மகேஷ்பாபுவுடன் ஜோடி சேரும் ஸ்ருதி.. ரேட் ரூ 2 கோடி!!

ஹைதராபாத்: தெலுங்கின் நம்பர் ஒன் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன். இந்தப் படத்தில் அவருக்கு சம்பளம் ரூ 2 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆகடு படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, இப்போது தன் அடுத்த பட வேலைகளைத் தொடங்கிவிட்டார்.

கொரட்டா சிவா இயக்கும் இந்தப் படத்தின் பூஜை வரும் செப்டம்பரில் நடக்கிறது. எப்போதுமே தன் படத்துக்கு பக்காவாகத் திட்டமிடும் மகேஷ்பாபு, தெலுங்கில் இப்போது படு பரபரப்பான நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

மகேஷ்பாபுவுடன் ஜோடி சேரும் ஸ்ருதி.. ரேட் ரூ 2 கோடி!!

இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் என டாப் நடிகைகள் இந்த வாய்ப்புக்கு முண்டியடித்தும், மகேஷ் பாபு மனசு இந்த முறை ஸ்ருதி ஹாஸனின் எடுப்பான கவர்ச்சியை நாடிவிட்டதாம்.

தமிழில் இரண்டு மெகா படங்கள் மற்றும் இந்தியில் இரு படங்கள் என படு பிஸியாக இருந்தாலும், கூப்பிடுவது மகேஷ் பாபுவாச்சே என்பதால் கஷ்டப்பட்டு கால்ஷீட்டை ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் ஸ்ருதி.

தனக்காக இவ்வளவு அட்ஜஸ்ட் செய்துள்ள ஸ்ருதியைக் குளிர்விக்கும் விதத்தில், அவருக்கு சம்பளமாக ரூ 2 கோடியைத் தர முன்வந்துள்ளாராம் மகேஷ் பாபு (தயாரிப்பாளர் யாராக இருந்தாலும், ஹீரோயினுக்கு சம்பளம் பேசுவது ஹீரோதானே!).

ஆக, ஹைதராபாதிலும் ஸ்ருதிக்கு ஒரு ஆடம்பர பங்களா ரெடி!

 

'ல்தகா சைஆ'வை கேட்டால் லிங்குசாமிக்கு அனுஷ்கா நினைப்பு வருதாம்யா!

சென்னை: அஞ்சான் படத்தில் வரும் காதல் ஆசை பாடலை கேட்டால் இயக்குனர் லிங்குசாமிக்கு அனுஷ்காவின் ஞாபகம் வருகிறதாம்.

சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படத்தின் பாடல் பிரீமியர் நிகழ்ச்சி சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஞ்சான் பட பாடல்களில் சூரஜ் சந்தோஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள காதல் ஆசை பாடல் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

'ல்தகா சைஆ'வை கேட்டால் லிங்குசாமிக்கு அனுஷ்கா நினைப்பு வருதாம்யா!

காதல் ஆசை பாடலை கேட்டால் உங்களுக்கு சட்டென்று யார் நினைவுக்கு வருகிறார்கள் என்று அஞ்சான் இயக்குனர் லிங்குசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அனுஷ்கா பெயரைக் கூறினார்.

இது குறித்து லிங்குசாமி கூறுகையில்,

நான் அனுஷ்காவின் தீவிர ரசிகன். எந்த காதல் பாட்டை கேட்டாலும் என் நினைவுக்கு வருபவர் அனுஷ்கா தான் என்றார்.

அனுஷ்கா வெறியராக இருக்கும் லிங்குசாமி இதுவரை அவரை தனது படங்களில் நடிக்க வைத்தது இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

 

த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுடன் ஸ்ரீதேவி நடிக்கவில்லை- இயக்குநர் விளக்கம்

சென்னை: த்ரிஷ்யம் படத்தின் தமிழ் பதிப்பில் நடிகை ஸ்ரீதேவி நடிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.

மலையாளத்தில் மோகன் லால் - மீனா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தை, கமல் ஹாஸனை வைத்து தமிழில் எடுக்கிறார் ஜீத்து ஜோசப்.

த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுடன் ஸ்ரீதேவி நடிக்கவில்லை- இயக்குநர் விளக்கம்

இந்தப் படத்தில் கமல் ஹாஸன், கவுதமி, அபிராமி போன்றவர்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முக்கியமான வேடத்தில் ஸ்ரீதேவி நடிப்பார் என செய்திகள் பெரிய அளவில் வெளியாகின.

கமலும் ஸ்ரீதேவியும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து நடிக்கிறார்கள் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது.

ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர். அவர் கூறுகையில், "என் படத்தில் கமலுடன் ஸ்ரீதேவி இணைவதாக பல பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்தேன்.

இந்த செய்திகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் என் படத்தில் ஸ்ரீதேவி இல்லை என்பது மட்டுமே உண்மை," என்றார்.

 

ஜூனியருக்கு ஒரு ஜூனியர்... ஆண் குழந்தைக்கு தந்தையானார் என்டிஆர்!

ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் தந்தையாகியுள்ளார்.

என்.டி. ராமாராவ் குடும்ப வாரிசான ஜூனியருக்கும் அவர் மனைவி லட்சுமி பிரணதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஜூனியருக்கு ஒரு ஜூனியர்... ஆண் குழந்தைக்கு தந்தையானார் என்டிஆர்!

தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் ஜூனியர் என்டிஆர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ட்விட்டருக்கு வந்து, இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

'நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ட்விட்டருக்கு வருகிறேன். இன்று ட்வீட் செய்ய வேண்டும் என நான் உணர்கிறேன். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும் எனது நன்றிகள். உங்கள் அனைவரையும் விரும்புகிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக தந்தையாகியுள்ள ஜூனியர் என்டிஆருக்கு நடிகை சமந்தா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் மனோஜ் மஞ்சு உள்ளிட்டோரும் வாழ்த்தியுள்ளனர்.

 

இயக்குநர்கள் விழுந்தால் கைதூக்கிவிட யாருமில்லை - கே பாக்யராஜ்

சென்னை: ஒரு ஹீரோவுக்கு நான்கு படங்கள் தோற்று ஒரு படம் ஜெயித்தால் கூட பிரச்சினையில்லை. ஆனால் இயக்குநர் ஒரு படத்தில் விழுந்தாலும் தானே எழுந்தால்தான் உண்டு, கைதூக்கிவிட யாருமில்லை, என்றார் கே பாக்யராஜ்.

திலகர் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது:

இயக்குநர்கள் விழுந்தால் கைதூக்கிவிட யாருமில்லை - கே பாக்யராஜ்

"இந்த திலகர் படக்குழுவினரில் யாரையுமே எனக்குத் தெரியாது. நண்பர் சுரேஷ் காமாட்சிமூலம் இங்கு வந்திருக்கிறேன். அவரும் ஒரு ராங் நம்பர் மூலம் அறிமுகமானவர்தான். இங்கு வந்ததும் பலரும் பேசியதைப் பார்க்கும் போது இது குடும்ப விழா போல உணர்கிறேன்.

இந்த கதாநாயகன் துருவா நன்கு வர வேண்டும், வளர வேண்டும், பெரிய கதாநாயகன் ஆகவேண்டும் என்று மதியழகன். ராஜேஷ் போன்றவர்கள் அக்கறை எடுத்துள்ளது மகிழ்ச்சி. இப்படிப்பட்ட ஊக்கம் தரும் ஆட்கள் அவசியம் தேவை.

நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு இப்படி ஒருவரும் இல்லை. நான் கதாநாயகனாக ஆசைப்பட்ட காலத்தில் பாண்டி பஜார் பக்கம் போவேன்.

அங்கு விதவிதமாக கலர் கலராக ஸ்டைலாக டிரஸ் போட்டுக் கொண்டு வருபவர்களைப் பார்ப்பேன். நமக்குக் கதாநாயகன் ஆசை சரிப்பட்டு வராது என்று நினைப்பேன். சாப்பாடு ஒருவேளைக்கே அல்லாடும் நிலைமையில் இப்படி எல்லாம் டிரஸ் வாங்க நான் எங்கு போவது?

அதனால் ஆசையை விட்டுவிட்டேன். உதவி இயக்குநராக ஆகி இயக்குநர் ஆனால் போதும் என்று நினைத்தேன்.

அப்படித்தான் எங்க டைரக்டரிடம் சேர்ந்தேன். அவர் ஒருநாள் என்னைக் கூப்பிட்டார். நீ கதாநாயகனாக நடிய்யா என்றார். நான் மறுத்துவிட்டேன்.

கதாநாயகனாக நடிக்க யாரும் கிடைக்கவில்லை. நீதான் நடிக்கப் போகிறாய் என்றார். நான் சொன்னேன்.. நீங்கள் மூன்று படத்தில் சம்பாதித்ததை நாலாவது படத்தில் விடவேண்டுமா? நன்றாக போசனை செய்யுங்கள் என்றேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது நீ நடி. என்றார். அப்படித்தான் 'புதியவார்ப்புகள்' படத்தில் நடித்தேன்.

பிறகு 'சுவர் இல்லாத சித்திரங்கள்' எடுக்கும் போதும் கூட நமக்கு நடிப்பு வேண்டாம். இயக்கினால் போதும் என்றே நினைத்தேன். நடிக்கத் தேர்வு செய்து வைத்திருந்த பையன் படப்பிடிப்பு ஒருவாரம் இருக்கும் போது ஓடிவிட்டான். வேறு வழியில்லாமல் நான் மறுபடியும் மேக்கப் போட வேண்டியிருந்தது. நடித்தேன்.

கதாநாயகனாக அறிமுகமாவது சிரமம். நுழைந்து விட்டால் நின்று விடலாம். ஒரு படம் ஓடிவிட்டால் நாலுபடம் ஒடவில்லை என்றால் கூட தாக்குப் பிடித்து விடமுடியும். வண்டி ஒடும். நாலுபேர் நாலு படம் இயக்கினால் ஒருத்தர் மூளையைக் கசக்கி படடெடுத்தால் கூட படம் ஓடிவிடும்.

இயக்குநர்கள் அப்படியில்லை. செய்கிற வேலையிலேயே நொந்து நூலாகி விடுவார்கள். விழுந்தால் நானே எழுந்தால்தான் உண்டு. யாரும் கை தூக்கி விட மாட்டார்கள்.

கதாநாயகனுக்கு நாலு படத்தில் ஒன்று நன்றாக இருந்தால் போதும். இந்த வசதி இயக்குநருக்கு இருக்காது.

இன்று நடிகர்கள் தினசரி ஹோம் ஒர்க் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

'கிழக்கே போகும் ரயில்' படத்தின் போது எப்போதும் என்னுடன் இருப்பார் ஒருவர் .அவர் விஜயன். கேரளாக்காரர் நான்தான் அவரை எங்கள் இயக்குநரிடம் உதவியாளராகச் சேர்த்து விட்டேன். ஆனால் அவருக்கு நடிக்க ஆசை. ஏதாவது வேடமிருந்தால் தரச்சொல்லி நச்சரிப்பார். அப்படி அவரை நடிக்கச் சொன்னேன். ஒரு சிறு வேடம் என்று எங்கள் டைரக்டரிடம் சொன்னேன். நான் அவருக்கு எழுதியிருந்த வசனங்களைப் பார்த்து என்னய்யா எங்க பார்த்தாலும் வருகிறான் என்றார். கதாநாயகன் மாதிரி வருகிறான் என்றார்.

படத்தில் சுதாகரையும், ராதிகாவையும் துரத்தும் காட்சியில் இடையில் நுழைந்து பட்டாளத்தானாக விஜயன் வந்து நிற்பது நல்ல வரவேற்பை பெற்றது. போகிற இடமெல்லாம் அவருக்கு அத்தனை கைதட்டல்கள்; வரவேற்பு. இதை எங்கள் இயக்குநர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

'நிறம் மாறாத பூக்கள்' படத்தின் கதையை சொல்லி எங்கள் இயக்குநரிடம் சம்மதம் வாங்கியிருந்தேன். ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். விஜயனே நடித்தால் போதும் நன்றாக இருக்கும் என்றார் அவர். அப்படித்தான் விஜயன் பெரிய ஆளானார்.

அதே விஜயன் என்னுடன் நடிக்கும் சந்தர்ப்பம் வந்தது. என்னை மூன்று மணிநேரம் காக்க வைத்தார். அலட்சியமாக தாமதமாக வந்து சேர்ந்தார். நான் அவரிடம் கேட்டேன் 'என்னய்யா சிறுவேடம் இருந்தால் கொடுங்கள் என்று கெஞ்சியது நினைவில்லையா?' என்று.

நெளிந்து கொண்டே 'சாரி' என்றார். இப்படிப்பட்ட வசதி வாய்ப்பெல்லாம் கதாநாயகர் களுக்கு மட்டுமே உண்டு. படத்தின் பாத்திரம் பேசும் வசனம் முக்கியம்," என்றார்.

 

பெண்களுடன் ஆபாச கோலத்தில் சாமியார் - படத்துக்கு தடைகோரி வழக்கு

சென்னை: நான்கு இளம் பெண்களுடன் ஆபாச கோலத்தில் சாமியார் ஒருவர் உள்ளபடி சித்தரிக்கப்பட்டுள்ள சொர்க்கம் என் கையில் என்ற படத்துக்கு தடை கோரியுள்ளது ஒரு இந்து அமைப்பு.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த இந்து தர்மா சக்தி அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சொர்க்கம் என் கையில்' என்ற தமிழ் திரைப்படம் குறித்த விளம்பரத்தைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

பெண்களுடன் ஆபாச கோலத்தில் சாமியார் - படத்துக்கு தடைகோரி வழக்கு

அதில் இந்து சாமியார் ஒருவர், ஆபாச உடையணிந்த நான்கு பெண்களுடன் இருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் காவி உடை அணிந்திருப்பது போன்றும் படம் வெளியிடப்பட்டுள்ளது.

இது, இந்து மத ரீதியாக பாதிப்பைப் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. காவி அணிந்த இந்து சன்னியாசிகள், ஒழுக்கத்துக்கு மாறாகவும், சட்ட விரோதமாகவும், நேர்மையில்லாத செயல்களில் ஈடுபடுவர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

கன்னடத்திலிருந்து இந்த படத்தைத் தமிழில் மொழி மாற்றம் செய்து, "சொர்க்கம் என் கையில்' என்ற பெயரில் மதன் பட்டேல் என்பவர் திரையிட உள்ளார். அதனால், இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்," என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தணிக்கைக் குழுவுக்கும் பட நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.