உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு!

இணையவெளியில், பொது வெளியில் இசைஞானி இளையராஜாவுக்கும் அவரது இசைக்கும் உள்ள மாபெரும் ரசிகர்களின் எண்ணிக்கையை நாடறியும்.

இவர்கள் அனைவரையும் ஒருகுடையின் கீழ் இணைத்து, சமூக நலப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் இசைஞானி ரசிகர்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி வைத்தார் இளையராஜா.

உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு!

இணையவெளியில் இயங்கும் ரசிகர்களுக்காக 'இசைஞானி பேன்ஸ் க்ளப் குளோபல்' எனும் இணைய தளத்தை அவருக்காகத் தொடங்கினார்கள்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒரு அமைப்பை இசைஞானியே தொடங்கிய பின்னும், இணைய வெளியில் இருக்கும் ரசிகர்கள் இசைஞானி பெயரில் தனித் தனி சமூக வலைதளப் பக்கங்கள் ஆரம்பித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வம் இல்லாமலேயே, 'இது இசைஞானியின் அதிகாரப்பூர்வப் பக்கம்' என்னும் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இசைஞானியின் பெயரில் தனித்தனிக் குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவரும், இனி இயங்க வேண்டிய தளம் 'இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் குளோபல் (Isaignani Fans Club Global - IFCG)' என்ற பக்கம்தான். தன் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கத்துக்கு வருமாறு அழைத்துள்ளார் இளையராஜா.

இதோ அவரது அழைப்பு வார்த்தைகளாகவும் காணொளியாகவும்...

அன்பு ரசிகப் பெருமக்களே... உங்களில் பலர் அதிகாரப்பூர்வமான என்னுடைய இணையதளம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, என்னுடைய அதிகாரம் இல்லாமலே, அதிகாரமற்ற முறையில் நீங்கள் பல வருடங்களாக இந்த இணையதளத்தை குழுமங்களாக நடத்தி வருகிறீர்கள்.

உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்வது, நீங்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கின்ற காரணத்தால், என் பெயரை வைத்து உங்களை நீங்கள் உலகுக்கு அறிமுகம் செய்து கொண்ட காரணத்தால், உங்களை நான் கேட்டுக் கொள்வது, என்னுடைய இணையதளத்தின் கீழ் நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இணையதளம் இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் குளோபல் (IFCG).

-இவ்வாறு இசைஞானி தன் காணொளிப் பேட்டியில் கூறியுள்ளார்.

ரசிகர் மன்றம் தொடங்கிய அடுத்த மாதமே இளையராஜாவின் பிறந்த நாள் வந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த முறை 71001 மரக் கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டனர் அவரது ரசிகர்கள். உலகின் பல நாடுகளிலும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த கொண்டாட்டங்களில் இணைந்தனர். இதுபோன்ற சமூக நல நடவடிக்கைகளில் இறங்க, அனைத்து ரசிகர்கள் ஒருமித்து செயல்படுவது அவசியம் என்று இளையராஜா தெரிவித்தார்.

 

அஸாருதீன் மனைவியின் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த ஷாருக்கின் ஓட்டுநர்!

மும்பை: முன்னாள் நடிகையும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸாருதீனின் மனைவியுமான சங்கீதா பிஜ்லானியின் வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கைதாகியுள்ளார் நடிகர் ஷாருக் கானின் வாகன டிரைவர்.

அவரது பெயர் ராஜேந்திர கெளதம் எனப்படும் பின்டு மிஸ்ரா. 34 வயதாகிறது. புதன்கிழமை மாலையில் இவரை பந்த்ரா போலீஸார் கைது செய்தனர்.

ஷாருக் கானின் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாராம் பின்டு. தனிப்பட்ட ஓட்டுநராக இதுவரை பணியாற்றியதில்லையாம். அதேசமயம், ஷாருக்கின் குழந்தைகளை வீட்டுக்கும், பள்ளிக்கும் கூட்டிச் செல்வது இவரது வேலை என்றும் கூறப்படுகிறது.

அஸாருதீன் மனைவியின் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த ஷாருக்கின் ஓட்டுநர்!

ஷாருக் கானின் ஓட்டுநர் என்று கூறி அந்த வேலைக்காரப் பெண்ணிடமும் அறிமுகம் செய்து கொண்டு பழகியுள்ளார் பின்டு. அந்தப் பெண் மகாராஷ்டிர மாநிலம் லட்டூரைச் சேர்ந்தவர். மும்பையில் தங்கி சங்கீதா வீட்டில் வேலை பார்த்து வந்தார். அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டு அடிக்கடி பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 17 என்று கூறப்படுகிறது. ஷாருக் கான் வீட்டில் அவருக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டிப் பழகியுள்ளார். பின்னர் அவரை நலோஸ்போராவில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளாராம்.

இந்த காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு ஒருமுறை வேலைக்காரப் பெண்ணின் எண்ணுக்கு தொலைபேசி செய்துள்ளார் பின்டு. அப்போது சங்கீதா பிஜ்லானியே பேசியுள்ளார். அப்போதுதான் தனது வேலைக்காரப் பெண் வேலையை விடவிருப்பது குறித்து அவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் உடனடியாக அப்பெண்ணை வேலையை விட்டு நீக்கி விட்டாராம்.

இதனால் வேறு வழியில்லாமல் பின்டுவை நம்பி வந்துள்ளார் அப்பெண். அதைப் பயன்படுத்திக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் பின்டு.

தற்போது போலீஸார் பின்டு மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

'ஹார்லிக்ஸ் மாமா' நடிகர் முரளி தற்கொலை

சென்னை: ஹார்லிக்ஸ் மாமா என அழைக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஏசி முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. இவரது இயற்பெயர் பாலமுரளி மோகன்.

இன்று காலை அவரது உடல், புரசைவாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுத்துள்ளனர்.

வம்சம், தென்றல் போன்ற தொடர்களிலும், இருவர், சிட்டிசன், தில், பாய்ஸ், ரெண்டு உள்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

'ஹார்லிக்ஸ் மாமா' நடிகர் முரளி தற்கொலை

அள்ளித்தந்த வானம் படத்தில் தனியார் தொலைக்காட்சி உரிமையாளராக தோன்றியிருப்பார் முரளி மோகன். இதில் தமிழை இந்த தொலைக்காட்சிகள் எப்படி கொலை செய்கின்றன என்ற காட்சியில் இவரும் விவேக்கும் கலக்கியிருப்பார்கள். 'ஆங்கிலத்துக்கு கட் அவுட். தமிழுக்கு கெட் அவுட்டா..' என்று விவேக் வசனம் பேசுவது இதில்தான்.

முரளிமோகன் தோன்றிய ஹார்லிக்ஸ் விளம்பரம் ரொம்ப பிரபலமானதால், அவரை ஹார்லிக்ஸ் மாமா என்றும் குறிப்பிடுவதுண்டு.

என்ன காரணத்தால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்.