ஜூலை 5: சூர்யாவின் சிங்கம் 2 Vs சஞ்சய் தத்தின் போலீஸ் கிரி!

சிறைக்கு செல்லும் முன் சஞ்சய் நடித்த கடைசி படமான போலீஸ் கிரியை தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார் இயக்குநர் ராம நாராயணன் மகன் என் ராமசாமி. அதே நாளில் வெளியாகிறது இன்னொரு போலீஸ் படமான சிங்கம் 2.

விக்ரம் தமிழில் நடித்த சாமி படம் இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

ஜூலை 5: சூர்யாவின் சிங்கம் 2 Vs சஞ்சய் தத்தின் போலீஸ் கிரி!   | போலீஸ் கிரி  

வரும் ஜூலை 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தை தமிழகம் முழுவதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இராம.நாராயணனின் மகன் என்.ராமசாமி வெளியிடுகிறார்.

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள போலீஸ் கிரி, மிகப்பிரமாண்டமான முறையில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ளது.

'சூரியா நடிப்பில் வெளியாகவுள்ள சிங்கம் 2 படமும் போலீஸ் சம்மந்தப்பட்ட படம் தான், அதே நாளில் வெளியாகும் போலீஸ் கிரி படமும், போலீஸ் சம்மந்தப்பட்ட கதைதான். மிகப் பெரிய பொருட்செலவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ள போலீஸ் கிரி இந்திப் படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், கே.எஸ்.ரவிகுமார் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக' ராமசாமி தெரிவித்துள்ளார்.

 

சதி பண்ணி கடத்தல் வழக்கில் சிக்க வெச்சிட்டாங்களே! - சனா கான்

சதி பண்ணி கடத்தல் வழக்கில் சிக்க வெச்சிட்டாங்களே! - சனா கான்

சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் தன்னை சதி செய்து சிக்க வைத்துவிட்டதாக புலம்பியுள்ளார் நடிகை சனா கான்.

சனா கான் உறவினர் நவித்கான் என்பவர் ஒரு 15 வயது பெண்ணை விரும்பியதாகவும், அதற்கு மறுத்த அந்தப் பெண்ணை காரில் கடத்த சனா கான் உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சனாகான் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய போலீசார் தேடினர். ஆனால் சனா தலைமறைவானார். முன்ஜாமீனுக்கு முயன்று, இப்போது கிடைத்ததும் வெளியில் வந்துள்ளார்.

வழக்கு குறித்து சனாகான் கூறுகையில், "நான் 15 வயது சிறுமியை கடத்த முயன்றதாக வெளியான செய்திகளில் சிறிதும் உண்மையில்லை. ஒரு பிரபல நடிகையாக இருந்து கொண்டு இதுபோன சின்னத்தனமான வேலைகளை செய்வேனா...

இதைக் கூட யோசிக்காமல் என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர்.

குறிப்பிட்ட சிறுமி தனது தாயுடன் வந்து என்னிடம் ஆட்டோ கிராப் வாங்கிச் சென்றாள். மற்றபடி அவளுடன் எந்த தொடர்பும் கிடையாது. சதி செய்து வழக்கில் என்னை சிக்க வைத்து விட்டனர் என்பது மட்டும் உண்மை.

நான் தலைமறைவானதாக வேறு வதந்தி பரவியது. நான் எங்கேயும் ஓடிப்போக வில்லை. படப்பிடிப்பில்தான் இருந்தேன். இப்போது ஜாமீன் பெற்றுள்ளேன். நான் முன்ஜாமீனுக்கு முயன்றதைக் கூட சிலர் தவறாகப் பேசினர். என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறை செல்வதைத் தவிர்க்க இதுதானே ஒரே வழி. இதில் தவறு என்ன?

எனக்கு எதிராக சர்ச்சைகள் கிளப்பி விடப்படுகின்றன. இதை நான் பொருட்படுத்தப் போவது இல்லை. சினிமாவில்தான் என் முழு கவனமும் இருக்கும். தமிழ், இந்தி, மலையாள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

ஜூலை 5-ம் தேதி முதல் சல்மான் கானுடன் அவர் நடிக்கும் மென்டல் இந்திப் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் சனா கான்.

 

வாடகைத் தாய் மூலம் ஷாரூக்கானுக்கு ஆண்குழந்தை - உறுதி செய்தார் கவுரி கான்

 வாடகைத் தாய் மூலம் ஷாரூக்கானுக்கு ஆண்குழந்தை - உறுதி செய்தார் கவுரி கான்

மும்பை: ஷாரூக்கானுக்கு வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்தக் குழந்தை நலமுடன் தங்களிடம் இருப்பதாகவும் கவுரி கான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கானின் வாடகைத்தாய் குழந்தை பற்றிய முழு தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த மே மாதம் 27ஆம் தேதி, அந்தேரியில் உள்ள மஸ்ரானி பெண்கள் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றின் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் மும்பை மாநகராட்சி கழகத்திற்கு வந்துள்ளது. அதில் பெற்றோர்களின் பெயராக ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிகானின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. குழந்தை 34 வாரங்களில் பிறந்ததாகவும், 1.5 கிலோ எடையுடன் இருந்ததாகவும் மாநகராட்சிக் கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் பாம்னே தெரிவித்துள்ளார்.

அந்தக் குழந்தை மஸ்ரானி மருத்துவமனையில் இருந்து ஜூஹுவில் உள்ள நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

வாடகைத் தாய் நமிதா சிப்பர்

தற்போது அந்தக் குழந்தை ஷாருக்கான் தம்பதியரிடம் சேர்க்கப்பட்டு, அவர்களது இல்லத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வாடகைத் தாய் குறித்த விபரமும் வெளியாகியுள்ளது. அவர் பெயர் நமிதா சிப்பர். ஷாருக்கான் மனைவியின் நெருங்கிய உறவினர் இவர்.

குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு அவர் லண்டனுக்குச் சென்றுவிட்டதாக ஷாருக்கானின் நண்பர்கள் கூறுகின்றனர்.

ஜூன் மாத இறுதியில் குழந்தைப் பிறப்பு பற்றிய அறிக்கை கிடைத்ததாக மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் மனிஷா மைஸ்கர் தெரிவித்துள்ளார்.

அப்போது குழந்தையின் பாலினம் குறித்து கருவிலேயே சோதனை செய்து தெரிந்துகொண்டதாக பரபரப்பான செய்தி வெளியானதால், இந்த அறிக்கையை உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.

வாடகைத் தாய்களை அனுமதிக்கும் இந்திய சட்டவிதிமுறைகள், குழந்தையின் பாலினத்தைக் கருவிலேயே பரிசோதித்துத் தெரிந்து கொள்வதை அனுமதிப்பதில்லை. இந்நிலையில் தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை நடிகர் ஷாருக்கான் மறுத்துள்ளார்.

விரைவில் இந்தக் குழந்தை குறித்து செய்தியாளர்களிடம் அவர் அறிவிப்பு வெளியிடப் போகிறாராம்.

ஷாரூக்கானுக்கு ஏற்கேனவே 15 வயதில் ஆர்யன் என்ற மகனும், 13 வயதில் சுஹானா என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை அஞ்சலிக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை.... ஜூலை 9ல் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவு

நடிகை அஞ்சலிக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை.... ஜூலை 9ல் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவு

சென்னை: நடிகை அஞ்சலியை வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் களஞ்சியத்துடன் சேர்ந்து தனது சித்தி பாரதி தேவி கொடுமைப்படுத்துவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி அளித்தார். இதையடுத்து அஞ்சலி தலைமறைவானார்.

இந்த நிலையில், அஞ்சலியை ஆஜர்படுத்தக் கோரி அவரது சித்தி பாரதி தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனால் சில நாட்கள் தலைமறைவாக இருந்த அஞ்சலி, ஹைதராபாத் காவல்துறை இணை ஆணையர் முன்னிலையில் ஆஜரானார்.

அஞ்சலியின் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சித்தி பாரதிதேவி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாரதிதேவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால் இன்று அஞ்சலியை போலீசார் ஆஜர்படுத்தவில்லை.அஞ்சலி பாதுகாப்பாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அஞ்சலிக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம், அஞ்சலி ஆஜராகத் தவறும் பட்சத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். இதனையடுத்து வரும் 9ஆம் தேதி அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

 

சன்னி லியோனுக்காக ஹிந்தி கற்கும் பரத்!

நடிகர் பரத் தற்போது சன்னி லியோனுடன் ஹிந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்காக ஹிந்தி கற்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் பரத்.

'பாய்ஸ்' படத்தில் ஷங்கர் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து காதல், பட்டியல், எம் மகன், வெயில், பழனி, சேவல், அரவாண் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் பரத். இவர் நடித்துள்ள கில்லாடி, 555 ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

சன்னி லியோனுக்காக ஹிந்தி கற்கும் பரத்!

இந்நிலையில் இவருக்கு ஒரு இந்திப் படத்தில் நடிக்க அழைப்பு வந்து உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

இந்த வாய்ப்பு குறித்து பரத் கூறுகையில், "ஒவ்வொருவருக்கும் இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சிலருக்கு கனவாக கூட இருக்கும். ஏனென்றால் இந்தி மார்கெட் அவ்வளவு பெரியது. இந்தியில் நடித்துவிட்டால் இப்போது உலகப் புகழ் கிடைத்து விடுகிறது. நான் இது பற்றி சிந்தித்ததில்லை. நாமெல்லாம் எங்கே நடிக்க போகிறோம் என்று இருந்தேன்.

ஒரு நாள் எனக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.தாங்கள் '555' படத்தின் ஸ்டில்கள்,விளம்பரங்களை பார்த்ததாகவும் பிடித்து இருந்ததாகவும் உடனடியாக மும்பை வரமுடியுமா என்றும் கேட்டார்கள். மும்பை போனேன்.அவர்களுக்கு பிடித்து விட்டது. அதுதான் 'ஜாக்பாட்' படம் எனக்கு இந்த படவாய்ப்பே ஒரு ஜாக்பாட் வாய்ப்பு போலதான். இரண்டே நாளில் முடிவாகிவிட்டது.

ஜாக்பாட் படத்தை தயாரிப்பது வைக்கிங் மீடியா என் டர்டெய்ன்மெண்ட் நிறுவனம். இயக்குவது கெய்சாத் குஸ்தாத். இவர் அமெரிக்காவில் சினிமா படித்தவர். பாம்பே பாய்ஸ், பூம் போன்ற படங்களை இயக்கியவர். கத்ரினா கய்ப்பை அறிமுகம் செய்தவரே இவர்தான். படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்த்தர் சுராவ்ஸ்கி. இவர் போலந்துகாரர். ஹாலிவுட், ஈரானிய, கொரியன் படங்களில் பணியாற்றியவர்.இந்தப் படத்துக்கு 7 பேர் இசை அமைக்கிறார்கள். இது ஒரு காமெடி த்ரில்லர்.

சன்னி லியோனுக்காக ஹிந்தி கற்கும் பரத்!

படத்தில் நான், சச்சின் ஜோஷி, நஸ்ருதீன் ஷா, சன்னி லியோன் நான்கு பேர் முக்கிய கேரக்டர்கள்.எங்களைச் சுற்றித்தான் கதை நிகழும். நான்கு பெரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஏமாற்றிக் கொள்ளை அடிப்போம். நான் பாண்டிசேரியிலிருந்து கோவா போய் தங்கிவிட்ட தமிழ்ப் பையனாக நடிக்கிறேன். அங்குள்ள கேஸினோ, எனப்படும் கேளிக்கை விடுதியில் வேலை பார்ப்பேன். இந்தக் கதை கோவா, மும்பை என இரண்டு நகரங்களிலும் நடக்கும். இதில் நடிக்கும் நடிகர்களில் இளையவன் நான்தான். இருந்தாலும் தமிழ் திரையுலகின் மீதுள்ள மரியாதையால் என்னை அன்பாக நடத்துகிறார்", என்றார்.

 

பிரபு தேவாவின் திடீர் தெலுங்குப் பாசம்!

பிரபு தேவாவின் திடீர் தெலுங்குப் பாசம்!

தமிழில் அறிமுகமாகி, தமிழில் வெயிட்டாக சம்பாதித்து சொத்து பத்து வாங்கிய பின், 'எனக்கு தெலுங்கு சினிமாதான் எல்லாமே..', 'நான் பாலிவுட்டைத்தான் நேசிக்கிறேன்...', 'மலையாளத்தில் மாதிரி சினிமா எடுக்க முடியுமா?' என்றெல்லாம் பீத்திக் கொள்வது நடிகர் - நடிகைகள் வழக்கம்.

இது கொஞ்சம் கான்ட்ராவர்சி ஆகிவிட்டால், டஅய்யய்யோ... நான் அப்படிச் சொல்லவே இல்ல, வேணும்னே அந்த ரிப்போர்ட்டர் அப்படி எழுதிட்டார்' என்று பல்டியடிப்பதும் கூட வழக்கம்தான்.

இதோ இதில் முதலில் சொன்ன நடிகர் பட்டியலில் இப்போது சேர்ந்திருப்பவர் பிரபு தேவா.

இவர் நடன இயக்குநராக அறிமுகமானது ஒரு தமிழ்ப் படத்தில்தான். ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுபவராக வாழ்க்கையைத் தொடங்கியது இதயம் படத்தில். ஞ ஜென்டில்மேனில் வந்த சிக்குபுக்கு ரயிலேதான் இவரை பாப்புலராக்கியது. காதலன் படத்தில் ஹீரோவானார். ஒரு தமிழ் முஸ்லிம் பெண்ணைத்தான் விரட்டி விரட்டி காதலித்து கல்யாணம் பண்ணார்.

சுத்தமாக மார்க்கெட் போன நிலையில்தான் தெலுங்குக்குப் போனார். இரண்டு படங்கள் இயக்கினார். ஆனால் தமிழில் நான்கு படங்கள்...

ஆனால் சமீபத்தில் அவர் ஹைதராபாதில் பேசியிருப்பதைப் பாருங்கள்...

"தெலுங்கு சினிமா எப்போதுமே என் இதயத்துக்கு நெருக்கமானது. காரணம், பாலிவுட்டில் இன்று நான் இருக்கும் நிலைக்குக் காரணம், தெலுங்கு சினிமாவில் நான் சாதித்தவைதான். என் வாழ்க்கையில் அனைத்துமே தொடங்கியது இங்கிருந்துதான். அதனால் ஹைதராபாத் எனக்கு வீடு மாதிரி உணர்கிறேன்," என்றார்.

அடடா, உங்க வீட்டை அந்த 'வீட்டிலேயே' கட்டியிருக்கலாமே... எதுக்கு சென்னையில் கட்டிக்கிட்டு வேண்டா வெறுப்பா வாழறீங்க பிரபுதேவா?

 

புற்று நோயின் பிடியில் பிரபல இயக்குநர் ராசு மதுரவன்!

புற்று நோயின் பிடியில் பிரபல இயக்குநர் ராசு மதுரவன்!

சிகரெட், போதைப் பாக்கு, போதைப் புகையிலை... இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளாத சினிமாக்காரர்கள் ரொம்பக் கம்மி. மற்றவர்கள் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகி உயிரை சிறுகச் சிறுக போகடித்துக் கொண்டிருப்பவர்களே.

இந்தப் பழக்கத்தால் கேன்சர் நிச்சயம் என்று தெரிந்தும் அதை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. 'இது மிகவும் கொடியது' என அரசுத் தரப்பு நியூஸ் ரீலை, சிகரெட் ஊதியபடிதான் சினி்மாக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் ராசு மதுரவன் நிலையை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவன் ராசு மதுரவன். மறைந்த மணிவண்ணனிடம் பணியாற்றியவர்.

பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். குடும்பம், கிராமத்து உறவுகளை அருமையாகச் சித்தரித்த மாயாண்டி குடும்பத்தார் படம் இவர் உருவாக்கியதுதான்.

இவருக்கு இப்போது நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் கேன்சர் நோய் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து தீவிர சிகிச்சை செய்து வருகின்றனர். இது கொஞ்சம் முற்றிய நிலையில் இருப்பதால், உறவினர்களும் நண்பர்களும் அதிர்ந்து நிற்கிறார்கள்.

காரணம், இந்த சிகரெட் மற்றும் பாக்குப் பழக்கம்தான் என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

மக்கள் நன்கறிந்த ஒரு கலைஞன் கண்ணெதிரே புற்றின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார் புகைப் பழக்கத்தால். புகையின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் திரையுலக கலைஞர்களும் மற்றவர்களும், எப்படி அதிலிருந்து வெளிவரப் போகிறார்கள்?

 

''அழுது கொண்டே இருக்கிறேன்.... நீ எங்களுடனேயே இருந்திருக்கக் கூடாதா?''

லண்டன்: தனது மூத்த சகோதரி சார்லெட் எமிலியின் மறைவால் அவரது இளைய தம்பியான பாரிஸ் பிராஸ்ன் பெரும் வருத்தமடைந்துள்ளார்.

பியர்ஸ் பிராஸ்னின் முதல் மனைவியான காஸன்ட்ராவின் மகள் சார்லெட் தனது 41வது வயதில் புற்றுநோய்க்கு மரணமடைந்துள்ளார். இதனால் பிராஸ்னன் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

சார்லெட்டின் மரணம் குறித்து பிராஸ்னின் 2வது மனைவி கீலி ஷேவ் ஸ்மித்துக்குப் பிறந்தவரான 12 வயது பாரிஸ் சோகமும், உருக்கமான இரங்கலும் தெரிவித்துள்ளார்.

''அழுது கொண்டே இருக்கிறேன்.... நீ எங்களுடனேயே இருந்திருக்கக் கூடாதா?''

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

டியர் சார்லெட், நீ ஒரு அதிசயக்கத்தக்க சகோதரி. அருமையானவர்கள் எல்லாம் சீக்கிரமே மரணித்துப் போகிறார்கள். நீ அவர்களில் ஒருவர்.

நான் சிறு குழந்தையாக இருந்தபோது என் கைப்பிடித்து நடத்திக் கூட்டிச் சென்றது இன்னும் நினைவில் உள்ளது. இப்போது நான் வளர்ந்து விட்டேன். ஆனாலும் உன் கைப்பிடியை நான் மறக்கவில்லை. நான் பார்த்ததிலேயே மிகவும் ஆச்சரியமான பெண் நீதான். உண்மையான போராளி.

நான் உன்னை மிஸ் பண்ணப் போகிறேன். தினசரி உன்னை நினைத்துப் பார்க்கப் போகிறேன்.

எனக்கு நீதான் மிகப் பெரிய உந்துசக்தி. போராட்டம்தான் வாழ்க்கை என்பதை கற்றுக் கொடுத்தவள் நீ. அன்பு செலுத்தக் கற்றுக் கொடுத்தவள் நீ. எனது இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்.

நான் பிறந்தபோது நீ என்னை கையில் தாங்கி நின்ற புகைப்படத்தை காலையிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை. அழுது கொண்டே இருக்கிறேன்.... நீ எங்களுடனேயே இருந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது.

உன்னுடைய கடைசி வார்த்தை என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது அருகில் இல்லாமல் போனதற்காக வருந்துகிறேன். நிச்சயம் ஒரு நாள் உன்னை வந்து சந்திப்பேன்... அதுவரை நம் குடும்பத்தை நீ பார்த்துக் கொண்டிரு....!