் தள்ளிப் போனதில் நிஜமாகவே சந்தோஷப்படுபவர் விஷாலாகத்தான் இருக்கும்.

விஸ்வரூபம் படம் கால வரையின்றி தள்ளிப் போனதால், விஷால் - த்ரிஷா நடித்த சமர் படத்துக்கு போதுமான அளவு நல்ல தியேட்டர்கள் கிடைத்துள்ளன.

டி ரமேஷ் தயாரிப்பில், திரு இயக்க, யுவன் சங்கர் ராஜ் இசையில் உருவாகியுள்ள சமர் படம் கடந்த மாதமே ரிலீசுக்குத் தயாரானது.

ஆனால் பணப் பிரச்சினை காரணமாக படம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. பிரச்சினை முடிந்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபோது, போதிய தியேட்டர்கள் இல்லாத நிலை.

இந்த சூழலில்தான், விஸ்வரூபம் பொங்கலுக்கு வெளியாகாது, காலவரையறையின்றி தள்ளிப் போகிறது என்ற செய்தி மூன்று தினங்களாக உலாவர ஆரம்பித்தது.

இது சமர் படத்துக்கு பேருதவியாக அமைந்தது. பிரச்சினை சுமூகமாக முடிந்தால் விஸ்வரூபத்தை வெளியிடலாம் என்று காத்திருந்த பெருமளவு அரங்குகளில் ஜனவரி 13-ம் தேதி சமர்தான் வெளியாகவிருக்கிறது.

 

சந்தானம் திருடிய பாக்யராஜ் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 'புதிய வடிவேலு'!

An Asst Director Claim Rights Klta

நடிகர் சந்தானம் என் கதையைத்தான் திருடி கண்ணா லட்டு தின்ன ஆசையா என படமாக எடுத்துவிட்டார் என்று உதவி இயக்குநர் ஒருவர் இன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தனது இன்று போய் நாளை வா படத்தைத்தான் சந்தானமும் ராம நாராயணனும் மோசடி செய்து படமாக எடுத்துவிட்டனர் என இயக்குநர் கே பாக்யராஜ் போலீசில் புகார் கொடுத்துள்ள நிலையில், இதே கதைக்கு சொந்தம் கொண்டாடி உதவி இயக்குநர் நவீன் சுந்தர் என்பவரும் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரில், "அன்புள்ள சிம்பு' என்ற கதையை நான் ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அதை படமாக்குவதற்காக நடிகர் ஸ்ரீநாத்திடம் கூறினேன். அவர் நடிகர் சந்தானத்திடம் இந்த கதையை கூறி சினிமாவாக எடுப்பதற்கு உதவி செய்வதாக கூறினார்.

அதன்படி மேற்கு மாம்பலத்தில் திருமண மண்டபம் ஒன்றில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படப்பிடிப்பின் போது சந்தானத்தை சந்தித்து எனது கதையை கூறினேன். நடிகர் சிம்புவை அந்த படத்தில் நடிக்க வைப்பதற்கும் நான் விரும்பினேன். இதற்கு சந்தானம் உதவி செய்வதாக கூறி எனது கதையை வாங்கி படித்தார்.

இந்நிலையில் நான் கூறிய கதையை வைத்து எனது அனுமதி இல்லாமல் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை தயாரித்து அதில் சந்தானம் நடித்துள்ளார். சிம்புவும் அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இதுபற்றி சந்தானத்திடம் தொடர்பு கொள்ள முயன்றபோது என்னை சந்திப்பதை அவர் தவிர்த்தார். அவருடைய செயல் ஒரு திருட்டு குற்றமாகும். எனவே சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா?

ஒரு படத்தில் வடிவேலுவும் அவரது கூட்டாளியும் கையில் காசில்லாமல் ஓட்டலில் சாப்பிடுவதற்காக ஒரு பலே திட்டம் போடுவார்கள். சாப்பிட்டு முடித்ததும் வடிவேலுவின் ஒட்டைப் பர்சை அடித்துக் கொண்டு கூட்டாளி ஓடுவார். அவரைத் துரத்திக் கொண்டு ஓடுவதுபோல வடிவேலுவும் ஓடி தப்பித்துக் கொள்வதாய் திட்டம்.

ஆனால் ஓட்டலில் வேறு நபரின் நிஜபர்சை அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்க, வடிவேலு அய்யோ என் பர்ஸை அடிச்சிட்டுப் போறான் என கூப்பாடு போடுவார். பர்சுக்கு நிஜமான சொந்தக்காரர் வடிவேலுவை நாலு சாத்து சாத்துவார்.

இந்த நவீன் சுந்தரின் புகார் கிட்டத்தட்ட, 'என் பர்சைக் காணோம்' என்று வடிவேலு கூப்பாடு போட்டதைப் போலத்தான் இருக்கிறது. காரணம் பாக்யராஜின் படம் வந்தது 1981-ல். இந்த சுந்தர் என்பவர் சொல்லும் கதை 2012-ல் எழுதப்பட்டது. சந்தானமும் ராம நாராயணனுமே 'இது பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தின் ரீமேக்தான்' என்று சொல்லிவிட்ட பிறகு, தனி காமெடி ட்ராக் போட முயற்சிக்கிறார் இந்த உதவி இயக்குநர் என்பதுதான் அவரது புகாரைக் கேட்ட இயக்குநர்கள் அடித்த கமெண்ட்!

 

விஸ்வரூபம் ஜனவரி 25-ம் தேதி 500 தியேட்டர்களில் வெளியாகும் - அறிவித்தார் கமல்

Viswaroopam Will Hit Screens On Jan 25

சென்னை: விஸ்வரூபம் திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக 500 திரையரங்குகளில் வெளியாகும் என்று கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார். டிடிஎச்சில் வெளியாகும் தேதி குறித்து அவர் எதுவும் அறிவிக்கவில்லை.

ஆனால், டிடிஎச் முயற்சிக்கு துணை நின்ற எந் திரையுலக சகோதரர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

விஸ்வரூபம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ஆம் தேதி 500 அரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது.

என் தொலைநோக்கைப் புரிந்து கொண்டு டிடிஎச் எனும் புதிய முயற்சிக்கு துணை நிற்கத் தயாரான என் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர் சகோதரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

தனி மனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிடிஎச்சில் எப்போது வெளியாகும் என்று கமல் எதுவும் கூறவில்லை.

விஸ்வரூபம் படம் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் முதலில் வெளியாகும் என்பதைத்தான் நேற்று காலை அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால் அதை மறுத்து, அவர்களுக்கெல்லாம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக பிரஸ் மீட் வைத்து கூறினார் கமல். ஆனால் இன்று அவர் அதே அபிராமி ராமநாதன் உள்ளிட்டோருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதே தேதியைத்தான் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!