ட்விட்டரில் நடிகர் விஜய்யை திட்டியவர் மன்னிப்பு கேட்டார்

சென்னை: ட்விட்டரில் ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடியபோது நடிகர் விஜய்யை திட்டியவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் ட்விட்டர் இணையதளத்தில் தனது ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். ரசிகர்கள் தங்கள் தளபதியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவரும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்நிலையில் ஒருவர் விஜய்யை திட்டினார்.

ட்விட்டரில் நடிகர் விஜய்யை திட்டியவர் மன்னிப்பு கேட்டார்

இதனால் விஜய்யும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஜய் ரசிகர்கள் அந்த நபரை தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து அறிந்த விஜய் தன்னை திட்டியவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறி அவரை காப்பாற்றினார்.

இதையடுத்து தனது தவறை உணர்ந்த அந்த நபர் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

நாடாளுமன்றத் தேர்தல்: அரசியலில் குதிக்க தேசிய கட்சிகளுக்கு தூது விடும் நடிகை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து விட வேண்டும் என்ற முனைப்பில் சம்பந்தப்பட்ட கட்சி தலைமைக்கு தூது விட்டு வருகிறார்களாம்.

ஏற்கனவே, கட்சியில் சேரப் போகிறார் என்ற பரபரப்பைக் கிளப்பினார் மச்சான் நடிகை. ஆனால், சூப்பர் ஸ்டைலில் நா எப்போ, எப்டி வருவேனு சொல்ல மாட்டேன் என ஜவ்வாய் அரசியல் பிரவேசத்தை இழுத்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து சில பிரபல நடிகர்கள் புதிய கட்சி ஒன்றில் சேரப் போவதாக தகவல் வெளியானது. நானே போய் ஆப்பு வச்சுக்குவேனா என்ற ரேஞ்சுக்கு மறுப்பு தெரிவித்தார்கள் சம்பந்தப்பட்ட நடிகர்கள்.

இந்நிலையில், லட்சுமிகரமான நடிகை ஒருவர் நான் அரசியலுக்கு வருவேன். ஆனால் எந்த கட்சியில் சேருவது என்பது பற்றி இன்னும முடிவெடுக்கவில்லை என்று கூறி தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தியுள்ளாராம்.

இதையடுத்து, அந்த நடிகை எந்த கட்சியின் மீது ஈடுபாடாக இருக்கிறார் என்று விசாரித்தபோது, எந்த கட்சி மீதும் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு கிடையாது. யார் தன்னை சேர்த்துக்கொள்வார்களோ அதுதான் அவருக்கு பிடித்தமான கட்சியாக இருக்கும். அந்த வகையில் இரண்டு தேசிய கட்சிகளுக்கு தூது அனுப்பிவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் எனத் தெரிய வந்துள்ளது.

 

முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைகிறார் வைரமுத்து!

இளையராஜா - வைரமுத்து இணைவார்களா.. மாட்டார்களா என்ற கேள்வி கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

இந்தக் கேள்விக்கு இருவரிடமிருந்தும் இணக்கமான பதில் இல்லை. இனி அது சாத்தியமா... சாத்தியப்பட்டாலும் பெரிய வெற்றி கிடைக்குமா என்ற கேள்வியை வைரமுத்து எழுப்பி விட்டார்.

இளையராஜாவோ இதைப் பற்றி பொது வெளியில் பேசுவதே இல்லை. எந்த சூழலிலும் இதுபற்றிப் பேசுவதை தவிர்த்து வருகிறார்.

முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைகிறார் வைரமுத்து!

எனவே இந்த சிகரங்கள் இணைவதற்கான சாத்தியங்கள் குறைவு என்றாகிவிட்டது.

ஆனால் இளையராஜா, வைரமுத்து அன்பர்களுக்கு இனிப்பான சேதி ஒன்று... அதுதான் இளையராஜாவின் இசை இளவல் யுவன் சங்கர் ராஜாவுடன் கைகோர்க்கிறார் வைரமுத்து என்பது.

ஆம்... இது ஏதும் புனையப்பட்ட செய்தி அல்ல. முழுக்க முழுக்க அதிகாரப்பூர்வமான செய்தி.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான இடம் பொருள் ஏவலில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அத்தனை பாடல்களையும் எழுதுகிறார் வைரமுத்து!

எப்படிச் சாத்தியமாயிற்று இது?

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளில், வைரமுத்து ஒரு முன்னணி பாடல் ஆசிரியராக இருந்தாலும், அவருக்கு யுவன் எந்த வாய்ப்பும் தரவில்லை. தந்தைக்கும் வைரமுத்துவுக்குமான பிணக்கில் அவர் குறுக்கிடவும் இல்லை. அப்பாவுக்கு ஆகாதவர் தனக்கும் ஆகாதவரே என்ற நினைப்போடு அவர் புதியவர்களுடன் கைகோர்த்து தனி ட்ராக்கில் பயணித்தார்.

சீனு ராமசாமி - லிங்குசாமி வேண்டுகோள்

இந்த நிலையில் இடம் பொருள் ஏவல் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமானார். சீனு ராமசாமியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ரகுநந்தன். ஆனால் லிங்குசாமிக்குப் பிடித்தவர் யுவன். தயாரிப்பாளர் சொன்னதற்காக ரகுநந்தனை ட்ராப் செய்து, யுவனை ஒப்பந்தம் செய்தார் சீனு ராமசாமி. அடுத்து தனது விருப்பத்துக்காக வைரமுத்துவை பாட்டெழுத வைக்க வேண்டும் என்று யுவனை கேட்டுக் கொண்டார்.

அப்பாவின் சம்மதத்துடன்...

ஆனால் முதலில் இதற்கு உடனடியாக சம்மதிக்காத யுவன், தன் அப்பா இளையராஜாவிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் அனுமதி கொடுத்த அடுத்த நிமிடம் லிங்குசாமி மற்றும் சீனு ராமசாமிக்கு போன் செய்து சம்மதம் தெரிவித்தாராம் யுவன்.

முதல் முறை

யுவன் - வைரமுத்து கூட்டணி சேர்ந்திருப்பது இதுதான் முதல் முறை. சீனு ராமசாமி படத்துக்கு இது பெரிய பப்ளிசிட்டி பலமாக அமைந்திருக்கிறது. சீக்கிரமே இளையராஜா - வைரமுத்து கூட்டணிக்கு இந்த புதிய கூட்டணி வழி சமைக்குமா.. பார்க்கலாம்!

 

நான் நல்லாத்தான் இருக்கேன்! - எஸ்பிபி அறிக்கை

சென்னை: தென்னாப்பிரிக்காவில் சினிமா விழாவில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக வந்த செய்திகள் உண்மையில்லை.. நான் நலமாக உள்ளேன், என்று பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு மேடையிலேயே சுகவீனம் ஏற்பட்டதாகவும், அவரை தனி விமானத்தில் சென்னை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

நான் நல்லாத்தான் இருக்கேன்! - எஸ்பிபி அறிக்கை

இதுகுறித்து இன்று எஸ்பிபி அளித்துள்ள விளக்கத்தில், தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது உண்மை என்றும், அதன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்தபோது, தனக்கு சோர்வாக இருப்பதால் பங்கேற்க இயலாது என்று சாதாரணமாக சொன்ன பதில் வேறு விதமாக வெளியாகி விட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது பேட்டியில், "நான் ரொம்ப நல்லா இருக்கேன். எனக்கு ஒண்ணும் ஆகல. ரசிகர்களாகிய உங்களுடைய கருணை, உங்களுடைய அருள், உங்களுடைய ஆசி இருக்கும்வரையிலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு ஒண்ணும் நடக்காது. நான் நன்றாக இருக்கின்றேன். என் மீது இவ்வளவு அன்பு வைத்து எனக்காக பிரார்த்தனை பண்ணியுள்ளீர்கள். என்னை பற்றி விசாரித்துள்ளீர்கள். என் வீட்டுக்கு போன் செய்து எப்படி இருக்கார் என்று கேட்டுள்ளீர்கள். எனக்கு மெயில் அனுப்பியுள்ளீர்கள். நான் பேஸ்புக் பக்கத்துக்கு வருவது கிடையாது. அதனால் சிலருக்கு பயமாக இருந்திருக்கலாம். உங்கள் அன்புக்கு நான் எப்போதும் அடிமை. வணக்கம்," என்று தெரிவித்துள்ளார்.

 

நஸ்ரியா.... அட்வான்ஸைத் திருப்பித் தருவாரா? கமிஷர் ஆபீஸைக் காட்டி பயமுறுத்துவாரா?

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் திடுமென்று திருமணத்தை அறிவித்திருக்கிறார் நஸ்ரியா.... அட்வான்ஸைத் திருப்பித் தருவாரா? கமிஷர் ஆபீஸைக் காட்டி பயமுறுத்துவாரா?  

இந்த திருமண செய்தியை முதலில் யாரும் நம்பவில்லை. இப்போது இயக்குநர் பாஸில் மற்றும் நஸ்ரியா இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜீவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பெரிய தொகை அட்வான்ஸாக தரப்பட்டுள்ளது நஸ்ரியாவுக்கு. அடுத்து வேந்தர் மூவீஸ் படம் உள்பட மூன்று படங்களுக்கு அட்வான்ஸ் பெற்றுள்ளார் நஸ்ரியா.

இந்தப் படங்கள் சர்வநிச்சயமாக இந்த ஆண்டுக்குள் முடியப் போவதில்லை. ஆனால் நஸ்ரியாவின் திருமணமோ இந்த ஆண்டே நடக்கும் எனத் தெரிகிறது. நஸ்ரியா - பகத் பாசில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

அப்படியெனில் திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்தால்தான் இந்த கமிட்மென்டுகளை நஸ்ரியாவால் முடிக்க முடியும்.

வாங்கிய அட்வான்ஸைத் திருப்பித் தருவாரா? அல்லது இதற்கும் கமிஷனர் ஆபீஸ் வாசலில் போய் நிற்பாரா என்ற குழப்பத்தில் தவிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

 

அஜீத் படத்தில் சிம்பு நடிக்கிறாரா?

அஜீத் படத்தில் சிம்பு நடிக்கிறாரா?

சென்னை: கௌதம் மேனன் அஜீத்தை வைத்து எடுக்கும் படத்தில் சிம்பு நடிப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தியாம்.

அஜீத் குமாரின் வீரம் படம் ஹிட்டாகியுள்ளது. வீரம் படத்தை அடுத்து அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம். இந்நிலையில் இப்படத்தில் அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

சிம்புவை அஜீத்துடன் நடிக்க வைக்க கதையில் சில மாற்றங்களை கௌதம் செய்ததாக பேசப்பட்டது. ஆனால் சிம்பு அஜீத்துடன் கௌதம் இயக்கத்தில் நடிக்கவில்லையாம். அது எல்லாம் வெறும் வதந்தியாம்.

 

எஸ்பிபிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது... விருது பெற்ற கையோடு உடல்நிலை பாதிப்பு!

சென்னை: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த திரைப்பட விழா ( International Indian Film Festival of South Africa (IIFFSA).) நடத்தப்படுகிறது. இருநாடுகளின் பிராந்திய மொழிப் படங்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

எஸ்பிபிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது... விருது பெற்ற கையோடு உடல்நிலை பாதிப்பு!

சனிக்கிழமை இரவு ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்கப்பட்ட இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உடல் நலக்குறைவு

விருதுபெற்ற அவருக்கு உடனடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து அவரை தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

சூர்யா படத்துக்குப் பெயர் கல்யாணராமனா? - வெங்கட் பிரபு விளக்கம்

சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்துக்கு கல்யாண ராமன் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் இப்போது நடித்து வருகிறார் சூர்யா.

இந்தப் படம் முடிந்ததும் சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு ஒரு படம் இயக்குகிறார். இதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. அஞ்சான் வசனப் பகுதிகள் முடிந்ததுமே இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா.

சூர்யா படத்துக்குப் பெயர் கல்யாணராமனா? - வெங்கட் பிரபு விளக்கம்

இப்படத்துக்கு 'கல்யாண ராமன்' என பெயரிடப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

ஆனால் இயக்குநர் வெங்கட் பிரபு இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், "கல்யாண ராமன்' என்ற பெயரை நாங்கள் தேர்வு செய்யவில்லை. என்ன தலைப்பு வைப்பது என்பது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம்," என்றார்.

இந்த படத்தை '3டி'யில் எடுக்கவும் வெங்கட் பிரபு ஆலோசனை செய்து வருகிறார்.

 

மீண்டும் நேரடி தெலுங்குப் படம் இயக்கும் மணிர்தனம்... நாகார்ஜூனா - மகேஷ்பாபுவை இயக்குகிறார்!

சென்னை: கீதாஞ்சலி படத்துக்குப் பிறகு மீண்டும் நேரடி தெலுங்குப் படம் இயக்குகிறார் மணிரத்னம்.

கடைசியாக கடல் என்ற படத்தை தமிழில் இயக்கினார் மணிரத்னம். ஆனால் அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது.

அதன் பிறகு அடுத்த படம் குறித்துப் பேசாமல் இருந்தார்.

மீண்டும் நேரடி தெலுங்குப் படம் இயக்கும் மணிர்தனம்... நாகார்ஜூனா - மகேஷ்பாபுவை இயக்குகிறார்!

இப்போது அடுத்ததாக நேரடி தெலுங்குப் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார். அவருடன் இன்னொரு முக்கிய வேடத்தில் நாகார்ஜுனாவும் நடிக்கிறார்.

மணிரத்னத்தின் முதல் தெலுங்குப் படத்தில் நாயகனாக நடித்தவர் நாகார்ஜுனா என்பது நினைவிருக்கலாம்.

இந்தியில் மணிரத்னம் இயக்கிய அத்தனைப் படங்களும் தோல்வியைத் தழுவின. தமிழில் அவர் கடைசியாக இயக்கிய வெற்றிப் படம் அலைபாயுதே.

இப்போது தெலுங்குக்குப் போயிருக்கிறார். எப்படியும் இந்தப் படம் தமிழிலும் டப் ஆகும், இதயத்தைத் திருடாதே மாதிரி. தெலுங்கில் அவர் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கிறதா.. பார்க்கலாம்!