அனுமதியில்லாம ட்வீட் பண்ணே அவ்ளோதான் - சமந்தாவை எச்சரித்த நாகார்ஜூன்

ஹைதராபாத்: அனுமதியில்லாமல் தனது கேரக்டர் பற்றி ட்விட்டரில் தகவல் வெளியிட்ட சமந்தாவை கடுமையாக எச்சரித்துள்ளார் நாகார்ஜுனா.

முன்பெல்லாம் ஒரு படத்தின் அல்லது அதில் நடிப்பவர்களின் விவரங்களை அந்தப் படத்தின் பிஆர்ஓதான் சொல்வார்.

இப்போது அந்த விவரங்கள் எல்லாமே தெரிய வேண்டுமானால் ட்விட்டர் அல்லது பேஸ்புக் போனால் போதும்.

அனுமதியில்லாம ட்வீட் பண்ணே அவ்ளோதான் - சமந்தாவை எச்சரித்த நாகார்ஜூன்

நடிகர், நடிகைகள், இயக்குநர்கல் தங்களின் படங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும் நடிகை சமந்தா ட்விட்டர் - பேஸ்புக்கை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்.

தன்னைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது ட்விட்டரில் பதிவு செய்கிறார். சித்தார்த்தை இவர் காதலிப்பதும் ட்விட்டர் வாயிலாகத்தான் தெரியவந்தது.

தற்போது தெலுங்கில் அவர் நடிக்க உள்ள ‘மனம்' படத்தில் தனது கேரக்டர் என்ன என்பதையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனால் இப்படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடிக்கும் நாகார்ஜுனா அதிர்ச்சியானார். படத்தின் ரகசியம் வெளியாகி விட்டதே என கொதித்துப் போனாராம்.

அனுமதியில்லாம ட்வீட் பண்ணே அவ்ளோதான் - சமந்தாவை எச்சரித்த நாகார்ஜூன்

சமந்தாவை தொடர்பு கொண்டு கேரக்டர் பற்றிய விவரத்தை எப்படி வெளியிடலாம் என்று கேட்டு கண்டித்தாராம். படப்பிடிப்பு முடியும்வரை தனது அனுமதியில்லாமல் படம் சம்பந்தமான எந்த விஷயத்தையும் ட்விட்டரில் வெளியிடக் கூடாது என்று தடை போட்டுள்ளார்.

நாகார்ஜூனாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதால் ட்விட்டரில் கருத்துக்கள் பதிவு செய்வதை சமந்தா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

 

மீடியாவின் வளர்ச்சி... வைரமுத்துவுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?

மீடியாவின் வளர்ச்சி... வைரமுத்துவுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?

எந்த சினிமா நிகழ்ச்சிக்கு வந்தாலும் 'பாசத்துக்குரிய பத்திரிகை நண்பர்களே' என வைரமுத்து விளிப்பதை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.

அவர் பாசம் ரொம்ப மோசம் என்பதே உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் நேற்று முன்தினம் அமைந்தது அவர் பேச்சு.

அது ஒரு சுமாரான, வருமா வராதா என்ற சந்தேகத்துக்குரிய படத்தின் இசை வெளியீட்டு விழா.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, அந்த புது இயக்குநருக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார் தனது நீண்ட பேச்சில்.

திடீரென ஒரு பிரேக் விட்டவர், அடுத்து மீடியா பக்கம் தன் பேச்சைத் திருப்பினார். குறிப்பாக இணையதளங்கள்.

"இப்போது ஊடகங்களின் வேகம் பிரமிக்க வைக்கிறது. நான் மாட்டு வண்டியில் ஏறிப் போய் மாட்டுக்கார வேலன் படம் பார்த்தேன்.

எங்கள் ஊரில் வயலுக்கு போய்விட்டு வந்து குளித்துவிட்டு மட்டமான பவுடர் ஒன்றை முகத்தில் அடித்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு போவார்கள்.

இப்போது எல்லாமே போய்விட்டது. படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக புள்ளிவிபரம் சொல்கிறது. ஒரு பெரிய ஹீரோ நடித்த படத்தை முதலில் ஒரு லட்சம் பேர் பார்த்தால், அதே ஹீரோ நடித்து வெளிவரும் அடுத்த படத்தை பார்க்க வரும் எண்ணிக்கை 80 ஆயிரமாக குறைகிறது. இதற்கு காரணம் ஊடகங்கள்தான்.

இப்போது செல்போனிலேயே படம் பார்த்துவிட முடிகிறது. இணையதளங்கள் பெருகிவிட்டன. இவற்றையெல்லாம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் சினிமா அழிந்துவிடும். தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு ஏதாவது முடிவு செய்ய வேண்டியது கட்டாயமாக இருக்கிறது," என்றார் வைரமுத்து.

நியாயமாக தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது வைரமுத்து மீதுதான்.

தான் வேலை பார்த்த, பாடல்கள் எழுதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப வர ரூ 1 லட்சம் பணத்தை கறாராகக் கேட்டுப் பெற்றுள்ள வைரமுத்து, இதுபோன்ற தனது அசிங்கங்கள் அம்பலத்துக்கு வருவது பொறுக்காமல் ஊடகங்களைத் தட்டி வைக்கச் சொல்கிறாரா?

தயாரிப்பாளர் சங்கம் நியாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது யார் மீது? தான் வேலை பார்த்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கையூட்டு கேட்கும் வைரமுத்து மீதா? அதை அம்பலப்படுத்தும் மீடியா மீதா? என கேள்வி எழுப்பியுள்ளனர் மீடியாக்காரர்கள்.

 

கோடிக் கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்றாரா நடிகர் சூர்யா?

கோடிக் கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்றாரா நடிகர் சூர்யா?

சென்னை: நடிகர் சூர்யா கோடிக் கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக்கித் தருமாறு ஒரு கும்பலை அணுகியதாக தெலுங்கு செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் செயல்படும் பிரபல செய்தி சேனல் ஏபிஎன் நியூஸ். அந்த சேனல் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் கும்பல் பற்றி ஒரு விசாரணை நடத்தியது. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவின் மகன் தாரக ராமா ராவ், நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த கும்பலை அணுகி தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தர கேட்டது தெரிய வந்துள்ளது என்று ஏபிஎன் தெரிவித்துள்ளது.

சூர்யா அந்த கும்பலை அணுகி ரூ.10 முதல் ரூ.100 கோடி வரையிலான கருப்பு பணத்தை மாற்றித் தருமாறு கேட்டதாக அந்த சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அந்த கும்பலுக்கு பெரிய தொகையை வழங்கவும் சூர்யா ஒப்புக் கொண்டதாக ஏபிஎன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த அந்த சேனல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, இதெல்லாம் படு அபத்தமான தகவல்கள்.. சூர்யா அப்படிப்பட்டவருமல்ல. அரசுக்கு சரியாக வரி செலுத்தி வரும் இளம் நடிகர்களுள் முதன்மையானவர் என சூர்யா தரப்பில் தெரிவித்தனர்.

சூர்யா மீது ஏன் இவர்களுக்கு இவ்வளவு கடுப்பு!

 

தமிழகத்தில் 900 அரங்குகளில் கோச்சடையான்... ஆனால்?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - தீபிகா படுகோன் நடித்த கோச்சடையான் படத்தை கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட தயாராக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வேறு எந்தப் படமும் வெளியாகாத ஒரு தேதியில் கோச்சடையானை வெளியிடுமாறு தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 900 அரங்குகளில் கோச்சடையான்... ஆனால்?

இதனால் கோச்சடையான பொங்கலுக்கு வருவதில் சந்தேகம் நிலவ ஆரம்பித்துள்ளது.

இந்திய நாட்டில் முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள படம் கோச்சடையான். இதில் வரும் பாத்திரங்கள் நிஜ உருவத்துக்கு இணையான மோஷன் கேப்சரிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. அதே நேரம் பாதி காட்சிகளில் நிஜ பாத்திரங்களும் தோன்றுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக ஜனவரி 10ல் வெளியாகும் என கூறப்பட்டது. அதே நாளில் நடிகர் அஜீத் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரது படங்களும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 3 படங்களின் போட்டியும் அமோகமாக இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் மிக தித்திப்பானதாகவும் இருக்கும். எனினும், தமிழகத்தில் 3 பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட போதுமான தியேட்டர்கள் இல்லாத நிலை உள்ளது. தியேட்டர் அதிபர்கள் மற்ற கதாநாயகர்களின் படங்களை விட நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், 750 திரையரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் ஜில்லா மற்றும் அஜீத் நடிப்பில் வீரம் ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வரும் என்றும் இதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

எனவே கோச்சடையான் பட தயாரிப்பாளர்களிடம் 3 படங்களும் ஒரே நாளில் வெளியானால் அது வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்த திரைப்பட வர்த்தகர்கள், வேறு படங்கள் வெளிவராத நாளில் கோச்சடையான் வெளியானால் 900 அரங்குகள் வெளியிடலாம் என யோசனை தெரிவித்துள்ளனர். இந்த யோசனையைப் பரிசீலித்து முடிவு சொல்வதாக கோச்சடையான் தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், வருகிற டிசம்பர் 12ந் தேதி இசை வெளியீடு நிச்சயம் என்றும், அன்றைய தினம் ரிலீஸ் தேதியும் உறுதியாக அறிவிக்கப்படும் என்றும் கோச்சடையான் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

சிம்பு, நயன் ஜோடி சேர்வதால் பாண்டிராஜ் படத்திற்கு கூடிய மவுசு

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளது அந்த படத்தின் மவுசை தற்போதே கூட்டியுள்ளது.

சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்து வல்லவன் படத்தில் நடித்தார்கள். அந்த படத்தை பற்றிய பேச்சு வந்ததை விட நயன், சிம்பு காதல் விவகாரம் பற்றி அதிகம் பேசப்பட்டது.

சிம்பு, நயன் ஜோடி சேர்வதால் பாண்டிராஜ் படத்திற்கு கூடிய மவுசு

காதல் ஜோடியாக அவர்கள் இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிம்புவும், நயனும் பிரிந்துவிட்டனர்.

காதல் முறிவுக்கு பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவே இல்லை. இந்நிலையில் தான் பாண்டிராஜ் தான் சிம்புவை வைத்து இயக்கி வரும் படத்திற்கு நயன்தாரா தான் சரியான ஹீரோயின் என்று முடிவு செய்தார். அவரை அணுகி படத்தில் நடிக்கவும் சம்மதிக்க வைத்தார். ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக இருந்த நயனும், சிம்புவும் மீண்டும் ஜோடி சேர்வது படத்தின் மவுசை தற்போதே கூட்டியுள்ளது.

படத்தின் சேட்டிலைட் உரிமம் மற்றும் வினியோக உரிமை குறித்து இப்போதே பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

 

சிவாஜி சிலை அகற்றம்... ஆழ்ந்த மவுனத்தில் அன்னை இல்லம்!

சென்னை: சிவாஜி சிலையை அகற்றலாம் என தமிழக அரசு முடிவாகச் சொல்லிவிட்ட நிலையில், அதுகுறித்து சினிமாக்காரர்கள் எந்த கருத்தையும் சொல்ல முன்வரவில்லை.

இதைவிட கவனிக்கத்தக்க விஷயம்... சிவாஜியின் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் வாயே திறக்காமலிருப்பதுதான்.

இந்த சிலையை அகற்றக் கோரி கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே வழக்கு தொடரப்பட்டுவிட்டது. ஆனால் அப்போது தமிழக அரசு இந்த சிலையால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளிப் போட்டு வந்தது.

சிவாஜி சிலை அகற்றம்... ஆழ்ந்த மவுனத்தில் அன்னை இல்லம்!

ஜெயலலிதா முதல்வரான பிறகும்கூட இந்த சிலை விவகாரம் உடனே கிளம்பவில்லை. 'இது முதல்வரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பல்ல, நீதிமன்றத்தில் வழக்கு வந்திருக்கிறது... அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து தமிழக அரசு பதிலளித்திருக்கிறது' என்று சொல்லும் அளவுக்கு கவனமாக இந்த விவகாரம் கையாளப்பட்டுள்ளது.

சிலையை எடுக்கக் கூடாது என எதிர்த்தால், அது மக்கள் விரோத கருத்தாக முன்நிறுத்தப்படும் என்பது அன்னை இல்லத்துக்கு தெளிவாகப் புரிந்திருக்கிறது.

இதுகுறித்து சிவாஜி அபிமானிகள் பலர் பிரபு மற்றும் ராம்குமாரைச் சந்தித்து, நாம ஏதாவது போராட்டம் நடத்தலாமா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்தவர்கள், பேசாம போங்கப்பா... போராட்டம் அது இதுன்னு நீங்க பண்ணிட்டுப் போயிடுவீங்க. பல வகையிலும் பாதிப்பு எங்களுக்குதான். அதான் வேற இடத்தில வைக்கலாம்னு சொல்லிடுச்சே அரசு... இத்தோட விடுங்க, என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்களாம்!!

 

நடிகை ராதா செக்ஸ் புகாரில் முன் ஜாமீன் கேட்டு தயாரிப்பாளர் மனு!

சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்ளாமலேயே செக்ஸ் வாழ்க்கையை அனுபவித்தார் என நடிகை ராதா கொடுத்துள்ள புகாரில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார் தயாரிப்பாளர் ஜி பைசூல்.

சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல சினிமா படங்களில் கதாநாயாகியாக நடித்துள்ளவர் நடிகை ராதா. இவர், கடந்த 22-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், ‘திருவல்லிக்கேணியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜி.பைசூல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்ததாகவும், அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், தன்னிடம் இருந்து ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

நடிகை ராதா செக்ஸ் புகாரில் முன் ஜாமீன் கேட்டு தயாரிப்பாளர் மனு!

இந்த புகார் குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் விசாரணைக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் பைசூல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘நடிகை ராதா பொய் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வடபழனி அனைத்து மகளிர் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மார்கரேட் சக்கரபாணி ஆஜராகி வாதம் செய்தார்.

இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று மனுவுக்கு போலீசார் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

என்னது... மோடியைச் சந்தித்தாரா வடிவேலு?

கோடம்பாக்கத்தைத் தாண்டி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படும் சமாச்சாரம் ஒன்று இப்போது மீடியாவில் ரவுண்டு கட்ட ஆரம்பித்துள்ளது.

அது குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியைச் சந்தித்து, தேர்தல் பிரச்சாரத்துக்கும் ஒப்புக் கொண்டுள்ளார் நகைச்சுவை நடிகர் வடிவேலு என்பதுதான்.

போன தேர்தலில் புயலில் பட்ட அடியிலிருந்து இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார் வடிவேலு. புதிதா இரண்டு பிரமாண்ட படங்களிலும் ஹீரோவாக நடித்துவருகிறார்.

என்னது... மோடியைச் சந்தித்தாரா வடிவேலு?

இந்த நேரத்தில் போய் காவிச் சாயம் பூசிக்கொள்வாரா... இதெல்லாம் நடக்கிற விஷயமா? என்று கேட்டால், 'அட இல்லய்யா... உண்மைதான். பெங்களூருவில் நடந்த மோடியின் கூட்டத்துக்குப் பிறகு, படு ரகசியமாக மோடியைச் சந்திக்க வைத்தார்களாம் தமிழக பாஜக தலைவர்கள். வடிவேலுவுக்கு கடந்த தேர்தலில் நடந்த கசப்பான அனுபவங்களையும் எடுத்துச் சொன்னார்களாம். இந்த தேர்தலில் உங்களுக்கு மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கும்.. சேர்ந்து பணியாற்றலாம்,' என தட்டிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் மோடி," என்கிறார்கள்.

இப்படியெல்லாம் நடக்குமாடா மண்டையா? என கவுண்டர் ஸ்டைலில் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் Anti - வடிவேலுவின் கோஷ்டியினர்!