ஓ நிஷா நிஷா நிஷா…

கேரளத்து மங்கைகளுக்கு சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் தமிழக ரசிகர்கள் எப்போதுமே பச்சைக்கம்பளம் விரித்து வரவேற்பார்கள். (எவ்வளவு நாள்தான் சிவப்பு கம்பளம்னு சொல்றது) டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ஜெயாடிவியில் அறிமுகமாகி சன்மியூசிக்சில் கலக்கிய நிஷா இப்போது பிரபல சீரியல்களில் வில்லியாக வலம் வரும் வருகிறார்.

தெய்வம் தந்த வீடு சீரியலின் டெரர்லுக் வில்லி... ஓர கத்தியை ஓரம் கட்ட நினைத்து அடிக்கடி மொக்கை வாங்கும் ப்ரியாவாக நடித்து வரும் நிஷா ஒரு பொறியியல் பட்டதாரியாம்.

Oh Nisha Nisha...Vijay tv villi actress

இன்ஜினியரிங் படித்தாலும் மீடியாதான் தனக்கு செட் ஆகும் என்று முடிவெடுக்கவே வீட்டிலும் ஓகே சொல்லவே கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து விட்டார் நிஷா வந்த வேகத்தில் ஜெயா டிவி, சன் டிவி என்று வலம் வந்து இப்போது ஸ்டார் விஜய் டிவியில் வில்லத்தனம் செய்து வருகிறார் நிஷா.

சீரியலில் வில்லத்தனம் செய்தாலும் உண்மையில் ரொம்ப அமைதியாம். நிஷா நடிப்பில கலக்குறடி என்று தோழிகள் சொல்வது சந்தோஷமா இருக்கு என்கிறார் நிஷா.

 

எம்எஸ் விஸ்வநாதன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

திரையிசையில் பல சாதனைள் படைத்த மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

87 வயதாகும் எம் எஸ் விஸ்வநாதனுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நிலை மோசமடைந்தது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

No improvement in MS Viswanathan's health condition

சில தினங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்த சீரற்ற முறையில் அவர் உடல்நிலை காணப்பட்டதால், மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது மகன்கள் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

 

சினிமா நடிகைகள் டிவி நிகழ்ச்சி செய்ய தடை… இங்கல்ல சீனாவில்!

பெய்ஜிங்: சீனாவில் டிவி நிகழ்ச்சிகளை சினிமா நடிகைகள் தொகுத்து வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நம் ஊரில் இதே போல ஒரு தடை கொண்டு வரவேண்டும் என்று ஏங்கத் தொடங்கியுள்ளனர் இங்குள்ள தொகுப்பாளர்கள்.

டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரை என்ற விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு சினிமாவில் நுழைபவர்கள்தான் அதிகம். எனவேதான் கல்லூரியில் படிக்கும் போது டிவி ஆங்கர் ஆகவேண்டும் என்ற கனவோடு விசுவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு டிவியில் தொகுப்பாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

Celebrities banned from hosting television shows in China

ஆனாலும் கடந்த காலங்களைப் போல இல்லாமல் சின்னத்திரையில் சினிமா நட்சத்திரங்கள் அதிக அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். தமிழில் ரோஜா, ரம்யா கிருஷ்ணன், தொடங்கி குஷ்பு, சிம்ரன் என பலரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

சில நடிகைகள் ரியாலிட்டி ஷோக்களில் நடுவர்களாகவும் வலம் வருகின்றனர் நடிகைகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இனிமே நடிகர்கள் டி.வி நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது' என்று ஒரு சட்டம் போட்டால் எப்படி இருக்கும்?!

சீனாவில் சின்னத்திரை சங்கத்தினர், நிஜமாகவே இப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள். ‘நிகழ்ச்சியோட ஐடியா நல்லா இருந்தும், அதை பப்ளிசிட்டிக்காக சினிமா நட்சத்திரங்கள் கையில கொடுக்கும்போது, சொதப்பி விடுகின்றனர் என்ற புகார் சீனாவில் எழுந்துள்ளது.

ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகரை, இன்னொரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கூப்பிடும்போது, அவர்கள் அணியும் கவர்ச்சியான உடைகள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நடிகைகள் தொகுப்பாளர்களாக வருவதால் இளமையான பல நல்ல தொகுப்பாளர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காமப் போய்விடுகிறது என்பது சின்னத்திரை தொகுப்பாளர்களின் ஆதங்கம்.

எனவே இனி திரை நட்சத்திரங்கள் டி.வி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கக் கூடாது!' என்று சீனா அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அதேபோல டிவி நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் போது சொதப்பலாக வழங்காமல் நன்றாக பயிற்சி பெற்ற தொகுப்பாளர்களைக் கொண்டு ரெகார்ட் செய்து ஒளிபரப்ப வேண்டும் என்றும் சீனா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

நம் ஊர் காட்டுக்கத்தல் லைவ் ஷோக்களுக்கு இதேபோல தடைகள் வருமா என்று பலரும் மைன்ட் வாய்ஸ் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோல இந்தியாவில் அறிவிப்பு வருமா?

 

நண்பரான ஓவியர் ஸ்ரீதருக்கு “மய்யம்” தலைப்பை விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்!

சென்னை: கமலின் "மய்யம்" என்ற தலைப்பினை அவரிடமிருந்து அனுமதி பெற்று தன்னுடைய படத்திற்கு பெயராக சூட்டியுள்ளார் ஓவியராய் இருந்து தற்போது தயாரிப்பாளராகியுள்ள ஸ்ரீதர்.

இலக்கியத் துறையில் அதீத ஆர்வமுடைய சினிமாக்காரர் கமல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அவர் கட்டுரைகளும், கவிதைகளும் கூட எழுதியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய படைப்புகளை வெளியிடுவதற்காக சிறிது காலம் "மய்யம்" என்ற இலக்கிய இதழ் ஒன்றினை நடத்தி வந்தார்.

நண்பரான ஓவியர் ஸ்ரீதருக்கு “மய்யம்” தலைப்பை விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்!

சிறிது நாட்களுக்குப் பின் பல்வேறு காரணங்களால் அந்த இதழ் நிறுத்தப்பட்டு விட்டது. எனினும், கமல் ரசிகர் மன்ற இதழாக வெளிவந்து கொண்டிருந்த அவ்விதழ் பின்னர் முழுவதுமாக மூடப்பட்டது.

தற்போது அந்த "மய்யம்" என்கின்ற தலைப்பிற்காக கமலிடம் அனுமதி பெற்ற ஓவியர் ஸ்ரீதர் அப்படத்தினை தயாரித்துள்ளார். கமலின் பல்வேறு உருவங்களை வரைந்து அவரது அன்புக்குப் பாத்திரமானவர் ஏ.பி.ஸ்ரீதர் என்பதால் தன் வசமுள்ள பத்திரிகை மற்றும் இணையதளத்தின் "மய்யம்" என்கிற தலைப்பை அன்புடன் இந்தப் படத்துக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார் கமல். இப்படத்தினை ஆதித்யா பாஸ்கரன் என்கின்ற நான்காம் ஆண்டு பொறியியல் மாணவர் இயக்கியுள்ளார்.

ஒரே இரவில் நடக்கும் கதை இது. வங்கியில் கொள்ளையடிக்க வரும் ஒரு கும்பல் வங்கிக்குள் மாட்டிக்கொள்கிறது. ஒரு அறையில் கொள்ளைக் கும்பலும், மற்றொரு அறைக்குள் அவர்களை வழிநடத்தும் ரோபோ சங்கரும் இருக்கிறார்கள். விடிவதற்குள் தப்பியாக வேண்டும் என்ற நிலையில், கொள்ளையர்களை ரோபோ எப்படி வழிநடத்துகிறார் என்பதுதான் கதையாம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதர். விரைவில் கமல் வெளியிட இப்படத்தின் இசை வெளியாகவிருக்கிறது.

"மய்யம்" திரைப்படம் காதல், நகைச்சுவை மற்றும் திகில் உணர்வுகளின் கலவையாகும். இதில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் வெவ்வேறு கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரேமம் பட விவகாரம் – கைதான பள்ளி மாணவர்களின் பின்ணணியில் மாபியா கும்பல்!

திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்த பிரேமம் படப் பிரச்சினையில் தற்போது குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளது காவல் துறை.

இதுதொடர்பாகபிடிபட்ட குற்றவாளிகள் 3 பேரும் +2 மாணவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் பிரேமம் படத்தை திரைக்கு வருவதற்கு முன்பே ஆன்லைனில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

'Premam' Movie Online Issue:  Cyber Cell Police Arrests 3 School Students

வெளிநாட்டு மாபியா கும்பலிடம் இருந்து இந்தப் படத்தின் பிரதியை வாங்கி இருக்கின்றனர் இந்தப் பள்ளி மாணவர்கள். சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட படத்தின் பிரதியை திருட்டு விசிடியாக மாற்றிய மாபியா குழு அந்தப் பிரதியை இந்தப் பள்ளி மாணவர்களிடம் கொடுத்துள்ளது.

அதனை வாங்கிய பள்ளி மாணவர்கள் 3 பேரும், கடந்த ஜூன் மாதம் 22 ம் தேதி அதனை டோரன்ட் இணையதளத்தில் போலி ஐடி கொடுத்து பதிவு செய்துள்ளனர். பிரேமம் படம் சென்சார் போர்டுக்கு செல்லும் முன்பு படத்தின் இறுதிக் கட்ட பணிகள் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இரு இடங்களில் உள்ள ஸ்டுடியோக்களில் நடந்ததால் காவல் துறையினர் அங்கும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படம் தியேட்டர்களில் இருந்து காப்பி செய்யப்பட்டு இருந்தால் பெரிய பிரச்சினையாக உருமாறி இருக்காது, ஆனால் சென்சார் போர்டுக்கு அனுப்பிய காப்பி இணையத்தில் வெளியாகி இருப்பதால் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கும் மாபியா கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து தற்போது பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் திருவனந்தபுரம் காவல் துறையினர்.

படம் இணையதளத்தில் வெளியானதில் தொழில்நுட்பங்கள் அதிகம் நிறைந்தது இருப்பதால் வழக்கு சிக்கலான ஒன்றாக மாறியிருப்பதாக, வழக்கை விசாரித்து வரும் டிஐஜி டிபி சென்குமார் தெரிவித்து உள்ளார்.

சென்சார் போர்டுக்கு அனுப்பிய பிரதியில் இருந்து திருட்டுத்தனமாக படத்தை இணையத்தில் பதிவேற்றிய பின்னணியில் முக்கியமான, சினிமா பிரபலம் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிப்பது குறிப்பிடத்தக்கது.

 

கே பாலச்சந்தர் அறக்கட்டளை... துவக்கி வைக்கிறார் கமல் ஹாஸன்!

தமிழ் திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் பெயரில் புதிய அறக்கட்டளையை நடிகர் கமல் ஹாஸன் தொடங்கி வைக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் இயக்குநர் பாலச்சந்தர் உடல் நலக் குறைவால் மறைந்தார். வரும் ஜூலை 9-ம் தேதி அவரது பிறந்த தினமாகும். அன்றைய தினத்திலேயே அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட உள்ளது.

Kamal to launch K Balachander Charitable Trust

அன்றைய தினம் காலையில் பாலச்சந்தர் கடைசியாக நடித்த உத்தம வில்லன் படம் திரையிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்கள், வெள்ளித்திரை, சின்னத்திரை, நாடகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

மாலை 6 மணி அளவில் கே.பியைப் பற்றி கவிஞர் வைரமுத்து எழுதி, ரமேஷ் விநாயகம் இசையமைத்த பிரத்யேகப் பாடல் ஒன்று வெளியிடப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, கே.பாலசந்தர் அறக்கட்டளையை கமல்ஹாசன் தொடஹ்கி வைக்கிறார்.

 

குரு மணிரத்னம் படத்தில் நடிக்கும் சிஷ்யன் கார்த்தி!

நடிக்க ஆரம்பிக்கும் முன் கார்த்தி செய்த வேலை உதவி இயக்குநர். சேர்ந்த இடம் இயக்குநர் மணிரத்னம் குழு. வேலை செய்த படம் ஆய்த எழுத்து. சொந்த அண்ணன் சூர்யாதான் ஹீரோ.

அந்தப் படத்தில் சித்தார்த்துக்கு பதில் கார்த்தியைத்தான் நடிக்கச் சொன்னாராம் மணிரத்னம். ஆனால் இயக்குநர் வேலைதான் பிடித்திருக்கிறது என்று கூறி அந்த வேலையில் மணிரத்னத்திடம் பாராட்டுகளையும் பெற்றார்.

Karthi is Manirathnam's next hero

இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கார்த்திக்கு வந்திருக்கிறது.

ஓகே கண்மணி படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்திதான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.

இந்தப் படத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதாம். கார்த்தியை சமீபத்தில் சந்தித்த மணிரத்னம், கதை சொல்லியிருக்கிறார். அதற்கான திரைக்கதை எழுதும் பணிகள் ஆரம்பித்துள்ளனவாம். செப்டம்பரில் இந்தப் படம் தொடங்கக் கூடும் என்கிறார்கள்.

 

நடிகர் சல்மான் கான் வாழ்வில் மீண்டும் புதுப்பெண்ணா?

மும்பை: அரசியல்வாதி பாபா சித்திக்கி அளித்த இஃப்தார் விருந்துக்கு வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானின் காரில் யாரோ ஒரு பெண் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த பெண் யார் என தெரியவில்லை.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் படங்களை பற்றி மக்கள் எவ்வளவு பேசுகிறார்களோ அதே அளவுக்கு அவரின் காதல், காதலிகள், திருமணம் பற்றியும் பேசுகிறார்கள். ஏனென்றாரல் இன்னும் திருமணமாகாத சல்மான் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாகவே உள்ளது.

Spotted: Salman with a MYSTERY GIRL inside his car

இந்நிலையில் தான் சல்மான் பெரியோர்களாக பார்த்து நிச்சயிக்கும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி பாபா சித்திக்கி கடந்த 5ம் தேதி மாலை மும்பையில் இஃப்தார் விருந்து கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார்.

இஃப்தார் விருந்துக்கு நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸும் வந்திருந்தார். அவர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். சல்மானுக்கும் ஜாக்குலினுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

விருந்து முடிந்து சல்மான் அங்கிருந்து கிளம்புகையில் அவரது காரில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவருடன் சல்மான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். காரில் இருந்த பெண் யார் என்று தெரியவில்லை. இதை பற்றி தான் பாலிவுட்டில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 

"அர்னால்டை" அடித்து விரட்டி ஓரங்கட்டிய "சுயம்புலிங்கம்"!

சென்னை: நல்ல தமிழ்ப் படங்கள் வந்தால் ரசிகர்கள் பிறமொழிப் படங்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாபநாசம் திரைப்படம்.

இந்த மாதத் தொடக்கத்தில் வெளிவந்த பாபநாசம் திரைப்படம் சென்னையில் வசூலில் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது.

Box Office :  'Papanasam' beats 'Terminator Genisys'

பாபநாசம் வெளியான அன்று அர்னால்டின் நடிப்பில் ஹாலிவுட் படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸும் சென்னையில் வெளியாகியது, டெர்மினேட்டர் ஜெனிசிஸ் உலகம் முழுதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரம் தொடங்கியும் இன்னமும் பாபநாசம் மீதுள்ள மோகம் மக்களிடம் துளிக்கூட குறையவில்லை, இதனால் பிறமொழிப் படங்கள் அனைத்தையும் ஓரங்கட்டி தொடர்ந்து வசூலில் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது பாபநாசம்.

பாபநாசத்தின் அலையில் தற்போது சென்னையில் தொடர்ந்து தடுமாறி வருகிறது டெர்மினேட்டர் ஜெனிசிஸ், இதுவரை சென்னையில் மட்டும் 1.34 கோடியை வசூலித்து இருக்கிறது பாபநாசம்.

ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது, சரியான தமிழ்ப்படங்கள் எதுவும் அந்த நேரத்தில் வெளியாகவில்லை. அதே போன்று நாமும் வசூலைக் குவித்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு டெர்மினேட்டர் ஜெனிசிசை தமிழ்நாட்டில் வாங்கி வெளியிட்டவர்கள், கண்டிப்பாக இந்த வசூலை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

 

காத்தாடி ராமமூர்த்தி, காக்கா முட்டை மணிகண்டனுக்கு பாலச்சந்தர் விருது!

புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் கே பாலச்சந்தர் நினைவு அறக்கட்டளை வழங்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் மூத்த கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி, காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

K Balachander award for Kathadi Ramamoorthy, Kakka Muttai Manikandan

நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் இனி பாலச்சந்தர் விருது வழங்கப்படும்.

இந்த முதலாண்டு விருதுகளை நாடகத்துறையில் சாதனைப் படைத்த காத்தாடி ராமமூர்த்தி, திரைத் துறையில் முதல் படத்திலேயே கலக்கிய இயக்குநர் மணிகண்டன், சின்னத்திரையில் சாதனை செய்த திருமுருகன், எழுத்துத் துறையில் சிறந்து விளங்கும் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்கான சாதனையாளர்களை இயக்குநர் எஸ்பி முத்துராமன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.

வியாழக்கிழமை பாலச்சந்தர் பிறந்த நாளன்று நடக்கும் அறக்கட்டளை துவக்க விழா நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. நடிகர் கமல் ஹாஸன், நடிகர், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் மற்றும் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை திருவாவடுதுறை டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் நடக்கவிருக்கிறது.

 

ரஜினி- ஷங்கர் படத்துக்கு மறைமுகமாக நோ சொன்ன ஆமீர்கான்!

ரஜினி - ஷங்கர் இணையும் புதிய படத்தில் ஆமீர்கான் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆமீர்கான் தனது புதிய படத்தை அறிவித்ததன் மூலம் இது உறுதியாகியுள்ளது.

எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த முதலில் ஷங்கர் அணுகியது ஆமீர்கானைத்தான். இதற்காக மும்பை போய் அவருக்கு கதையும் சொல்லியிருந்தார். எதற்கும் இருக்கட்டுமே என்று இங்கு விக்ரமிடமும் கதை சொன்னார். கமலிடமும் கேட்டுப் பார்த்தார்.

Aamir Khan says No to Rajini - Shankar indirectly!

கமல் ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டதால், ஆமீர்கானை நம்பியிருந்தார்.

ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் திடீரென தன் புதிய படத்தை அறிவித்துள்ளார் ஆமீர்கான். இந்தப் படத்தை அவரது மேனேஜர் அத்வைத் சந்தன் இயக்குகிறார்.

இதன் மூலம் ஷங்கர் படத்தில் ஆமீர் கான் இல்லை என்று உறுதியாகிவிட்டது. ஆனால் தான் நடிக்கவில்லை என்பதை நேரடியாக தன்னிடமே சொல்லியிருக்கலாமே என வருத்தப்படுகிறாராம் ஷங்கர்.

 

பாலக்காட்டு மாதவன் கோயிங் ஸ்டெடி.. திங்கள் - செவ்வாயிலும் குறையாத கலெக்ஷன்!

கமல் நடித்த பாபநாசம் படத்தோடு வெளியான விவேக்கின் பாலக்காட்டு மாதவன் கோடம்பாக்க வழக்கில் சொன்னால், 'தப்பிச்சுடுச்சி'. வார நாட்களான நேற்றும் இன்றும் கூட நல்ல வசூலுடன் தொடர்வதால், விவேக் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்!

வெள்ளிக்கிழமை 150 அரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படம் இப்போது மேலும் சில அரங்குகளில் கூடுதலாக திரையிடப்படுகிறது.

Palakkattu Madhavan goes steady

படம் முழுக்க நகைச்சுவையும் அம்மா சென்டிமென்டும் இப்பதால் குடும்பத்தோடு இந்தப் படத்தைப் பார்க்கிறார்களாம்.

நெல்லையில் உள்ள அருணகிரி திரையரங்கில் தொடர்ந்து மூன்று காட்சிகள் பெண்கள் மட்டுமே வந்து இந்தப் படத்தைப் பார்த்துள்ளனர். மூன்று காட்சிகளும் ஹவுல்புல்.

அந்தப் பகுதியில் விவேக் லட்சக் கணக்கில் கிராமம் கிராமமாக மரம் நட்டதன் பலன் இது. இதுவரை பல ஊர்களில் 27 லட்சத்துக்கும் அதிகமாக மரங்கள் நட்டுள்ளார் விவேக். அந்தந்தப் பகுதி மக்கள் ஆவலுடன் பாலக்காட்டு மாதவனைப் பார்க்கிறார்களாம்.

திங்கள், செவ்வாய்தான் ஒரு படத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும் முக்கிய நாள். இந்த இரு தினங்களிலும் பாலக்காட்டு மாதவன் வசூல் 40 சதவீதம் கூடியிருப்பதாக தயாரிப்பாளர் லாரன்ஸ் சந்தோஷத்துடன் சொல்கிறார். அப்புறமென்ன விவேக் சார்.. சக்ஸஸ் பார்ட்டி எப்போ?

 

கேரள தியேட்டர் அதிபர்கள் ஸ்டிரைக்கால்... "பாகுபலி"க்குப் பங்கம் வருமோ?

திருவனந்தபுரம்: பிரேமம் பட விவகாரத்தில் வரும் 9 ம் தேதி கேரளாவில் உள்ள தியேட்டர் அதிபர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சுமார் 380 தியேட்டர்கள் அன்று காலை 9 மணியில் இருந்து மூடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Theatre Owners Strike: 'Baahubali' Kerala Release in Trouble

இது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பஷீர் கூறுகையில் பெருகிவரும் திருட்டு விசிடி மற்றும் பிரேமம் படம் ஆகியவற்றுக்காக இந்தப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுகிறோம், இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஒரு நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

9 ம் தேதி ஆரம்பிக்கும் இந்தப் போராட்டம் அன்றோடு முடியாமல் தொடர்ந்தால் பெரிதும் பாதிக்கப் படப்போவது யார் தெரியுமா? வேறு யாருமில்லை பாகுபலி படம்தான். கேரளாவில் தமிழ் பாகுபலி படத்தை வெளியிடுகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

கேரளாவில் நல்ல வரவேற்பைப் படம் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, இந்த ஸ்டிரைக் இடையில் வந்து தற்போது பிரச்சினையை உண்டு பண்ணியுள்ளது பாகுபலிக்கு. பார்க்கலாம் சொன்னபடி கேரளாவில் பாகுபலி திரைப்படம் வெளியாகிறதா அல்லது தடையாகிறதா? என்று.

 

ஒரு தோழன் ஒரு தோழி விமர்சனம்

Rating:
3.5/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: மனோதீபன், அஸ்த்ரா, மீனேஷ் கிருஷ்ணா, அபிநிதா, ஹலே கந்தசாமி

ஒளிப்பதிவு: சிவன்குமார்

இசை: ஜெய் கிருஷ்

தயாரிப்பு: கிருத்திகா, ராஜேஷ்

இயக்கம்: பி மோகன்

எளிய கிராமத்துப் பின்னணியில் நட்பு, காதலை மையப்படுத்தி வந்துள்ள படம் 'ஒரு தோழன் ஒரு தோழி'.

எல்லோருமே புதுமுகங்கள்தான். ஆனால் பக்குவமாக உருவாக்கியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸை இன்னும் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Oru Thozhan Oru Thozhi Review

ராஜபாளையம் பகுதிக்கார்களான சுடலையும் (மனோதீபன்) வேல்முருகனும் (மீனேஷ் கிருஷ்ணா) நண்பர்கள். நூற்பாலையில் வேலை பார்க்கும் இருவரும் சொற்ப சம்பளத்திலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

ஒருமுறை ஒரு பெண்ணை யாரோ பலவந்தப்படுத்த முயல அவளைக் காப்பாற்றுகிறார்கள். அவள்தான் பூங்கொடி (அஸ்த்ரா). இந்த சம்பவத்துக்குப் பிறகு சுடலையுடன் பூங்கொடிக்கு நட்பு ஏற்பட்டு, பின்னர் அதுவே காதலாகிறது. வேல் முருகனுக்கு முறைப் பெண் கலைச் செல்வி (அபிநிதா) மீது காதல். ஆனால் சொல்ல தயக்கம்.

சுடலை - பூங்கொடி காதலில் வில்லனாக நுழைகிறான் கந்துவட்டிகார சுருளி. பூங்கொடி வீட்டில் பட்ட கடனுக்காக பூங்கொடியை காவு கேட்கிறான் சுருளி. அவனிடமிருந்தும் அவ்வப்போது பூங்கொடியை சுடலையும் வேல்முருகனும்தான் காப்பாற்றி வருகிறார்கள். வேலைக்குப் போய் சம்பாதித்து கடனை அடைக்கும் நிலைமைக்கு பூங்கொடி வரும்போது, செல்போன் வடிவில் விதி அவள் வாழ்க்கையில் விளையாடுகிறது. அவளே அறியாமல் அவள் உடைமாற்றும் காட்சி செல்போனில் பதிவாகிறது. அதனை அவள் காதலன் கண்டுபிடிக்க, அவனை வைத்தே அதை அழித்தும்விடுகிறாள். ஆனால் பழுதுபட்ட அந்த செல்போனை சரிபார்க்கக் கொடுக்குமிடத்தில், 'ரெக்கவரி சாப்ட்வேர்' மூலம் அந்த வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார்கள் செல்போன் கடையில் உள்ள கயவர்கள்.

Oru Thozhan Oru Thozhi Review

அவர்கள் மிரட்டலுக்கு பூங்கொடி சம்மதித்தாளா? இரு நண்பர்களின் காதல், வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக் கதை.

ராஜபாளையம் என்ற வறண்ட பிரதேசத்தையும், அந்த சாதாரண மனிதர்களையும் அவர்களின் வறுமையையும், நட்பு காதலையும் மிக யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஏதோ ஒரு எளிய கிராமத்தில் அந்த மக்களுடனே நடந்து திரிந்த மாதிரி உணர்வு, படம் பார்த்து முடித்ததும். இந்த மாதிரி எளிய மனிதர்களைச் சுற்றி எத்தனை ஆபத்துகள்!

எத்தனையோ சிரமங்களைச் சந்தித்த அறிமுக இயக்குநர் மோகன் எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தைத் தந்திருப்பதே பெரிய விஷயம். பாராட்டுகள்.

Oru Thozhan Oru Thozhi Review

நாயகன் மனோதீபன் விஷ்ணு விஷாலை நினைவூட்டும் முகம். தன் பங்கை சரியாகச் செய்துள்ளார்.

நாயகி அஸ்த்ரா சினிமாவுக்கான முகமல்ல.. வறுமையும் வெறுமையும் காட்டும் முகம். கடன் பட்ட நெஞ்சத்தையும் காதல் வயப்பட்ட இதயத்தையும் வறுமையில் செம்மையாக வாழ நினைக்கும் குணத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

இன்னொரு நாயகனும் சுடலையின் நண்பனாக வருபவருமான மீனேஷ் கிருஷ்ணா யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நண்பனுக்கு எதையும் செய்யும் சிறப்பான பாத்திரப் படைப்பு.

இரண்டாவது நாயகியாக வரும் அபிநிதா மூக்கும் முழியுமாக இருக்கிறார். கண்கள் பேசுகின்றன. அசல் முறைப்பெண் கலைச்செல்வியாக வாழ்ந்துள்ளார். வம்புக்கு இழுத்து வதைப்படும் வேடத்தில் வரும் ஹலோ கந்த சாமி சிரிக்க வைக்கவில்லை, அனுதாபத்தைத்தான் சம்பாதிக்கிறார்.

ஒளிப்பதிவில் ராஜபாளைய வெம்மையை கண் முன் நிறுத்துகிறார் சிவன் குமார். ஜெய்கிரிஷின் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை நேர்த்தி.

க்ளைமாக்ஸ் அத்தனை புத்திசாலித்தனமாக இல்லை என்பதுதான் படத்தின் பெரிய குறை. இன்னும் யோசித்திருக்கலாம். ஆனால் தன் கடமையைச் செய்துவிட்ட நண்பனிடம், குடும்பத்தை ஒப்படைக்கும் நாயகனின் எண்ணம் புதிது.

எளிமையாக பெரிய ஆர்ப்பாட்டமின்றி வந்திருக்கும் சமூகத்துக்கு அவசியமானதுதான். மக்கள் பார்த்து ஆதரவு தர வேண்டிய படம்!

 

பாகுபலி படம் பார்க்க லீவு தாங்க பாஸ்.... இணையத்தில் வைரலாகும் லீவ் லெட்டர்!

ஹைதராபாத்: இந்தியாவில் மிக அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூலை 10 ம் தேதி வெளியாகிறது.

250 கோடி செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படம் சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது, இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுதும் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் படமும் இதுதான்.

பல முறை வெளியீட்டுத் தேதி அறிவித்தும் படத்தை வெளியிட முடியாமல் போய்விட்டது, இப்போது ஒருவழியாக 10 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் வெளியாவதை முன்னிட்டு பல கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை செய்வோர் ஒட்டுமொத்தமாக லீவ் எடுத்துக் கொண்டு படத்தைப் பார்க்க இருக்கின்றனராம்.

குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பாகுபலி படத்தின் முதல் காட்சியை பார்க்க வேண்டி பலரும் முன்பதிவு செய்து வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் முதல் காட்சியை பார்ப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி தங்கள் லீவ் பற்றி பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

கூட்டம், கூட்டமாக கல்லூரி மற்றும் அலுவலங்களில் வேலை செய்வோர் விடுமுறை எடுக்க இருக்கின்றனர், இதில் இவர்கள் யாரும் விடுமுறைக் கடிதம் எழுத தேவையில்லை. ஏன் தெரியுமா இணையத்திலேயே ஒரு லீவ் லெட்டர் ஒன்று உலா வருகின்றது.

ரசிகர்கள் விடுமுறை எடுக்கப் போகும் போது கைவலிக்க அமர்ந்து கடிதம் எழுத வேண்டியது இல்லை, இணையத்தில் இந்த லெட்டரை டவுன்லோட் செய்து வெறும் கையெழுத்து மட்டும் இட்டால் போதுமானது. அந்தக் கடிதத்தில் என்ன காரணம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

வணக்கம் சார் வருகின்ற வெள்ளிக்கிழமை எனக்கு விடுமுறை வேண்டும். நான் வரவில்லை என்றால் வேலைகள் பாதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும் ஆனால் நான் ஒரு நல்ல காரணத்திற்காகத் தான் விடுமுறை கேட்கிறேன்.

இந்தியாவில் மிகவும் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் பாகுபலி படத்தை முதல் நாள் முதல் காட்சி நான் பார்க்கப்போக வேண்டும் அதற்காகத் தான் நான் விடுமுறை கேட்கிறேன். இந்தப் படத்தை பார்ப்பதற்காக நான் பல வருடங்கள் காத்திருந்து தற்போதுதான் அதற்கான வாய்ப்பு வந்து உள்ளது.

நீங்கள் எனது கடிதத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதற்கு நன்றி, இந்த விடுமுறையை நான் எடுத்துக் கொண்டு பாகுபலி படத்திற்கு செல்கிறேன் என்ற ரீதியில் அமைந்துள்ளது இந்தக் கடிதம்.

தற்போது இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது இந்த லீவ் லெட்டர், இதற்கு முன்பு லிங்கா படம் மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது இந்த மாதிரி லீவ் லெட்டர் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

ஆன்லைனில் பாபநாசம்... அதிர்ச்சியில் கமல்!

பாபநாசம் படம் வெளியாகி நான்கு நாட்களே ஆன நிலையில் அந்தப் படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால், கமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்துள்ள பாபநாசம் படம், தமிழகமெங்கும் ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் முழு வடிவமும் துல்லிய பதிப்பாக ஆன்லைனில் வெளியாகியிருப்பது பாபநாசம் படக்குழுவினரை அதிர வைத்துள்ளது.

Papanasam illegally released online

படம் வெளியான இரண்டே நாளிலேயே ஆன்லைனுக்கு வந்துவிட்டதாம். நான்காவது நாள்தான் இந்த உண்மை படக்குழுவுக்குத் தெரிந்துள்ளது.

முழு பாபநாசம் படமும் இணையத்தில் டவுன்லோட் செய்யும் விதத்தில் வெளியாகியதை அடுத்து காவல்துறையில் புகார் அளிக்க கமல் முடிவெடுத்துள்ளார்.

இதுபற்றி இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறும்போது, இணையத்தில் படம் வெளியாகியுள்ளது எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுபற்றி கமலிடமும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியிடமும் விவாதித்துள்ளேன். கமலும் தயாரிப்பாளரும் தமிழக காவல்துறையில் இன்று புகார் செய்யவுள்ளனர்.

இணையத்தில் படம் வெளியாவதைத் தடுக்க தனியார் நிறுவனங்களின் உதவியையும் நாடியுள்ளோம். அவர்களால் இணையத்தில் வெளியாவதைத் தடுக்கமுடியுமே தவிர கைது பண்ணமுடியாது. இதைச் செய்தவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து சினிமாவைக் காப்பாற்றவேண்டும்," என்றார்.

 

"பெண் புலி"யின் கேரக்டர் என்ன தெரியுமா.. வாங்க வந்து படிங்க!

சென்னை: ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் புலி படத்தில் நடிகை ஹன்சிகாவின் கேரக்டர் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் முதன்முறையாக சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு புலி படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து சுதீப், ஸ்ரீதேவி, சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர், தமிழ்நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படம் 100 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஹன்சிகா மற்றும் சுருதிஹாசன் என இரு நாயகிகள் உள்ளனர் , இவர்கள் இருவரும் எந்த மாதிரியான வேடத்தில் நடித்திருக்கின்றனர் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

தற்போது ஹன்சிகாவின் கேரக்டர் வெளியாகி விட்டது படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக ஹன்சிகா நடித்திருக்கிறார், ஹன்சிகாவின் அண்ணனாக சுதீப் நடித்திருக்கிறார். எனில் படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடித்திருக்கிறார்.

புலி படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகை ஹன்சிகா விஜய்க்கு பின்புறமாக பயத்துடன் நிற்பது போன்று இருக்கிறது. அதாவது அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது கொடிய காட்டு மிருகம் ஒன்றிடம் இருந்து ஹன்சிகாவை விஜய் காப்பது போன்று உள்ளது.

புலி படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி நடைபெறலாம் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 15லும் படத்தை ஆகஸ்ட் மாதம் 27 ம் தேதியிலும் புலி படக்குழுவினர் வெளியிட இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.