மருத்துவமனையில் நடிகர் எஸ்.எஸ்.ஆர்.... எம்.எல்.ஏ.வான முதல் இந்திய நடிகர்!

சென்னை: பழம்பெரும் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 87.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எஸ்.எஸ்.ஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஜேந்திரனின் முழுப் பெயர் சேடப்பட்டி சூரியநாராயணத் தேவர் ராஜேந்திரன் என்பதாகும்.

சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்திதான் எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படமாகும். ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தவர்.

திமுகவுக்காக ஊர் ஊராகப் போய் நிதி சேகரித்துக் கொடுத்தவர். 1962ம் ஆண்டு தேனி சட்டசபைத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்தான் நாட்டிலேயே எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற முதல் நடிகர் ஆவார்.

அதைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்தார் எஸ்.எஸ்.ஆர். 1981ம் ஆண்டு இவர் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர். இவரை ஆண்டிப்பட்டி தொகுதியில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்தார்.

1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும்.

வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் பிரபலமானவர் எஸ்.எஸ்.ஆர். இவருக்கு நடிகை விஜயக்குமாரி உள்பட 3 மனைவியர். மொத்தம் 9 பிள்ளைகள் உள்ளனர்.

 

மணிரத்னத்தின் புதுப்பட தலைப்பு ஓகே கண்மணி?

சென்னை: துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ஓகே கண்மணி என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடல் படத்தை அடுத்து மணிரத்னம் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். காதல் கதை என்று கூறப்படும் இந்த படத்திற்கு ஓகே கண்மணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தலைப்பு குறித்து மணிரத்னம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

மணியின் புதுப்பட தலைப்பு 'ஓகே கண்மணி'?

நித்யா, துல்கர் ஜோடி சேர்ந்துள்ளது இது மூன்றாவது முறை ஆகும். இந்த படத்தில் பை ஸ்டார் நாயகி கனிகாவும் நடிக்கிறார். இந்த படம் தமிழ் தவிர மலையாளத்திலும் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.

படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

'கத்தி'யின் முதல் நாள் வசூல் ரூ.12.5 கோடியாமாம்!

சென்னை: கத்தி படத்தின் முதல்நாள் வசூல் ரூ. 12.5 கோடியாம்.

விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளி அன்று ரிலீஸானது. படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைக்கா நிறுவனம் தயாரித்ததால் அதை வெளியிட சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

'கத்தி'யின் முதல் நாள் வசூல் ரூ.12.5 கோடியாமாம்!

தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளால் படத்திற்கு இலவசமாக ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்தது. இதற்கிடையே பிரச்சனைகள் தீர உதவி செய்த மாண்புமிகு அம்மாவுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இத்தனை பரபரப்புக்கு மத்தியில் படம் ரிலீஸானது. இந்நிலையில் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 12.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.

 

கேரளாவில் விஜய்யின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து ரசிகர் பலி

பாலக்காடு: கேரளாவில் கத்தி படம் பார்த்துவிட்டு குஷியில் வெளியே வந்த ரசிகர் ஒருவர் விஜய்யின் மெகா கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து பலியானார்.

கத்தி படம் தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. கேரளாவில் மட்டும் சுமார் 200 தியேட்டர்களில் படம் ரிலீஸாகியுள்ளது. கேரளாவில் விஜய்யுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தான் அங்கும் கத்தி படம் பல தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கு சேட்டன் ரசிகர்கள் அதிகம்.

விஜய்யின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து ரசிகர் பலி

கேரளாவில் ஓடும் ரயில்களில் முதல்முறையாக தமிழ் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த தமிழ் படம் கத்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கன்சேரியைச் சேர்ந்த உன்னி என்பவர் புதன்கிழமை கத்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார்.

படம் பார்த்த குஷியில் வெளியே வந்த அவர் தியேட்டர் அருகில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் மெகா கட் அவுட்டில் ஏறி அதற்கு பாலாபிஷேகம் செய்தார். அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘உதிரிப்பூக்கள்’ பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காலமானார்

சென்னை: உதிரிப்பூக்கள், ஜானி உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் நேற்று காலமானார். அவருக்கு வயது 70.

கடந்த ஜூன் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பாட்டார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது பிரபல இயக்குநர்கள் மகேந்திரன், பாண்டியராஜன் ஆகியோர் நேரில் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

‘உதிரிப்பூக்கள்’ பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காலமானார்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதும், தொடர்ந்து அவருக்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அசோக்குமார் காலமானார்.

மரணமடைந்த அசோக்குமார் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்பட நூறுக்கும் அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்துள்ளார்.

 

பூஜை: இதுவும் ரசிகர்கள் விமர்சனம்

சென்னை: ஹரி தனக்கே உரிய ஸ்டைலில் கொடுத்திருக்கும் பக்கா மசாலா படம் பூஜை.

தீபாவளிக்கு கத்தி தவிர விஷால் நடித்துள்ள பூஜை படமும் ரிலீஸாகியுள்ளது. கத்தி படத்திற்கு எதிராக கிளம்பிய பிரச்சனைகளால் அது குறித்த செய்திகள் தான் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் சத்தமில்லாமல் வெளியாகியுள்ளது பூஜை.

ரசிகர்கள், இணையதளங்கள், விமர்சர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பூஜை பட விமர்சனம் இதோ,

பூஜை: இதுவும் ரசிகர்கள் விமர்சனம்

கோவையில் பெரும் பணக்கார குடும்பத்து வீட்டு வாரிசான வாசு(விஷால்) சிறுபிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறி காய்கறி மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் திவ்யாவை(ஸ்ருதிஹாஸன்) சந்திக்கிறார். திவ்யாவிடம் நட்பாக பழகும் வாசுவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. இந்நிலையில் வாசு கூலிப்படை தலைவனான பொள்ளாச்சியை சேர்ந்த அன்னை தாண்டவத்திடம்(முகேஷ் திவாரி) மோதுகிறார்.

வாசுவின் குடும்பம் மீதான பகை மேலும் அவர் மீதான தனிப்பட்ட பகை காரணமாக அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார் வில்லன். இதில் வாசு எப்படி தப்பித்து வெற்றி காண்கிறார் என்பதே கதை.

பூஜை: இதுவும் ரசிகர்கள் விமர்சனம்

ஹரி படங்கள் என்றால் ஆக்ஷனுக்கு குறைவே இருக்காது. அதற்கு பூஜையும் விதிவிலக்கு அல்ல. விஷால் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாய் கலக்கியுள்ளார். மேலும் ஸ்ருதியுடனான காதல் காட்சிகளிலும் மனிதர் உருகி உருகி நடித்திருக்கிறார். விஷால் படத்தை தன் தோளில் தாங்குகிறார். ஸ்ருதி அழகாக வந்து, தாராளமாக கிளாமர் காட்டி, காதலித்து தனக்கு அளிக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

சூரி, பிளாக் பாண்டி, இமான் அண்ணாச்சி கூட்டணியின் காமெடி ரசிக்கும்படி உள்ளது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், விஷாலின் அம்மாவாக வரும் ராதிகா, சித்தாரா, கௌசல்யா, பிரதாப் போத்தன், தலைவாசல் விஜய் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் அம்சமாக நடித்துள்ளனர்.

பூஜை: இதுவும் ரசிகர்கள் விமர்சனம்

முதல் பாதியில் மசாலா கலவை சுர்ரென்று இருந்தாலும் இரண்டாம் பாதியில் சப்பென்று உள்ளது. டப்பிங் மேலும் சிறப்பாக செய்திருக்கலாம். எதற்கெடுத்தாலும் பாடல் என்பதை தவிர்த்திருக்கலாம். பலவகையான மசாலாக்களை கலந்தபோதிலும் ருசி சற்று குறைவாக உள்ளது.

பூஜை- விஷால் ஷோ.

 

விஜய்யின் 'கத்தி': ரசிகர்கள் விமர்சனம்

இயக்கம்: ஏ.ஆர். முருகதாஸ்

நடிகர்கள்: விஜய், சமந்தா, சதிஷ், நீல் நிதின் முகேஷ், டோட்டா ராய்

கதை, திரைக்கதை: ஏ.ஆர. முருகதாஸ்

இசை: அனிருத்

கத்தி படத்தில் வரும் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய அரசியல்வாதிகள் அந்த படத்தை எதிர்த்து போராடுகிறார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள கத்தி படம் பல பிரச்சனைகளை தாண்டி தீபாவளி அன்று ரிலீஸானது. படத்திற்கு தமிழகம் தவிர கேரளா மற்றும் கர்நாடகாவிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

விஜய்யின் 'கத்தி': ரசிகர்கள் விமர்சனம்

இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர், இணையத்தளங்கள், சினிமா விமர்சகர்கள் ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில் படம் பற்றிய விமர்சனம் இதோ...

விஜய் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் கதிர் குற்றவாளி, ஜீவா படித்துவிட்டு ஊர்மக்களுக்கு உதவும் நல்லவர். கிராமத்தினரிடம் இருந்து விளை நிலங்களை வாங்க முயற்சிக்கும் பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்து போராடுகிறார் ஜீவா. அந்த பன்னாட்டு நிறுவன தலைவராக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். திருடனாக இருந்தாலும் அறிவாளியாக இருக்கும் கதிர் விதிவசத்தால் ஜீவாவின் இடத்திற்கு வருகிறார். ஜீவாவின் இடத்தில் இருந்து கதிர் கிராமத்தினருக்காக பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்து போராடுகிறார். இது தான் கதை

விஜய் இரண்டு வேடங்களிலும் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் ஊழல், விவசாயிகள் தற்கொலை, தண்ணீர் பஞ்சம், மூத்த குடிமகன்களின் நிலைமை, பரபரப்பான செய்திக்காக காத்திருக்கும் மீடியா என்று பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.

விஜய்யின் 'கத்தி': ரசிகர்கள் விமர்சனம்

அவரது வசனங்கள் அருமை. அதிலும், நம்ம பசிக்கு மேலே சாப்பிடுற ஒரு இட்லி கூட நம்மலோடதே கிடையாது என்ற இடத்தில் தியேட்டர்களில் விசில் பறக்கிறது. முதல் பாதி ரொம்பவே மெதுவாக செல்கிறது. ஆனால் அதை இரண்டாம் பாதியில் பரப்பரப்பாக்கிவிட்டார் முருகதாஸ்.

கார்பரேட், உலகமயமாக்கல், 2ஜி ஊழல், தொழில் அதிபர் விஜய் மல்லையா பற்றிய கிண்டல் வசனங்களில் முருகதாஸ் கைதட்டல் வாங்குகிறார். செல்பி புள்ள மற்றும் ஆதி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. காதல் காட்சிகள் வலுவில்லாமல் உள்ளது. முருகதாஸ் ஓவராக கருத்து சொல்கிறார்.

சதீஷின் காமெடி, அனிருத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது. டான்ஸில் விஜய் வழக்கம்போல் அசத்துகிறார். படத்தின் நீளம் கொஞ்சம் ஓவராக உள்ளது. தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கேற்ற விருந்தை அளித்துள்ளார் முருகதாஸ்.

கத்தி படத்தில் காட்டியிருக்கும் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய அரசியல்வாதிகள் அந்த படத்தையே எதிர்த்து போராடியுள்ளனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நல்லது தான். படத்திற்கு செம விளம்பரம் கிடைத்துள்ளது. ஆக, கத்தி விஜய் ரசிகர்களுக்காக தீட்டியது.

 

ஏகப்பட்ட பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக தீபாவளி அன்றே ரிலீஸான 'கத்தி'

சென்னை: தயாரிப்பாளரான லைக்காவால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த கத்தி படம் ஒரு வழியாக அறிவித்தபடியே தீபாவளிக்கு ரிலீஸானது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படத்திற்கு அதன் தயாரிப்பாளரான லைக்கா உருவத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. லைக்கா இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவரின் நிறுவனம், அதனால் அத்தகையவர் தயாரித்த படத்தை வெளியிட விட மாட்டோம் என சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நின்றன.

 ஏகப்பட்ட பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக தீபாவளி அன்றே ரிலீஸான 'கத்தி'

கத்தி தீபாவளி அன்று ரிலீஸாகும் என்று அறிவித்தபோதிலும் இந்த போராட்டங்களால் படம் ரிலீஸாகுமா ஆகாதா என்ற சந்தேகம் தீபாவளிக்கு முந்தைய நாள் அதுவும் மாலை வரை இருந்தது. இந்நிலையில் தான் படம் சம்பந்தப்பட்ட அனைத்தில் இருந்தும் லைக்காவின் பெயரை நீக்குவதாக அந்நிறுவனம் போராட்டக்காரர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது. இதையடுத்து தான் படம் ரிலீஸாவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டங்களால் படத்திற்கு இலவசமாக நல்ல விளம்பரம் கிடைத்தது என்றே கூற வேண்டும். இப்படி இத்தனை பிரச்சனைகளை தாண்டி கத்தி படம் அறிவித்தபடியே தீபாவளி அன்று ரிலீஸானது.

தமிழகம் தவிர கேரளா, கர்நாடகாவிலும் கத்திக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

 

கத்தி படம் ரிலீசான தியேட்டரில் தள்ளுமுள்ளு, கல் வீச்சு - அதிர்ச்சியில் தியேட்டர் ஓனர் பலி

சென்னை: சென்னையில் கத்தி படம் ரிலீசான தியேட்டர் ஒன்றில் டிக்கெட் வாங்குவதில் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கல்வீச்சில் அதிர்ச்சியடைந்த தியேட்டர் உரிமையாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தீபாவளியை ஒட்டி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தயாரான கத்தி படம் நேற்று ரிலீசானது. ஏற்கனவே, கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்ததற்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். கத்தி படத்தை வெளியிடக் கூடாது என அவர்கள் போராடி வந்தனர். இதனால், கத்தி படம் ரிலீசாக இருந்த திரையரங்குகளில் பதற்றம் நிலவியது. சில தினங்களுக்கு முன்னர் கத்தி படம் ரிலீசாக இருந்த சென்னை திரையரங்குகள் இரண்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

கத்தி படம் ரிலீசான தியேட்டரில் தள்ளுமுள்ளு, கல் வீச்சு - அதிர்ச்சியில் தியேட்டர் ஓனர் பலி

பின்னர், கத்திப் பட போஸ்டர் உள்ளிட்டவற்றில் தங்கள் பெயர் இடம்பெயராது என லைகா அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், திட்டமிட்டபடியே நேற்று கத்தி ரிலீசானது.

இந்நிலையில், நேற்று மதியம் சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ளது லட்சுமி திரையரங்கத்தில் கத்தி படத்திற்கு டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற ரசிகர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை ஒரு அறையிலிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார், அத்திரையரங்கின் உரிமையாளர் கிருஷ்ணன் (74). அப்போது பாய்ந்து வந்த கல் ஒன்று அவரது ஜன்னல் கண்ணாடியை உடைத்தது.

இதில் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட அவர், நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.