இஞ்சி முறப்பா… மிட்டாயில்ல! இது படத்தோட தலைப்புதான்!

பீட்ஸா என்று படத்திற்கு தலைப்பு வைத்தாலும் வைத்தார்கள் அது ஹிட் அடிக்கவே தொடர்ந்து பிரியாணி, ஜிகர்தண்டா என்று உணவு வகைகளின் பேராகவே படங்களுக்கு பெயரிட ஆரம்பித்து விட்டனர்.

கிராமப்புறங்களிலும் பேருந்துகளிலும் பிரபலமாக விற்பனை செய்யப்படும் ‘இஞ்சி முறப்பா' என்ற மிட்டாயின் பெயரை புதிய படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

இஞ்சி முறப்பா… மிட்டாயில்ல! இது படத்தோட தலைப்புதான்!

இந்த ‘ இஞ்சி முறப்பா' திரைப்படத்தினை புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் S. சகா. இவர் திரைப்பட கல்லூரியில் பயின்றதுடன் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர். P.R.K. ராஜு ஒளிப்பதிவை கவனிக்க படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார்.

புதுமுகங்கள்

இஞ்சி முறப்பாவில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி ஸ்ரீஷ்டா நடிக்கிறார்.

இன்னும் யார்? யார்?

புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள்.

அண்ணன் தங்கை பாசம்

தன் தங்கையை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று அண்ணன் கண்ட கனவு ஒரு கட்டத்தில் பொய்யாகிப் போகிறது.

ஏமாந்த தங்கை

தன் தங்கை காதலனிடம் ஏமாந்து போய் நிற்க அண்ணன் எடுக்கிற முடிவுதான் கதை என்கிறார் இயக்கநர்.

காதலா? பாசமா?

பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லி இருக்கிறோம். தனது தங்கையின் வாழ்க்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையை காதல், மோதல், காமெடி என்று அதிரடியாக உருவாக்கியுள்ளோம் என்றார் இயக்குனர்.

இஞ்சி முறப்பா… மிட்டாயில்ல! இது படத்தோட தலைப்புதான்!

பாடல் ஹிட்

படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஸ்ரீபாலாஜிக்கு முறைப்படி பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளோம்.மணிசர்மாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ரகம் என்றும் கூறினார்.

காதலியும், தங்கையும்

காதலியாக சோனி ஸ்ரீஷ்டாவும், தங்கையாக ஸ்ரீ என்ற புதுமுகம் கதாப்பாத்திரத்தின் சிறப்பு அம்சம். படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

டேஸ்ட் எப்படி?

அதெல்லாம் சரிதான், இந்த இஞ்சி முறப்பா, அஜீரணத்தைப் போக்குமா? இல்லை வயிற்றை வலிக்குமா? என்று படம் பார்த்த பின்னாடிதானே தெரியும்.

 

நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார்: சொல்லுவது உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. 2013ம் ஆண்டில் ராஜா ராணி, ஆரம்பம் என்று இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துவிட்டார்.

நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார்: சொல்லுவது உதயநிதி ஸ்டாலின்

தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் நண்பேன்டா, சிம்புவுடன் இது நம்ம ஆளு, சூர்யாவுடன் மாஸ், ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாரா பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,

நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார். அவருடன் நடிக்க நான் கொடுத்து வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இருக்கும் போட்டி போதாது என்று லேடி சூப்பர் ஸ்டார் வேறா?

 

ரஜினி பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை இசை வெளியீடு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள காக்கிச் சட்டை படத்தின் இசையை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என்றும், படத்தை வரும் டிசம்பர் 25-ம் தேதி வெளியிட முயற்சிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் கேரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் எதிர்நீச்சல். இதனை இயக்கிய துரை செந்தில் குமார் மீண்டும் சிவகார்த்தியுடன் இணைந்துள்ள படம்தான் காக்கிச் சட்டை. அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினி பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை இசை வெளியீடு

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் படத்தின் இசையை வெளியிடும் தேதியை அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் மிகத் தீவிர ரஜினி ரசிகர். படங்களிலும் அதுபோலவே காட்சிகளை அமைக்கச் சொல்வது வழக்கம்.

இந்த ஆண்டு ரஜினி பிறந்த நாள் மிக விசேஷமாக அமைந்துள்ளது. அன்றுதான் டிசம்பர் லிங்கா படம் வெளியாகிறது. ரஜினியைக் கவுரவிக்கும் விதமாக காக்கிச் சட்டையின் இசை வெளீட்டையும் அன்றே வைக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.

அதன்படி டிசம்பர் 12-ம் தேதி காக்கிச் சட்டை இசை வெளியாகிறது. படத்தை கிறிஸ்துமஸ் நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

 

வயசானாலும் அழகும், ஸ்டைலும் கொஞ்சமும் குறையாத ஐஸ்வர்யா ராய்

மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த ஐஸ்வர்யா ராயை பார்த்தவர்களின் கண்கள் மூட மறுத்தன.

ஐஸ்வர்யா ராய்க்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் இன்னமும் நம்ம ஊர் மன்மத ராசாக்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்கையில் ஐஸ்வர்யா ராய் மாதிரி பெண் வேண்டும் என்கிறார்கள். அப்படி பல தலைமுறையினரை தனது அழகால் கட்டி வைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய்.

வயசானாலும் அழகும், ஸ்டைலும் கொஞ்சமும் குறையாத ஐஸ்வர்யா ராய்

குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் குண்டான ஐஸ் தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆகிவிட்டார். லாங்கின்ஸ் வாட்ச்சின் பிராண்ட் அம்பாசிடர் ஐஸ். அவர் மும்பையில் நடந்த லாங்கின்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

வயசானாலும் அழகும், ஸ்டைலும் கொஞ்சமும் குறையாத ஐஸ்வர்யா ராய்

குழந்தை ஆராத்யா பிறந்ததில் இருந்து முழுக்கை வைத்த அனார்கலி அணிந்து வரும் ஐஸ் இந்த நிகழ்ச்சிக்கு முழங்கால் வரையிலான கருப்பு நிற குச்சி(Gucci) டிசைனர் கவுன் அணிந்து முழங்கால் வரையிலான கருப்பு பூட் அணிந்து வந்தார். மேலும் முடிக்கும் கருப்பு நிற டை அடித்து அம்சமாக இருந்தார்.

வயசானாலும் அழகும், ஸ்டைலும் கொஞ்சமும் குறையாத ஐஸ்வர்யா ராய்

இந்த உடையில் ஐஸ்வர்யா மிகவும் அழகாக இருந்தார். கவுனுக்கு ஏற்றது போல் காதில் சின்னதாக கம்மல், இரண்டு கைகளிலும் மோதிர விரல்களில் மட்டும் மோதிரம், இடது கையில் வாட்ச் என்று சிம்பிளாக வந்தாலும் சூப்பராக வந்திருந்தார்.

 

அழகை காட்டி ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தாதே: தமன்னாவை புகழ்ந்த லக்ஷ்மி மஞ்சு

சென்னை: தமன்னா அண்மையில் சென்னையில் நடந்த ரிட்ஸ் விருது விழாவுக்கு அணிந்து வந்த உடையில் எடுத்த புகைப்படத்தை பார்த்து லக்ஷ்மி மஞ்சு அவரை புகழந்து தள்ளியுள்ளார்.

தமன்னா அண்மையில் சென்னையில் நடந்த ரிட்ஸ் விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு அவர் ஸ்ட்ராபெல்ஸ் கவுன் அணிந்து வந்தார். அந்த ஆடையில் அவர் மிகவும் அழகாக இருந்தார். இந்நிலையில் அவர் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அழகை காட்டி கொல்லாதே: தமன்னாவை புகழ்ந்த நடிகை லக்ஷ்மி மஞ்சு

அதை பார்த்த நடிகை லக்ஷ்மி மஞ்சு கூறுகையில்,

பால் போன்ற மேனி கொண்ட அழகி. இது என்ன பொம்மையா, உண்மையா. உங்கள் அழகால் பிறருக்கு மாரடைப்பு ஏற்படுத்துவதை நிறுத்துங்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

முன்னதாக பலரின் தூக்கத்தை கலைக்கும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தமன்னாவை பார்பி பொம்மை என்று புகழ்ந்தார். இதை கேட்ட பல பாலிவுட் நடிகைகள் வயித்தெரிச்சல் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரெக்கார்ட் பிரேக்: 200 படங்களைத் தாண்டியது தமிழ் சினிமா!

இன்று மட்டுமே ஏழு நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஒன்று கூட சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரசிகர்களுக்குப் பரிச்சயமில்லாதவை. கிடைத்த இடைவெளியில், கிடைத்த தியேட்டர்களில் ரிலீசானால் போதும் என்ற மனநிலையில் வெளியிடப்பட்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அழகிய பாண்டிபுரம், மனம் கொண்ட காதல், நாங்கெல்லாம் ஏடா கூடம், பகடை பகடை, ர, 1 பந்து 4 ரன் 1 விக்கெட், 13-ம் பக்கம் பார்க்க ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

ரெக்கார்ட் பிரேக்: 200 படங்களைத் தாண்டியது தமிழ் சினிமா!

இவற்றோடு சேர்த்து, 200 படங்கள் என்ற மைல்கல்லைத் தாண்டிவிட்டது தமிழ்சினிமா. இன்னும் 4 வாரங்கள் உள்ளன இந்த ஆண்டு முடிய. அதற்குள் இன்னும் 20 படங்கள் வெளியாகவிருக்கின்றன.

ஹாலிவுட்டின் பிரமாண்ட படம் எக்ஸோடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ் ஆங்கிலம் மற்றும் தமிழில் அதிக அரங்குகளில் வெளியாகியுள்ளது. இன்று வெளியான தமிழ்ப் படங்களை விட அதிக அரங்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

பிரபு தேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்த ஆக்ஷன் ஜாக்ஸன் இன்று தமிழகத்திலும் வெளியாகியுள்ளது.

 

சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கு: நடிகை ஸ்ருதி சந்திரலேகாவிற்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: சினிமா தயாரிப்பாளரும் துணை நடிகருமான ரொனால்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி சந்திரலேகாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மதுரவாயலில் வசிந்து வந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸோ. பாளையங்கோட்டையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான இவர், கடந்த ஜனவரி மாதம் மாயமானார்.

சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கு: நடிகை ஸ்ருதி சந்திரலேகாவிற்கு நிபந்தனை ஜாமின்

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், ரொனால்டு பீட்டர் பிரின்ஸோ கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.

அவருடன் மனைவியாக வாழ்ந்து வந்த நடிகை ஸ்ருதி என்ற சந்திரலேகா, உமாசந்திரன், ஜான் பிரின்சன் உட்பட பலர் சேர்ந்து கடந்த ஜனவரி 18ஆம்தேதி இந்த கொலையை செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஸ்ருதி தலைமறைவானார். இந்த நிலையில் அவரை கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ருதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ரொனால்டு பீட்டர் பிரின்வுடன், திருமணம் செய்யாமல் மனைவியாக வாழ்ந்து வந்தேன். அவரை கொலை செய்த வழக்கில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஹானஸ்ட்ராஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் என் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரொனால்டு பீட்டர் பிரின்ஸோ, உமா சந்திரன், ஜான்பிரிண்ஷன், ஹானஸ்ட்ராஜ் ஆகியோர் ‘ஆன்லைன்' தொழிலில் என்னை மேலாளராக பணி செய்ய கட்டாயப்படுத்தினார்கள். இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்.

அப்போது, என்னையும் ஆபாசப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் பலருடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். இதற்கு நான் சம்மதிக்காததால், அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த நிலையில், ரொனால்டு பீட்டர் பிரின்ஸோவிடம் இருந்து ஆன்லைன் தொழிலை அபகரிக்க, அவரை உமாசந்திரன், ஜான் பிரிண்சன் மற்றும் பலர் கொலை செய்த எனக்கு தெரியவந்தது. ஆனால், என்னையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். நான் ஒரு அப்பாவி. இந்த கொலை வழக்கில் என்னையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆறுமுகம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் கடந்த செப்டம்பர் 5ஆந்தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் மதுரவாயல் போலீசார், இதுவரை வழக்கின் குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். அவர் தினமும் காலை 10 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜராகி 4 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும். மனுதாரர் தலைமறைவாகக்கூடாது. சாட்சிகளையும் கலைக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

 

நம்பர் நடிகையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக்கப் டிராப் நடிகர்?

சென்னை: நம்பர் நடிகையை நிபந்தனைகள் விதிக்குமாறு தன்னை வைத்து படம் எடுப்பவர்களிடம் கூறும்படி பிக்கப் டிராப் நடிகர் தான் ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது.

நம்பர் நடிகையிடம் நல்ல விஷயமே கதையை கேட்பார், பிடித்துவிட்டால் சமத்துப் பிள்ளையாக நடித்துக் கொடுப்பார். ஆனால் தற்போது தன்னை வைத்து படம் எடுப்பவர்களிடம் நான் நடிக்கும் படத்தில் அந்த நடிகையை நடிக்க வைக்கக் கூடாது, இந்த நடிகையை நடிக்க வைக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்.

நம்பர் நடிகையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக்கப் டிராப் நடிகர்?

இப்படி தான் அவர் சிங்கத்துடன் நடிக்கும் படத்தில் இருந்து 2 நாயகிகளை நீக்க வைத்துள்ளார். அவரின் சம்மதத்துடன் தான் தற்போது சிறுத்தை நாயகியை படத்தில் சேர்த்துள்ளார்களாம்.

மேலும் தான் நடிக்கும் படங்களில் முன்னணி நடிகைகளை மற்றொரு ஹீரோயினாக நடிக்க வைக்கக் கூடாது என்று கறாராக கூறுகிறாராம். நல்லா இருந்த நடிகைக்கு என்ன ஆச்சு, இப்படி படுத்துறாரே என்று சம்பந்தப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.

இதற்கிடையே நடிகையை இப்படியெல்லாம் நிபந்தனை விதிக்குமாறு கூறி தூண்டி விட்டது அவரின் நல்ல நண்பரான பிக்கப் டிராப் நடிகர் என்று கூறப்படுகிறது.

 

தமிழ் சினிமாவின் இன்னொரு மையமாகும் மதுரை... தயாராகும் அரை டஜன் புதுப்படங்கள்!

தமிழ் சினிமா தயாரிப்பின் மையம் என்றால் அது சென்னை கோடம்பாக்கம்தான் என்ற நினைப்பை இனி மாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் வந்துவிட்டது.

சென்னை தவிர்த்து வேறு இடங்களிலும் தமிழ் சினிமாக்கள் உருவாகும் சூழல் எழுந்துள்ளது. அவ்வளவு ஏன்.. பல படங்கள் ஏற்கெனவே உள்ளூரில் எடுக்கப்பட்டு, தியேட்டர்களில் வெளியிடப்பட்டும் உள்ளன.

தமிழ் சினிமாவின் இன்னொரு மையமாகும் மதுரை... தயாராகும் அரை டஜன் புதுப்படங்கள்!

மலேசியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எடுக்கும் தமிழ்ப் படங்களை இதில் கணக்கில் கொள்ளத் தேவையில்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைநகர்களில் இப்போது புதிய படங்களை அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் ஹொசமுங்காரு என்ற படுகர் மொழி திரைப்படம் ஊட்டியில் தயாராகி, அங்கேயே வெளியானது. அடுத்து கவ்வ தேடி என்ற படமும் படுக மொழியில் ஊட்டியிலேயே தயாரானது. சமீபத்தில் சின்னதபூமி என்ற படுகப் படம் ஊட்டியிலேயே தயாராகி வெளியானது.

அடுத்து கோவையில் சிலர் படங்களைத் தயாரித்து, உள்ளூரிலேயே வெளியிட்டனர். புதுவையிலும் சினிமா தயாரித்து அங்கேயே வெளியிடும் முயற்சிகளை புதுவை அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனாலும் இவையெல்லாம் சிறு முயற்சிகளாகவே உள்ளன.

ஆனால் மதுரை சினிமாக்காரர்களோ, இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

உண்மையாகவே சிறு முதலீட்டில் படங்கள் எடுத்து, அவற்றை உள்ளூரில் கிடைக்கிற அரங்குகளில் வெளியிடுவதுதான் அவர்கள் நோக்கம். சென்னையையோ, கோடம்பாக்கத்தையோ அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை (இன்னும் எத்தனை நாளைக்கு கோடம்பாக்கம் பார்ட்டிகளிடம் எடுபிடியாக இருந்து, நொந்து நூலாகி வாய்ப்பு தேடுவது!!).

ஆர்வமுள்ள நான்கைந்து இளைஞர்களும், சினிமா நுட்பம் தெரிந்த சிலரும் ஒன்று சேர்ந்து முதலிட்டு, உள்ளூரில் உள்ள நடிகர்களையே பயன்படுத்தி மதுரைமற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய படங்களை உருவாக்குவதுதான் இவர்கள் பாணி.

இன்றைய தேதிக்கு மதுரையில் 15-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தமிழில் பிரபலமாக உள்ள சில குணச்சித்திர நடிகர் நடிகைகளும் கூட இவற்றில் நடித்து வருகின்றனர். அதிக நாள் கால்ஷீட் தேவையில்லையாம். நான்கைந்து நாட்கள் கால்ஷீட், பத்தாயிரம் ரூபாய்க்குள் சம்பளம். இந்த பார்முலாவில்தான் 'மதுரைப் படங்களைத்' தயாரிக்க முயன்றுள்ளனர்.

எளிதில் எங்கும் கிடைக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம், இவர்களை சென்னை ஸ்டுடியோக்கள் பக்கம் போக வேண்டிய அவசியத்தைக் கூட ஏற்படுத்தவில்லை.

இந்த பாணியில் எடுக்கப்பட்ட 'மதுரை விடிஞ்சா போச்சு' என்ற படம் இன்று வெளியாகிறது. இதுபோன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிலையில் உள்ளன.

 

ட்ராம்போலின் குல்பி, அனுஷ்கா அவியல், சந்தானம் ஹல்வா... சிகாகோவில் லிங்கா கொண்டாட்டங்கள்!

சிகாகோ: அமெரிக்காவில் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது ரஜினியின் லிங்கா.

இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு மட்டும் 200க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, இந்திப் பதிப்புகள் வெளியாகும் அரங்குகளின் எண்ணிக்கையையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 400 அரங்குகளைத் தாண்டுகிறது. இது வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெருமை.

ட்ராம்போலின் குல்பி, அனுஷ்கா அவியல், சந்தானம் ஹல்வா... சிகாகோவில் லிங்கா கொண்டாட்டங்கள்!

சிகாகோ நகரிலும் கணிசமான அரங்குகளில் லிங்காவை வெளியிடுகிறார்கள், அங்குள்ள எக்ஸ் எல் மேக்ஸ் அரங்கம் உள்பட. படத்தைக் கொண்டாட இப்போதே தயாராகிவிட்டனர் ரஜினி ரசிகர்கள். வரும் சனிக்கிழமையன்று சிகாகோவில் உள்ள தக்ஷின் இந்திய உணவகத்தில் லிங்கா சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு லிங்கா படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் நடிகைகளின் பெயர்களையே வைத்துள்ளனர்.

ட்ராம்போலின் குல்பி, அனுஷ்கா அவியல், சந்தானம் ஹல்வா, மனோபாலா மட்டன் பிரியாணி என்று போகிறது பெயர்ப் பட்டியல்!

சிவாஜி படம் வெளியானதிலிருந்து முதல் டிக்கெட்டை கோல்டன் டிக்கெட் என்ற பெயரில் சிகாகோ ரஜினி ரசிகர் மன்றத் தலைவருக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் லிங்காவின் கோல்டன் டிக்கெட் அப்பகுதி ரஜினி ரசிகர் மன்றத் தலைவருக்கு வழங்கப்படும்.

லிங்காவுக்கான சிகாகோ ரசிகர் கொண்டாட்டங்களை facebook.com/lingaachicago பக்கத்திலும் பார்க்கலாம்.

 

லீடர் படத்தில் ஹீரோயின்களை விட மயிலுக்கு அதிக சம்பளமாமே

சென்னை: லீடர் நடிகர் தற்போது நடித்து வரும் படத்தில் 2 ஹீரோயின்களை விட அம்மாவாக நடிக்கும் மயிலுக்கு அதிக சம்பளமாம்.

லீடர் நடிகர் தற்போது ஒரு பேன்டஸி படத்தில் நடித்து வருகிறார். இதற்காக சென்னையில் பிரமாண்ட தர்பார் செட் அமைத்துள்ளனர். படத்தில் புஸு புஸு நடிகை, நடிப்பு, இசை, பாட்டு என்று மூன்று துறைகளில் கலக்கும் வாரிசு நடிகை என இரண்டு ஹீரோயின்கள். இந்த படத்தில் பல ஆண்டுகள் கழித்து மயிலு நடிகை நடிக்கிறார்.

லீடர் படத்தில் ஹீரோயின்களை விட மயிலுக்கு அதிக சம்பளமாமே

பாலிவுட்டில் செட்டிலாகி இந்தி பட தயாரிப்பாளரை திருமணம் செய்து, குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வரும் அவர் தற்போது மீண்டும் கோலிவுட் வந்துள்ளார். அவர் 30 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

படத்தில் நடிக்கும் 2 ஹீரோயின்களை விட அம்மா கதாபாத்திரத்தில் வரும் மயிலுக்கு தான் அதிக சம்பளமாம். இரண்டு ஹீரோயின்களின் சம்பளத்தை சேர்த்தாலும் மயிலு நடிகையின் சம்பளத்தை விட அது குறைவாம்.

முன்னணி நடிகைகளுக்கே ரூ.1 கோடி சம்பளம் அளிக்கையில் அம்மா நடிகைக்கு இவ்வளவு சம்பளமா என்று பலரும் வியக்கிறார்கள்.

 

பணம் பறிக்க நடிகை மாதுரி தீக்சித்துக்கு எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் விடுத்த ஹோட்டல் வெயிட்டர்

மும்பை: உங்கள் மகன்களை கொன்றுவிடுவேன் என்று பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஹோட்டல் வெயிட்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் தனது டாக்டர் கணவர் மற்றும் 2 மகன்களுடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி அதிகாலை அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் மாதுரியின் மகன்களை கொல்லப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 3 நாட்களுக்கு தொடர்ந்து இது போன்ற மிரட்டல் எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளன.

பணம் பறிக்க நடிகை மாதுரி தீக்சித்துக்கு மிரட்டல் விடுத்த வெயிட்டர்

ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் தனக்கும் நிழல் உலக தாதாவான சோட்டா ராஜனுக்கும் தொடர்பு உள்ளது என்றும், மாதுரியின் மகன்களை கொல்லாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என்றும், அதை தான் ஆயுத பயிற்சி அளித்துள்ள 15 வயது சிறுவன் வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மாதுரியின் உதவியாளர் போலீசில் கடந்த 28ம் தேதி புகார் தெரிவித்தார். அவரது புகாரின்போரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி ஹோட்டலில் வெயிட்டராக உள்ள பிரவீன் குமார் பிரதான்(23) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். மேலும் முன்னதாக பல பாலிவுட் பிரபலங்களுக்கு இது போன்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். பிரதானுக்கும் நிழல் உலக தாதாவுக்கும் உண்மையிலேயே தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

விஜய் படத்துக்காக கத்திச் சண்டை கற்ற ஹன்சிகா

சிம்புதேவன் இயக்கும் விஜய் படத்துக்காக கத்திச் சண்டைப் பயிற்சி பெற்று வருகிறார் நடிகை ஹன்சிகா.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஃபேன்டசி கதையாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி தமிழில் மறுப்பிரவேசம் செய்கிறார். இப்படத்தில் ஸ்ரீதேவிக்கான உடைகளை இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைக்கிறார்.

விஜய் படத்துக்காக கத்திச் சண்டை கற்ற ஹன்சிகா

சரித்திரமும் புதுமையும் கலந்த இந்தப் படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடிக்கிறாராம். இதற்காக முறையான கத்திச் சண்டைப் பயிற்சியையெல்லாம் அவர் எடுத்திருக்கிறாராம்.

முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூலில் பங்கேற்கும் ஹன்சிகா, "கொஞ்சம் பயமாகவும் ஆவலுடனும் காத்திருக்கிறேன். இளவரசி எந்த நேரமும் சண்டை போடத் தயார்," என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தை, விஜய் படங்களின் கேரள விநியோகஸ்தர்களான தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றனர்.

 

அர்னால்டின் டெர்மினேட்டர் ட்ரைலர் பாத்துட்டீங்களா?

உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களின் ஆவலைக் கிளப்பிய இரு படங்களின் அறிவிப்பு நேற்று வெளியானது.

ஒன்று ஜேம்ஸ்பாண்டின் 24வது படம். அடுத்து அர்னால்ட் ஸ்வார்ஷநெக்கரின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ்.

ஆரம்பத்தில் டெர்மினேட்டரின் ஒரு போஸ்டரையும், டீசரையும் வெளியிட்ட படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும், நேற்று மாலையே படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டுவிட்டனர்.

அர்னால்டின் டெர்மினேட்டர் ட்ரைலர் பாத்துட்டீங்களா?  

வெளியான 12 மணி நேரங்களுக்குள் 3 மில்லியன் பேர் இந்த ட்ரைலரைப் பார்த்துள்ளனர்.

முந்தைய டெர்மினேட்டர்களில் அர்னால்டின் ஆதிக்கம் அதிகமிருக்கும். ஆனால் இந்த ட்ரைலரில் அவர் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, இது முதல் ட்ரைலர்தான். அடுத்த ட்ரைலரில் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

எப்படி இருந்தாலும் இந்த முதல் ட்ரைலரே மிகுந்த ஆவலைக் கிளறியுள்ளது ரசிகர்களிடம். இதற்கு முந்தைய டெர்மினேட்டர்களை விட மிகச் சிறப்பாக இந்த 5-ம் பாகம் வந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நான் ஒரே நேரத்தில் 20 தோசை சாப்பிடுவேன்: பிரபுதேவா

மும்பை: தன்னால் ஒரே நேரத்தில் 20 தோசை சாப்பிட முடியும் என்றும், அதே சமயம் தனது ஆக்ஷன் ஜாக்சன் ஹீரோ அஜய் தேவ்கன் சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாதவர் என்றும் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து பிரபுதேவா இயக்கியுள்ள ஆக்ஷன் ஜாக்சன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்காக அஜய் மற்றும் சோனாக்ஷி உடல் எடையை குறைத்துள்ளனர்.

நான் ஒரே நேரத்தில் 20 தோசை சாப்பிடுவேன்: பிரபுதேவா

மகேஷ் பாபு நடித்த தெலுங்கு சூப்பர் ஹிட் படமான தூக்குடுவின் இந்தி ரீமேக்கான ஆக்ஷன் ஜாக்சன் நன்றாக உள்ளது என்று சிலரும், அய்யோ சாமி முடியலடா என்று சிலரும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கும், அஜய் தேவ்கனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசம் பற்றி பிரபுதேவா கூறுகையில்,

எனக்கு சாப்பாடு என்றால் பிடிக்கும். அஜய்க்கு சாப்பாட்டில் ஆர்வம் இல்லை. இரவு நேர உணவாக சாக்லேட்டை மட்டுமே என்னால் சாப்பிட முடியும். நான் ஒரே நேரத்தில் 15 முதல் 20 இட்லி அல்லது தோசை சாப்பிடுவேன். எனக்கு கேக், இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும். போர் அடிக்கும் வரை என்னால் சாப்பிட முடியும்.

அஜய் சாரின் பிறந்தநாள் ஏப்ரல் 2, என் பிறந்தநாள் ஏப்ரல் 3. நான் டான்ஸ் மாஸ்டரின் மகன். அவர் ஆக்ஷன் டைரக்டரின் மகன். நாங்கள் இருவருமே அமைதியானவர்கள், வம்புக்கு போகாதவர்கள் என்றார்.

 

லிங்காவுக்கு தடை கோரி மீண்டும் வழக்கு.. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருக்கு மீண்டும் நோட்டீஸ்

சென்னை: லிங்கா படத்துக்கு தடை கோரி மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்திருப்பவர் சென்னையைச் சேர்ந்த சக்திவேல்.

சென்னை 12வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனு:

சென்னை லயோலா கல்லூரியில் 2009-ம் ஆண்டு எம்.ஏ. விஷூவல் கம்யூனிகேசன் பட்டம் பெற்றேன். சினிமா மீதுள்ள ஆர்வத்தினால், படிக்கின்ற போதே, பிரபல சினிமா கதை ஆசிரியர் பி.என்.சி. கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றினேன்.

லிங்காவுக்கு தடை கோரி மீண்டும் வழக்கு.. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருக்கு மீண்டும் நோட்டீஸ்

இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிக்குவிக் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘உயிர் அணை' என்ற தலைப்பில் திரைக்கதை எழுதினேன். இந்த தலைப்பை, 2012-ம் ஆண்டு சினிமா மற்றும் டிவி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்தேன். பின்னர், இந்த கதையை பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரிடம் கூறினேன். கதை கேட்ட அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால், திரைக்கதையை படமாக எடுக்க பெரும் தொகை செலவாகும் என்பதால், அதைத் தயாரிக்க முன்வரவில்லை.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 19-ந்தேதி என்னுடைய கதையை தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்தேன். இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா' என்ற தலைப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெங்கடேஷ், சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வீன் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், லிங்கா படத்தின் கதை முல்லை பெரியாறு அணை மற்றும் பென்னிக்குவிக் தொடர்பானது என்று தெரியவந்தது. இந்த செய்தி, கடந்த நவம்பர் 20-ந்தேதி பத்திரிகையில் விரிவான செய்தியாக வெளியாகியுள்ளது.

இந்த லிங்கா படத்தின் கதை என்னுடைய கதையாகும். என்னுடைய உயிர் அணை என்ற தலைப்பிலான கதையைத்தான் லிங்கா என்ற பெயரில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள லிங்கா திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது. எனவே, என்னுடைய கதையை கொண்ட லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி லிங்கா படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கதை ஆசிரியர் பொன்குமார், தயாரிப்பாளர் வெங்கடேசன், சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டார். 9-ம்தேதி விசாரணைக்கு வருகிறது இந்த வழக்கு.

ஏற்கெனவே லிங்கா கதைக்கு உரிமை கோரி மதுரையைச் சேர்ந்த நபர் தொடுத்த வழக்கு சில தினங்களுக்கு முன்புதான் தள்ளுபடி செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

 

லிங்காவின் கேரள உரிமையையும் வாங்கியது வேந்தர் மூவீஸ்!

ரஜினியின் லிங்காவின் கேரள உரிமையையும் வாங்கியது வேந்தர் மூவீஸ்!  

ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள லிங்கா படத்தை ஏற்கெனவே பெரும் விலைக்கு வாங்கிவிட்டது ஈராஸ் நிறுவனம். படத்தின் தயாரிப்பாளர் வெளியீட்டுக்கு முன்பே ரூ 200 கோடிக்கும் மேல் ஈட்டித் தந்துள்ளது. படத்தை வாங்கிய ஈராஸ் நிறுவனமும் மாநிலவாரியாக நல்ல விலைக்கு படத்தை விற்று வருகின்றனர்.

இப்போது மாநிலவாரியாக படத்தை விற்று வருகிறது. தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையை வேந்தர் மூவீஸ் கேட்டு வந்தது. சில தினங்களுக்கு கோவை தவிர்த்த தமிழகத்தின் விற்பனை உரிமையைப் பெற்றது. கோவை உரிமை மட்டும் லலிதா ஜூவல்லரி நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது லிங்காவின் கேரள உரிமையையும் வேந்தர் மூவீசே வாங்கியுள்ளது.

 

ஓய்வுக்காக இமயமலை போகும் விஷால்!

தன் அடுத்த படத்தைத் தொடங்குவதற்கு முன் ஓய்வெடுக்க இமயமலைக்குச் செல்கிறார் நடிகர் விஷால்.

முன்பெல்லாம் அடிக்கடி இமய மலை சென்று வருவார் ரஜினி. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் இமயமலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

இப்போது ரஜினி வழியில் விஷாலும் இமயமலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகாவுடன் அவர் நடிக்கும் ‘ஆம்பள' படப்பிடிப்பு விரைவில் முடியப் போகிறது.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதற்கு முன்பே இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளாராம் விஷால்.

ஓய்வுக்காக இமயமலை போகும் விஷால்!

ஆம்பள படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். காஜல் அகர்வால் ஜோடி சேர்கிறார்.

இப்பட வேலைகள் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பே இமயமலைக்குப் போய் சில வாரங்கள் தங்கியிருக்கப் போகிறாராம்.

விஷால் கடைசியாக 2011-ம் ஆண்டு இமயமலை சென்றார். அதன் பிறகு இப்போதுதான் செல்கிறார்.

இனி ஆண்டுக்கு ஒரு முறை மலையேறப் போகிறாராம்!

 

22 ஆண்டு சினிமா பயணம்.. தயாரிப்பாளர், இயக்குநர்கள், மீடியாவுக்கு விஜய் நன்றி!

சென்னை: தனது 22 ஆண்டு கால சினிமா பயணத்துக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கலைஞர்கள், மீடியா மற்றும் ரசிகர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

விஜய் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 23-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்க்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறினார்.

22 ஆண்டு சினிமா பயணம்.. தயாரிப்பாளர், இயக்குநர்கள், மீடியாவுக்கு விஜய் நன்றி!

22 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விஜய் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி கூறியுள்ளார்.

தன்னை நாயகனாக வைத்து ஆரம்பத்தில் படம் தயாரித்த பிவி கம்பைன்ஸ் பி விமல், ஸ்ரீமாசானியம்மன் மூவீஸ் சவுந்தரபாண்டியன், ஆஸ்கார் மூவிஸ் நேஷனல் எம் பாஸ்கர், பாலாஜி பிரபு, ஸ்ரீசாய்ராம் மூவீஸ் ஸ்ரீதேவி, ஸ்ரீவிஜயலட்சுமி மூவிலேண்ட், எம்எஸ்வி முரளி, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி, குமார் மூவீஸ் எம்மார், செவன்ந்த் சேனல் நாராயணன், பவித்திரன், எம்ஜி பிக்சர்ஸ் சேகர், சந்தானம், ஏஎம் ரத்னம், கே ஆர்ஜி, மோகன் நடராஜன், கலைப்புலி தாணு, அய்ங்கரன் கருணாமூர்த்தி, சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதே போல தன்னை இயக்கிய, விக்ரமன், செல்வபாரதி, பாசில், கேஎஸ் ரவிக்குமார், ஷங்கர், ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களுக்கும், உடன் நடித்த சக கலைஞர்களுக்கும், 24 யூனியன்களைச் சேர்ந்த டெக்னீஷியன்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் சரியான விமர்சனங்கள் தந்து, நிறை குறைகளைக் கூறி இந்த உயரத்துக்கு தான் வர உதவிய மீடியா நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியா, எந்த கைம்மாறும் கருதாமல் தன் மேல் அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் விஜய்.

 

பகடை... பகடை... மிரட்டும் நாயகன்! மிரளும் நாயகி!!

காதலிக்கும் போது பூ கொடுப்பார்கள்... அழகான பரிசு கொடுப்பார்கள் ஆனால் துப்பாக்கியை காட்டி மிரட்டி காதலிக்கிறான் கதாநாயகன். பகடை பகடை என்ற படத்தில்தான் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இது காமெடி படம் என்று கூறினாலும் போட்டோக்களைப் பார்த்தால் சீரியஸ் படம் போலவே தெரிகிறது.

சூர்யா, ஜோதிகாவை வைத்து ‘பேரழகன்' படத்தை இயக்கிய சசிசங்கர் இயக்கும் படம் ‘பகடை பகடை'. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள திலீப் குமார்தான் இந்த படத்தின் நாயகன். திவ்யா சிங் நாயகியாக நடிக்கிறார்.

பகடை... பகடை... மிரட்டும் நாயகன்! மிரளும் நாயகி!!  

வில்லனாக நடித்து ஹீரோ

ஜெயம் படத்தில் சிறு வயது வில்லனாக நடித்தேன். குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த கடைசிப் படமும் அதுதான் என்கிறார் திலீப் குமார்.

நகைச்சுவை உணர்வு

சசிசங்கரின் ‘ஸ்டெப்ஸ்' என்ற மலையாளப் படத்தில் நடிக்கும்போதுதான் இந்தக் கதையைச் சொன்னார். சசி சார் அடிப்படையிலேயே நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று பாராட்டுகிறார் ஹீரோ.

ஆக்சனா? காமெடியா?

முழு நீள நகைச்சுவைப் படம் என்று ஒரு சாரார் கூறினாலும், ஆக்ஸன் கலந்த திரில்லர் கதை என்கின்றனர்.

கதாநாயகிக்கான கதை

இதில் நாயகியை மையமாக வைத்துதான் முழுக்கதையும் நகர்கிறதாம். அப்புறம் எதுக்கு துப்பாக்கியைக் காட்டி கதாநாயகியை மிரட்டுகிறார் என்று தெரியவில்லை.

நகைச்சுவை படம்

பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார் கதாநாயகன். அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபடுகிறார். அந்த முயற்சிகள் சாதகமாக அமைகிறதா? அவரால்தான் நினைத்ததை சாதிக்க முடிகிறதா? என்பதை காட்சிக்கு காட்சி நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார்களாம்.

அரசியல்வாதி சரளா

இந்தப் படத்தில் ரிச்சு, கோவை சரளா, இளவரசு, மயில்சாமி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஒய்.முரளி. இசை: ராம்ஜி, ஏ.சி.ஜான்பீட்டர். பாடல்கள்: தமிழமுதன், பால்முகில். வசனம், வி.பிரபாகர். இயக்கம், சசிசங்கர். கோவை சரளா இந்தப் படத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறாராம்.

 

புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்துக்குப் பெயர் ஸ்பெக்டர்... நவம்பர் 2015-ல் ரிலீஸ்!

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தின் பெயர், நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் விவரம் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

டேனியல் க்ரெய்க் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஸ்பெக்டர் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஸ்கைபால் படத்தை இயக்கிய சாம் மெண்டிஸ் இயக்குகிறார்.

புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்துக்குப் பெயர் ஸ்பெக்டர்... நவம்பர் 2015-ல் ரிலீஸ்!

இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபல கவர்ச்சி நாயகி மோனிகா பெல்லுச்சி.

பிரதான வேடங்களில் ஆன்ட்ரூ மார்ட்டின், டேவ் பாடிஸ்டா, லீ ஸீடெக்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவர் பயன்படுத்தும் கார்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்தப் படத்தில் ஆஸ்டன் மார்டின் டிபி10 மாடல் காரை ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தவிருக்கிறார்.

லண்டன் பைன்வுட் ஸ்டுடியோ, மெக்சிகோ சிட்டி, ரோம், மொராக்கோ, ஆஸ்திரியா உள்பட உலகின் பல நாடுகளில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ஸ்பெக்டர்!

24வது ஜேம்ஸ்பாண்ட் படம் ஸ்பெக்டர்

 

சல்மான் கான் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் பரிசு கொடுக்கப் போகும் ஜெய் ஹோ நடிகை

மும்பை: சல்மான் கானின் பிறந்தநாள் பரிசாக அவரது தொண்டு நிறுவனமான பீயிங் ஹ்யூமனுக்கு நிதி அளிக்கப் போவதாக நடிகை டெய்சி ஷா தெரிவித்துள்ளார்.

சல்மான் கானின் ஜெய் ஹோ படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயின் ஆனவர் டெய்சி ஷா. அவர் சல்மான் கானின் 48வது பிறந்தநாள் அன்று அவருக்கு சர்பிரைஸாக பரிசளிக்க திட்டமிட்டுள்ளார். சல்மான் வரும் 27ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சல்மான் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் பரிசு கொடுக்கப் போகும் ஜெய் ஹோ நடிகை

இது குறித்து டெய்சி கூறுகையில்,

நான் சல்மான் கானுக்கு பரிசாக என்ன தருவது. அவரிடமே எல்லாம் உள்ளது. அதனால் அவரது தொண்டு நிறுவனத்திற்கு நிதி அளிக்க உள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக நான் அந்த தொண்டு நிறுவனத்திற்கு நிதி அளித்து வருகிறேன் என்றார்.

சல்மான் கான் புதுமுகங்களை தனது படங்களில் ஹீரோயினாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.