கோச்சடையான் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு வழங்கும் ரஜினி ரசிகர்கள்.. இரண்டாம் நாளும் தொடருது!

ரஜினியின் கோச்சடையான் படம் வெளியானதை இரண்டாவது நாளும் கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

பல திரையரங்குகளில் இன்றும் பட்டாசு வெடித்து நடனமாடி, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

கோச்சடையான் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு வழங்கும் ரஜினி ரசிகர்கள்.. இரண்டாம் நாளும் தொடருது!

பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு ரஜினியின் கோச்சடையான் நேற்று உலகெங்கும் வெளியானது. மிக அதிக அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகம், வளைகுடா நாடுகள், தென்கிழக்காசியா, ஐரோப்பாவில் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியீட்டை, ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

நேற்று கோச்சடையான் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற ரஜினி ரசிகர்கள், இன்றும் அதைத் தொடர்கின்றனர்.

சென்னை காசி தியேட்டரில் நேற்று முழுக்க நடந்த கொண்டாட்டங்கள், இன்றும் தொடர்கின்றன. தியேட்டருக்கு வெளியே பட்டாசுகள் வெடித்த ரசிகர்கள், அங்கு குழுமி நின்றவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

பாலாபிஷேகம், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என ஆராதனைகளுக்கும் குறைவில்லை.

பெரும்பாலான ரசிகர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் பார்க்கவே விரும்புகின்றனர்.

பொதுவாக ரஜினி படம் என்றால் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பைப் பார்த்து, சில தினங்கள் கழித்தே திரையரங்குக்கு வருவார்கள் குடும்ப ரசிகர்கள். ஆனால் இந்த முறை முதல் நாளிலிருந்தே குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாகப் படம் பார்க்க வருகிறார்கள்.

சென்னையைத் தாண்டி, புறநகர்களில் ரசிகர்கள் ஆரவாரத்துக்கும் உற்சாகத்துக்கும் குறைவில்லை. அம்பத்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வில்லிவாக்கம் பகுதிகளிலும், வெளிமாவட்டங்களில் சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, கும்பகோணம் பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இன்றும் பட வெளியீட்டைக் கொண்டாடி வருகின்றனர்.

 

பொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார்தான்! - ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில் காலம் கடந்து நிற்கும் கோச்சடையான்! - ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வரலாற்றில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படமாக அமைந்துள்ளது கோச்சடையான் என்று நடிகர் - இயக்குநர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார்தான்! - ராகவா லாரன்ஸ்

நேற்று வெளியான ரஜினியின் "கோச்சடையான்" படம் பார்த்து ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை:

கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவர் பொம்மை போல நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர்.

ரஜினி பொம்மையாக நடிப்பது ரசிகர்களை திருப்திப்படுத்துமா? என்றார்கள். படம் பார்த்த ரசிகர்களோ ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கிறார்கள். பொம்மையாக வந்தாலும், உண்மையாக வந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இந்த படம் சூப்பர் ஸ்டாரின் கலையுலகப் பயணத்தில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்றாக இருக்கும்.

யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ஹாலிவுட் தரத்துடன் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

இந்த படம் வழக்கம் போல் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் திருப்பதி படுத்தும் புது முயற்சி இது, இந்த முயற்சி வரும் காலத்தில் இது போன்ற படங்கள் தமிழில் தயாரிக்க முன்னுதாரணமாக இருக்கும்.

பொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் குரல் பதிவாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று நிரூபித்திருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்," என்று லாரன்ஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கோச்சடையானைப் பாராட்டி முதல் அறிக்கை தந்துள்ள ஒரே கோடம்பாக்க நடிகர் ராகவா லாரன்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் இன்னும் வாய் திறக்கவில்லை. காரணம், திரையுலகினருக்கு சிறப்புக்காட்சி எதுவும் நேற்று போடப்படவில்லை.

 

கோச்சடையான் வெளியீடு... திரையரங்குதோறும் திருவிழா கோலம்... ரசிகர்கள் பாலாபிஷேகம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகிறது என்றால்... முன்பு தமிழகத்தில்தான் அது திருவிழா மாதிரி இருந்தது. ஆனால் இப்போது உலகம் முழுக்கவே அந்தப் பரபரப்பும் உற்சாகமும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

'தலைவர் படம்... முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்... நமக்கெல்லாம் இன்னிக்குதான் தீபாவளி என்பது,' போன்ற வார்த்தைகளை இப்போது தமிழகம் தாண்டி பல இடங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.

கோச்சடையான் வெளியீடு... திரையரங்குதோறும் திருவிழா கோலம்... ரசிகர்கள் பாலாபிஷேகம்!

இன்று ரஜினி படங்களைக் கொண்டாடுவதில், அவரது தீவிர ரசிகர்களாக வாழ்க்கையை ஆரம்பித்த மத்திய தர வயதுக்காரர்களைவிட, பதின்ம வயது இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை உணர முடிகிறது. குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் குழுவாகச் சேர்ந்த இளைஞர்கள், நேற்று கோச்சடையான் வெளியீட்டைக் கொண்டாடிய விதம் ரஜினியின் தாக்கம் எத்தகையது என்பதைப் புரிய வைத்தது.

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கோச்சடையான் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனைகள், யாகங்கள் நடத்தினர் ரஜினி ரசிகர்கள்.

கோச்சடையான் வெளியீடு... திரையரங்குதோறும் திருவிழா கோலம்... ரசிகர்கள் பாலாபிஷேகம்!

கோச்சடையானுக்காக இமய மலையில் உள்ள பாபா குகைக்கே போய் தியானம் செய்தனர் அவரது 'முரட்டு பக்தர்கள்' என்பது நினைவிருக்கலாம்.

நெல்லை உவரியிலிருந்து ஒரு புனித தீபச்சுடரை சென்னை வரை எடுத்துவந்து நேற்று மாலை உதயம் திரையரங்க வாசலில் லதா ரஜினியிடம் தந்தனர் ரசிகர்கள்.

கோச்சடையான் வெளியீடு... திரையரங்குதோறும் திருவிழா கோலம்... ரசிகர்கள் பாலாபிஷேகம்!

இன்னும் ஒரு குழு, கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டம் என்ற பெயரில் நான்கு நாட்கள் பல மாவட்டங்களில் ஓடி மக்களுக்கு இயற்கை வளங்களைக் காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். படத்துக்கும் அது பெரிய விளம்பரமாக அமைந்தது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி, படம் வெளியாகும் நேற்று அத்தனை திரையரங்குகளும் ரஜினியின் கட் அவுட், தோரணங்கள், பேனர்களால் ஜொலித்தன.

கோச்சடையான் வெளியீடு... திரையரங்குதோறும் திருவிழா கோலம்... ரசிகர்கள் பாலாபிஷேகம்!

எந்தத் திரையரங்குக்குப் போனாலும், அங்கு ஒரு திருவிழா களைகட்டியிருப்பதைப் பார்க்க முடிந்தது.

காசி திரையரங்கில் முதல் நாள் அத்தனை காட்சிகளுக்கும் ரஜினியின் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம், ஆரத்தியுடன், சரவெடிகள் வெடித்து அந்தப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தனர் ரசிகர்கள்.

கோச்சடையான் வெளியீடு... திரையரங்குதோறும் திருவிழா கோலம்... ரசிகர்கள் பாலாபிஷேகம்!

வட இந்தியாவின் முக்கிய சேனல்கள் அனைத்தும் நேற்று முழுவதும் கோச்சடையான் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடிய விதத்தைப் படம் பிடிப்பதில்தான் மும்முரமாக இருந்தனர்.

இதற்கு முன் வெளியான ரஜினியின் படங்களுக்கு நடந்த கொண்டாட்டங்களைவிட பல மடங்கு அதிக உற்சாகத்துடன் கோச்சடையான் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

கோச்சடையான் ரிலீஸ் - மகள் சவுந்தர்யா, குழுவினருக்கு ரஜினி வாழ்த்து

இன்று உலகெங்கும் கோச்சடையான் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பாராட்டு மழை, மறுபக்கம் வசூல் மழை.

இந்த நிலையில் படம் வெளியானதையொட்டி படத்தின் இயக்குநரும் தன் மகளுமான சவுந்தர்யா ரஜினிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கோச்சடையான் ரிலீஸ் - மகள் சவுந்தர்யா, குழுவினருக்கு ரஜினி வாழ்த்து

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "என் மகள் சவுந்தர்யாவுக்கும், கோச்சடையான் குழுவுக்கும் வாழ்த்துகள்.. எல்லோரும் திரையரங்கில் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், "கோச்சடையான் படத்தின் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பக்கம், இந்தப் படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பாலிவுட் பிரபலங்கள் பலரும் ரஜினியை அழைத்து வாழ்த்து கூறியுள்ளனர்.