சென்னை: சினிமாவில் தன்னை நம்பாதவன் கடைசிவரை ஜால்ரா அடிச்சிட்டுதான் இருக்க வேண்டி வரும், என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
ஜீவா, த்ரிஷா, வினய், ஆன்ட்ரியா, சந்தானம் நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் நேற்று மாலை நடந்தது.
சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாஸன் பங்கேற்று இசைத் தட்டை வெளியிட்டார். இயக்குநர் பாலா பெற்றுக் கொண்டார்.
பின்னர் கமல்ஹாஸன் பேசுகையில், "இந்த மேடைக்கு நான் வந்திருப்பதே அன்பிற்காகத்தான். மேடை அலங்காரத்துக்காக நான் இதை சொல்லல... வர இயலாததற்கான எல்லா இடையூறுகளும் இருந்த போதிலும் இவர்களுடைய விடாப்பிடியான அன்பின் காரணமாகத்தான் வந்தேன்.
பொதுவா ஒரு தடவை முயற்சி பண்ணி அது நடக்கலேன்னா உடனே வேற வேலையை பார்க்கப் போயிடுவாங்க, ஏன்னா படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணனும். நிறைய வேலைகள் இருக்கும்.
ஆனாலும் விடாப்பிடியாக அவர்கள் என்னை வந்து பார்த்தபோது இப்படித்தான் படத்தையும் எடுத்திருப்பார்களோ? என்று எண்ணத் தோன்றியது. அதாவது எது வேண்டுமோ அதை இந்தப் படத்துக்காக தேடித் தேடி சிறப்பாக எடுத்திருப்பார்கள் என நம்புகிறேன். அந்தமாதிரி அடம்பிடிக்கும் போது கொஞ்சம் காலதாமதமானாலும் அதுவே வெற்றிக்கு வித்தாக அமையும்.
இதுதான் வேண்டுமென்று நம்புவதே மிகவும் அபூர்வம். இங்கே வெற்றி வேணும்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா அது எங்கிருந்து வருதுன்னு சொல்லத் தெரியாது. அதிலும் சினிமாவைப் பொருத்தவரை நான் என்னுடைய சொற்ப அனுபவத்தில் தெரிந்து கொண்டது, நம்பி இது நல்லாருக்குன்னு நாம சிரிச்சி, நாம அழுது, நாம நம்பிக்கையோடு எடுத்த படங்கள் 90 சதவீதம் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. தன்னை நம்பாதவன் கடைசி வரைக்கும் ஜால்ரா அடிச்சிட்டுதான் இருக்கணும்!
கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடுதான். அந்தக் கோட்டைப் புரிந்து கொண்டுதான் இந்தப்படத்தை எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அந்த வெற்றியெல்லாம் உங்க (ரசிகர்கள்) கைலதான் இருக்கு.
இந்தப் படத்தில் நடித்த வினய் முன்பு ஒருமுறை என்னை சந்தித்த போது தவறுதலாக எனக்கு ஆல் த பெஸ்ட் சொன்னதாகச் சொன்னார். அவர் சரியாத்தான் சொன்னார். எனக்கும் எல்லோருடைய வாழ்த்துகளும் வேணுமே. காரணம் அடுத்து என்னுடைய படம் ரிலீஸாகப் போகிறது அதற்கு உங்களுடைய வாழ்த்துகளும் எனக்கு தேவை.
இது அப்படிப்பட்ட ஒரு பரிமாற்றம்தான். இந்த விழாவுக்கு நான் வந்ததற்கு காரணமே புதிதாக ஒரு கூட்டம் வந்து நல்ல படம் எடுத்து, நன்றாக செயல்படுகிறார்கள். அவர்களை வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஏனென்றால் இந்த வாழ்த்தை நானும் எதிர்பார்க்கிறேன். இங்கே அதற்காகத்தான் வந்திருக்கிறேன்.
வெற்றி இருக்கும் போது செய்யக்கூடிய விஷயங்கள் எப்போதுமே ரொம்ப பிரமாதமா வரும். அது எப்படின்னு தெரியாது, ஆச்சரியமா இருக்கும். ரசிகர்கள் கைதட்டும் போது தான் நமக்கு நம்மீது ஒரு நம்பிக்கை வரும். அவர்களின் கைத்தட்டல்களில் அப்படி ஒரு பலம் இருக்கிறது.
ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்குமான இடைவெளியில் இதுபோன்ற விழாக்களுக்கு வந்து ரசிகர்களின் கைதட்டல்களை கேட்க வேண்டும். அது அடுத்த படத்துக்கான ஒத்திகையாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் அடுத்த கைதட்டல் எப்போதும் வரும் என்று நமக்கு தெரியாது. அதற்காகவே ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். ரசிகர்களின் அந்த கைதட்டல்கள் தான் எங்களுடைய சம்பளம். பாக்கி எல்லாமே செலவாகிடும், வரியாகப் போய்விடும்!," என்றார் கமல்.