சினிமா 100 விழாவைப் புறக்கணிக்காதீர்கள் - தெலுங்கு நடிகர்களுக்கு ஆந்திர சினிமா வேண்டுகோள்

ஹைதராபாத்: தெலுங்கானா பிரச்சினை காரணமாக சென்னையில் நடக்கும் சினிமா நூற்றாண்டு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக தெலுங்கு நடிகர்கள் அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்மாநில விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதிவரை நடிக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகர், நடிகைகள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சினிமா 100 விழாவைப் புறக்கணிக்காதீர்கள் - தெலுங்கு நடிகர்களுக்கு ஆந்திர சினிமா வேண்டுகோள்

இந்த நிலையில் தெலுங்கானா பிரச்சினையில் ஆந்திராவில் போராட்டங்கள் நடந்து வருவதால் தெலுங்கு நடிகர், நடிகைகள் சிலர் சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் என்.வி.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று ஆறு மாதத்துக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுமையடைந்துவிட்டன.

இந்த நிலையில் தெலுங்கானா பிரச்சினையை காரணம் காட்டி நூற்றாண்டு விழாவை தெலுங்கு நடிகர்கள் புறக்கணிப்பது சரியல்ல.

நூற்றாண்டு விழா மூலம் சினிமா பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியும். மூத்த நடிகர், நடிகைகளுக்கு மரியாதை செய்யும் விழாவாகவும் இது இருக்கும்.

மேடையில் அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள். எனவே தெலுங்கு நடிகர், நடிகைகள் இந்த விழாவை புறக்ககணிக்கக் கூடாது. எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.

ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினையை மையப்படுத்தி நடக்கும் போராட்டங்களால் தெலுங்கு பட உலகம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. பிற மாநிலங்களில் தெலுங்கு படங்கள் ஓடுகின்றன. ஆந்திராவில் திரையிட முடியவில்லை. சினிமாவை நம்பி ஆயிரக் கணக்கான குடும்பங்கள் உள்ளன. படங்களை தடுப்ப தால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக செயல்பட கேயாருக்கு தடை - ஆட்டத்தை ஆரம்பித்த தாணு அணி

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக செயல்பட கேயாருக்கு தடை - ஆட்டத்தை ஆரம்பித்த தாணு அணி

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் செயல்படக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 7-ந்தேதி சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு கேயார், கலைப்புலி தாணு போட்டியிட்டனர்.

இதில் தலைவராக கேயார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைமையிலான நிர்வாகிகள் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பு ஏற்றனர்.

ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கலைப்புலி தாணு குற்றம் சாட்டினார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் விதிப்படி நடைபெறவில்லை. தேர்தல் சம்பந்தமாக விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று விதி உள்ளது. அதை மீறி பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்துள்ளனர். இது போல் சங்க விதிகள் பல மீறப்பட்டு உள்ளன. எனவே கேயார் தலைவராக செயல்பட தடை விதிக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர் தயாரிப்பாளர் சங்க தலைவராக கேயார் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் எஸ்ஏ சந்திரசேகரன், தாணு அணி தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பிலிருந்த போது, கேயார் அணி தொடர்ந்து வழக்குத் தொடர்ந்து அவர்களை செயல்பட விடாமல் முடக்கி வைத்ததாக குற்றச்சாட்டு இருந்தது.

இப்போது அதே ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது தாணு அணி!

 

'ஐம்பது வயது ஆனால் என்ன... எப்பவும் நான் ஹீரோயின்தான்.. கேரக்டர் ரோல் வேணாம்!'- ஸ்ரீதேவி பாட்டி அடம்

சென்னை: ஐம்பது வயதானாலும் தான் எப்போதுமே ஹீரோயினாக நடிக்கவே விரும்புவதாகவும் கேரக்டரக் வேடங்களில் நடிப்பதை விரும்பவில்லை என்றும் ஸ்ரீதேவி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

திருமணத்துக்குப் பிறகு நீண்ட காலம் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, ‘இங்லீஷ் விங்லீஷ்‘ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் சுமாராகப் போனாலும், விமர்சகர்கள் ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

சமீபத்தில் ஜப்பானிலும் ரிலீசானது ‘இங்லீஷ் விங்லீஷ்'. அங்கும் நல்ல வரவேற்பாம்.

'ஐம்பது வயது ஆனால் என்ன... எப்பவும் நான் ஹீரோயின்தான்.. கேரக்டர் ரோல் வேணாம்!'- ஸ்ரீதேவி பாட்டி அடம்

நம்ம மார்க்கெட் இப்பவும் ஸ்டெடியாகத்தான் இருக்கு... எனவே நடிக்கலாம் என முடிவு செய்துவிட்ட ஸ்ரீதேவி, இப்போதெல்லாம் எந்த விருந்தையும் விட்டுவைப்பதில்லை. பல சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொண்டு கவர்ச்சி உடைகளில் நடையாய் நடக்கிறார்.

ஆனாலும் அவருக்கு வரும் வேடங்கள் எல்லாம் அக்கா, அண்ணி அல்லது ஆன்ட்டி மாதிரிதான் உள்ளனவாம். கதை சொல்லும் போது, நீங்கதான் படத்தில் மெயின் கேரக்டர். ஆனால் ஹீரோ - ஹீரோயின் உண்டு என்று சொல்லி வெறுப்பேற்றுகிறார்களாம் இயக்குநர்கள்.

இந்த வேடங்களில் தன்னால் நடிக்க முடியாது என உறுதியாக மறுத்துவிட்டாராம் ஸ்ரீதேவி.

''ஐம்பது வயசானால் என்ன... எனக்கு அழகும், திறமையும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இனியும் ஹீரோயினாகத்தான் நடிப்பேன்.

குணச்சித்ர வேடங்களில் நடிக்கமாட்டேன். நான் ஹீரோயினாக நடிப்பதைப் பார்த்து ரசிக்க என் ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்," என்கிறார் ஸ்ரீதேவி கெத்தாக.

கிழவியத் தூக்கி மனையில வைய்யின்ன கதையால்ல இருக்கு...!

 

சிமா விருது விழா மேடையில் நழுவிய பிரபல நடிகையின் உடை!

சமீபத்தில் துபாயில் நடந்த சிமா விருது வழங்கும் விழாவில் பிரபல கன்னட நடிகை ராகினி திவிவேதியின் உடை திடீரென நழுவியது. இதில் நடிகையை விட பார்வையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

துபாயில் நடந்த இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில், ஒரு கலவை பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி.

அப்போது திடீரென அவரது ஸ்கர்ட் நழுவி, உள்ளாடை தெரிய, ரசிகர்கள் அதிர்ந்தனர். ஆனால் இது எதுவுமே தெரியாமல் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி.

சிமா விருது விழா மேடையில் நழுவிய பிரபல நடிகையின் உடை!

இதைப் பார்த்த நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, மேடைக்கு ஓடினார். விளக்குகளை அணைக்கச் சொன்ன அவர், ராகினியை உள்ளே அழைத்துப் போய் உடையைத் திருத்தினார்.

பின்னர் மீண்டும் மேடைக்கு வந்து மிச்சத்தையும் ஆடிவிட்டுச் சென்றார் ராகினி. இந்த விழாவில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது கிடைத்தது (கன்னடப் படம் சிவாவில் நடித்ததற்காக).

சிமா விருது விழா மேடையில் நழுவிய பிரபல நடிகையின் உடை!

தனது உடை நழுவியது குறித்து கருத்து தெரிவித்த அவர், "எதுவோ தப்பா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டேதான் டான்ஸ் பண்ணேன். நல்ல வேளை விளக்குகளை அணைச்சிட்டாங்க. ஒரு விபத்துதான். அதை நான் மறக்க விரும்புகிறேன்," என்றார்.

 

ரசிகரின் செல்போனை வாங்கி தெருவில் தூக்கி எறிந்த சல்மான் கான்

ரசிகரின் செல்போனை வாங்கி தெருவில் தூக்கி எறிந்த சல்மான் கான்

மும்பை: நடிகர் சல்மான் கான் தனது ரசிகர் ஒருவர் அனுமதியின்றி தன்னை புகைப்படம் எடுத்ததால் அவரின் செல்போனை வாங்கி தூக்கி எறிந்துவிட்டார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சர்ச்சைகளின் செல்லப் பிள்ளை ஆவார். தற்போது தனது கோபத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பழம்பெரும் நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க சல்மான் கான் நேற்று மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்த அவர் காரில் இருந்து இறங்க விரும்பவில்லை.

அப்படியே காரில் கிளம்புகையில் அங்கு நின்று கொண்டிருந்த ரசிகர் ஒருவர் அனுமதியின்றி சல்மானை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான் கார் ஜன்னலின் கண்ணாடியை திறந்து அந்த ரசிகரிடம் அவரது செல்போனை கேட்டுள்ளார். அவர் கொடுத்தவுடன் அந்த செல்போனை தூக்கி எறிந்துவிட்டார்.

இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சல்மான் செய்தது சரியில்லை என்று அந்த ரசிகர் தெரிவித்தார்.

 

பார்வையில்லாத ரசிகையின் 8 ஆண்டு கால கனவை நனவாக்கிய ஷாருக்கான்

லண்டன்: பார்வையில்லாத ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் கரோலின் ஜெடர். அவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது. இங்கிலாந்தில் வசிக்கும் அவருக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது கனவு.

இந்நிலையில் திருமணம் ஒன்றுக்காக இங்கிலாந்துக்கு சென்ற ஷாருக்கானுக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷாருக்கான் கரோலினை சந்தித்தார்.

பார்வையில்லாத ரசிகையின் 8 ஆண்டு கால கனவை நனவாக்கிய ஷாருக்கான்

இது குறித்து கரோலின் கூறுகையில்,

திடீர் என்று ஒரு நாள் ஷாருக் என் அருகே வந்து ஹலோ கரோலின் என்று கூறி என் தோளில் தட்டிக் கொடுத்தார். பின்னர் என்னை கட்டிப் பிடித்தார். நான் எப்படி இருக்கிறேன், லண்டன் பிடித்திருக்கிறதா என்று கேட்டார். துபாய்க்கு போக வேண்டி இருப்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டும், அதற்காக மன்னித்துக் கொள் என்றார். நான் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க 8 ஆண்டுகளாக காத்திருந்தேன்.

தற்போது அவரின் முகத்தை தொடாமல் எப்படி அனுப்புவது. கிளம்பும் முன்பு அவர் மீண்டும் என்னை கட்டிப்பிடித்தார். அப்போது அவரது முகத்தை தொட்டுப் பார்த்தேன். இந்த தருணத்தை நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன். நன்றி ஷாருக்கான் என்றார்.

 

பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று பேசிய ஆர்.கே. செல்வமணி… பகிரங்க மன்னிப்பு கேட்டார்

பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று பேசிய ஆர்.கே. செல்வமணி… பகிரங்க மன்னிப்பு கேட்டார்

சென்னை: பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இன்று தன்னுடைய பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்.கே.வி. பிரீவியூ திரையரங்கில் தமிழ் எனும் குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ‌கலந்து கொண்டார். இவ்விழாவில் ஆர்.கே.செல்வமணி, பேசியதாவது:

நான் திரையுலகில் தமிழுக்காக, தமிழர்களுக்காக எவ்வளவோ போராடி வருகிறேன். ஆந்திராவில் இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்தும் தெலுங்கு நடிகர் சங்கம், தெலுங்கு இயக்குநர் சங்கம் என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கும்.

அதேமாதிரி கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கூட கன்னட, மலையாள இயக்குநர், நடிகர் சங்கம் என்று தான் இருக்கிறது. ஆனால் இங்கு சென்னையில் மட்டும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுமாதிரி தான் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் சங்கம் என்று இருந்த பெயரை பெரும் முயற்சி செய்து தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் என்று மாற்றினேன். இதை மற்ற சங்கங்களுக்கும் செயல்படுத்த முற்படுத்தப்பட்டபோது என்னை அந்தந்த சங்கங்களில் இருந்து கழற்றிவிட்டு விட்டனர். இதையெல்லாம் யார் கேட்பது என்றார்.

அதோடு நிறுத்தாமல் பத்திரிக்கையாளர்களை பேச ஆரம்பித்து விட்டார்.

இதோ தமிழ் எனும் குறும்பட விழா நடத்தி வருகிறோம். இதுவே வேறு எதுவும் சினிமா விழாவாக இருந்தால் இங்கே முன் வரிசையில் ஒரு பத்து பதினைந்து நாய்கள் புகைப்படம் பிடித்து கொண்டு இருக்கும், நான்கு சீட் தள்ளி ஒரு முப்பது நாப்பது நாய்கள் போட்டி போட்டு வீடியோ கேமிரா மூலம் வீடியோ எடுத்து கொண்டு இருக்கும். இதோ இந்த இருக்கைகளில் (வழக்கமாக பத்திரிகையாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை காட்டி..) ஐம்பது அறுபது நாய்கள் ஏதோ தாங்கள் தான் படைக்கும் பிரமாக்கள் மாதிரி கையில் பேனாவையும், பேப்பரையும் வைத்து கொண்டு இங்கு நடப்பதையெல்லாம் கிறுக்கி கொண்டு இருப்பார்கள்.

ஆனால் தமிழ் என்ற பெயரில் குறும்படம் உருவாகும் போது ஒரு நாயையும் காணோம். இதுதான் தமிழின் நிலை என்று பத்திரிகையாளர்கள் யாரும் அந்த அரங்கத்தில் இல்லாத தைரியத்தில்(முறையான அழைப்பு இல்லாத‌ போது பத்திரிகையாளர்கள் எவ்வாறு செல்வார்கள்?!) ஏக வசனத்தில் திட்டி தீர்த்துள்ளார். ஆர்.கே.செல்வமணி இவ்வாறு பேசும்போது அக்குறும்படம் சம்பந்தப்பட்ட இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்டவர்களும் அதேமேடையில் செல்வமணியின் பேச்சை ரசித்த படி அமர்ந்து இருந்தனர்.

செல்வமணியின் இந்த பேச்சுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆர்.கே. செல்வமணி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இயக்குநர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து இன்று காலையில் இயக்குநர்கள் சங்கத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி தன்னுடைய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார்.