கௌரவம் படத்திற்கு தடை கோரும் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை

Kongu Vellalar Goundar Peravai Apposes Gouravam Movie

சென்னை: சாதிப்பிரச்சினையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கௌரவம்' திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

'கீதா ஆர்ட்ஸ்' என்ற தெலுங்குப் பட நிறுவனதுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் கௌரவம் படத்தை தயாரித்து வருகிறார். ராதாமோகன் இயக்கும் இந்த திரைப்படத்தில் சிரஞ்சிவியின் உறவினர் அல்லு சிரிஷ் கதாநாயகனாகவும் ‘விக்கி டோனர்' புகழ் யமி குப்தா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது. இந்தப் படம் தலித் அல்லாத சமுதாயங்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி அதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் கூறியுள்ளதாவது:

நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள "கெளரவம்' திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளைப் பார்த்தோம். இந்த திரைப்படத்தில், தலித் அல்லாத 60-க்கும் மேற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கலப்புத் திருமணத்தால் கெளரவக் கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடுவது போலவும், சாதி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும், தலித் அல்லாத சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விடும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தீண்டாமையை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எல்லா சமுதாயமும் அடிப்படை வசதி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதில் நாங்கள் திட்டவட்டமாக இருக்கிறோம். ஆனால் இத்திரைப்படம் சாதி, மதங்களிடையே நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும் என்றும் கூறியுள்ளார். எனவே இந்த படத்தினை தடை செய்யும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கௌரவம் திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்.

 

மலையாள நடிகரை லவ்வும் ரம்யா நம்பீசன்!

Ramya Nambeesan S Love Affair   

முன்னணி நடிகையான ரம்யா நம்பீசனுக்கும் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ராமன் தேடிய சீதை, குள்ளநரிக் கூட்டம், சமீபத்தில் வெளியான பீட்சா போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். மலையாளப் படங்களிலும் தொடர்ந்து பிஸியாக உள்ளார்.

‘இது பத்திரமனல்' மலையாளப் படத்தில் நடித்ததிலிருந்து அதில் நடித்த உன்னி முகுந்தனும் ரம்யா நம்பீசனும் நெருக்கமாகப் பழகி வருகின்றனர்.

இந்த நெருக்கம் இப்போது காதலாகிவிட்டதாகவும், இருவரும் விரைவில் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தது போய், இப்போது பகிரங்கமாகவே சுற்ற ஆரம்பித்துள்ளார்களாம்.

ரம்யா நம்பீசனுக்கு ஓரிரு படங்கள் கைவசம் உள்ளன. இவற்றை முடித்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் வழக்கம்போல ரம்யா நம்பீசன் இதனை மறுத்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளோம் என்று தெரிவித்தார்.

 

கொல்கத்தா ஹோட்டலில் ஷாருக்கானை சந்தித்த 'ஸ்பெஷல்' ரசிகர்

Shah Rukh Khan Meets His Special Fan

கொல்கத்தா: நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் கொல்கத்தா ஹோட்டலில் தன்னை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகருடன் பேசி மகிழ்ந்ததுடன் அவரை ஐபிஎல் போட்டியை காணவும் அழைப்பு விடுத்தார்.

ஐபிஎல் 6வது சீசன் துவங்கிவிட்டது. இந்த சீசனின் முதல் போட்டி நேற்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தோற்கடித்தது. முன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான இந்தி நடிகர் ஷாருக்கான் கொல்கத்தாவில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு தாயும், வீல் சேரில் ஒரு வாலிபரும் வந்தனர்.

21 வயதாகும் ஹர்ஷு என்ற போஸ், தனது தாயுடன் ஷாருக்கானை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ஹோட்டலுக்கு வந்தார். ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இது குறித்து ஷாருக்கின் மேனேஜரிடம் தெரிவித்தனர். ஷாருக்கோ அவர்களை உடனே உள்ளே விடுங்கள் என்று தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து போஸின் கனவு நிறைவேறியது. அவர் தனக்கு பிடித்த ஷாருக்கானை சந்தித்து பேசினார், போட்டோ எடுத்துக் கொண்டார். ஷாருக் தனது அணி விளையாடும் ஆட்டத்தை பார்க்க வருமாறு போஸை கேட்டுக் கொண்டார். இதையடுத்து போஸ் கொல்கத்தா அணியை சந்தித்துடன் நேற்றைய ஆட்டத்தின்போதும் அணிக்கு ஆதரவாக அரங்கிற்கு வந்துள்ளார். போஸுக்கு பிடித்த அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் சங்க உண்ணாவிரதம்... வராத நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை?

Nadigar Sangam Send Notice The Absentees

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உள்ளிட்ட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர். ஆனால் நடிகைகள் பெரும்பாலானோர் வரவே இல்லை.

இது திரைத்துறையினருக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதாநாயகர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்து இருந்தனர். வெளிநாடுகளில் வரமுடியாத சூழலில் இருந்த விஜய் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார். உண்ணாவிரதத்துக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் உள்ளூரில் இருந்த பல நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக நயன்தாரா, ஸ்ரேயா, தமன்னா, காஜல் அகர்வால், அசின், அஞ்சலி, ஹன்சிகா, டாப்சி, குஷ்பு, சமந்தா, கார்த்திகா, லட்சுமி மேனன் போன்றோர் உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.

இவர்கள் தமிழ்ப் பெண்கள் இல்லை. எனவேதான் வரவில்லை என்று கூறப்பட்டாலும், தமிழ் சினிமாவில் சம்பாதித்து தமிழகத்தில் சொத்துகள் வாங்கும் இவர்கள், தமிழருக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதத்துக்கு வராமல் போய்விட்டார்களே என பலரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் பார்த்திபன், விமல், சசிகுமார், கார்த்திக், சந்தானம், கடல் பட நாயகன் கவுதம் போன்றோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே உண்ணாவிரதத்துக்கு வராமலும், உரிய விளக்கம் அளிக்காமலும் போன நடிகர் நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 

'என் படத்துக்கு வரிவிலக்கு கொடுத்துட்டாங்க... பொய்யான நியூஸை ஏன் போடறீங்க!'

Govt Awards Tax Free Chennayil Oru Naal Sarath Kumar   

சென்னை: சென்னையில் ஒரு நாள் படத்துக்கு அரசு வரிவிலக்கு கொடுக்கவில்லை என்று வந்தது பொய்யான செய்தி என நடிகர் சரத்குமார் கூறினார்.

ராதிகா தயாரிப்பில், சரத்குமார், சேரன், பிரசன்னா, பிரகாஷ்ராஜ் உள்பட பலரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் சென்னையில் ஒருநாள்.

தரமான படம் என பலராலும் பாராட்டப்படும் இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கவில்லை என்றும், காரணம் சன் டிவி நல்லாசியுடன் என்று குறிப்பிட்டு படத்தை விளம்பரப்படுத்தியதுதான் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் சென்னையில் ஒரு நாள் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள இன்று ராடான் மீடியா அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் சரத்குமார் உள்ளிட்ட படக் குழுவினர்.

அப்போது, படத்தின் வரிவிலக்கு விவகாரம் குறித்து கேட்டபோது, "இதில் கொஞ்சமும் உண்மையில்லை. இப்படியெல்லாம் கூடவா யோசித்து செய்தி எழுதுவார்கள்...!

இந்தப் படத்துக்கு அரசு வரிவிலக்கு கொடுத்துவிட்டது. என்னிடம் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. வதந்திகளை நம்பி இப்படியெல்லாம் எழுதாதீங்க," என்றார்.

இந்தப் படத்தின் கதைக்கு மூல காரணமே, சென்னையில் விபத்தில் இறந்த ஹிதேந்திரன்தான். அவன் பெயரை டைட்டிலில் குறிப்பிட விரும்பினார்களாம் சென்னையில் ஒரு நாள் படக்குழுவினர். ஆனால் ஹிதேந்திரன் குடும்பத்தினர் விரும்பாததால் குறிப்பிடவில்லையாம்.

 

விஸ்வரூபம் 2 டிடிஎச்களில் ஒளிபரப்பு...? மறுக்கிறது கமல் தரப்பு!

Viswaroopam 2 Dth Fee Rs 1000

சென்னை: விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை டிடிஎச்சில் வெளியிடப் போவதாக கமல் தரப்பிலிருந்து செய்தி கசிந்துள்ளது. ஆனால் அவரது செய்தித் தொடர்பாளர் இதனை மறுத்துள்ளார்.

கமல் ஹாஸன் தானே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து, வெளியிட்ட படம் விஸ்வரூபம். இந்தப் படம் கிளப்பிய சர்ச்சைகள் அனைத்தும் நினைவிருக்கலாம்.

இந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் முதல் புள்ளியே, கமல் தன் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக அறிவித்ததுதான்.

இப்போது ஒரு வழியாக விஸ்வரூபம் முதல் பாகம் 50 நாட்களைத் தாண்டிவிட்டது. இந்த ஓட்டத்துக்கு முக்கிய காரணம், அந்த சர்ச்சைகளும் பரபரப்பும்தான். அடுத்து இப்போது இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கிவிட்டார் கமல்.

முதல் பாகத்தில் அமெரிக்காவைக் காப்பாற்றிய கமல், இந்த இரண்டாம் பாகத்தில் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுகிறாராம்.

வரும் ஆகஸ்டு 15-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ் தெரிவித்திருந்தார்.

3 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்படுவதாகவும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிடிஎச்

‘விஸ்வரூபம்' இரண்டாம் பாகத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான முயற்சிகள் இப்போதே நடப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது தியேட்டர்களில் வெளியாகும் முன்பா அல்லது வெளியான பின்பா போன்ற விவரங்களை கமல் தரப்பு வெளியிடவில்லை.

மறுப்பு

ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும், படம் இன்னும் முடிவடையாத நிலையில் இப்படி செய்திகள் வருவது மற்றவர்களை தவறாக வழிநடத்திவிடும் என்றும் கமலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

ஒரு சிங்கமும் 3 சுண்டெலிகளும்... வயிறைப் பதம் பார்க்கும் 'துள்ளி விளையாடு'!

Thulli Vilayadu Is An Ultimate Comedy   

விரைவில் திரைக்கு வரவிருக்கும் துள்ளி விளையாடு படத்தைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள் பலராலும் சிரிப்பை அடக்க முடியவில்லையாம்.

அப்படியொரு அல்டிமேட் காமெடியாக வந்துள்ளது வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம்.

ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் துள்ளி விளையாடு.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்று அளித்ததோடு, படம் தங்களை ரொம்பவே மகிழ்வித்ததாகத் தெரிவித்தனர்.

இப்போது படத்தை திரையுலக பிரமுகர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டியுள்ளனர்.

படம் பார்த்த அத்தனைப் பேருமே விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். அத்தனை நகைச்சுவையாக வந்துள்ளதாம் படம்.

இதுகுறித்து கூறுகையில், இது ஒரு சிங்கத்துக்கும், மூன்று எலிகளுக்குமிடையே நடக்கிற தமாஷ் விளையாட்டு என்று வைத்துக் கொள்ளுங்களேன். நம்ம பிரகாஷ் ராஜ் சார்தான் சிங்கம், யுவராஜ், சூரி, சென்றாயன் ஆகியோரும்தான் அந்த மூன்று எலிகள். இந்த விளையாட்டோடு தீப்தியின் காதல் விளையாட்டும் சேர காமெடி ப்ளஸ் காதல் கதம்பமாக வந்துள்ளது. பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர்," என்றார் இயக்குநர் செல்வா.

ஸ்ரீகாந்த் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.