சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல கன்னடத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை கே எஸ் ரவிக்குமாருக்கு வழங்க ரஜினி முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கோச்சடையானுக்குப் பிறகு...
கே எஸ் ரவிக்குமாரும் ரஜினியும் கடைசியாக இணைந்த படம் படையப்பா. அதன் பிறகு ஜக்குபாய், ராணா படங்களில் இணைவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த இரு படங்களுமே நின்றுபோயின.
ஷங்கருடன் பேச்சு
இதற்கிடையே இயக்குநர் ஷங்கருடன் ரஜினி இணைகிறார் என்றும், அதற்கான கதை விவாதத்தில் இருவரும் சில வாரங்களுக்கு முன் ஈடுபட்டதாகவும் தகவல் கசிந்தது. ரஜினியைச் சந்தித்ததை இயக்குநர் ஷங்கரும் ஒப்புக் கொண்டார்.
ரவிக்குமாருடன்...
இப்போது கோச்சடையான் படம் ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறார் ரஜினி என்கிறார்கள். இந்த முறை தன்னை இயக்கும் வாய்ப்பை அவர் கே எஸ் ரவிக்குமாருக்கே தருகிறாராம்.
ராக்லைன் வெங்கடேஷ்
இந்தப் படத்தை பிரபல கன்னட படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழில் தம், மஜா போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.