2/14/2011 10:42:57 AM
நடிகர்கள் ஆர்யா, கருணாஸ், சின்னி ஜெயந்த், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா உள்பட 76 பேருக்கு கலைமாமணி விருதை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். அதே போல் பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி மற்றும் சின்னத்திரை விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்தது.
இதே போன்று 2007,2008ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இதன்படி, கலைமாமணி மற்றும் சின்னத்திரை விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்று விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி பேசினார். அமைச்சர் பரிதி இளம்வழுதி வாழ்த்தி பேசினார். இதில் மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், பாரதி விருது -எழுத்தாளர் ஜெயகாந்தன், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது -இசையமைப்பாளர் இளையராஜா, பாலசரசுவதி விருது-பரத நாட்டிய கலைஞர் பத்மாசுப்ரமணியம் ஆகியோர் பெற்றனர். 2008ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர்- கருணாஸ், ஒளிப்பதிவாளர்-ராஜீவ்மேனன், இசையமைப்பாளர்-பரத்வாஜ், இயக்குனர்- திருமுருகன் உள்பட 27 பேருக்கும், 2009ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர்- சின்னி ஜெயந்த், குணச்சித்திர நடிகைகள் ரோகிணி, சரண்யா, நடிகைகள் மாளவிகா, ரேவதி சங்கரன், நாட்டுப்புற பாடகி தஞ்சை சின்னப்பொன்னு உள்பட 23 பேருக்கும் வழங்கப்பட்டது.
அதே போல, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகர்-ஆர்யா, நடிகைகள்-அனுஷ்கா, தமன்னா, பட்டிமன்ற பேச்சாளர்- திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட 26 பேர் பெற்றனர்.