“ஆடுகளம்” வில்லன் கிஷோர் கதாநாயகன் அவதாரம் – காதலி காணவில்லை படத்தில் ஹீரோ

“ஆடுகளம்” வில்லன் கிஷோர் கதாநாயகன் அவதாரம் – காதலி காணவில்லை படத்தில் ஹீரோ

சென்னை: வில்லனாக நடிப்பில் ஹீரோக்களை ஆட்டிப்படைக்கும் கிஷோர் தற்போது கதாநாயகனாக அரிதாரம் பூசியிருக்கிறார்.

தமிழில் ஆடுகளம், பொல்லாதவன், ஜெயம் கொண்டான், ஹரிதாஸ் போன்ற படங்களில் நடித்தவர் கிஷோர். ஹரிதாஸில் கதாநாயகன் என்ற போதிலும் குழந்தைக்கு தந்தையாகத்தான் நடித்திருந்தார்.

இந்நிலையிதான் தற்போது "காதலி காணவில்லை" என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் கிஷோர். இப்படத்தில் கிஷோருக்கு ஜோடியாக கார்த்திகா ஷெட்டி நடிக்கின்றார்.

இப்படத்தில் ஜி.ஆர், பத்மா வசந்தி, சோப்ராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஜி.ஆர் கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.பி.பூரணி, சுவாமிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தினை இரட்டையர்களான ரவி-ராஜா எழுதி இயக்குகின்றனர். ஒளிப்பதிவு ஓஷா.

இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் கூடுகிற மார்கெட் பகுதியில் கிஷோர், வில்லன்களுடன் மோதும் அதிபயங்கரமான சண்டைக் காட்சியை மிகப்பிரயத்தனப்பட்டு படமாக்கியுள்ளார்கள்.

இப்படத்தில் வில்லன் வேடத்தில் சோப்ராஜும் அவருடன் அடியாளாக வேலை செய்யும் வேடத்தில் கிஷோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்ததும் இவ்வாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

பெங்காலி மொழியிலும் அசத்தும் “அருந்ததி” – கோயலின் நடிப்பில் மற்றொரு அனுஷ்கா

சென்னை: தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்ட "அருந்ததி" திரைப்படம் பெங்காலியில் ரீமேக் ஆகி அங்கும் வசூலைக் குவித்தது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

அனுஷ்காவின் நடிப்பில் உருவான "அருந்ததி" ஒரு சமஸ்தானைத்தையே கட்டி ஆண்ட வீரமான ராணி ஒருத்தியின் கதையாக உருவாகியிருந்தது.

ஜக்கம்மா என்று அழைக்கப்பட்ட அக்கதாபாத்திரத்தில் அனுஷ்கா இரண்டு மொழிகளிலுமே நடித்திருந்தார்.

பெங்காலி மொழியிலும் அசத்தும் “அருந்ததி” – கோயலின் நடிப்பில் மற்றொரு அனுஷ்கா

வசூல் மழையில் குளித்த அருந்ததி:

போர் கலைகள் தெரிந்த ராணியின் கம்பீரமும், ராஜவம்சத்தின் திரண்ட தோள்களின் அழகுமாக அனுஷ்கா நடித்திருந்த "அருந்ததி" திரைப்படம் பாக்ஸ் ஆபீஸையே தகர்க்கும் அளவிற்கு வசூல் மழையில் குளித்தது.

பெங்காலியில் ரீமேக்:

இந்நிலையில்தான் "அருந்ததி" என்ற பெயரிலேயே பெங்காலி மொழியிலும் ரீமேக் ஆகி வெளிவந்துள்ளது. கிட்டதட்ட 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படம் அங்கும் வசூலில் பிய்த்துக் கொண்டு ஓடியுள்ளது.

தயாரிப்பு நிறுவனங்கள்:

சுஷித் மாண்டல் இயக்கத்தில் இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ் பிலிம்ஸ் மற்றும் சுரிந்தர் பிலிம்ஸ் தயாரித்து திரை இட்டது.

அருந்ததியாய் கலக்கிய கோயல்:

இப்படத்தில் நடிகை கோயல் மாலிக் அருந்ததியாக கலக்கியுள்ளார். பெங்காலி பாரம்பரிய உடைகளையும், அணிகலன்களையும் அணிந்து வாள் சண்டையில் ஆகட்டும், இந்நாள் அருந்ததி கதாபாத்திரத்தில் ஆகட்டும் அனுஷ்காவைப் போலவே அசத்தியுள்ளார் அவர்.

வாள் சண்டைப் பயிற்சி:

இப்படத்திற்காகவே வாள் சண்டையும், குதிரை ஏற்றமும் கற்றுக் கொண்டுள்ளார் அவர்.

ஜய் ஜய் மா பாடல்:

இசையமைப்பாளராக ஜீத் கங்குலி இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். ஜக்கம்மா பாடல் பெங்காலியில் ஜய் ஜய் மா என்று ரீமேக் செய்யப்பட்டுள்ளது. என்ன ஜக்கம்மா என்ற பெயரைத்தான் முனிமா ஆக்கிவிட்டார்கள்.

அதிரவைக்கும் இந்திரா:

சோனு நடித்த ருத்ரா கதாபாத்திரத்தில் இந்திரனெய்ல் சென்குப்தா நடித்துள்ளார். அருந்ததீதீ என்று அழைப்பதில் சோனுவைப் போலவே அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.

பெங்காலியில் ரசிக்க:

மொத்ததில் தமிழில் பார்த்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக்காக பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக அருந்ததி பெங்காலி படைப்பை பார்த்து ரசிக்கலாம்.

 

'ஆச்சி' மனோரமாவுக்கு எதிராக அண்ணன் மகன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்

சென்னை: நடிகை மனோரமாவுக்கு எதிராக அவரது அண்ணன் மகன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பல ஆண்டுகளாக நடித்து வரும் மனோரமா வீடு, நிலம் என்று சம்பாதிக்கும் பணத்தில் ஏராளமான சொத்துக்கள் வாங்கி போட்டுள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை தலை தூக்கியதுள்ளது.

மனோரமாவின் 2வது அண்ணனின் மகன் கே. காசிநாதன் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

'ஆச்சி' மனோரமாவுக்கு எதிராக அண்ணன் மகன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்

மன்னார்குடியை சேர்ந்த காசிக்கிளாக்குடையார்-ராமாமிர்தம் தம்பதியர்களுக்கு ஆறுமுகம், கிட்டு என்ற இருமகன்களும், மனோரமா என்ற மகளும் பிறந்தனர். இதில் ஆறுமுகம், கிட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.

மூத்தவர் ஆறுமுகத்துக்கு மனைவி தனலட்சுமி, மகன்கள் கணேசன், தென்னவன், ரவி, சேனாதிபதி, சங்கர், மகள்கள் அமுதா, விஜி ஆகியோர் குடவாசல் தாலுகாவில் உள்ள திருக்கண்ணமங்கை கிராமத்தில் வசிக்கின்றனர்.

இரண்டாவது மகன் கிட்டுவுக்கு முத்துலட்சுமி, மகன்கள் நித்தியானந்தம், காசிநாதன் (நான்), மகள்கள் மகேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோர் சென்னையில் வசித்து வருகிறோம்.

எங்கள் பாட்டி ராமாமிர்தம் பெயரில், சென்னை புலியூர் கிராமம், (சூளைமேடு அருகே) இந்திரா நகரில் 6 கிரவுண்டு நிலம் இருந்தது.

என் பெரியப்பாவும், என் அப்பாவும் இறந்த பின்னர், எங்கள் பாட்டி ராமாமிர்தம், அத்தை மனோரமா வீட்டில் வாழ்ந்தார். இந்த சூழ்நிலையில், மாம்பலம்-கிண்டி வட்டாச்சியர் அலுவலகத்தில், ராமாமிர்தத்தின் ஒரே வாரிசு நான் தான் என்று கூறி கடந்த 5-1-1993-ம் அன்று என் அத்தை மனோரமா வாரிசு சான்றிதழை பெற்றுள்ளார். அப்போது, என் பெரியப்பா, என் தந்தை ஆகியோரும் வாரிசு என்பதை அவர் மறைத்து இந்த சான்றிதழை பெற்றுள்ளார். இவ்வாறு மோசடியாக பெறப்பட்ட வாரிசு சான்றிதழ் மூலம், புலியூர் கிராமம் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார்.

இந்த மோசடி எங்களுக்கு காலதாமதமாகத்தான் தெரிய வந்தது. எனவே, மோசடியாக சான்றிதழ் பெற்று, நிலத்தை அபகரித்த மனோரமா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எங்களது சொத்தை மீட்டு தரவேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து காசிநாதன் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், காசிநாதன் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் எமிலியாஷ் கூறுகையில் 1993ம் ஆண்டு மனோரமாவின் பெயருக்கு மாற்றப்பட்ட நிலத்தை அவர் தனது பேரன் பெயருக்கு மாற்றிவிட்டார். அதனால் போலீசார் இந்த புகாரை முடித்து வைத்துவிட்டார்கள் என்று கூறி போலீசாரின் அறிக்கையையும் அவர் சமர்பித்தார்.

அறிக்கையை பார்த்த நீதிபதி கூறுகையிலல், ராமாமிர்தம் 1992ம் ஆண்டு இறந்துள்ளார். ஆனால் மனுதாரரோ தற்போது தான் புகார் கொடுத்துள்ளார். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி அதை முடித்து வைத்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.