'என்னது விஷாலுக்கு சம்பள பாக்கியா... அந்தப் படத்தாலே நான் போண்டிங்க!' - சமர் தயாரிப்பாளர்

Samar Producer Denies Vishal S Comp

சென்னை: சமர் படத்தில் விஷாலுக்கு பைசா பாக்கியில்லாமல் சம்பளம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தப் படத்தால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டமாகிவிட்டது என்று புலம்பியுள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.

விஷால் திரிஷா ஜோடி யாக நடித்த ‘சமர்' படம் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படத்தை டி.ரமேஷ் தயாரித்து இருந்தார். திரு இயக்கினார். படம் வசூலில் சுமார் என்றாலும், பார்க்கும்படி இருப்பதாக பலரும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் ‘சமர்' படத்தில் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதனை வாங்கி தரும் படியும் நடிகர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார். இதன் மீது நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது.

இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தியது. அப்போது விஷாலுக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து விட்டதாகவும் பாக்கி இல்லை என்றும் தயாரிப்பாளர் ரமேஷ் விளக்கினார். அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ‘சமர்' பட பிரச்சினையில் தனக்கு உதவவில்லை என்று நடிகர் சங்கம் மீது விஷால் குற்றம் சாட்டினார். சமர் தயாரிப்பாளர் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி தரவேண்டி உள்ளது என்றும் கூறினார்.

லிங்குசாமிக்கு நான் பணம் தரவேண்டியிருந்தபோது, என்னிடம் கறாராகே கேட்டு வாங்கிக் கொடுத்த சங்கம், 'சமர்' தயாரிப்பாளரிடம் இருந்து சம்பள பாக்கியை வாங்கித் தரவில்லை என்று விஷால் குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ‘சமர்' பட தயாரிப்பாளர் டி.ரமேஷ் கூறுகையில், "விஷாலுக்கு சம்பள பாக்கி இல்லை. முழு தொகையையும் கொடுத்து விட்டேன். ‘சமர்' படத்தில் விஷாலுக்கு சம்பளமாக ரூ.3 கோடியே 75 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பணத்தை அவர் வாங்கி விட்டார். கூடுதலாக மேலும் ரூ.25 லட்சம் கொடுத்தேன். மொத்தம் ரூ.4 கோடி விஷாலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பேசிய சம்பளத்தை விட அதிகமாகவே வாங்கிவிட்டார்.

ஒரு பைசா கூட விஷாலுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் சமர் படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் என்னை போண்டியாக்கிவிட்டது என்பதுதான் உண்மை," என்றார்.

 

சொந்த வாழ்க்கையை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி படமா காட்டறேன்! - சோனா

Sona Postponed Making Her Auto Biography   

சென்னை: இப்போதைக்கு எனது சொந்தக் கதையை படமாக்கப் போவதில்லை என்று நடிகை சோனா அறிவித்துள்ளார்.

பிரபல கவர்ச்சி நடிகை சோனா தேவ் என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்து இயக்குகிறார். இதில், "எனது சொந்த வாழ்க்கையை சொல்லப் போவதாகவும், திரையுலக வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் படத்தில் இருக்கும். இருட்டு பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்," என்றெல்லாம் மிரட்டியிருந்தார்.

இந்த அறிவிப்பால், யார் யாரைப் பற்றிய ரகசியங்களை சோனா காட்சிகளாக வைத்து கவிழ்க்கப் போகிறாரோ என்று பரபரப்பாக எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் இப்போது அத்தனையும் புஸ்ஸாகிவிட்டது. ஆம் சோனா திடீரென அந்த முடிவை கைவிட்டு விட்டாராம்.

இது குறித்து அவர் கூறுகையில், "யோசித்துப் பார்த்தேன். இப்போதே என் கதையைச் சொல்லிவிட்டால், அப்புறம் என்னை யாரும் ரசிக்க மாட்டார்களே. எனவே இப்போதைக்கு அந்த முடிவை தள்ளி வைத்துவிட்டேன். இரண்டு மூன்று வருடங்கள் போகட்டும். எப்போது வந்தாலும் என் கதை கலக்கும்," என்றார்.

 

கேரள அரசு விருதுகள்: சிறந்த நடிகர் பிருத்விராஜ் - நடிகை ரீமா கல்லிங்கல்!

Prithviraj Rima Kallingal Bag Kera

திருவனந்தபுரம்: கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது பிருத்விராஜுக்கும், நடிகைக்கான விருது ரீமா கல்லிங்கலுக்கும் கிடைத்துள்ளன.

சிறந்த நடிகர், நடிகைகளுக்கான கேரள அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அங்கு 84 படங்கள் வெளியாகின. மூத்த சினிமா இயக்குநர் ஐவி சசி, மூத்த நடிகை சுரேகா, இயக்குநர் சிபி மலயில் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்தது. இதனை கேரள சினிமா அமைச்சர் கணேஷ்குமார் முறைப்படி அறிவித்தார்.

கமல் இயக்கத்தில் வெளியான செல்லுலாய்ட் படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2006-ம் ஆண்டு வாஸ்தவம் படத்துக்காக சிறந்த நடிகர் விருது பெற்றவர் பிருத்விராஜ்.

சிறந்த நடிகை விருதை ரீமா கல்லிங்கல் பெற்றுள்ளார். '22 பிமெல் கோட்டயம்' என்ற படத்தில் நடித்தற்காக இவ்விருது கிடைத்துள்ளது.

ஆயாளும் ஞானும் படத்துக்காக லால் ஜோஸ் சிறந்த இயக்குநர் விருதினைப் பெறுகிறார்.

சிறந்த படமாக ‘செல்லு ய்டு' படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது சலீம் குமாருக்கு கிடைத்துள்ளது. சிறந்த பாடகராக விஜய் ஜேசுதாஸ், சிறந்த பாடகிய சித்தாரா தேர்வாகியுள்ளனர். எம்.ஜெயச்சந்திரன் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுள்ளார்.

மனோஜ் கே ஜெயன், சஜிதா மாடத்தில் ஆகியோர் சிறந்த குணச்சித்திர நடிகர்களுக்கான விருதுகளைப் பெற்றுள்ளனர்.

 

அமீரின் ஆதிபகவன் - விமர்சனம்

நடிப்பு: ஜெயம் ரவி, நீத்து சந்திரா, பாபு ஆன்டனி, சுதா சந்திரன்

ஒளிப்பதிவு: தேவராஜ்

இசை: யுவன் சங்கர் ராஜா

பிஆர்ஓ: நிகில்

தயாரிப்பு: ஜெ அன்பழகன்

எழுத்து - இயக்கம்: அமீர்

கிட்டத்தட்ட ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் அமீர் படம் ஆதி பகவன். என்னதான் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள் என எச்சரிக்கப்பட்டாலும், பருத்திவீரன் மாதிரி ஒரு படம் தந்த இயக்குநரின் படைப்பைக் காண குறைந்தபட்ச ஆவலாவது ரசிகர்களுக்கு இருக்கும் அல்லவா..

ஆனால் இந்தப் படம் ஜெயம் ரவிக்கு ஒரு விசிட்டிங் கார்டாகவும், அமீருக்கு தனக்குத் தானே போட்டுக் கொண்ட ரெட் கார்டாகவும் அமைந்துள்ளது.

ammerin aadhi bhagavan review   

தமிழ் சினிமா பல முறை பார்த்துவிட்ட இரட்டைவேட ஆள் மாறாட்டக் கதைதான் ஆதிபகவன்.

தாய்லாந்தில் மிகப் பெரிய டானாக, எந்த குற்றத்துக்கும் அஞ்சாதவராக வலம் வரும் ஆதி (ஜெயம் ரவி 1), நீத்து சந்திராவை ஒரு பாரில் பார்க்கிறார். இரண்டாவது சந்திப்பில் அவரைப் பிடித்துப் போகிறது. ஆதரவற்ற, பல கொடுமைகளை அனுபவிக்கும் பெண்ணான அவரை காப்பாற்றி, திருமணம் செய்யும் அளவுக்குப் போகிறார். அப்போது தன் தந்தையைக் காண மும்பைக்கு வருமாறு நீத்து அழைக்க, அதை ஏற்று ஜெயம் ரவி மும்பைக்கு கிளம்புகிறார்.

அப்போதுதான் நீத்து சந்திரா ஜெயம் ரவியை திருமணம் செய்து கொள்ள அழைத்துப் போகவில்லை... கொலை செய்யத்தான் என்பது தெரிகிறது. கதைக்களம் மும்பைக்குப் போகிறது. அங்கே கொடூர தாதாவாக, திருநங்கைத்தனம் நிரம்பிய பகவான் (ஜெயம் ரவி 2). பகவான் என்று தப்பாக நினைத்து ஆதியை போட்டுத் தள்ள போலீஸ், மைனிங் தாதாக்கள் என பெரிய கூட்டமே தேட, அதிலிருந்தெல்லாம் எப்படி ஆதி தப்பிக்கிறார் என்பது மீதிக் கதை.

ஆதி, பகவன் என இரு பாத்திரங்களில் ஜெயம் ரவி. ஆதியாக வரும்போது அவரது தோற்றமும், உடைகளும், உடல் மொழியும் செம மேன்லி! நீத்து சந்திராவை காப்பாற்ற அவர் போடும் சண்டையும் அருமை.

ஆனால் இந்த வேடத்தை ஜஸ்ட் லைக் தட் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது, ஜெயம் ரவியின் அந்த திருநங்கை பகவான் பாத்திரம். அடி பின்னி எடுத்துவிட்டார். ஆனால் இதையெல்லாம் பிரகாஷ்ராஜ் முன்பே செய்துவிட்டாரே என்பதுதான் மைனஸ்.

ஒரு நடிகராக, ஹீரோவாக ஜெயம் ரவிக்கு இது முக்கிய படம். வெறும் லவ்வர் பாய் அல்லது ரெடிமேட் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றவர் என்ற இமேஜை அடித்து நொறுக்கியிருக்கிறது இந்தப் படம்.

ஹூரோயின் நீத்து சந்திரா. இரண்டாம் பாதியில் இவர்தான் வில்லி எனும் அளவுக்கு டெரர் காட்டியிருக்கிறார். அதுவும் ஜெயம் ரவியுடன் மோதும் காட்சியில் அசத்தியிருக்கிறார். அமீர் படத்தில்தான் இதெல்லாம் சாத்தியம். ஆனாலும் இம்புட்டு இம்புட்டு.. சிகரெட் ஆகாது ஆத்தா!!

இந்த மூன்று பாத்திரங்கள் தவிர, மற்ற எல்லாருமே துணைநடிகர்கள் ரேஞ்சுக்குத்தான் வருகிறார்கள். எனவே அவர்களின் நடிப்பு அல்லது முக்கியத்துவம் குறித்து சொல்ல ஒன்றுமில்லை, சுதா சந்திரன் உள்பட.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், சாக்ஷி ஆடும் அந்த க்ளப் டான்ஸ் மற்றும் காற்றிலே பாடலும் கேட்கும்படி உள்ளன. தேவராஜின் ஒளிப்பதிவு, அமீர் சொன்ன மாதிரி ஒரு Raw Action படமாக ஆதிபகவனைக் காட்டியிருக்கிறது.

பல காட்சிகள் நம்பும்படி இல்லை என்று வெளியில் வந்து சொன்னாலும், பார்க்கும்போது நம்பும் அளவுக்கு வித்தை காட்டியிருப்பது அமீரின் கைவண்ணம்.

ஆனால் நீத்து சந்திரா வரும் இரண்டாவது காட்சியிலேயே அவரது பாத்திரம் இதுதான் என்று ஓரளவு கணிக்க முடிகிறது.

படத்தின் முதல் பாதி முழுக்க எதையோ அழுத்தமாக சொல்ல வருவதுபோன்ற பாவலா தெரிகிறது. ஆனால் எதுவுமே இல்லை. அதேபோலத்தான் இரண்டாவது பாதியும். படத்தின் இந்த தன்மைதான், பார்வையாளர்களை திருப்தியற்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

காட்சிகளின் மெதுவான நகர்வு ரொம்ப நேரம் ஊமைக்குத்து வாங்கியதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துப்பாக்கி சண்டைக் காட்சிகள் அனைத்துமே காதுல பூ ரகம்.

இப்படி ஒரு படத்தைத் தர அமீர் 5 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை... ஆறுமாதமே அதிகம்.

ஆதிபகவன் பார்த்த பிறகும், இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம் அமீர்... உங்களால் தரமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்!

-எஸ்.ஷங்கர்

 

சத்தியம் டிவியில் பட்ஜெட் பார்வைகள்

Budget Overview On Sathiyam Tv

சத்தியம் தொலைக்காட்சியில் மத்திய பட்ஜெட் பற்றி மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சி வரும் 28ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

பொருளாதார நிபுணர்கள் நேரடியாக கலந்துரையாடுகின்றனர். நேயர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.

சத்தியம் தொலைக்காட்சியில் பகல் மின்னல்கள், சத்தியம் சாத்தியமே, க்ரைம் ரிப்போர்ட், மற்றும் சத்தியத் தராசு, போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அன்றாடப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன.

அந்த வரிசையில் பட்ஜெட் சிறப்பு பார்வை விவாதமும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

 

ஷிப்டிங் முறையில் இங்கிலாந்தில் 5வது வாரமாகத் தொடர்கிறது விஸ்வரூபம் - அய்ங்கரன்

Viswaroopam Still Runs England On Shifting Basis

இங்கிலாந்தில் 5வது வாரமாக விஸ்வரூபம் படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதாக அய்ங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ரசிகர்கள் கேட்டுக் கொள்வதற்கிணங்க, புதிய புதிய ஏரியாக்களில் இந்தப் படத்தை ஷிப்டிங் முறையில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் 8 தியேட்டர்களில் இந்த வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது விஸ்வரூபம்.

இதுகுறித்து அய்ங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கிலாந்தில் 5வது வாரமாக ஓடும் முதல் தமிழ்ப் படம் விஸ்வரூபம். கமல் ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, உருது, மராட்டி பேசும் மக்கள் இந்தப் படத்தை தங்கள் பகுதிகளில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வாரம் 8 சினிவேர்ல்டு அரங்குகளில் படத்தை திரையிட்டுள்ளோம். அவரவர் பகுதிகளில் படம் வெளியாக வேண்டும் என விரும்புவோர் அதற்கான வேண்டுகோளை எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விரைவில் பாலாவின் பரதேசி உள்பட பல பெரிய படங்களை வெளியிடவிருக்கிறோம்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… ஆனா குழந்தைகள் வேண்டும்!: சல்மான்கான்

Salman Khan Kids Without Marriage

திருமணம் செய்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் குழந்தைகள் என்றால் அதிக விருப்பம் என்று கூறியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான்.

சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் என அழகு தேவதைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஹீரோ சல்மான்கான். அது என்ன ராசியோ தெரியவில்லை இவருடன் கிசுகிசுக்கப்பட்ட ஹீரோயின்கள் சிலர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர்.

47 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பதிலேயே கவனம் செலுத்தும் சல்மான்கானுக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லையாம். அதேசமயம் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் என்கிறார்.

திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள ரெடியாக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை கூகுள் ப்ளஸ்சில் ரசிகர்களுடன் சாட் செய்யும் போது கூறியுள்ளார்.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நேற்று கூகுள் பிளஸ்ஸில் ரசிகர்களுடன் வீடியோ சேட் செய்தார் சல்மான். அப்போது ரசிகர்கள் அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்டனர். அவரும் சளைக்காமல் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் திருமணப் பேச்சை எடுத்துள்ளார். அதற்கு சல்மான் கான் கூறிய பதில் இதுதான்:

"திருமணமா, எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் இஷ்டம். எனக்கு குழந்தைகள் வேண்டும். திருமணமாகாமல் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன்" என்றார்.

அது எப்படி யோசித்த ரசிகர்கள் அதற்குப் பிறகு என்ன கேட்பது என்று பேசாமல் விட்டுவிட்டனராம். ஏற்கனவே திருமணம் பற்றிய கேள்விக்கு கோர்ட் கேஸ் முடிந்த பின்னர் யோசிக்கலாமே என்று கூறியிருந்தார் சல்மான்கான்.

 

விஜய்யின் அரசியலைச் சொல்லும் படமா தலைவா?

Vijay Speaks On His Thalaivaa Movie   

தலைவா என அடுத்த படத்துக்கு தலைப்பு வைத்தது அரசியல் காரணத்துக்காகவா என விளக்கம் அளித்துள்ளார் விஜய்.

அவர் கூறுகையில், "தலைவா என்ற தலைப்பு அரசியலாகத் தெரிந்தாலும், படத்தில் அரசியல் தொடர்பான எந்தக் காட்சிகளும் இடம்பெறவில்லை.

இந்தக் கதையை துப்பாக்கி படப்பிடிப்பின்போது எனக்கு இயக்குநர் விஜய் சொன்னார். கேட்டபோதே பிடித்துவிட்டது. இதுதான் எனது அடுத்த படம் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனால் தலைவா அரசியல் படம் அல்ல. அரசியல் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால் படம் பார்க்கும்போதுதான் தலைவா என்ற தலைப்பு வைத்ததன் நோக்கம் தெரியவரும்.

இதற்கு முந்தைய படமான துப்பாக்கி ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. இதற்காக படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தியேட்டர்களுக்கு அதிக இளைஞர்கள் வருகை, பெரிய வியாபாரம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்ற பல காரணங்களால் இது சாத்தியமாகி உள்ளது என நினைக்கிறேன்.

பாசில், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். இப்போது புதியவர் நேசன் இயக்கும் ஜில்லா படமும் அந்த வரிசையில் சேரும் என நம்புகிறேன்," என்றார்.