காங்கிரஸ் சீட் கொடுத்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த நடிகர் அக்ஷய் குமார்

மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுத்தும் அதை ஏற்க பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மறுத்துவிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை கேட்டுள்ளார். ஆனால் அவரோ தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

இந்த தேர்தலில் பாலிவுட் நடிகைகள் ஹேமமாலினி, ராக்கி சாவந்த், குல் பனாக், கிரண் கேர், நடிகர் ஜாவித் ஜாப்ரி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். இருப்பினும் அக்ஷய் குமாருக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. அவர் தான் தயாரித்துள்ள ஃபக்லி படத்தை விளம்பரப்படுத்துவதில் பிசியாக உள்ளார்.

காங்கிரஸ் சீட் கொடுத்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த நடிகர் அக்ஷய் குமார்

அக்ஷய் காங்கிரஸ் சீட்டை ஏற்றுக் கொண்டிருந்தால், அவரது சொந்த ஊரான டெல்லி சாந்தினி சவுக்கில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்திருப்பார்.
சாந்தினி சவுக்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவர் அங்கு போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்.

முன்னதாக அக்ஷயின் மாமனார் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா 1992ம் ஆண்டு பொதுத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் நடித்த குரங்கு மரணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மிகப் பெரிய வெற்றிப் பெற்ற படம் அருணாசலம்.. அதில் ஒரு காட்சி.

பஸ்சில் ஊருக்குப் புறப்படத் தயாராக இருப்பார் ரஜினி.

அப்போது அங்கு வரும் ஒரு குரங்கு அவரது கழுத்தில் கிடந்த ருத்ராட்சையைப் பறித்துக் கொண்டு ஓடும். இதையடுத்து ரஜினியும் அதை பின் தொடர்ந்து செல்வார். அப்போதுதான் அவரது பின்னணி தெரியவரும்.

அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் நடித்த குரங்கு மரணம்!

அதுவே அருணாச்சலத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

அந்த காட்சியில் நடித்த குரங்கின் பெயர் ராமு. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நேரு என்பவரால் வளர்க்கப்பட்ட இந்த குரங்கு, சில படங்களில் நடித்துள்ளது.

பின்னர் நேரு தன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார். போகும்போது, இந்தக் குரங்கை சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தார். கடந்த சில ஆண்டுகளாக இது வனத்துறையினரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது.

ராமு குரங்குக்கு 33 வயதான நிலையில் மூப்பின் காரணமாக நேற்று மரணம் அடைந்தது. சேலம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட ராமு, பரிசோதனை முடிந்ததும் அடக்கம் செய்யப்பட்டது.

பொதுவாக குரங்குகள் 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை தான் உயிர் வாழும். ஆனால் இந்த குரங்கு மட்டும் 33 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளது.

 

அஜீத், விஜய்யிடம் எனக்குப் பிடிச்சது... - ரஜினியின் ஓபன் கமெண்ட்ஸ்

சென்னை: அஜீத்தின் ஒளிவு மறைவற்ற மனசும், விஜய்யும் அமைதியும் எனக்குப் பிடிக்கும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார்.

இன்று ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, இன்றைய நாயகர்கள் அத்தனை பேருமே உங்கள் ரசிகர்கள்தான். உங்களைப் பற்றி அவ்வளவு பெருமையாக அனைத்து மேடைகளிலும் பேசுகிறார்கள்.

அஜீத், விஜய்யிடம் எனக்குப் பிடிச்சது... - ரஜினியின் ஓபன் கமெண்ட்ஸ்

நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. குறிப்பா அஜீத், விஜய் பற்றி ஒரு வார்த்தையில் உங்கள் பாணியில் நச்சென்று சொல்லுங்க சார்... இது அவர்கள் ரசிகர்கள் அத்தனைப் பேருக்கும் அப்படி இருக்கும்..!" என்று கோரிக்கை வைத்தார் அஜீத்.

அதற்கு பதிலளித்த ரஜினி, 'அஜீத்திடம் எனக்குப் பிடித்தது அவரது ஒளிவு மறைவற்ற குணம். எதையும் மறைத்துப் பேசமாட்டார்.

விஜய்யிடம் பிடித்தது அவரது அமைதி. நான் கேள்விப்பட்டிருக்கேன், செட்டில் கூட அவர் அவ்வளவாகப் பேசாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார் என்று. அது எனக்குப் பிடிக்கும்," என்றார்.

'அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ரஜினியின் பாராட்டு அத்தனை மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என நம்புகிறேன்,' என்றார் பேட்டியெடுத்த விவேக்.

 

ரசிகர்களின் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்...! - கண்கலங்கிய ரஜினி

சென்னை: என் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு மகத்தானது. அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் உயிருள்ளவரை அவர்களை மறக்க மாட்டேன், என்று கூறி கண்கலங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ஜெயா டிவியில் இன்று ரஜினியின் சிறப்புப் பேட்டி ஒளிபரப்பானது. ஒரு மணி நேரம் ஒளிபரப்பான இந்த பேட்டியில் ரஜினி நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பேட்டியின் பெரும்பகுதி நேரத்தில் விவேக்கே ஆக்கிரமித்துக் கொண்டாலும், ரஜினி சொன்ன பதில்களில் நூறு சதவீத நேர்மை, உண்மை இருந்தது.

ரசிகர்களின் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்...! - கண்கலங்கிய ரஜினி

இந்த நேர்காணலில் ரஜினியிடன் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் (கோச்சடையான் தவிர்த்து)....

விவேக்: உங்களுக்கு இரண்டும் பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை இல்லையே என்ற நினைப்பு இருக்கிறதா?

ரஜினி: இல்லை... இல்லை.. என்கிட்ட நிறையப் பேரு இப்படி கேட்டுட்டாங்க. எனக்கு இல்ல.. என் மனைவிகிட்ட இதை கேட்டேன். அவங்களும் கூட எனக்கு எந்த வருத்தமும் இல்லீங்கன்னுட்டார்.

விவேக்: மகன் செய்ய வேண்டியதை மகள்களே இப்போ செய்துட்டாங்க இல்லையா..

ரஜினி: ஹ..ஹா..ஹ..

விவேக்: ரெண்டு பேர்ல யார் சார் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. ஸாரி, குடும்பத்துல குழப்பம் உண்டாக்கக் கேக்கல...

ரஜினி: ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ரெண்டு பேருமே 'பெட்'தான்...

விவேக்: ஆனா உங்களுக்கு ஒண்ணுன்னா ஒரே வேவ் லெங்த்ல டக்குன்னு புரிஞ்சிக்கிட்டு உடனே ஓடி வர்றது யாரு?

ரஜினி: ஐஸ்வர்யா... ஆக்சுவலா.. சௌந்தர்யா பிறந்த நேரத்தில், நான் பிஸி. குழந்தையை பாத்துக்க முடியாததால ஐஸ்வர்யாவை என் மாமியார் வீட்டில் 6 ஆண்டுகள் விட்டிருந்தோம். அதனால ஒரு குழந்தையை கொஞ்ச காலம் பாக்காம இருந்ததால வரும் ஈர்ப்பு அது..

ஸ்டைல் ஐகான்

விவேக்: இந்தியாவிலேயே ஸ்டைல் ஐகான் என்றால் அது நீங்கதான் சார். இது நான் சொல்லல...

ரஜினி குறுக்கிட்டு...: இல்லை.. சிவாஜி சார்தான். அவர்தான் நடிப்பில் புது ஸ்டைல் புகுத்தியவர்...

விவேக்: உடல் அசைவில், நடையில், ஒரு பொருளைக் கையாள்வதில் என அனைத்திலும் புதுமை, ஸ்டைலைப் புகுத்தியவர் நீங்கள்தான் சார். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று அமிதாப்பச்சனே அறிவித்துவிட்டார். அது இந்தியாவே அறிந்தது. இந்த ஸ்டைலில் சிகரெட்தான் முக்கியம். அந்த ஸ்டைல் மூலம் பல லட்சம் பேரை இழுத்தீங்க.

வரமே சாபமாயிடுச்சி

ரஜினி..: ஆமா, அந்த வரமே பின்னாடி சாபமாயிடுச்சி... ஹ ஹாஹா...

விவேக்: இப்பவும் பல லட்சம் பேர் புகைப் பழக்கத்துக்கு அடிமையா வைச்சிருக்கிற இளைஞர்களுக்கு உங்க அட்வைஸ்...

ரஜினி: எதையும் லிமிட்டா வச்சிக்கங்க.. எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகிடாதீங்க.

மறுபடியும் புராணப் படங்களுக்கு..

விவேக்: கோச்சடையான் பார்த்த பிறகு, மகாபாரதம் போன்ற காவியங்களை மீண்டும் எடுத்தால் நீங்கள் எந்த பாத்திரத்தில் நடிப்பீர்கள்?

ரஜினி: கண்ணன்.. கிருஷ்ணர்.

விவேக்: ஆனால் நீங்கள் முதன் முதலில் நடித்ததே துரியோதனன் வேடம்தானே... அதிலயும் உங்களுக்கு ஈர்ப்பு இருக்குதானே?

ரஜினி: ஆமா.. வில்லன் வேஷம் பொதுவாகவே ஈர்ப்பு மிக்கது. நெகடிவ் கேரக்டர் பண்ணும்போது எந்த கன்ட்ரோலும் கிடையாது. ஹீரோன்னா நியாயமான வழியில போராடித்தான் ஜெயிக்கணும்.

அபூர்வராகங்கள் - கோச்சடையான்

விவேக்: பொதுவா ஒரு படத்தின் முதல் காட்சிக்கு தேங்காய் உடைப்பதும், முடிவில் பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். அபூர்வ ராகங்களில் தேங்காய் ஷாட் எது? கோச்சடையானின் பூசணிக்காய் ஷாட் எது?

ரஜினி: அபூர்வ ராகங்களில் கேட்டைத் திறந்துட்டு வர்ற காட்சி... இல்ல இல்ல.. அதுக்கு முன்ன பைரவி வீடு இதானேன்னு கமல் கிட்டே கேட்கிற சீன். அந்த சீன் ஒரே ஷாட்ல முடிஞ்சது. ஆனால் அடுத்த ஷாட் பத்து டேக் போச்சு. ஏன்னா கமல் பெரிய நடிகர். அவர்கூட நடிச்சப்ப கொஞ்சம் தயக்கமா இருந்துச்சி.. பின்னர் கமலே என்னை அமைதியாக்கி நடிக்க வச்சார்.

கோச்சடையானில் மெதுவாகத்தான் பாடல் காட்சிதான் பூசணிக்காய் உடைத்த காட்சி.

எப்படி வந்தது இந்த ஸ்டைல்?

விவேக்: உங்களுக்கு மட்டும் எப்படி சார் இப்படி ஒரு ஸ்டைல் வந்தது... எப்படி இதையெல்லாம் யோசிக்கிறீங்க?

ரஜினி: கேபி சார்தான் இதுக்கெல்லாம் மூல காரணம். நான் நடிக்க வந்த புதிதில், 'இதோ பாரப்பா... இன்டஸ்ட்ரில இனி உன்னை அவங்க மாதிரி நடிக்க சொல்வாங்க.. அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் சொல்ற மாதிரியெல்லாம் கூட நடிக்க சொல்வாங்க. அதையெல்லாம் கேட்க வேண்டாம். உன்னோட தனித்தன்மையை மாத்திக்க வேணாம்னார். நானே சொன்னேன்னு சொல்லு.. உன் ப்ளஸ் பாயின்டே உன் ஸ்பீட்தான். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு புது ஸ்டைல் பண்ணுன்னு.. கேபி சார்தான் என்கிட்ட இருந்ததை கண்டு பிடிச்சி, அவர்தான் இந்த செடிக்கு தண்ணி ஊத்தி வளர்த்துவிட்டார்.

விவேக்: நீங்க செஞ்சதிலேயே உங்களுக்குப் பிடிச்ச ஸ்டைல் எது?

ரஜினி: சிகரெட் ஸ்டைல்தான். ஆனா அதைக் கூட சரியான கேப்ல பண்ணனும்... சீன், ஷாட், சிச்சுவேஷன் எல்லாம் அமையணும்...

காமெடி

விவேக்: ஆக்ஷன் ஹீரோவா இருந்து திடீர்னு காமெடியிலும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்க.. தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊருன்னு.. எப்படி சார் இது? காமெடி நடிகர்கள் பத்தி உங்க அபிப்பிராயம்?

ரஜினி: எல்லாமே கேபி சார்தான். அவர்தான் என்னை தில்லு முல்லுவில் நடிக்க உற்சாகப்படுத்தினார். உனக்கு நடிப்பு, டான்ஸ் எல்லாம் வருது. காமெடி டைமிங் நல்லாருக்கு. ஆனா யாரும் அதை சரியா பயன்படுத்தல. நான் தில்லுமுல்லுல அதைப் பயன்படுத்தறேன்னு அந்தப் படம் எடுத்தார். அடுத்து பெரிய இன்ஸ்பிரேஷன் அமிதாப் பச்சன். நான் அவரோட பெரிய பேன். சர்வசாதாரணமா அவர் ஹீரோ கம் காமெடி பண்ணுவார்.

நடிப்பிலேயே கடினமானது காமெடிதான். மத்ததெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் காமெடி சொல்லிக் கொடுத்து வராது. அது பெரிய விஷயம். காமெடியனை மக்கள் ஏத்துக்கணும். அதான் முக்கியம். இப்போ சுருளிராஜனை எடுத்துக்கிட்டீங்கன்னா, நீங்கள்லாம் அவர்கூட ஆக்ட் பண்ணியிருக்கீங்களா.. இல்லையான்னு தெரியாது... ஆனா ஜஸ்ட் ஒரு டயலாக்.. அதை பேச நீங்க வீட்ல நிறைய ஹோம் ஒர்க் பண்ணி, செட்ல அடிஷனலா ஒண்ணைச் சேப்பீங்க. ஆனா சுருளி சார், அந்த டயலாக்கை அப்படியே வாங்கி ஜஸ்ட் சொல்வார்.. அப்படி சிரிப்பு வரும்.. அது போல வீகே ராமசாமி சார்... நாகேஷ், தேங்காய் சீனிவாசன்.. இவங்க கூட எல்லாம் நடிச்சது ஒரு வரம்தான்.

ரசிகர்கள்...

விவேக்: சார், உங்க ரசிகர்கள் ரொம்ப நல்லவங்க சார். நீங்க, கண்ணா நான் திரும்ப வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனீங்க... அதுக்குப் பிறகு எங்கு பார்த்தாலும் உங்க ரசிகர்களின் பிரார்த்தனைதான். இன்னிக்கு உங்க உயிரைத் திருப்பிக் கொண்டு வந்துட்டாங்க. அந்த ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?

ரஜினி: அப்போ வந்து... எனக்கு இவங்கள்லாம் இந்த அளவு ப்ரே பண்ணிக்கிட்டிருக்கான்னு தெரியாத நிலைமையில இருந்தேன். ராமச்சந்திராவிலிருந்து சிங்கப்பூர் போறப்போ, பேன்சுக்கு ஏதாவது சொல்லணும்னு சொன்னப்போ... என் வாய்ஸ் சரியா இல்ல. இருந்தாலும் அப்ப நான் சொன்னேன்... நான் வந்திடறேன். நீங்கள்லாம் பெருமைப்படற அளவுக்கு ஏதாவது செய்வேன்னு நான் சொன்னேன். இந்த கோச்சடையான் மூலம் என் ரசிகர்களை நான் பெருமைப்படுத்தறதா நினைக்கிறேன்.

அதுக்கப்புறம் ரசிகர்கள் எனக்காக செய்ததையெல்லாம் பேப்பர்ஸ், மேகஸின்ஸ், டிவி எல்லாத்தையும் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன். இதுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல. நான் அப்பவே சொன்னேன்.. பணத்துக்காக நடிச்சேன்னு. என் மேல இவ்வளவு அன்பு செலுத்தறாங்களே, இவ்வளவு செய்யறாங்களே.. இவங்களுக்கு என்ன செய்ய முடியும்னு நினைப்பேன். சில சமயம் எனக்கு அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெட்கமா இருக்கும். உங்களுக்காக மண்சோறு சாப்பிட்டேன், நாப்பது நாள் நடந்து போனேன்னு சொல்லும் அவங்களுக்கு நன்றின்னு சொல்றது ரொம்ப சின்ன வார்த்தை. ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க, பண்ணீங்கன்னு கேட்டுக்குவேன். இதெல்லாம் விவரிக்கவே முடியாத விஷயம்.

இதையெல்லாம் நான் உயிருள்ள வரைக்கும் மறக்க முடியாது. மறந்தா மனுஷனே கிடையாது. இதுக்கு கைம்மாறா என்ன செய்யப் போறேன்னு இன்னும் எனக்குத் தெரியல...

 

சூர்யா - வெங்கட் பிரபு புதிய படம்... இன்று பூஜை!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இப்போது அஞ்சான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

சூர்யா - வெங்கட் பிரபு புதிய படம்... இன்று பூஜை!

அந்தப் படத்துக்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்தப் படத்தின் பூஜையை சித்திரைத் திருநாளான இன்று எளிமையாக நடத்தினார்கள். இதில் சூர்யா, வெங்கட்பிரபு, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.