திருட்டு டிவிடியை ஒழிக்கத்தான் டிடிஎச்சில் வெளியிடுகிறேன் - கமல்

I M Releasing Viswaroopam Dth Avoid Piracy

ஹைதராபாத்: திருட்டு டிவிடியை ஒழிப்பதற்கான முயற்சியாகத்தான் விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுகிறேன் என்றார் கமல்ஹாஸன்.

விஸ்வரூபம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் விழாவில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட தயாரிப்பாளர் ராமாநாயுடு பெற்றுக் கொண்டார்.

உலக நாயகன் பட்டத்துக்கு தகுதியானவர்...

தாசரி நாராயணாராவ் பேசும்போது, "விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்புவதன் மூலம் கமலஹாசன் ஒரு புரட்சிக்கு வித்திட்டுள்ளார். இதை வரவேற்கிறேன். இந்த முறையை எதிர்ப்பவர்கள் பிறகு உண்மையை உணர்ந்து வரவேற்பார்கள். உலக நாயகன் என்பதற்கு தகுதியானவர் கமல்," என்றார்.

3 சதவீதம் பேர்தான்...

பின்னர் கமலஹாசன் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், "‘விஸ்வரூபம்' படம் தியேட்டருக்கு வருவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படும். டிஷ் மூலம் டி.வி. பார்ப்பவர்கள் 3 சதவீதம்பேர்தான். மற்றவர்கள் தியேட்டரில் வந்துதான் பார்க்க வேண்டும். தியேட்டருக்கு வராதவர்களும் வர முடியாதவர்களும் பார்ப்பதற்காகவே டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படுகிறது.

திருட்டு டிவிடியை ஒழிக்க...

திருட்டு வி.சி.டி. மூலம் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. டி.டி.எச்.சில் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புவதன் மூலம் திருட்டு வி.சி.டி.யில் அப்படம் வருவது தடுக்கப்படும்.

படம் நன்றாக இல்லாவிட்டால்...

படம் நன்றாக இல்லாவிட்டால் டி.டி.எச்.களில் பார்ப்பவர்கள் சொல்லி விடுவார்கள். தியேட்டருக்கு கூட்டம் வராது. ஆனால் படத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருப்பதால் தைரியமாக டி.டி.எச்.சில் வெளியிடுகிறேன்," என்றார்.

லாபம் வருமா...

இதன் மூலம் லாபம் வரும் என்று நம்புகிறீர்களா என்று கேட்டபோது, "லாபம் வரும் என்பது தெரிந்ததால்தான் இந்த ரூட்டைப் பிடித்தேன். என் படம் மட்டுமல்ல.. இன்னும் எத்தனைப் படங்களை இந்த முறையில் வெளியிட்டாலும் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய ரிஸ்க்கை தவிர்க்க இந்த டிடிஎச் முறை உதவுகிறது," என்றார்.

 

ஜனவரி 7 - கோலிவுட் மெகா ஸ்ட்ரைக்!

Kolywood Strike On Jan 7

சென்னை: மத்திய அரசின் 12.36 சதவீத சேவை வரியைக் கண்டித்து மொத்த தமிழ் சினிமா உலகமும் வரும் ஜனவரி 7-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

திரையுலகுக்கு 12.36 சதவீதம் மத்திய அரசு சேவை வரி விதித்துள்ளது. இதனை கடந்த ஆண்டு ஜனவரி மாதமே அறிவித்துவிட்டது. இதனை எதிர்த்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தமிழ் திரையுலகில் ஒரு ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது.

ஆனால் அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. அறிவித்தபடி கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து இந்த சேவை வரி அமலுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த வரி உயர்வை கண்டித்து மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளன திரையுலகின் பல்வேறு அமைப்புகளும்.

நடிகர் சங்கம் தலைவர் சரத்குமார் கூறுகையில், "இந்த சேவை வரி விதிப்பு 6 மாதங்களுக்கு முன்பே அமலுக்கு வந்தாலும், இப்போது போராட்டம் நடத்துவது கவனத்தை ஈர்க்கும். காரணம் இது பட்ஜெட் நேரம் வேறு.

எனவே, வரும் 7-ம் தேதி முழு அளவில் ஸ்ட்ரைக் மேற்கொள்ளப் போகிறோம்," என்றார்.

ஆனால் தியேட்டர்களை அன்றைக்கு மூட மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் செயலர் பன்னீர் செல்வம் கூறுகையில், "சேவை வரி விதிப்பு தியேட்டர்களுக்கு இல்லை. எனவே நாங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம்," என்றார்.

 

உதயநிதி - நயன்தாரா படத்தின் தலைப்பு 'கதிர்வேலின் காதலி'!

Udhayanidhi Nayanthara Movie Title

சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

உதயநிதியின் பேவரைட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

உதயநிதிக்கு கிட்டத்தட்ட இணையான வேடங்களில் பரோட்டா சூரியும் சந்தானமும் நடிக்கிறார்கள். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி தயாரிக்கும் படம் இது.

 

சென்னையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு - உரிய சூழல் அமையும் வரை காத்திருக்க அறிவுரை!

சென்னை: தனது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்திய சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகளை திங்கள் கிழமை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அனைவருடனும் பேசிய ரஜினி விழாவுக்காக உழைத்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

ரசிகர்கள் அனைவரும் தங்கள் பணிகளில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும், குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

rajini meets his fan club office bearers
ரஜினியின் சமீபத்தில் அரசியல் பேச்சுகளைத் தொடர்ந்து, அவர் அரசியலுக்கு வருவது உறுதிதானா... என்று நிர்வாகிகள் கேட்டதற்கு, "சரியான சூழல் அமைந்தால்தான் அது சாத்தியம்" என்றார்.

ரசிகர்கள் அழைக்கிறார்கள் என்பதற்காக அரசியலுக்கு வந்து கையைச் சுட்டுக் கொண்ட சிரஞ்சீவி, விஜயகாந்த் உள்ளிட்டோரை சுட்டிக் காட்டிய ரஜினி, நாம் அரசியலில் அடியெடுத்து வைப்பது ஏதோ ஒப்புக்காக இருக்கக் கூடாது. வந்தால் அதிகாரத்தை கையிலெடுத்து மக்களுக்கு நினைத்ததைச் செய்யும் அளவுக்கு சூழல் அமைய வேண்டும். அதற்கு முன் அவசரப்படக் கூடாது என்றார்.

அரசியலில் கடைவிரித்தேன் கொள்வாரில்லை... என்ற நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கூறியதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

 

மீண்டும் இணையும் சசிகுமார் - சமுத்திரக்கனி!

Sasikumar Samuthirakkani Join Hands Again

என்னை வைத்து ஒரு படம் நீ இயக்கு, உன்னை வைத்து அடுத்த படத்தை நான் இயக்குகிறேன் என்ற ஒப்பந்த அடிப்படையில் படம் பண்ணிக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் சசிகுமாரும் சமுத்திரக்கனியும் மீண்டும் இணைகின்றனர்.

சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன், போராளி எனத் தொடர்ந்த இவர்கள் திரைப் பயணத்தில் திடீரென்று பிரேக் விழுந்துவிட்டதாகவும், இருவரும் இனி சேர்ந்து படம் பண்ண மாட்டார்கள் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

சசிகுமார் இப்போது குட்டிப்புலி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியை வைத்து சமுத்திரக்கனி நிமிர்ந்து நில் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இருவருமே இயக்குநர்களாக மட்டுமின்றி, நடிகர்களாகவும் ஜெயித்திருக்கிறார்கள். எனவே இருவரும் இணையும் படம் வர்த்தக ரீதியான எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த முறை சமுத்திரக்கனி இயக்க சசிகுமார் ஹீரோவாக நடிப்பார் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை சசிகுமாரே தயாரிக்கிறார்.