வாலு படம் வெளியாக நடிகர் விஜய் பெரும் உதவி செய்ததாக மீடியா எழுதி வந்தது. அதை சிம்புவும் உறுதி செய்து, விஜய் என் கூடப் பிறக்காத சகோதரர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அப்படி என்னதான் உதவினார் விஜய்?
இன்று நடந்த பிரஸ் மீட்டில் டி ராஜேந்தர் சொன்னது இது:
சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சினிமாவில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும், சிம்பு படத்துக்கு பிரச்சினை என்று வந்தபிறகு யாரும் உதவ முன்வரவில்லை. விஜய் தானாக முன்வந்து இப்படம் வெளிவருவதற்கு மிகவும் உதவியாக இருந்தார்.
அதேபோல், அவரது மேனேஜரும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் மற்றும் கோவை விநியோகஸ்தர் சிவக்குமார் ஆகியோர் இந்தப் படம் ரலீசாக துணை நின்றனர்.
விஜய் எனக்குப் பண உதவி செய்ததாக சிலர் கூறுகின்றனர். நிச்சயம் அப்படியெல்லாம் நான் யாரிடமும் இனாம் வாங்கவில்லை. அப்படி வாங்கக் கூடியவன் அல்ல நான் என்பது இந்த திரையுலகத்துக்கு நன்கு தெரியும்.
விஜய்யும், புலி படத் தயாரிப்பாளரும், கோவை சிவகுமாரும் வாலு படம் வெளியாக சில விநியோகஸ்தர்களிடம் பேசி சம்மதிக்க வைத்தனர்," என்றார்.
விஜய் ‘வேலாயுதம்' படத்தில் எனக்கு டி.டி.ஆர் எல்லாம் தெரியாது. டி.ஆர். மட்டும்தான் தெரியும். நான் அவரோட தீவிர ரசிகர் என்று சொல்வார். உண்மையில் நான்தான் அவருடைய தீவிர ரசிகன். அவருக்கு நான் நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். விஜய் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஏனென்றால், அவர்தான் உண்மையான தமிழன்," என்று கூறினார்.