மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களுக்கு தமிழ் குடும்பங்கள் மத்தியில் பெரும் மதிப்பு உண்டு. இனிய இசை, தரமான காட்சிகள் கொண்ட படங்களுக்காக பெயர் பெற்ற இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிக்கிறது.
படத்தின் தலைப்பு உயிருக்கு உயிராக. இயக்குபவர் விஜய மனோஜ்குமார்.
இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் விஜய மனோஜ் குமார், "பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த எனக்கு, 1987 இல் எனது முதலாவது படமான மண்ணுக்குள் வைரம் இயக்க வாய்ப்பளித்தார் கோவைத்தம்பி...25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விஜய வருடத்தில் எனது பெயருடன் விஜய சேர்த்து, விஜய மனோஜ்குமாராக எனது 25 ஆவது படமாக உயிருக்கு உயிராக படத்தை இயக்கும் வாய்ப்பினையும் அளித்திருக்கிறார்.
தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும் நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கும் பெற்றோர்களே, தங்களது குழந்தைகள் படிக்கும் காலத்தில் காதல் வயப்பட்டுத் தடம் மாறும் வேளைகளில் ஆறுதலாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இந்தப் படத்தில் அப்படி ஒரு பொறுப்பான தந்தையாக பிரபு நடித்திருக்கிறார்.
படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியுடன் கிளைமாக்ஸில் புதிதாக ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்...
படம் வந்தபிறகு நிச்சயம் அந்த விஷயம் உங்களை பிரமிக்க வைக்கும்... என் வயது என்ன என்று எல்லோரும் கேட்பார்கள்.. அந்த அளவிற்கு இளமையாகவும் புதுமையாகவும் கிளைமாக்ஸினை அமைத்திருக்கிறேன்... இந்த நகரமே, இந்த மாநிலமே ஏன் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு அது இருக்கும்..." என்றார்.
உயிருக்கு உயிராக படத்தில் சஞ்சீவ்- நந்தனா, சரண்குமார்-பிரீத்திதாஸ் ஆகியோர் நாயக, நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் முக்கியமான கவர்னர் கதாபாத்திரத்தில் ரங்கபாஷ்யம் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளர் ஆனந்த்குமார் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கவிஞர் நந்தலாலா, சினேகன் மற்றும் இயக்குனர் விஜய் மனோஜ்குமார் ஆகியோர் தலா இரண்டு பாடல்களை எழுத இசையமைக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சாந்தகுமார்.
முத்தாய்ப்பாகப் பேசிய தயாரிப்பாளர் கோவைத்தம்பி, "படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி... பிரிவியூ ஷோ போடும் நாள் நிச்சயதார்த்த நாள்... அதன் பிறகு நீங்கள் பெண்ணிடம் குறைகண்டுபிடித்து மக்களிடத்தில் சொல்லிவிடக்கூடாது... அவளின் நிறைகளைத் தான் சொல்லவேண்டும்...அப்பொழுது தான் படத்தின் வெற்றி என்னும் திருமணம் இனிதே நடைபெறும் .." என்று கலகலக்க வைத்தார்.
இந்தச் சந்திப்பில் கதாநாயகர்கள் சஞ்சீவ், சரண்குமார் கதாநாயகிகள் பிரீத்திதாஸ், நந்தனா, ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார், இசையமைபபாளர் சாந்தகுமார், மென்பொருள் நிபுணராக இருந்து தற்பொழுது நடிக்க வந்திருக்கும் ரங்கபாஷ்யம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.