'விஸ்வரூபம் 2-க்கு பாட்டெழுதணும், வாலியை அனுப்பி வைய்ங்க!' - மருத்துவமனையில் கமல் உருக்கம்

'விஸ்வரூபம் 2-க்கு பாட்டெழுதணும், வாலியை அனுப்பி வைய்ங்க!' - மருத்துவமனையில் கமல் உருக்கம்

கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட நாற்பது நாட்களாகிவிட்டது. இதில் சுமார் முப்பது நாட்களுக்கு மேலாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.

கடந்த ஜுன் 7 ந் தேதி குமுதம் இதழில் வாலி எழுதி வெளிவந்த 'அழகிய சிங்கர்' இலக்கிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அவர். சுமார் ஐந்து மணி நேரம் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அமர்ந்திருந்தார். மறுநாளே டைரக்டர் வசந்த பாலனின் 'தெருக்கூத்து' படத்திற்காக அவர் பணியாற்றும்படி ஆனது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கூடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர் சுமார் ஏழு மணி நேரம் அங்கு அமர்ந்து படம் குறித்தும், எடுக்கப்பட்ட விதம் குறித்தும் பேசியபடியே பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தாராம். அன்றிரவே அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர்.

நுரையிரல் தொற்றுதான் காரணம் என்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். இரண்டொரு நாளில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார் வாலி. அதற்கப்புறம் மீண்டும் அவருக்கு உடல்நிலை மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். சுமார் முப்பது நாட்களுக்-கும் மேலாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.

இடையில் நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனைக்கு வந்து வாலியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். விஸ்வரூபம் 2 படத்திற்கு ஒரு பாடல் எழுதணும். நாங்க வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம். அவரை சீக்கிரம் அனுப்பி வைங்க என்று வாலியின் காதில் படும்படி மருத்துவரிடம் கூறிவிட்டு சென்றார் கமல். ஏ.ஆர்.ரஹ்மானும் வாலியை சந்திக்க வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு கவிஞர் வாலியின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வாலியின் உடல்நிலை பற்றி அறிந்த திரையுலகம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 

'திருமணம் நிச்சயம்.. அதுவும் குருவாயூர் கோயில்லதான்.. ஆனா இப்போ இல்ல!'

'திருமணம் நிச்சயம்.. அதுவும் குருவாயூர் கோயில்லதான்.. ஆனா இப்போ இல்ல!'

எனக்கு திருமணம் நடப்பது நிச்சயமான ஒன்றுதான். அதுவும் நான் விரும்பும் குருவாயூர் கோயிலில்தான் நடக்க வேண்டும் என விரும்புகிறேன், என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாவனாவுக்கு குருவாயூர் கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இது தவறான செய்தி என்று அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

"எனக்கு திருமணம் நடக்கப் போவது உண்மைதான். அதுவும் எனக்குப் பிடித்த குருவாயூர் கோயிலில் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் இப்போதல்ல. இன்னும் ஓராண்டு கழித்துதான் திருமணம் செய்வேன். மாப்பிள்ளை யார் என்றெல்லாம் இப்போது கூற முடியாது," என்றார்.

பாவனா தமிழில் நடித்த கடைசி படம் அஜீத்தின் அசல். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் இல்லை. கன்னடம், மலையாளத்தில் நடித்து வருகிறார்.

 

என்னை பார்க்க நடிகைகள் யாருமே வரலையே: தபுவிடம் மனீஷா கண்ணீர்

என்னை பார்க்க நடிகைகள் யாருமே வரலையே: தபுவிடம் மனீஷா கண்ணீர்

மும்பை: புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ள தன்னை சக நடிகைகள் யாருமே வந்து பார்க்கவில்லை என்று மனீஷா கொய்ராலா தபுவிடம் கண்ணீர்விட்டாராம்.

பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். அவர் அண்மையில் தான் மும்பை திரும்பினார்.

அவர் மருத்துவமனையில் இருக்கையில் நடிகை தபு மட்டுமே அவருக்கு அடிக்கடி போன் செய்து ஆறுதல் கூறி வந்தாராம். மனீஷா மும்பை திரும்பிய பிறகு தபு அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தாராம்.  மேலும் மனீஷாவுடன் சேர்ந்து சிக்கமுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளாராம் தபு.

தன்னை பார்க்க சக நடிகைகள் ஒருவர் கூட வரவில்லையே என்று தபுவிடம் கூறி கண்ணீர் சிந்தினாராம் மனீஷா.

 

யாராவது பணக்காரர் என்னைத் தத்தெடுத்தால் சினிமாவிலிருந்து விலகத் தயார்... - செல்வராகவன்

யாராவது பணக்காரர் என்னைத் தத்தெடுத்தால் சினிமாவிலிருந்து விலகத் தயார்... - செல்வராகவன்

சென்னை: 'யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுக்க முன்வந்தால், சினிமாவை விட்டே விலகிக் கொண்டு குடும்பம் குழந்தை என்றிருந்துவிடுவேன்!'

-இப்படிச் சொல்லியிருப்பவர் இயக்குநர் செல்வராகவன்!

ஏன்... என்னாச்சு?

13 ஆண்டு திரை வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் அவரது உடல்நிலையும்தான் இப்படி அவரைச் சொல்ல வைத்திருக்கிறது.

சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு என் அடுத்த படம் பற்றி நிறைய பேர் கேட்கிறார்கள். அடுத்து நான் என் தம்பியுடன் சேர்ந்து படம் பண்ணலாம்... அல்லது ராணாவுடன் இணையலாம்... ரொம்ப நாளாக தாமதமாகிக் கொண்டிருக்கும் என் இந்திப் படத்தைத் தொடங்கலாம்... ஏன், நான் இந்த சினிமாவை விட்டே கூட விலகலாம்!

என் உடல்நிலை சரியில்லை. அதனால்தான் ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப மெதுவாகச் செய்கிறேன். குடும்பத்தோடு நிறைய நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. என் மகள் என்னை வீட்டைவிட்டு நகரவிடமாட்டேன் என்கிறாள்.

யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுத்துக் கொண்டு, எனது கடன்களை செட்டில் செய்ய ஒப்புக் கொண்டால் நிச்சயம் சினிமாவிலிருந்து விலகி, குடும்பத்தோடு செட்டிலாகி, இன்னும் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன்!," என்று கூறியுள்ளார்.

 

இளைய தளபதியை தெரியும், வெற்றி தளபதி யார்னு தெரியுமா?

சென்னை: சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து ஹீரோவாகிய நடிகர் ரசிகர் கூட்டத்தை திட்டம் போட்டு திரட்டிக் கொண்டிருக்கிறாராம். அவர் செய்யும் அலப்பறையை தாங்க முடியவில்லையாம்.

சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தற்போது பெரிய ஹீரோவாகிவிட்ட நடிகர் பண்ணும் அலப்பறையை தாங்க முடியவில்லையாம். மனிதர் எம்.பி.ஏ. படித்திருப்பதால் கையில் ஒரு லேப்டாப்பை வைத்துக் கொண்டு தியேட்டர் வசூல் முதல் கொண்டு அதில் கணக்கு பார்க்கிறாராம். மேலும் தன்னை நம்பி படம் எடுத்த எழிலான இயக்குனரை மேடையில் வைத்துக் கொண்டே உங்கள் படத்தில் நடித்ததை பெருமையாக கூறிக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

அவர் திட்டம் போட்டு ரசிகர் கூட்டத்தை திரட்டிக் கொண்டிருக்கிறாராம். அவரின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நான்கு பேர் ஆளுயர மாலையை கொண்டு வந்து அவருக்கு அணிவிக்கிறார்களாம். மேலும் அவருக்கு ரசிகர் மன்றம் துவங்கப் போகிறார்களாம். அவரது ரசிகர்கள் அவரை வெற்றி தளபதி என்று அழைக்கிறார்களாம்.

 

'உங்க கதைக்கு இவர்தான் ஹீரோ...!' - கோலிவுட் ஹீரோக்களை நறநறக்க வைக்கும் சந்தானம்

'உங்க கதைக்கு இவர்தான் ஹீரோ...!' - கோலிவுட் ஹீரோக்களை நறநறக்க வைக்கும் சந்தானம்

பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒரு முன்னணி காமெடி நடிகர் படத்தைத் தீர்மானிப்பவராக இருப்பார்.

கவுண்டமணி, வடிவேலுவுக்குப் பிறகு இப்போது சந்தானம்...

ஆனால் இவர் செய்வதையெல்லாம் கேட்டால்... கவுண்டரையும் வடிவேலுவையும் கையடுத்துக் கும்பிடுவார்கள்!

இப்போது ஒரு படத்தின் கதையை முடிவு செய்த கையோடு கால்ஷீட் கேட்டுப் போவது சந்தானத்திடம்தான். அவரோ கதையை முழுசாகக் கேட்டதும் யார் ஹீரோ என விசாரிப்பாராம். இவர்கள் குறிப்பிட்ட ஒரு ஹீரோ பெயரைச் சொன்னதும், அவர் சரிப்படமாட்டார், இவரை போடுங்கள். எனக்கும் சரியாக மேட்ச் ஆகும். காமெடி நல்லா வரும் என போட்டு வைக்க, சந்தானம் சொன்னவரே ஹீரோ!

அடுத்த சில மாதங்களில் சந்தானம் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்களின் ஹீரோ சந்தானத்தின் பரிந்துரைகள்தானாம்!

 

விஜய்யின் தலைவா படத்துக்கு யு சான்று!

விஜய்யின் தலைவா படத்துக்கு யு சான்று!  

சென்னை: விஜய்யின் தலைவா படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இயைமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இவர்களுடன், சத்யராஜ், சந்தானம், ராகினி நந்த்வானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

தலைவா படத்தில் முதல் முறையாக விஜய் அரசியல் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டுக்கு தயாராகி வருதால் படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இதனை பார்த்த தணிக்கைக் குழு படத்துக்கு அனைத்து தரப்பினரும் பார்க்கும்படியான யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தலைவா படம் ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீசாகும் என்று தெரிவித்துள்ளனர்.

 

சிம்புவை காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணும் எண்ணமும் இல்லை - ஹன்சிகா

சிம்புவை நான் காதலிக்கவில்லை. அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகளிலும் உண்மையில்லை என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.

சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார். பெரும்பான்மையான நேரத்தை அவருடனே செலவிடுகிறார்.

சிம்புவை காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணும் எண்ணமும் இல்லை - ஹன்சிகா

இதனால் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவாகி அது இப்போது காதலாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்வதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் தெரிவித்தார்.

இந்த விஷயம் ஹன்சிகா முன்னணி நடிகையாக உள்ள ஆந்திர சினிமா உலகிலும் பரவியது.

இதைத்தொடர்ந்து ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக வந்த ஹன்சிகாவிடம், ராஜேந்தரின் பேட்டியைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

‘‘சிலம்பரசனும், நானும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகள் எனக்கு வருத்தத்தைத் தருகின்றன. எங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லை. இரண்டு பேரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம். நானும், சிலம்பரசனும் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். அவ்வளவுதான்.

எனக்கு ஜோடியாக நடித்த மற்ற கதாநாயகர்களுடன் எப்படி பழகுகிறேனோ, அப்படித்தான் சிலம்பரசனுடனும் பழகி வருகிறேன்.

என் திருமணம் பெற்றோர் விருப்பப்படிதான் நடக்கும். இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை," என்றார்.

 

சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலு மேனன் மீது புது வழக்கு

சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலு மேனன் மீது புது வழக்கு

சென்னை: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி மகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை சாலுமேனன் மீது, பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சாலுமேனன் கைது செய்யப்பட்டார். அவரை 20ம் தேதி வரை சிறையில் அடைக்க திருவனந்தபுரம் மாவட்ட முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பிஜு ராதாகிருஷ்ணன் திருச்சூரில் இருந்து கோவைக்கு தப்பி செல்ல சாலுமேனன் உதவியதாக பெரும்பாவூரை சேர்ந்த சஜாத் என்பவர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சாலுமேனனின் காரில் பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி செல்ல உதவியதாக சாலுமேனன் மீது பெரும்பாவூர் போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஜாமீன் கோரி சாலுமேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.